search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஞ்சா நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்- போலீசுக்கு நாராயணசாமி உத்தரவு
    X

    கஞ்சா நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்- போலீசுக்கு நாராயணசாமி உத்தரவு

    புதுவையில் கஞ்சா விற்பனை படிப்படியாக குறைந்து வருகிறது. அதை போலீஸ் துறையினர் ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும் என்று நாராயணசாமி கேட்டுக் கொண்டுள்ளார். #Narayanasamy

    புதுச்சேரி:

    புதுவையில் போலீஸ் துறை 1963-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் உதய தினம் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 1-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 55-வது உதயதினம் இன்று கோரிமேடு மைதானத்தில் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டார். அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

    விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    பல மாநிலங்களில் குற்றங்கள் நடந்தால் அவற்றை கண்டுபிடிப்பதற்கு பல ஆண்டுகள், பல மாதங்கள் ஆகிறது. புதுவையை பொறுத்தவரை குற்றம் நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடிக்கும் சக்தி இங்குள்ள போலீசுக்கு உள்ளது.

    கடந்த காலங்களில் நகை பறிப்பு, நிலம் அபகரிப்பு, தொழில் உரிமையாளர்களை மிரட்டுதல், பட்டபகலில் கொலை என்ற நிலை இருந்தது. இன்று காவல்துறை சிறப்பாக செயல்பட்டு சட்டம்-ஒழுங்கை காப்பதில் முதன்மையான மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளோம்.

    போலீஸ் துறையை முடுக்கி விட்டதன் மூலம் கொலை குற்றம், நில அபகரிப்புகள் போன்றவற்றை செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்காக சிறப்பாக செயல்பட்ட போலீஸ் தலைமை அதிகாரிகள், உயர் அதிகாரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அடகு கடை உரிமையாளர் கொலை வழக்கு, ஏ.டி.எம். கும்பல் கைது போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

    ஆட்சிக்கு வந்த 2½ ஆண்டில் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கும் மாநிலம் என்ற விருதை நாம் பெற்றுள்ளோம். இப்போது சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகிறார்கள். சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் தான் அவர்களின் வருகை அதிகரித்து இருக்கிறது.

    கடந்த 20 நாட்களுக்கு முன்பு வியாபாரிகள் சங்கத்தினர் கூட்டம் நடத்தினார்கள். அவர்கள் புதுவையில் ஒட்டுமொத்தமாக மாமுல் தொல்லை ஒழிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்கள். இதற்கு போலீஸ் நடவடிக்கை தான் காரணம்.

    கஞ்சா, லாட்டரி, போதை பொருள் விற்பது போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளோம். கஞ்சா விற்பனை படிப்படியாக குறைந்து வருகிறது. அதை போலீஸ் துறையினர் ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    ஸ்பெ‌ஷல் பிராஞ் போலீசார் தங்கள் திறமையை காட்ட வேண்டும். போலீசாரின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    டி.ஜி.பி. சுந்தரி நந்தா பேசியதாவது:-

    புதுவையில் சட்டம்- ஒழுங்கை சிறப்பாக காத்து வருவதால் தான் சுற்றுலா வளர்ச்சி பெறுகிறது. ஆனால் காவல் துறையினரின் இந்த செயல்பாட்டை புரிந்து கொள்ளாமல் சிலர் தவறான எண்ணங்களை உருவாக்கி வருகிறார்கள்.

    புதுவை வளர்ச்சிகாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் போலீசாருக்கு எப்போதும் துணை நிற்போம்.

    இவ்வாறு கூறினார்.

    விழாவில் அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், தலைமை செயலாளர் அஸ்வினி குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முத்தியால்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமிநாராயணன் மற்றும் போலீஸ் துறையை சேர்ந்த பினாபரமேல், வரதராஜ பெருமாள், ஜெனிபர், ஷீஜேஷ், சுஜித், ஜித்தேஷ், சங்கர், நரேந்திரன், நாகராணி, ஏழுமலை, சுந்தரலிங்கம், ரிஜேஷ்குனில், குக்கலதுர்காபிரசாத் ஆகியோருக்கு சிறந்த சேவைக்கான விருதுகளை முதல்-அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.

    Next Story
    ×