search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்ட விரோத பணபரிவர்த்தனை- அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா ஆஜரானார்
    X

    சட்ட விரோத பணபரிவர்த்தனை- அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா ஆஜரானார்

    சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா மீது நில மோசடி வழக்கு உள்ளது.

    குர்கான், பீகானிரில் நிலம் வாங்கியதில் நடந்த மோசடி தொடர்பாக அவர் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.

    இதேபோல லண்டனில் ரூ.19 கோடி மதிப்புடைய சொத்துக்களை வாங்கியதிலும் சட்ட விரோத பணபரிவர்த்தனை வழக்கு வதேரா மற்றும் அவரது உதவியாளர் மனோஜ் அரோரா மீது உள்ளது.

    இந்த வழக்குகளில் கைதாகாமல் இருக்க அவர் கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முன்ஜாமீன் பெற்று இருந்தார். அப்போது விசாரணைக்கு ராபர்ட் வதேரா ஒத்துழைக்க வேண்டும், அனுமதியின்றி வெளிநாடு செல்ல கூடாது என்பது போன்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.

    இந்த முன்ஜாமீனை ரத்து செய்ய கோரியும், வெளிநாடு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அமலாக்கத்துறை டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை ஜூன் 3-ந்தேதி ஒத்திவைக்கப்பட்டது.

    இதற்கிடையே வெளிநாட்டில் சட்ட விரோத சொத்துக்கள் வாங்கியது தொடர்பாக வதேராவுக்கு அமலாக்கத்துறை நேற்று புதிய சம்மனை அனுப்பி இருந்தது. இன்று ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

    இதைத் தொடர்ந்து இன்று காலை10.30 மணியளவில் ராபர்ட் வதேரா டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகம் முன்பு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    முன்னதாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    நீதித்துறையை நான் மிகவும் மதிக்கிறேன். நான் இதுவரை 11 முறை ஆஜராகி இருக்கிறேன். 70 மணி நேரம் என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. எதிர்காலத்திலும் நான் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன். என் மீது கூறப்பட்டுள்ளது பொய்யான குற்றச்சாட்டு ஆகும்.

    இவ்வாறு வதேரா கூறியுள்ளார்.
    Next Story
    ×