search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரிதாநாயர் பாலியல் புகார்: உம்மன்சாண்டி - காங்.எம்.பி. மீது திடீர் வழக்கு
    X

    சரிதாநாயர் பாலியல் புகார்: உம்மன்சாண்டி - காங்.எம்.பி. மீது திடீர் வழக்கு

    சரிதாநாயர் பாலியல் புகாரின் பேரில் உம்மன்சாண்டி மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #OommenChandy #SarithaNair

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த முறை காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது முதல்- மந்திரியாக உம்மன்சாண்டி இருந்தார்.

    அப்போது சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை 2013-ம் ஆண்டு மாநில அரசு நிறைவேற்றியது.

    இது தொடர்பான ஒப்பந்தம் பந்தளம் செங்கனூரைச் சேர்ந்த பெண் தொழில் அதிபர் சரிதாநாயரின் கம்பெனிக்கு வழங்கப்பட்டது. சரிதாநாயர், அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் தகடுகளை பெரிய நிறுவனங்கள், தனியார் கம்பெனிகளுக்கு பொருத்தி கொடுத்தனர்.

    அப்போது அவர்கள் பலரிடம் பணம் வசூல் செய்து விட்டு சோலார் பேனல் தகடுகளை பொருத்தி கொடுக்கவில்லை என்று புகார் எழுந்தது. கேரளா, கோவையைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாடு வாழ் கேரள தொழில் அதிபர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பான புகாரின் பேரில், சரிதாநாயர், பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோரை கேரள போலீசார் கைது செய்தனர். பிறகு சரிதாநாயர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

    ஜாமீனில் வெளி வந்த பிறகு சரிதாநாயர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்த தொடங்கினார். சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் பொருத்தும் பணியை தனது கம்பெனிக்கு வழங்குவதற்கு பலருக்கும் பணம் லஞ்சமாக கொடுத்ததாகவும், பணத்திற்கு பதில் சிலர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறினார்.

    சோலார் பேனல் பொருத்தும் பணி தொடர்பாக தான் பலமுறை உம்மன்சாண்டியை சந்தித்து பேசி உள்ளதாகவும், அப்போது உம்மன்சாண்டியும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார்.

    அதேபோல முன்னாள் மத்திய மந்திரி கே.சி. வேணு கோபால் மற்றும் பல அரசியல் பிரமுகர்கள் மீதும் சரிதாநாயர் பாலியல் புகார் கூறினார்.

    தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை உம்மன்சாண்டி மறுத்தார். முதல்- அமைச்சர் என்ற முறையில் பலரும் தன்னை சந்தித்து பேசுவது வழக்கம். அது போல தொழில் அதிபர் என்ற முறையில் சரிதாநாயரை சந்தித்ததாகவும், தவறாக எதுவும் நடக்க வில்லை என்றும் கூறினார். இதேபோல கே.சி.வேணுகோபாலும் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.

    ஆனால் எதிர்க்கட்சிகள் முதல்-மந்திரி பதவியில் இருந்து உம்மன்சாண்டி ராஜினாமா செய்யவேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தியதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இது தொடர்பாக விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டது. இந்த கமி‌ஷன் முன்பு உம்மன் சாண்டி ஆஜராகி விளக்கம் அளித்தார். சரிதாநாயரும் விசாரணை கமி‌ஷனில் இதே குற்றச்சாட்டை வலியுறுத்தினார்.

     


     

    சரிதாநாயர் புகார் தொடர்பாக திருவனந்தபுரம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜரான சரிதாநாயர் தனது குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பரபரப்பு வாக்குமூலத்தையும் கோர்ட்டில் அளித்தார்.

    இந்த நிலையில் கேரள சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தலில் உம்மன்சாண்டி மீதான சோலார் பேனல் மோசடி, சரிதாநாயரின் பாலியல் புகார் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி கம்யூனிஸ்டு கட்சியினர் பிரசாரம் செய்தனர்.

    அந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. பினராய் விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு அரசு கேரளாவில் அமைந்தது. பினராய் விஜயன் பதவியேற்றதும், உம்மன்சாண்டி மீதான சரிதாநாயர் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார். ஆனாலும் உம்மன்சாண்டி மீது உடனடியாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

    சமீபத்தில் கேரள குற்றப்பிரிவு போலீசிலும் உம்மன்சாண்டி, கே.சி. வேணுகோபால் ஆகியோர் மீது சரிதாநாயர் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரில் உம்மன் சாண்டி, கே.சி.வேணுகோபால் ஆகியோர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    அந்த புகாரின் பேரில் உம்மன்சாண்டி, கே.சி. வேணுகோபால் ஆகியோர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் உம்மன் சாண்டி கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.

    வழக்குப்பதிவு செய்யப்பட்ட கே.சி. வேணு கோபால் தற்போது ஆலப்புழா தொகுதி எம்.பி.யாகவும், கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளராகவும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.

    முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன்சாண்டி மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உம்மன் சாண்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் கூறும்போது, தற்போது கேரளாவில் சபரிமலை கோவில் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளதால் அதை திசை திருப்ப மாநில அரசு இந்த நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக குற்றம் சாட்டினார்கள்.

    சரிதாநாயர் சில மலையாள சினிமாக்களிலும் நடித்துள்ளார். குமரி மாவட்டம் தக்கலை உள்பட சில இடங்களில் தொழில் நிறுவனங்களும் நடத்தி வருகிறார். அவரது ஆடை மாற்றும் நிர்வாணப் படம் செல்போன்களில் பரவி பரபரப்பு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. #OommenChandy #SarithaNair

    Next Story
    ×