search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைகாசி விசாகம்"

    • இந்நாளில் சூரிய பகவான் விரதமிருந்து முருகப்பெருமானின் ப்ரீதியைப் பெற்றார் என்கிறது புராணம்.
    • விசாக விரதம் இருப்போர்க்கு புத்திரபாக்கியம் உண்டாகும்.

    முருகப்பெருமான் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று திரு அவதாரம் செய்தவர்.

    இந்நாளில் சூரிய பகவான் விரதமிருந்து முருகப்பெருமானின் ப்ரீதியைப் பெற்றார் என்கிறது புராணம்.

    விசாக விரதம் இருப்போர்க்கு புத்திரபாக்கியம் உண்டாகும்.

    இந்த விரதத்தை வைகாசி மாதம் விசாகத்தன்று தொடங்கி, தொடர்ந்து செய்து வந்தால் குடும்பத்தில்

    சகல சவுபாக்கியங்களும் பொங்கிப் பெருகும்.

    • அடுத்த பிறவியில் உலகத்தவர்கள் வணங்கும் தெய்வீகத் தன்மையையும் அடையலாம்.
    • ஒரு தம்பதியருக்கு வயிறு நிரம்ப உணவும், வேட்டி, புடவையும் கொடுக்க வேண்டும்.

    பங்குனி உத்திரத்தன்று விரதம் இருந்து, முருகனை வேண்டினால், பிறவிப் பலனையும், நாற்பத்தெட்டு ஆண்டுகள் தொடர்ந்து இந்த விரதத்தை கடைபிடித்தால்,

    அடுத்த பிறவியில் உலகத்தவர்கள் வணங்கும் தெய்வீகத் தன்மையையும் அடையலாம் எனப் புராணங்கள் கூறுகின்றன.

    அதே நேரம் வருடம் முழுவதும் ஒழுக்கக் கேடாக இருந்து விட்டுப் பலன்கள் பெறும் நோக்கோடு

    பங்குனி உத்திர விரதத்தை மட்டும் தொடர்ந்து இருப்பவர்களை சூரியன் சுட்டெரித்து விடுவான் என சூரிய புராணம் எச்சரிக்கிறது.

    ஏனெனில் பாவங்களை சுட்டுப்பொசுக்கக்கூடிய உத்திர நட்சத்திரத்தின் அதிபதியான சூரியன்,

    மார்கழி மாதம் துவங்கி புரட்டாசி மாதம் வரை கொஞ்சம் கொஞ்சமாக சக்தி பெற்று பங்குனியில் உச்சத்தை நோக்கிச் செல்கின்றான்.

    முருகனுக்கு உகந்த இந்நாளில், சிவபெருமானையும் பார்வதி தேவியையும் திருமணக் கோலத்தில் நினைத்து தியானம் செய்து,

    வீட்டிலோ அல்லது ஆலயத்திற்கு சென்றோ வழிபட்டு,

    ஒரு தம்பதியருக்கு வயிறு நிரம்ப உணவும், உடுத்திக் கொள்ள வேட்டி, புடவையும் கொடுக்க வேண்டும்.

    அவ்வாறு செய்து வந்தால் முருகப்பெருமாளின் அருளோடு சிவபெருமானின் அருளையும் பெறலாம்.

    • இக்கோயிலின் தல விருட்சம் குராமரம். இந்த மரத்திற்கு ஒரு சிறப்பு உண்டு.
    • அன்று தல விருட்சமான குரா மரம் பூக்கள் நிறைந்து எழில் பொங்கக் காட்சி தரும்.

    சிதம்பரம்-சீர்காழி பேருந்து சாலையில் சிதம்பரத்திலிருந்து 5 கி.மீ ெதாலைவில் இருக்கிறது கொள்ளிடம்.

    இத்தலத்தில் உள்ள புலீஸ்வரி அம்மன் மிகவும் பிரசித்தமானவள்.

    இக்கோயிலின் தல விருட்சம் குராமரம். இந்த மரத்திற்கு ஒரு சிறப்பு உண்டு.

    இக்கோயிலில் பங்குதி உத்திரத் திருவிழா நடக்கும் போது தான் அந்த அற்புதம் நிகழ்கிறது.

    திருவிழாவின் முதல் நாள் இங்கு கொடியேற்றம் நடத்துவார்கள்.

    அன்று தல விருட்சமான குரா மரம் பூக்கள் நிறைந்து எழில் பொங்கக் காட்சி தரும்.

    திருவிழா நடக்கும் 10 நாட்களும் இம்மரத்தில் பூக்கள் மலர்ந்து மணம் பரப்பும்.

    பதினோராம் நாள் திருவிழா கொண்டாட்டங்கள் நிறைவடைந்து கொடியினை இறக்குவார்கள்.

    அன்றைய தினம் தலமரமான குராமரத்தில் இருந்து எல்லா மலர்களும் உதிர்ந்து பேசுகின்றன.

