search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலையில் போலீஸ் கெடுபிடியை கண்டித்து பக்தர்கள் போராட்டம் - 100 பேர் கைது
    X

    சபரிமலையில் போலீஸ் கெடுபிடியை கண்டித்து பக்தர்கள் போராட்டம் - 100 பேர் கைது

    சபரிமலையில் போலீசாரின் கெடுபிடியை கண்டித்து பக்தர்கள் நடத்திய போராட்டம் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் 100 பேர் கைது செய்யப்பட்டனர். #SabarimalaDevotees
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பு இருமுறை கோவில் நடை திறக்கப்பட்டபோது சபரிமலையில் வன்முறையும், மறியல் போராட்டமும் நடந்தது.

    இந்த போராட்டங்கள் சபரிமலையில் மண்டல பூஜை விழாவின் போது தொடராமல் இருக்க போலீசார் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தனர்.

    அதன்படி சபரிமலை சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இரவு 10 மணிக்கு மேல் சன்னிதானத்தில் தங்க கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டனர்.

    அப்பம், அரவணை விற்கும் கடைகளும் இரவில் திறக்க அனுமதி மறுக்கப்பட்டது. இரவு நேரத்தில் சபரிமலை செல்ல நடைபந்தலில் காத்திருக்கவும் கூடாது என்று பக்தர்கள் தடுக்கப்பட்டனர்.

    சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்ட 16-ந்தேதி மாலை முதலே போலீசாரின் உத்தரவுகள் அமலுக்கு வந்தது. 17-ந்தேதி அதிகாலை முதல் பக்தர்களிடம் போலீசார் கெடுபிடி காட்டினர். இதனால் பக்தர்களுக்கும் போலீசாருக்கும் இடையே முதல் நாளில் இருந்தே வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வந்தனர். அவர்களை போலீசார் பலத்த சோதனைக்கு பிறகே சன்னிதானம் செல்ல அனுமதித்தனர்.

    நடைபந்தலிலும் பக்தர்களை காத்திருக்க அனுமதிக்கவில்லை. நேற்று மாலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் இரவு 10 மணி ஆனதும் சன்னிதானத்தை விட்டு வெளியேறும்படி போலீசார் கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்த பக்தர்கள் நடை பந்தல் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதிஷ்குமார், போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்களை சமரசம் செய்தார். அசம்பாவிதங்களை தடுக்கவே போலீசார் கட்டுப்பாடுகளை விதித்திருப்பதாகவும், அதற்கு பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    அதற்கு பக்தர்கள், ஐயப்பனை தரிசிக்க கட்டுப்பாடு விதிப்பதை ஏற்க முடியாது என்று கூறி கோ‌ஷம் எழுப்பினர்.

    போராட்டம் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் கைது செய்யப்பட்டனர். 100 பேர் கைது செய்யப்பட்டு பம்பை போலீஸ் நிலையம் கொண்டுச் செல்லப்பட்டனர். அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர கூடிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதற்கு பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கண்டனம் தெரிவித்தது. ஐயப்ப பக்தர்கள் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்தது.

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்ட பின்பு வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். நடைபந்தலில் மட்டும் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சன்னிதானம் செல்ல காத்திருப்பார்கள். ஆனால் கடந்த 2 நாட்களாக போலீசார் காட்டும் கெடுபிடி, பா.ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் நடத்திய முழு அடைப்பு காரணமாக நேற்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது.

    நடைபந்தல் காலியாக இருந்ததோடு, 18-ம் படியிலும் பக்தர்கள் நெரிசல் இன்றி ஏறிச் சென்றனர். அப்பம், அரவணை விற்பனையும் கடந்த ஆண்டைக்காட்டிலும் பாதியாக குறைந்து விட்டது. நேற்று சபரிமலையில் கேரளா, தமிழ்நாடு பக்தர்களின் வருகை மிக மிக குறைவாக இருந்தது. ஆந்திரா, கர்நாடகாவைச் சேர்ந்த பக்தர்களே வந்திருந்தனர்.

    இதற்கிடையே சபரிமலையில் மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கவும், பக்தர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்தவும் மத்திய போலீஸ் படையை அழைக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

    வழக்கமாக மண்டல பூஜை நெருங்கி வரும் போது கண்காணிப்பு பணிக்காக மத்திய கமாண்டோ படையினர் பாதுகாப்பு பணிக்கு வருவார்கள். அவர்களை இப்போதே அழைத்தால் பா.ஜனதா கட்சியினரின் போராட்டத்தை அவர்கள் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று கேரள அரசு கருதுவதாக கூறப்படுகிறது.  #SabarimalaDevotees
    Next Story
    ×