search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் 5 ஆயிரம் ஏரிகளை காணவில்லை- அன்புமணி ராமதாஸ் பேச்சு
    X

    தமிழகத்தில் 5 ஆயிரம் ஏரிகளை காணவில்லை- அன்புமணி ராமதாஸ் பேச்சு

    ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழகத்தில் 47 ஆயிரம் ஏரிகள் காணப்பட்டன. தற்போது 42 ஆயிரம் ஏரிகள் மட்டுமே உள்ளன. 5 ஆயிரம் ஏரிகள் காணாமல் போய்விட்டன என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி பேசினார். #anbumani #pmk

    வேலூர்:

    ‘‘பாலாற்றை பாதுகாப்போம், கரம் கோர்ப்போம்’’ என்ற முழக்கத்துடன் பா.ம.க. சார்பில் 2 நாள் விழிப்புணர்வு பிரசார பயணத்தை பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணையில் நேற்று தொடங்கினார்.

    தொடர்ந்து திம்மாம்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், காட்பாடியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து வேலூரில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அன்புமணி பேசியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் பால் போன்று ஓடிய ஆறு தற்போது பாழாய் போகி விட்டது. தமிழகத்தை ஆட்சி செய்த தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் தான் இதற்கு முக்கிய காரணமாகும். தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்து அடுத்த சந்ததியினர் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

    கடந்த 22 ஆண்டுகளாக பாலாற்றை காப்பாற்ற பா.ம.க. கட்சி போராடி வருகிறது. பாலாற்றில் நாளொன்றுக்கு 70 லட்சம் லிட்டர் கழிவுகள் நேரடியாக கலக்கிறது.

    ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழகத்தில் 47 ஆயிரம் ஏரிகள் காணப்பட்டன. தற்போது 42 ஆயிரம் ஏரிகள் மட்டுமே உள்ளன. 5 ஆயிரம் ஏரிகள் காணாமல் போய்விட்டன. தமிழகத்தில் உள்ள தாமிரபரணி, காவிரி, வைகை உள்ளிட்ட அனைத்து ஆறுகளையும் பாதுகாக்க பா.ம.க. பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

    பா.ம.க.வினர் சினிமாவுக்கு எதிரானவர்கள் கிடையாது. சினிமா கலாசாரத்துக்கு எதிரானவர்கள். நடிகர்களின் கட்-அவுட்டுகளுக்கு பால், பீர் அபிஷேகம், கற்பூரம் ஏற்றுவது போன்ற கலாசாரம் வேண்டாம் என்றுதான் கூறுகிறோம்.

    தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டமான வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரிக்க வேண்டும். கோடை காலங்களில் வேலூர் மாவட்டத்தில் 110 டிகிரி வெயில் பதிவாகும். வருங்காலங்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்க கூடும். இதனை தடுக்க வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மலைகளிலும் மரங்களை நட்டு பசுமையாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வரும் 5 ஆண்டுகளில் மலைகளில் 10 லட்சம் புங்கை, வேம்பு மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும். இதில், தனியார் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், ரோட்டரி கிளப்புகள், பொதுமக்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

    பாலாற்றை பாதுகாக்க ஆந்திராவில் கட்டப்பட்ட தடுப்பணைகளை அகற்ற வேண்டும். பாலாற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும். தோல் பதனிடும் தொழிற்சாலைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். தென்பெண்ணை-பாலாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அனைத்து துறைகளிலும் ஊழல் பெருகி விட்டது. இந்த ஆட்சி முடிந்தவுடன் முதல்-அமைச்சர் உள்பட அனைத்து அமைச்சர்களும் ஜெயிலில் கம்பி எண்ணுவார்கள். சேலம்-சென்னை 8 வழிச்சாலை வராது. 8 வழிச்சாலை திட்டம் கொள்ளை அடிக்கவே போடப்பட்டது. அதற்காக ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பணத்தை வைத்து தமிழகத்தில் உள்ள ஆறுகளில் தடுப்பணைகள் கட்டினால் ஆண்டுக்கு 100 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கலாம்.

    அண்டை மாநிலங்கள் நீர்நிலைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் தமிழக அரசு இலவச திட்டங்களுக்கு ரூ.62 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது. அதனை வைத்து பல அணைகள் கட்டியிருக்கலாம். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வருவோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #anbumani #pmk 

    Next Story
    ×