    தெய்வத் திருவிழாவான பங்குனி உத்திரவிழாவில் நடக்கும் இந்த அற்புதம் கண்டவர்கள் மெய்சிலித்துப் போவது கண்கூடான உண்மை.

    • ஆறுபடை வீடு கொண்ட முருகப்பெருமானை தரிசித்தால் அனைத்து நலன்களும் கைகூடப் பெறலாம்.
    • இந்நாளில் தான் முருகன் தெய்வானை திருமணமும் நடந்தேறியது

    வைகாசி விசாகம், தைப்பூசம் போன்றே கந்தக் கடவுளுக்கும் உகந்த திருநாளாக பங்குனி உத்திரம் திகழ்கிறது.

    தெய்வத் திருமணங்கள் நடந்தேறிய இந்நாளில் தான் முருகன் தெய்வானை திருமணமும் நடந்தேறியது

    மேலும் முருகப் பெருமானின் இச்சா சக்தியான வள்ளி அவதரித்த திருநாளும் இந்த பங்குனி உத்திர திருநாள் என கந்தபுராணம் பேசுகிறது.

    திருமுருகன் மகிமைப் பெற்ற இந்நாளில் முருகன் திருத்தலங்கள் அனைத்தும் திருவிழா காண்கின்றன.

    பங்குனிப் பெருவிழா காணும் பழனியில் பக்தர்கள் பல்வேறு வகையான காவடிகள் எடுத்து கந்தனை தரிசிப்பது வழக்கம்.

    குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வரம் பெறவும், திருமண வரம் பெறவும்,தோஷங்கள் நீங்கவும் பங்குனி உத்திரத்தில் விரதம் இருந்து

    ஆறுபடை வீடு கொண்ட முருகப்பெருமானை தரிசித்தால் அனைத்து நலன்களும் கைகூடப் பெறலாம்.

    • முருகப்பெருமானுக்கு தேனும் தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.
    • பழமுதிர்ச்சோலைக்கு சற்று உயரத்தில் நூபுர கங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது.

    முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக போற்றப்படும் பழமுதிர்ச்சோலைக்கு, "சோலைமலை " என்ற பெயரும் உண்டு. இங்குள்ள முருகப்பெருமான் வெற்றிவேல் முருகன் என்று அழைக்கப்படுகிறார். பழமுதிர்ச்சோலை என்பதற்கு "பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை " என்று பொருள் எடுத்துக்கொள்ளலாம்.

    எந்த முருகன் கோவில்களுக்கும் இல்லாத தனிச்சிறப்பு இந்த கோவிலுக்கு உண்டு. அதாவது, இந்த தலம் அமைந்துள்ள மலையின் அடிவாரத்தில் கள்ளழகர் கோவிலும், மலை உச்சியில் முருகப்பெருமானின் ஆறாவது படைவீடும் அமைந்துள்ளது. இது சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது-.

    கோவில் அமைவிடம்:

    மதுரை மாநகரில் இருந்து வடக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகர்மலை உச்சியில் இந்த பழமுதிர்ச்சோலை அமைந்துள்ளது. மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது.

    மலையின் அடிவாரத்தை சென்றடைந்ததும் அழகர்கோவில் கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் கோவில் கம்பீரமாக நம்மை வரவேற்கிறது. அழகர் கோவில் நுழைவுவாயில் முன்பு நாம் இறங்கியதும், வேறு யாரும் வரவேற்கிறார்களோ இல்லையோ, குரங்குகள் தவறாமல் கூட்டமாக வந்து வரவேற்கின்றன.

    ஆம்... இங்கு குரங்குகள் அதிகமாக காணப்படுகின்றன. கொஞ்சம் அசந்தால் நம் கையில் உள்ள பொருட்களை அலேக்காக லபக்கிவிடுகின்றன இவை. அதனால், கொஞ்சம் உஷாராகத்தான் செல்ல வேண்டியிருக்கிறது.

    அழகர்மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு செல்ல கள்ளழகர் கோவில் நிர்வாகமே வாகனங்களை இயக்குகிறது. காரில் செல்பவர்கள் தனிக்கட்டணம் செலுத்தி மலை உச்சிக்கு பயணமாகலாம்.

    சுமார் 15 நிமிடங்கள் வளைந்து நெளிந்து செல்லும் மலையில் மெதுவாக பயணித்தால் மலை உச்சியை அடையலாம். அங்கு பழமுதிர்ச்சோலை என்கிற சோலைமலை அமைந்துள்ளது.

    வரலாற்று ஆதாரங்கள்:

    திருமுருகாற்றுப்படையில் வரும் பழமுதிர்ச்சோலை என்பதற்கு பழம் முற்றிய சோலை என்று நச்சினார்க்கினியர் உரை எழுதியிருக்கிறார்.

    கந்தபுராணத் துதிப்பாடலில், வள்ளியம்மையைத் திருமணம் செய்ய விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகப்பெருமான் அழைத்த தலம் பழமுதிர்ச்சோலை என்று கூறுகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார். எனவே ஆறாவது படை வீடாகிய பழமுதிர்ச்சோலை, வள்ளி மலையைக் குறிக்கும் என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர்.

