ஆன்மிகம்

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் இன்று தெருவடைச்சான் உற்சவம்

Published On 2019-05-13 04:06 GMT   |   Update On 2019-05-13 04:06 GMT
வைகாசி பெருவிழாவையொட்டி கடலூர் பாடலீஸ்வரர்கோவிலில் இன்று (திங்கட்கிழமை) தெரு வடைச்சான் உற்சவம் நடக்கிறது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து எல்லை கட்டுதல் நடந்தது. இதையொட்டி வண்ணார மாரியம்மன், பிடாரி அம்மனுக்கு தேரடி வீதியில் சிறப்பு பூஜைகளும், பிடாரி அம்மனுக்கு கிடா வெட்டி சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

தொடர்ந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தீப்பந்தம் ஏந்தி எல்லை கட்டுதல் நிகழ்ச்சியை நடத்தினர். அதன்பிறகு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பிடாரி அம்மன் உற்சவம், விநாயகர் திருவிழா நடந்தது.

அதன்பிறகு சூரிய பிரபை, சிம்ம வாகனம், பல்லக்குகள், பூத வாகனத்தில் பாடலீஸ்வரர் வீதிஉலா நடைபெற்றது. விழாவில் நேற்று காமதேனு, கற்பக விருட்சம், நாக வாகனத்தில் சாமி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. அப்போது இளைஞர்கள், முதியவர்கள் சிலம்பம் ஆடியபடி ஊர்வலமாக சென்றனர்.

விழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) காலை அதிகாரநந்தி கோபுர தரிசனம், இரவு தெருவடைச்சான் உற்சவம் நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) யானை வாகனம், நால்வர் புறப்பாடு, வெள்ளி ரதம், இந்திர விமானத்தில் சாமி வீதி உலாவும் நடக்கிறது.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். அப்போது அங்கு கூடி நிற்கும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். தேர் மாலையில் நிலையை வந்தடையும்.

மறுநாள் 18-ந்தேதி (சனிக்கிழமை) தீர்த்தவாரி, 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தெப்ப உற்சவம், 20-ந்தேதி (திங்கட்கிழமை) திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது.
Tags:    

Similar News