செய்திகள்

திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும்- அமைச்சர் செல்லூர் ராஜூ

Published On 2019-04-24 10:55 GMT   |   Update On 2019-04-24 10:55 GMT
எதிரிகள் பலர் வந்தாலும் திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். #TNAssemblyByPolls #SellurRaju
அவனியாபுரம்:

மதுரையில் அமைச்சர் செல்லூர்ராஜூ இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முனியாண்டி ஆரம்ப கால அடிப்படை தொண்டர் ஆவார். அவரது பணியை கருத்தில் கொண்டு முதல்வரும், துணை முதல்வரும் வாய்ப்பு வழங்கியுள்ளனர்.

அ.தி.மு.க.வில் தான் அடிமட்ட தொண்டனுக்கும் பெரிய பதவிகள் கிடைக்கும். திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை. எதிரிகள் பலர் வந்தாலும் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

சட்டமன்ற இடைத்தேர்தலில் பல கட்சிகள் போட்டியிடும். அதுகுறித்து எங்களுக்கு பயமில்லை. மக்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர். மக்களுக்கான தேவையை நிறைவேற்றும் அரசாக அ.தி.மு.க. உள்ளது.


முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மதுரை புறநகர் பகுதியில் அடிப்படை வசதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டம் மூலம் கண்மாய்கள் சுத்தப்படுத்தப்பட்டு நீர்நிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் தனி கவனம் செலுத்தி அமைச்சர் உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனையும் இந்த தொகுதியில்தான் வரவுள்ளது. எனவே அ.தி.மு.க. வேட்பாளரை மக்கள் தங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து வெற்றி பெற வைப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #TNAssemblyByPolls #SellurRaju
Tags:    

Similar News