    ஆனால் அருணகிரிநாதர், திருப்புகழில் வள்ளி மலையையும், பழமுதிர்ச்சோலையையும் தனித்தனியே பாடியிருக்கிறார். மேலும் பழமுதிர்ச்சோலையில் இன்றும் காணப்படுகின்ற "நூபுர கங்கை" என்னும் சிலம்பாற்றை பழமுதிர்ச்சோலைத் திருப்புகழில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அதனால், பழமுதிர்ச்சோலையே முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

    பழமுதிர்ச்சோலை முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. அன்றையதினம் முருகப் பெருமானுக்கு தேனும் தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. கோவில் மூலஸ்தானத்தில் வெற்றிவேலனாக முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.

    அறுபடை வீடுகள் ஒவ்வொன்றிலும் திருவிளையாடல் புரிந்த அழகன் முருகன், இந்த தலத்தில், மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அவ்வையாரிடம் திருவிளையாடல் புரிந்ததாக சொல்கிறார்கள்.

    தனது புலமையால் புகழின் உச்சிக்கு சென்ற அவ்வையாருக்கு தான் என்ற அகங்காரம் ஏற்பட்டது. அந்த அகங்காரத்தில் இருந்து அவ்வையை விடுவிக்க எண்ணிய முருகப்பெருமான், அவ்வை மதுரைக்கு காட்டு வழியாக நடந்து செல்லும் வழியில் ஆடு மேய்க்கும் சிறுவனாக தோன்றி வந்தார்.

    அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின் கிளை ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார். நடந்து வந்த களைப்பால் அந்த மரத்தின் அடியில் வந்து அமர்ந்தார் அவ்வை. நீண்ட தொலைவு பயணம் அவருக்கு களைப்பையும் தந்திருந்தது. வயிறு பசிக்கவும் செய்தது.

    அப்போது, தற்செயலாக அந்த மரக்கிளையில் ஆடுமேய்க்கும் சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த மரத்தில் நிறைய நாவல் பழங்கள் இருப்பதையும் பார்த்தார்.

    உடனே அந்த சிறுவனிடம், "குழந்தாய்... எனக்கு பசிக்கிறது. சிறிது நாவல் பழங்களை பறித்து தர முடியுமா? " என்று கேட்டார். அதற்கு, சிறுவனாக இருந்த முருகப்பெருமான், "சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? " என்று கேட்டார்.

    சிறுவனின் கேள்வி அவ்வைக்கு புரியவில்லை. பழத்தில் கூட சுட்டப்பழம், சுடாத பழம் என்று இருக்கிறதா? என்று எண்ணிக் கொண்டவர், விளையாட்டாக "சுட்டப்பழத்தையே கொடுப்பா... " என்று கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து, நாவல் மரத்தின் கிளை ஒன்றை சிறுவனாகிய முருகப்பெருமான் உலுப்ப, நாவல் பழங்கள் அதில் இருந்து கீழே உதிர்ந்து விழுந்தன. அந்த பழங்களை பொறுக்கிய அவ்வை, அந்த பழத்தில் மணல் ஒட்டி இருந்ததால், அவற்றை நீக்கும் பொருட்டு வாயால் ஊதினார்.

    இதைப் பார்த்துக்கொண்டிருந்த சிறுவனாகிய முருகப்பெருமான், "என்ன பாட்டி... பழம் சுடுகிறதா? " என்று கேட்டார்.

    சிறுவனின் அந்த ஒரு கேள்வியிலேயே அவ்வையின் அகங்காரம் பறந்துபோனது. தன்னையே சிந்திக்க வைத்த அந்த சிறுவன் நிச்சயம் மானுடனாக இருக்க முடியாது என்று கணித்த அவ்வை, "குழந்தாய்... நீ யாரப்பா? " என்று கேட்டார்.

    மரக்கிளையில் இருந்து கீழே குதித்த சிறுவன் முருகப்பெருமான், தனது சுயஉருவத்தை காண்பித்து அவ்வைக்கு அருளினார்.

    இந்த திருவிளையாடல் நடந்த நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் சோலைமலை உச்சியில் காணப்படுகிறது. சோலைமலை முருகன் கோவிலுக்கு சற்று முன்னதாக இந்த மரத்தை இன்றும் நாம் பார்க்கலாம்.

    அதிசய நூபுர கங்கை:

    பழமுதிர்ச்சோலைக்கு சற்று உயரத்தில் நூபுர கங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது. இதற்கு சிலம்பாறு என்ற பெயரும் உண்டு. இந்த தீர்த்தம் எங்கு உற்பத்தியாகிறது என்பதே புரியாத புதிராக இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தீர்த்த தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். முருகப்பெருமானின் திருப்பாதத்தில் இருந்து இது உருவாகியது என்ற கர்ண பரம்பரைக் கதையும் வழக்கில் சொல்லப்பட்டு வருகிறது.

