search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செந்தூர் கோவில் மயில் சிலை சேதம்- அறநிலையத்துறை அதிகாரி மீது வழக்கு
    X

    திருச்செந்தூர் கோவில் மயில் சிலை சேதம்- அறநிலையத்துறை அதிகாரி மீது வழக்கு

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ள மயில் சிலை சேதம் அடைந்தது தொடர்பாக, அறநிலையத் துறை இணை ஆணையர் மற்றும் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #PeacockIdolDamage #TiruchendurTemple
    திருச்செந்தூர்:

    முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திகழ்வது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலில் மூலவர் சிலைக்கு முன்பாக 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்லினால் செதுக்கப்பட்ட மயில் சிலை ஒன்று இருந்தது.

    இந்நிலையில் அந்த சிலையை 6-8-2017 அன்று இரவு 10 மணிக்கு அர்த்தசாம பூஜை முடிந்து நடை சாத்தப்பட்ட பின் கோவிலின் திருமேனி காவல் பணியாளர்கள் சுவாமிநாதன், ராஜா ஆகிய இருவரும் அந்த மயில் சிலையை எடுத்து விட்டு, அதற்கு பதிலாக வேறு சிலையை வைத்து விட்டு சென்றனர்.

    சிலையை எடுத்து செல்வது தெரியக்கூடாது என்பதற்காக அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவை செயல்படாமல் இருக்க செய்துள்ளனர். திருடிய அந்த மயில் சிலையை வெளிநாட்டிற்கு விற்பனை செய்ய பேரம் பேசி வந்துள்ளனர். ஆனால் அதற்கு எதிர்பார்த்த தொகை கிடைக்காததால் அந்த சிலையை மறைத்து வைத்துள்ளனர்.

    இந்நிலையில் மயில் சிலை திருட்டு போனது தொடர்பாக ஸ்ரீரங்கத்தை சேர்ந்த நரசிம்ம ரங்கராஜன் என்பவர் இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தார். அதன் பேரில் விசாரணை நடத்த திட்டமிட்ட நிலையில், திருடிய மயில் சிலையை அதே இடத்தில் 19-8-2017 அன்று திருடியவர்களே வைத்து விட்டனர்.

    இந்த நிலையில் திருச்செந்தூர் கோவிலில் மயில் சிலை திருடப்பட்டது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் தெரிந்தது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினார். அதில் கல்லால் செய்யப்பட்ட மயில் சிலையை திருட முயன்றது உறுதியானது.

    இது தொடர்பாக திருச்செந்தூர் போலீசில் வழக்குப்பதிவு செய்ய ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் பரிந்துரை செய்தார். அதன் பேரில் கோவில் திருமேனி காவல் பணியாளர்கள் சுவாமி நாதன், ராஜா, அர்ச்சகர்கள் குமார், சுரேஷ், கோவிலின் உள்துறை கண்காணிப்பாளர் பத்ம நாதன், கோவிலின் இணை ஆணையாளராக இருந்த பரஞ்சோதி ஆகிய 6 பேர் மீது சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் தென்னரசன் புகார் செய்தார்.

    அதன் பேரில் அவர்கள் 6 பேர் மீதும் 120(பி)- கூட்டு சதி, 457 (மிமி)-இரவு நேரத்தில் களவாடுதல், 406- சிலைகளை மாற்றுதல், 202, 217 ஆகிய 6 பிரிவுகளின் கீழ் திருச்செந்தூர் திருக்கோவில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிந்துள்ளார்.

    திருச்செந்தூர் கோவிலில் இணை ஆணையாளராக இருந்த பரஞ்சோதிக்கு மயில் சிலை திருடப்பட்டதும், பின்பு அதனை திருடியவர்களே திருப்பி வைத்ததும் தெரிந்துள்ளது. ஆனால் அதனை இந்து சமய அறநிலைத்துறை மற்றும் அரசுக்கு அவர் தகவல் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.

    இதனால் அவர் மீதும் வழக்குப்பதியப்பட்டுள்ளது. தற்போது அவர் நெல்லை இந்துசமய அறநிலையத் துறையின் இணை ஆணையாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #PeacockIdolDamage #TiruchendurTemple
    Next Story
    ×