search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை விவகாரம்: புதுவையில் 26-ந்தேதி பந்த்
    X

    சபரிமலை விவகாரம்: புதுவையில் 26-ந்தேதி பந்த்

    சபரிமலையின் புனிதத்தை பாதுகாக்க வலியுறுத்தி வரும் 26-ந்தேதி புதுவையில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாரதிய ஜனதா அழைப்பு விடுத்துள்ளது. #Sabarimala #BJP #BJPProtest
    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    சபரிமலையில் பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட்டு ஒரு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பிற்கு பிறகும் சபரிமலை புனிதத்தை பாதுகாக்க கோடிக்கணக்கான இந்து பெண்கள் நாங்கள் கோவிலுக்கு செல்ல மாட்டோம் என சபதம் ஏற்றுள்ளனர்.

    ஆனால், வெளிநாட்டு கொள்கையை சுவீகரித்திருக்கும் கம்யூனிஸ்ட்டுகள் சபரிமலை புனிதத்தை சீர்குலைக்க சில சமூக விரோத சக்திகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

    இதற்காக அய்யப்ப பக்தர்கள் மீது அடக்கு முறையை, ஒடுக்கு முறையை ஏவிவிட்டுள்ளனர். சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் தங்கலாம் என்பது புதிதாக ஏற்படுத்தப்பட்டதல்ல. பல ஆண்டுகளாக தொடர்ந்து இருக்கும் நடைமுறைதான்.

    ஆனால், கேரளாவில் உள்ள பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு அரசு பக்தர்களை தங்கவிடாமல் தடுக்கின்றனர். சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் நூற்றுக்கணக்கானவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    கேரள மாநில ஐகோர்ட் பக்தர்களுக்கு எந்த தடையும் இருக்கக்கூடாது என உத்தரவிட்டும் அதை செயல்படுத்த மார்க்சிஸ்ட் அரசு முன்வரவில்லை. கைது செய்யப்பட்ட பக்தர்களை விடுவிக்க வேண்டும் என்றும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரும் சபரிமலையின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் 26-ந்தேதி புதுவையில் முழு அடைப்பு(பந்த்) போராட்டத்திற்கு பா.ஜனதா அழைப்பு விடுக்கிறது.

    புதுவையில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து சபரிமலை செல்லவுள்ளனர். எனவே, அனைத்து அரசியல் கட்சிகளும் தாமாக முன்வந்து இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். வணிக நிறுவனங்கள், வர்த்தக சங்கங்கள், ஆட்டோ, பஸ், டெம்போ ஓட்டுனர்களும் பா.ஜனதா அழைப்பு விடுத்துள்ள இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Sabarimala #BJP #BJPProtest
    Next Story
    ×