    மலை உச்சியில் ஓரிடத்தில் இந்த தீர்த்த தண்ணீர் ஓரிடத்தில் விழும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த இடத்தில் ராக்காயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனை வழிபடச் செல்பவர்கள், நூபுர கங்கை விழும் இடத்தில் புனித நீராடிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்த தீர்த்த தண்ணீர் இரும்புச்சத்து, தாமிரச்சத்து காரணமாக ஆரோக்கியம் மிகுந்த சுவை கொண்டதாக காணப்படுவதோடு, அதில் அபூர்வ மூலிகைகள் பல கலந்து இருப்பதால் நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் இருக்கிறது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் எப்பேற்பட்ட நோயும் பறந்தோடிவிடும் என்பதால், இங்கு தினமும் அதிக அளவில் பக்தர்கள் வந்து நீராடிச் செல்கிறார்கள்.

    இந்த தீர்த்த தண்ணீரில்தான் புகழ்பெற்ற அழகர்கோவில் பிரசாதமான சம்பா தோவை தயார் செய்யப்படுகிறது.

    மேலும், இந்த அழகர்மலையில் பல்வேறு மூலிகைத் தாவரங்கள், மரங்கள் காணப்படுகின்றன. பழமுதிர்ச்சோலை முருகனை தரிசிக்கச் சென்றால், இந்த மூலிகைகள் மற்றும் மூலிகை சம்பந்தப்பட்ட பொருட்களையும் கையோடு வாங்கி வரலாம்.

    சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, அந்த நோய் சட்டென்று கட்டுப்பட விசேஷ மூலிகை மரம் ஒன்றும் இங்கு காணப்படுகிறது. அந்த மரத்தின் விதையில் ஒன்றை சாப்பிட்டாலே சர்க்கரை நோய் கட்டுப்பட்டு விடும் என்கிறார்கள்.

    திருமண பரிகார தலம்:

    முருகப்பெருமானுக்கு ஆரம்ப காலத்தில் இங்கு ஆலயம் கிடையாது என்றும், இடைப்பட்ட காலத்திலேயே பக்தர்களால் மலைக்கு இடையே கோவில் எழுப்பப்பட்டு, வழிபாடு நிகழ்த்தப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.

    திருமணம் ஆகாதவர்கள், இந்த வெற்றிவேல் முருகனை வழிபட்டால் சட்டென்று திருமணம் முடிவாகி, வெற்றிக்கரமான வாழ்க்கை அமையும் என்று கூறுகிறார்கள்.

    விழாக்கள் விவரம்:

    கந்த சஷ்டி விழா முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் முருகனுக்குரிய தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை ஆகிய நாட்களிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.

    • கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளில் முருகன், தெய்வானையுடன் வீதியுலா செல்வார்.
    • திருச்செந்தூரில் முருகன் “ஞானகுரு’வாக அருளுகிறார்.

    சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவ மயிலாகவும் மாறி சேவை செய்தார்.

    இவர்களது திருமணம் முதல்படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது. சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரில் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.

    அன்று காலையில் தெய்வானை தபசு மண்டபம் சென்று, முருகனை மணந்து கொள்ள வேண்டி தவமிருப்பாள். மாலையில் குமரவிடங்கர் (முருகனின் ஒரு உற்சவர் வடிவம்), முருகனின் பிரதிநிதியாக மயில் வாகனத்தில் தபசு மண்டபம் சென்று தெய்வானைக்கு மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறார்.

    நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள, அங்கு திருமணம் நடக்கும். மறுநாள் சுவாமி, தெய்வானையுடன் வீதியுலா செல்கிறார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருவார்.

    முருகனுக்கு மஞ்சள் நீராட்டு

    கிராமங்களில் திருவிழாவின்போது, கன்னிப்பெண்கள் தங்க ளது முறைப்பையனுக்கு மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர். இத்தலத்திலும் இவ்வாறு முருகனுக்கு மஞ்சள் நீராட்டும் வைபவம் நடக்கும். கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளில் முருகன், தெய்வானையுடன் வீதியுலா செல்வார்.

    அப்போது, பக்தர்கள் தங்கள் ஊரில் திருமணம் செய்து கொண்ட முருகனை வரவேற்கும்விதமாகவும், போரில் வென்றதன் உக்கிரத்தைக் குறைக்கும் விதமாகவும் அவர் மீது மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர்.

    மும்மூர்த்தி முருகன்

    முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர். அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை, சிறையில் அடைத்தவர். சூரனை சம்ஹாரம் செய்து, பின் மகாவிஷ்ணுவின் மகளை மணந்து கொண்டவர். மாமனான மகாவிஷ்ணுவின் பாசத்திற்கு கட்டுப்பட்டவர்.

    இவ்வாறு முருகன், மும்மூர்த்திகளோடும் தொடர்புடையவராக இருக்கிறார். இதனை உணர்த்தும்விதமாக திருச்செந்தூரில் முருகப்பெருமான், மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாவின்போது சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.

