search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடகில் கனமழை: முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கு தலா ரூ.3,800 நிதி உதவி - குமாரசாமி அறிவிப்பு
    X

    குடகில் கனமழை: முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கு தலா ரூ.3,800 நிதி உதவி - குமாரசாமி அறிவிப்பு

    குடகில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு தலா ரூ.3,800 நிதி உதவி வழங்கப்படும் என்று கர்நாடக முதல் அமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார். #KarnatakaRain #FloodHitKodagu
    பெங்களூரு:

    ‘கர்நாடகத்தின் ஸ்காட்லாந்து‘ என்று அழைக்கப்படும் குடகில் கடந்த ஒருவாரமாக மழை கோரதாண்டவமாடியது.

    இதனால் மடிகேரி, சோமவார்பேட்டை, விராஜ்பேட்டை ஆகிய தாலுகாக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மடிகேரி தாலுகா நாகபொக்லு, முக்கொட்லு, சுண்டிகொப்பா, மக்கந்தூர், பாடக்கேரி, தொட்டபெலகுந்தா, பாலூர், கல்லூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் சிக்கி நாசமாகியுள்ளன. இதன் காரணமாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீடுகள், உடைமைகளை இழந்து அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் பரிதவித்து வருகிறார்கள்.



    மொத்தத்தில் மழையின் கோரபசிக்கு குடகு மாவட்டம் உருக்குலைந்து போய் கிடக்கிறது. கனமழையின் கோரதாண்டவத்தில் சிக்கிய குடகு மாவட்டத்தில் மீட்பு பணிகளை கர்நாடக அரசு முடுக்கிவிட்டுள்ளது. மேலும் அரசு சார்பில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளும் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் குடகு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்கள் குறித்து முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்தில் நான் 2 நாட்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டேன். பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழைக்கு இதுவரை 12 பேர் மரணம் அடைந்துள்ளனர். 845 வீடுகள் முழுவதுமாகவும், 773 வீடுகள் பாதி அளவும் சேதம் அடைந்துள்ளன. 123 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் சேதம் அடைந்துள்ளன.

    58 பாலங்கள், 278 அரசு கட்டிடங்கள், 3,800 மின் கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன. சில சாலைகள் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளன. அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களில் இன்று (அதாவது நேற்று) காலை 10 மணி வரை 4,320 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழையின் தீவிரம் சற்று குறைந்துள்ளதால் நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    குடகு மாவட்ட நிர்வாகம், போலீஸ் துறை, கர்நாடக போலீஸ் ஆயுதப்படை, ராணுவம், விமானப்படை, கடற்படை, தேசிய இயற்கை பேரிடர் மீட்பு குழு, மாநில அரசின் வருவாய்த்துறை, ஊர்க்காவல் படையை சேர்ந்த 1,725 பேர் சிறப்பு பயிற்சி பெற்று போர்க்கால அடிப்படையில் 24 மணி நேரமும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் மக்களை மீட்கும் பணிக்காக வந்துள்ளன.

    கர்நாடக அரசின் தலைமை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் வெள்ள சேதங்கள் மற்றும் நிவாரண பணிகள் குறித்த தகவல்களை சேகரித்து வருகிறார்கள். ஜனாதிபதி, பிரதமர், மத்திய ராணுவ மந்திரி ஆகியோர் என்னிடம் பேசி விவரங்களை கேட்டு பெற்றனர். தலைமை செயலாளர் இன்று (அதாவது நேற்று) குடகு, தட்சிண கன்னடா, உடுப்பி ஆகிய மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் கூட்டம் நடத்தி விவரங்களை பெற்றார். நிவாரண பணிகள் குறித்து சில உத்தரவுகளை தலைமை செயலாளர் பிறப்பித்துள்ளார்.

    தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி ஆகிய மாவட்டங்களில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்புகிறது. குடகு மாவட்டத்தில் மழை சிறிதளவுக்கு குறைந்திருந்தபோதும், அங்கு நிவாரண பணிகளை மேற்கொள்வதில் சவாலாக உள்ளது. மாவட்ட பொறுப்பு மந்திரி, பொறுப்பு செயலாளர், தீயணைப்புத்துறை டி.ஜி.பி., கூடுதல் தலைமை செயலாளர்கள் 2 பேர் குடகு மாவட்டத்திலேயே தங்கி நிவாரண பணிகளை நிர்வகித்து வருகிறார்கள்.

    மைசூரு, தட்சிண கன்னடா மாவட்டங்களை சேர்ந்த சில அதிகாரிகளையும் குடகுக்கு அனுப்பி இருக்கிறோம். குடகு மாவட்டத்தில் 41 நிவாரண முகாம்கள், தட்சிண கன்னடா மாவட்டத்தில் 9 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது மொத்தம் 6,620 பேர் இந்த நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த நிவாரண முகாம்களுக்கு பால், உணவு வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளது.

    மாநிலம் முழுவதும் இருந்து வரும் நிவாரண பொருட்கள் குடகு மாவட்ட நிர்வாகம் சார்பில் பெறப்படுகிறது. அந்த நிவாரண பொருட்கள் கிராம பஞ்சாயத்து வாரியாக பிரித்து மக்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 5 மருத்துவ குழுக்கள், 10 வருவாய்த்துறை குழுக்களை குடகுக்கு அனுப்பி இருக்கிறோம். 60 பொக்லைன் எந்திரங்கள், 20 ஆழ்துளை கிணறு அமைக்கும் லாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு அடுத்த 10 நாட்களில் தற்காலிக அலுமினியம் கொட்டகைகள் அமைத்து கொடுக்க முடிவு செய்துள்ளோம். இதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குசால்நகரில் 3 லே-அவுட்டுகள் முழுவதுமாக நீரில் மூழ்கி இருக்கின்றன. அங்கிருந்து தண்ணீரை வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இந்த வெள்ளம் வடிந்த பிறகு அடுத்து வரும் சவால் என்னவென்றால், மக்களின் உடல் ஆரோக்கியம். தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் குழுக்களை குடகுக்கு அனுப்பி இருக்கிறோம். மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மழையால் ஏற்பட்டுள்ள குப்பைகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

    குடகு மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்ட பாடப்புத்தகங்கள் வெள்ளத்தில் சிக்கி சேதம் அடைந்துவிட்டதால், அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு புதிதாக பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்படும். குடகு மாவட்டத்தில் நிவாரண முகாம் களில் உள்ளவர்களுக்கு உடனடியாக ஒரு குடும்பத்திற்கு ரூ.3,800 வீதம் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும் பாதிக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் குடும்பங்களுக்கு தினசரி உணவு பொருட்களை வழங்க 10 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    பாகமண்டலா- நாபொக்லு, அய்யங்கேரி, சுள்ளியா-மடிகேரி சாலையில் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அவற்றை சரிசெய்யும் பணியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குடகு மாவட்டத்தில் மின் வினியோகத்தை சரிசெய்ய கர்நாடக மின்சார கழகம் மற்றும் பெங்களூரு மின் வினியோக கழகங்கள் மூலம் மின் ஊழியர்கள் அடங்கிய குழுக்கள் அனுப்பப்பட்டு இருக்கின்றன.

    குடகு மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 20 நாட்கள் விடுமுறை விடப்பட்டன. இதனால் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்த உத்தரவிட்டுள்ளேன். குடகு மாவட்டத்தில் அரசு துறைகளில் காலியாக பணியிடங்களை நிரப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டத்தில் அரசு அதிகாரிகளுக்கு பணி இடமாறுதல் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளோம்.

    அந்த மாவட்டத்தில் தாலுகா வாரியாக ஏற்பட்டுள்ள சேதம் குறித்த அறிக்கையை தயாரிக்கவும், வீடுகளை கட்டி கொடுக்கும் பணிகளை நிர்வகிக்கவும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ விரும்புவோர் முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு பணத்தை அனுப்பலாம்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.  #KarnatakaRain #FloodHitKodagu
    Next Story
    ×