search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் வங்கதேச வாலிபர்களுக்கு போலி ஆதார் கார்டு தயாரித்து கொடுத்த பீகார் வாலிபர் கைது
    X

    திருப்பூரில் வங்கதேச வாலிபர்களுக்கு போலி ஆதார் கார்டு தயாரித்து கொடுத்த பீகார் வாலிபர் கைது

    திருப்பூரில் வங்க தேச வாலிபர்களுக்கு போலி ஆதார் கார்டு தயாரித்து கொடுத்த பீகார் வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. #Aadhaarcard

    திருப்பூர்:

    பனியன் நகரமான திருப்பூரில் வெளி நாடு, வெளி மாநிலம், வெளி மாவட்ட தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கி இருந்து பனியன், டையிங் தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இவர்களில் வெளி நாட்டு வாலிபர்கள் சிலர் முறையான ஆவணம் இன்றி தங்கி இருப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன் படி போலீசார் செவந்தாம் பாளையம் சாமந்த தோட்டத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது அங்கு அனுமதியின்றி தங்கி இருந்த வங்க தேசத்தை சேர்ந்த அலமின், அஸ்ரபுல் இஸ்லாம், பர்கத் உசேன், போலஸ் சந்தரா சொர்க்கர், முகமது ரோணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களுக்கு உதவியதாக முகமது பாபுல் உசேன், மோமின்வார் உசேன், ரோபின் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் சோதனை செய்த போது போலி ஆதார் அட்டை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இந்த அட்டையை திருப்பூரை சேர்ந்த ஒரு புரோக்கர் மூலம் அவினாசி ரங்கா நகரில் வசித்து வந்த பீகாரை சேர்ந்த ஆசிஷ் வர்மா என்பவர் தயாரித்து கொடுத்ததாக கூறினார்கள். ஒரு ஆதார் கார்டு தயாரிக்க ரூ. 6 ஆயிரம் கொடுத்ததாகவும் கூறி இருந்தனர்.

    பின்னர் கைதான 8 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    வங்க தேச வாலிபர்களுக்கு போலி ஆதார் கார்டு தயாரிக்க உதவிய புரோக்கர் ஏற்கனவே போலீஸ் பிடியில் சிக்கினார். பீகார் வாலிபர் ஆசிஷ் வர்மாவை தேடி திருப்பூர் போலீசார் அவினாசி சென்றனர்.

    ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில் தனிப்படை போலீசார் பீகார் சென்றனர்.

    அங்குள்ள நோவாலா மாவட்டத்தில் பதுங்கி இருந்த ஆசிஷ் வர்மாவை கைது செய்தனர்.அவரிடம் இருந்து லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை திருப்பூர் அழைத்து வந்தனர்.

    பின்னர் அவர் போலி ஆதார் கார்டு அச்சடித்து கொடுத்த அவினாசிக்கு அழைத்து வந்து அங்குள்ள அறையில் சோதனை நடத்தினர்.

    அங்கு கம்ப்யூட்டர், ஐ ஸ்கேனர், கைரேகை ஸ்கேனர் இருந்தது. அதனை பறிமுதல் செய்தனர். ஏராளமான போலி ஆதார் அட்டை இருந்தது. அதனையும் போலீசார் கைப்பற்றினார்கள்.

    ஆசிஷ் வர்மாவிடம் விசாரித்த போது அவர் பீகாரில் கம்ப்யூட்டர் மையம் நடத்தி வருவது தெரிய வந்தது. அந்த மையத்தின் பாஸ்வேர்டு மூலம் அவினாசி மையத்தில் இருந்து போலி ஆதார் கார்டு அச்சடித்து கொடுத்துள்ளார்.

    திருப்பூரில் வேலை பார்த்து வரும் வெளி மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோருக்கு ஆசிஷ் வர்மா போலியாக ஆதார் கார்டு அச்சடித்து கொடுத்ததாக கூறி உள்ளார்.இவரிடம் போலி ஆதார் கார்டு பெற்றவர்கள் எங்கு தங்கி உள்ளனர் என்பது தொடர்பாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். வர்மாவை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Aadhaarcard

    Next Story
    ×