    விழாவின் 7-ம் நாளன்று மாலையில் இவர் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார். மறுநாள் (8-ம்நாள்) அதிகாலையில் இவர் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுவார். மதிய வேளையில் பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிக்கிறார்.

    நான்கு உற்சவர்கள்

    பொதுவாக கோயில்களில் ஒரு தெய்வத்துக்கு, ஒரு உற்சவர் சிலை மட்டுமே இருக்கும். ஆனால், திருச்செந்தூர் கோயிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு உற்சவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதிகள் இருப்பது சிறப்பு. இவர்களில் குமரவிடங்கர், "மாப்பிள்ளை சுவாமி' என்றழைக்கின்றனர்.

    சந்தனமலை

    முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்தது போலவும் தோற்றம் தெரியும். உண்மையில், திருச்செந்தூரும் மலைக்கோயிலே ஆகும். இக்கோயில் கடற்கரையில் இருக்கும் "சந்தனமலை'யில் இருக்கிறது.

    எனவே இத்தலத்தை, "கந்தமாதன பர்வதம்' என்று சொல்வர். காலப்போக்கில் இக்குன்று மறைந்து விட்டது. தற்போதும் இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறு குன்று போல புடைப்பாக இருப்பதைக் காணலாம்.

    குரு பெயர்ச்சி

    திருச்செந்தூரில் முருகன் "ஞானகுரு'வாக அருளுகிறார். அசுரர்களை அழிக்கும் முன்பு, குருபகவான் முருகனுக்கு அசுரர் களை பற்றிய வரலாறை இத்தலத்தில் கூறினார். எனவே இத்தலம், "குரு தலமாக' கருதப்படுகிறது.

    பிரகாரத்தில் உள்ள மேதா தெட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட நாகங்கள் அஷ்ட யானைகள், மேதா மலை என நான்கு ஆசனங்களின் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் 4 வேதங்களும், கிளிகள் வடிவில் இருக்கிறது.

    அறிவு, ஞானம் தரும் மூர்த்தியாக அருளுவதால் இவரை, "ஞானஸ்கந்த மூர்த்தி' என்று அழைக்கிறார்கள். வழக்கமாக கைகளில் அக்னி, உடுக்கையுடன் காட்சி தரும் தெட்சிணாமூர்த்தி, இங்கு மான், மழுவுடன் காட்சி தருகிறார். குரு பெயர்ச்சியன்று திருச்செந்தூர் முருகனை வணங்கினால், குருவினால் உண்டாகும் தீய பலன்கள் குறையும்.

    இரண்டு முருகன்

    சூரனை சம்ஹாரம் செய்ய வந்த முருகன், இத்தலத்தில் சுப்பிரமணியராக நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இவர் வலது கையில் மலர் வைத்து, சிவபூஜை செய்தபடி தவக்கோலத்தில் இருப்பது சிறப்பான அமைப்பு. இவரது தவம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக, இவருக்கு பிரகாரம் கிடையாது.

    இவருக்கான பிரதான உற்சவர் சண்முகர், தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். இவரை சுற்றி வழிபட பிரகாரம் இருக்கிறது. மூலவருக்குரிய பூஜை மற்றும் மரியாதைகளே இவருக்கு செய்யப்படுகிறது.

    தீபாவளிக்கு புத்தாடை ஊர்வலம்

    மகாவிஷ்ணு, நரகாசுரனை அழித்து மக்கள் இன்புற்ற தீபாவளி நாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி மகிழ்கிறோம். திருச்செந்தூர் கோயிலிலும் அனைத்து சுவாமிகளுக்கும் தீபாவளியன்று புத்தாடை அணிவிக்கப்படுகிறது.

    அன்று அதிகாலையில் இக்கோயிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சந்தன காப்பு செய்யப்படுகிறது. பின் புத்தாடைகளை வெள்ளி பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று, அணிவிக்கின்றனர்.

    இதை, தெய்வானையை, முருகன் மணம் முடிக்க காரணமாக இருந்த தலம் என்பதால், இந்திரன் இத்தலத்தில் மருமகனுக்கும், அவரை சார்ந்தவர்களுக்கும் தீபாவளிக்கு புத்தாடை எடுத்து தருவதாக ஒரு நம்பிக்கை உள்ளது.

    திருவிழா

    பங்குனி உத்திரம், திருகார்த்திகை , வைகாசி விசாகம், கந்த சஷ்டி முருகத்தலங்களில் கந்தசஷ்டிவிழா ஆறு நாட்களே நடக்கும். சில தலங்களில் சஷ்டிக்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் நடத்துவர். ஆனால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    தமிழ் இலக்கியங்களில் திருச்செந்தூர் அலைவாய், சீரலைவாய் என்கிற பெயர்களில் போற்றப்பட்டுள்ளது.

    • ஐப்பசி மாத அமாவாசை அன்று யாகத்தை தொடங்கி, 6 நாட்கள் நடத்தினர்.
    • கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதர் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வர் இதை சாயாபிஷேகம் என்பர்.

    முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது.

    இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு, வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம், கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.ஒருசமயம் முனிவர்கள் சிலர், உலக நன்மைக்காக ஒரு புத்திரன் வேண்டுமென்பதற்காக யாகம் ஒன்று நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை தொடங்கி, ஆறு நாட்கள் நடத்தினர்.

    யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்களை ஆறாம் நாளில் ஒன்றாக்கிட, முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது.

    கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து, நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறார்.

    சஷ்டி யாகம்

    திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின் முதல் நாள் அதிகாலையில், ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுவார். அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் துவங்கும்.

    குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்தகுருக்கள், வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், அஷ்டதிக்பாலகர்கள், துவாரபாலகர்கள் என அனைத்து தேவதைகளையும் கும்பத்தில் எழுந்தருளச் செய்வர்.

    உச்சிக்காலம் வரையில் நடக்கும் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுவார். ஆறாம் நாளன்று வள்ளி, தெய்வானை இல்லாமல் தனித்து கடற்கரைக்கு எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்வார். அதன்பின், வெற்றி வேந்தராக வள்ளி, தெய்வானையுடன் யாகசாலைக்கு திரும்புவார்.

    கண்ணாடிக்கு அபிஷேகம்

    ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்தபின்பு பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர். "சாயா' என்றால் "நிழல்' எனப்பொருள்.

    போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடக்கும். இதை, முருகப்பெருமானே, கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம். இந்நிகழ்ச்சிக்குப்பின்பு, முருகன் சன்னதிக்கு திரும்புவார். இத்துடன் சூரசம்ஹார வைபவம் நிறைவடையும்.

    • திருச்செந்தூரில் முருகனுக்கு தினமும் 9 கால பூஜை நடக்கிறது.
    • கோவில் 2000 ஆண்டுகள் பழமை கொண்டது.

    தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்ற இந்து கடவுளான முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு என போற்றப்படும் மிக சிறப்புமிக்க கோயிலாகும்.

    பழமையான கோயில்

    தூத்துக்குடி மாவட்டத்தில், மன்னார் வளைகுடாவை அருகில் அமைந்துள்ள இக்கோயில் சென்னையில் இருந்து 600 கி.மீ தொலைவில் உள்ளது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில் 2000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகின்றது.

    முருகப்பெருமானுக்கு கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கோயில் இதுவாகும். இக்கோயில் அமைந்துள்ள இடம் "திருச்சீரலைவாய்" என முன்னர் அழைக்கப்பட்டது.

    தல வரலாறு

    தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதில் இருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார்.

    இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார்.

    அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை. பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார். வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார்.

    பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோயில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், "செயந்திநாதர்' என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே "செந்தில்நாதர்' என மருவியது. தலமும் "திருஜெயந்திபுரம்' (ஜெயந்தி - வெற்றி) என அழைக்கப்பெற்று, "திருச்செந்தூர்' என மருவியது.

    கோயில் அமைப்பு:

    முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்துள்ளது.130 அடி உயரம் கொண்ட இக் கோயிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார்.

    தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டியபின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.

    இதுதவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் "பஞ்சலிங்க' சன்னதியும் இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன.

    திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.

    முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

    திறக்கும் நேரம்:

    காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

    தமிழகத்தில் முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாக கருதி வழிபடப்படுகிறது. போர் புரியச் செல்லும் தளபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் "படைவீடு' எனப்படும். அவ்வகையில் சூரபத்மனை வதம் செய்யச் சென்ற முருகப்பெருமான், படைகளுடன் தங்கியிருந்த தலம் திருச்செந்தூர் மட்டுமே ஆகும்.

    ஆனால், மற்ற ஐந்து தலங்களையும் சேர்த்து, "ஆறுபடை வீடு' என்கிறோம்.வறுமையில் வாடும் ஒருவரிடம், வறுமையை வென்ற ஒருவர், வள்ளல்கள் இருக்குமிடத்தைச் சுட்டிக்காட்டி, அங்கு சென்றால் அவரது வறுமை தீரும் என்று சொல்லி அவரை ஆற்றுப்படுத்துவார். இந்த வகையில் அமைந்த நூல்கள் சங்க காலத்தில், "ஆற்றுப்படை' எனப்பட்டது.

    இவ்வாறு மக்களின் குறைகளைப் போக்கி, அருள் செய்யும் முருகன் இந்த ஆறு இடங்களில் உறைகிறார். அவரிடம் சென்று சரணடைந்தால் அவரது அருள் கிடைக்கும் என்ற பொருளில் நக்கீரர் ஒரு நூல் இயற்றினார்.

    முருகனின் பெருமைகளை சொல்லும் நூல் என்பதால் இது, "திருமுருகாற்றுப்படை' (திருமுருகன் ஆற்றுப்படை) என்று பெயர் பெற்றது. பிற்காலத்தில் இந்த ஆற்றுப்படை தலங்களே மருவி, "ஆறுபடை' என்றானது. அவர் பாடிய வரிசையிலேயே, ஆறுபடை வீடுகள் அமைந்துள்ளது.

