செய்திகள்
வாலிபர் பிணம் கிடந்த இடத்தை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

புதுவை அருகே வாலிபரை வெட்டி கொன்று சுடுகாட்டில் பிணம் வீச்சு

Published On 2019-04-23 10:31 GMT   |   Update On 2019-04-23 10:31 GMT
புதுவை அருகே 30 வயது மதிப்புமிக்க வாலிபரை வெட்டி கொன்று சுடுகாட்டில் பிணம் வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கனூர்:

புதுவை திருக்கனூரை அடுத்துள்ளது சோரப்பட்டு கிராமம். இங்குள்ள காலனி அருகே சுடுகாடு உள்ளது.

இன்று காலை ஆடு மேய்க்கும் சிறுவர்கள் சிலர் அந்த பகுதிக்கு சென்றனர். அப்போது துர்நாற்றம் வீசியது. அந்த இடத்தை நோக்கி சென்று பார்த்தனர்.

அங்குள்ள புதரில் வாலிபர் ஒருவர் வெட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டு 2 அல்லது 3 நாட்கள் ஆகி இருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால் உடல் அழுகி துர்நாற்றம் வீசியது தெரியவந்தது.

இதுபற்றி திருக்கனூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலு, முருகானந்தம் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

இறந்து கிடந்தவருக்கு 30 வயது இருக்கும். தடிமனான உடல் வாகு கொண்டவர். சட்டையும், லுங்கியும் அணிந்திருந்தார். உள்ளாடை எதுவும் அணியவில்லை. லுங்கி விலகி நிர்வாண நிலையில் அவரது பிணம் கிடந்தது.

கழுத்து பகுதியில் பலத்த வெட்டு காயம் இருந்தது. அதில் இருந்து ரத்தம் வடிந்து உடல் முழுவதும் பரவி இருந்தது.

அந்த வாலிபர் யார்? அவரை யார் கொன்றார்கள்? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. அதிரடிப் படை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கொலை செய்யப்பட்டவர் வெளியூர்காரராக இருக்கலாம் என கருதப்படுகிறது. வேறு எங்கோ வைத்து அவரை கொலை செய்து பிணத்தை சுடுகாட்டுக்கு கொண்டு வந்து புதரில் போட்டுள்ளனர்.

அவர் யார்? என்பது குறித்து அக்கம் பக்கத்து கிராமங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் உடல் நிர்வாண நிலையில் கிடப்பதால் பெண் சம்பந்தமான பிரச்சனையில் இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவ இடத்தை போலீஸ் ஐ.ஜி. சுரேந்தர்சிங் யாதவ், போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் ஆகியோரும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News