search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏழைகளுக்கு உதவும் இயக்கத்தை தடை செய்தது ஏன்? : மெகபூபா முப்தி ஆவேசம்
    X

    ஏழைகளுக்கு உதவும் இயக்கத்தை தடை செய்தது ஏன்? : மெகபூபா முப்தி ஆவேசம்

    ஏழைகளுக்கு உதவி செய்யும் ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கத்தை மத்திய அரசு தடை செய்ததால் காஷ்மீரில் உள்ள மக்கள் கொந்தளித்துப்போய் இருப்பதாக முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி குறிப்பிட்டுள்ளார். #MehboobaMufti #JamaateIslamiban
    ஜம்மு:

    காஷ்மீரில் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.  இதன்பின்னர் காஷ்மீரில் பிரிவினைவாத கட்சியை சேர்ந்த 5 தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது.

    ஜம்மு காஷ்மீரில் போலீசார் பிரிவினைவாத கட்சியின் தலைவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.  இதில் சுமார் 100 பேர் கைது  செய்யப்பட்டனர். அதில் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் அப்துல் ஹமிது பியாஸ், செய்தித்தொடர்பாளர் ஜாஹித் அலி ஆகியோரும் அடங்குவர்.

    ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு கடந்த காலங்களில் பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கூறி கடந்த 1990-களில் தடை செய்யப்பட்டு பின்னர் 1995-ம் ஆண்டு தடை நீக்கப்பட்டது.

    சமீபத்தில் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில், ஜமாத்-இ-இஸ்லாமி ஜம்மு காஷ்மீர் அமைப்புக்கும், பயங்கரவாத அமைப்புக்கும் இடையே தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், மாநிலத்தில் பிரிவினைவாத செயல்களை தூண்டிவிடுவதிலும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் நடந்த பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட குழு கூட்டத்தில் இந்த அமைப்புக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.

    இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், "ஜம்மு காஷ்மீரில்  செயல்பட்டு வந்த ஜமாத்-இ-இஸ்லாமி ஜம்மு அன்ட் காஷ்மீர் அமைப்பு அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவில் தடை செய்யப்படுகிறது. பயங்கரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு இருப்பதும், பயங்கரவாத செயல்களுக்கு உதவி செய்வதும், மாநிலத்தில் பிரிவினையை தூண்டிவிடவும் முயல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஒருங்கிணைந்த தேசத்தில் பிரிவினைக்கு முயன்று, பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகளுடன் கைகோர்த்து செயல்படுகிறது. இதனால், மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் ஏற்படும் சூழல் நிலவுகிறது. ஆதலால், ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பை தடை செய்கிறோம்" என தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கத்தின் பல தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் குடியிருப்புகள் உள்ளிட்ட சொத்துகள்  பல்வேறு பகுதிகளில் முடக்கப்பட்டுள்ளன. வங்கி கணக்குகளும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த இயக்கத்தின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.



    ஜமாத் இ இஸ்லாமி இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி காஷ்மீரின் பல பகுதிகளில் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ஏழைகளுக்கு உதவி செய்யும் ஜமாத் இ இஸ்லாமி இயக்கத்தை மத்திய அரசு தடை செய்ததால் காஷ்மீரில் உள்ள மக்கள் கொந்தளித்துப்போய் உள்ளதாக முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி குறிப்பிட்டுள்ளார்.

    காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மெகபூபா முப்தி கூறியதாவது:-

    ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கத்தை சேர்ந்த தலைவர்களையும், வாலிபர்களையும் கைது செய்யும் நடவடிக்கை அதிகரித்துள்ளதால் இங்குள்ள மக்கள் மத்தியில் கொந்தளிப்பு அதிகமாகியுள்ளது. ஜமாத்-இ-இஸ்லாமி என்பது ஒரு சமூகம்சார்ந்த அரசியல் அமைப்பு, அது ஒரு சித்தாந்தம். இந்த அமைப்பினரை கைது செய்து சிறையில் அடைப்பதால் நீங்கள் அதன் சித்தாந்தத்தை சிறைப்படுத்த முடியாது.

    ஒருவகையான இறைச்சியை உண்பதாக நாட்டில் மக்கள் அடித்துக் கொல்லப்படுவதற்கு எதிராக எந்த     நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, ஏழை மக்களுக்கு நன்மை செய்துவரும், இலவச பள்ளிக்கூடங்களை நடத்திவரும் இயக்கங்கள் மீது தடை விதிக்கப்படுவதையும், அதன் ஆதரவாளர்கள் சிறையில் அடைக்கப்படுவதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதற்கான எதிர்விளைவு மிகவும் ஆபத்தாக அமைந்துவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MehboobaMufti  #JamaateIslamiban
    Next Story
    ×