    திருமணத்தடை உள்ளவர்கள் இத்தல இறைவனிடம் வேண்டிக்கொள்ள நல்ல வரன் அமையும் என்கிற நம்பிக்கை இந்து சமய மக்களிடம் உள்ளது.சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். திருச்செந்தூரில் முருகனுக்கு தினமும் 9 கால பூஜை நடக்கிறது.

    இப்பூஜைகளின்போது சிறுபருப்பு பொங்கல், கஞ்சி, தோசை, அப்பம், நெய் சாதம், ஊறுகாய், சர்க்கரை கலந்து பொரி, அதிரசம், தேன்குழல், அப்பம், வேக வைத்த பாசிப்பருப்பு, வெல்லம் கலந்த உருண்டை என விதவிதமான நைவேத்தியங்கள் படைக்கப்படுகிறது.

    கங்கை பூஜை தினமும் உச்சிக்கால பூஜை முடிந்தபின்பு, ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள, தாளத்துடன் சென்று கடலில் கரைக்கின்றனர். இதனை, "கங்கை பூஜை' என்கின்றனர்.

    இங்குள்ள சரவணப்பொய்கையில், ஆறு தாமரை மலர்களில் முருகன் ஆறு குழந்தைகளாக தவழ, நடுவே கார்த்திகைப்பெண்கள் இருக்கும் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது.

    • திருவிழாவில் தினமும் ராக்கால பூஜைக்கு பின்பு பள்ளியறை பூஜை நடத்தப்படுவதில்லை.
    • மூலவருக்கு 16 வகை அபிஷேகம் செய்து பின்னர் கலச அபிஷேகம் நடைபெற்றது.

    பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 27-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. திருவிழாவின் 6-ம் நாளில் திருக்கல்யாணம், 7-ம் நாள் தேரோட்டம் ஆகியவை வெகு விமரிசையாக நடைபெற்றது.

    திருவிழாவில் தினமும் ராக்கால பூஜைக்கு பின்பு பள்ளியறை பூஜை நடத்தப்படுவதில்லை. இந்நிலையில் 5-ந்தேதி கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெற்றது.

    இதையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலில் உற்சவ சாந்தி பூஜை நடைபெற்றது. மலைக்கோவிலில் உள்ள கைலாசநாதர் சன்னதியில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், சாந்தி கும்பபூஜை, ஹோமம் நடைபெற்று. பின்னர் உச்சிகால பூஜையில் மூலவருக்கு 16 வகை அபிஷேகம் செய்து பின்னர் கலச அபிஷேகம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் உபயதாரர்களான கந்தவிலாஸ் உரிமையாளர்கள் செல்வகுமார், நவீன், நரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

    இதேபோல் பெரியநாயகி அம்மன் கோவிலிலும் உற்சவ சாந்தி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு யாகம், கலச அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜை முறைகளை கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வ சுப்பிரமணி மற்றும் குருக்கள் செய்தனர்.

    • ஞானசம்பந்தர் முத்துப்பல்லக்கில் ஏறி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஞானசம்பந்தரை தரிசனம் செய்தனர்.

    கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சாமி மற்றும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம், தீர்த்தவாரி ஆகியவை நடந்தது. கடந்த 13-ந்தேதி திருஞானசம்பந்தர் முத்துப்பந்தல் விழா தொடங்கியது. விழாவில் ஞானசம்பந்தருக்கு சாமி, அம்மன் காட்சி அளித்து திருமுலைப்பால் அளிக்கும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது. நேற்றுமுன்தினம் ஞானசம்பந்தருக்கு முத்துக்கொண்டை, முத்துக்கொடை, முத்து சின்னங்களுடன் முத்து திரு ஓடத்தில் வீதி உலா நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துப்பந்தல் விழா நேற்று காலை நடந்தது. விழாவையொட்டி ஞானசம்பந்தர் முத்துப்பல்லக்கில் ஏறி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து முத்துப்பல்லக்கு திருமேற்றளிகை கைலாசநாதர் கோவிலுக்கும், காலை 10 மணிக்கு திருசக்திமுற்றம் சக்திவனேஸ்வரர் கோவிலுக்கும், மதியம் 12 மணிக்கு பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கும் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு சாமி தரிசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஞானசம்பந்தரை தரிசனம் செய்தனர். இரவு தேனுபுரீஸ்வரர், ஞானாம்பிகை அம்பாள் முத்து விமானத்தில் காட்சியளிக்க ஞானசம்பந்தர் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி சாமி தரிசனம் செய்யும் நிகழ்ச்சியும், வீதி உலாவும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர், பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து இருந்தனர்.

    • பிரம்மோற்சவ விழாவை பல விழாக்களில் இதுவும் ஒன்று என்பதாகவே பலரும் நினைக்கிறார்கள்.
    • தமிழகத்தில் வைகாசி பிரம்மோற்சவம் மிக சிறப்பாக நடக்கும் தலங்கள் வருமாறு:-

    கோவில்களில் நடத்தப்படும் பிரம்மோற்சவ விழாவை பல விழாக்களில் இதுவும் ஒன்று என்பதாகவே பலரும் நினைக்கிறார்கள். தமிழகத்தில் வைகாசி பிரம்மோற்சவம் மிக சிறப்பாக நடக்கும் தலங்கள் வருமாறு:-

    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள்,

    திருவல்லிக்கேணி, ஸ்ரீபார்த்தசாரதி கோவில்,

    ஆழ்வார் திருநகரி (ஸ்ரீநம்மாழ்வாருக்குப் பிரம்மோற் சவம்),

    மதுராந்தகம் ஸ்ரீஏரிகாத்த ராமர்,

    மகாபலிபுரம் ஸ்ரீஸ்தல சயன பெருமாள்,

    திருநாராயணபுரம் ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாள்,

    காஞ்சி ஸ்ரீவைகுண்ட பெருமாள்,

    சென்னை அமைந்தகரை ஸ்ரீபிரசன்ன வரதராஜர்,

    மதுரை ஸ்ரீகூடலழகர்,

    மதுரை திருமோகூர் ஸ்ரீகாளமேக பெருமாள்,

    திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண் யேஸ்வரர்,

    பட்டீஸ்வரம் ஸ்ரீதேணு புரீஸ்வரர்,

    திருக்கண்ணங்குடி ஸ்ரீகாள ஹஸ் தீஸ்வரர்,

    திருப்பனையூர் ஸ்ரீசௌந்த ரேஸ்வரர்,

    கஞ்சனூர் ஸ்ரீஅக்னி புரீஸ்வரர்,

    கும்பகோணம் ஸ்ரீகும் பேஸ்வரர்,

    திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க ஸ்வாமி,

    மயிலாடுதுறை ஸ்ரீமயூரநாதர்,

    திருச்செங்கோடு ஸ்ரீஅர்த்த நாரீஸ்வரர்,

    பொள்ளாச்சி ஸ்ரீசுப்ரமணியர்,

    சென்னை வடபழநி ஸ்ரீதண்டா யுதபாணி,

    சென்னை ஸ்ரீகாளிகாம்பாள் ஆகிய ஆலயங்களில் வைகாசி மாதத்தில் உற்சவம் சிறப்புற நடைபெறுகிறது.

    • மொட்டையரசு திடலை 7 முறை சுற்றி வந்த பஞ்ச உபசார நிகழ்வு நடந்தது.
    • பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என பக்தி கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 3-ந்தேதி காப்பு கட்டுதலுடன் வைகாசி விசாக திருவிழா தொடங்கியது. திருவிழாவையொட்டி கடந்த 9 நாட்களாக தினமும் இரவு 7 மணி அளவில் உற்சவர் சன்னதியில் இருந்து வசந்த மண்டபத்திற்கு தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் முத்தாய்ப்பாக நேற்று முன்தினம் விசாக விழா விசேஷமாக கொண்டாடப்பட்டது. திருவிழாவின் நிறைவாக நேற்று மொட்டையரசு உற்சவம் நடந்தது. இதனையொட்டி முருகப்பெருமான் தெய்வானையுடன் தங்கக்குதிரையில் அமர்ந்து கோவில் வாசலில் இருந்து புறப்பட்டு என்ஜினீயர் கல்லூரி வளாகத்தில் உள்ள மொட்டையரசு திடலுக்கு வந்தார்.

    இதனை தொடர்ந்து மொட்டையரசு திடலை சேர்ந்து உள்ள 70 மண்டபங்களிலும் முருகப்பெருமான் எழுந்தருளினார். ஒவ்வொரு மண்டபத்திலும் சுவாமிக்கும், அம்பாளுக்குமாக சிறப்பு பூஜையும், தீப, தூப, ஆராதனையும் நடந்தது. காலையில் இருந்து இரவு வரை மொட்டையரசு திடலிலே சுவாமி தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அங்கு ஏராளமான பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என பக்தி கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் மதிய வேளையில் கோடை வெப்பத்தை தணிக்கும் விதமாக வெள்ளரி, பானக்கரம், நீர்மோர் மற்றும் பாகற்காய் குழம்பு படைத்து நெய்வேத்தியம் நடைபெற்றது. இதனையடுத்து மொட்டையரசு திடலை 7 முறை சுற்றி வந்த பஞ்ச உபசார நிகழ்வு நடந்தது. மேலும் பவுர்ணமியையொட்டி நிலா சோறு வைபவம் நடந்தது.

    இதனை தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் மொட்டையரசு திடலில் இருந்து கோவில் இருப்பிடம் வரை பூப்பல்லக்கில் சுவாமி வலம் வந்தார். சுவாமி புறப்பாட்டில் மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகம், திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையம், மதுரைமாநகர் உதவி கமிஷனர் அலுவலகம் என்று பல இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த திருக்கண்களில் சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து இருந்தது.

    ×