search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் போலீஸ்காரரை கடத்தி கொன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
    X

    காஷ்மீரில் போலீஸ்காரரை கடத்தி கொன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

    காஷ்மீரில் போலீஸ்காரரை கடத்தி கொலை செய்த 3 பயங்கரவாதிகளை அதிரடிப்படை போலீசாரும், ராணுவ வீரர்களும் சுட்டுக்கொன்றனர். #policeconstableMohdSalim #Murder
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் போலீஸ்காரரை கடத்தி கொலை செய்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் முத்தலாமா கிராமத்தை சேர்ந்த போலீஸ்காரரான முகமது சலீம் ஷா, சமீபத்தில் விடுமுறையில் வீட்டுக்கு சென்றார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு முகமது சலீம் ஷா வீட்டுக்குள் புகுந்த பயங்கரவாதிகள், அவரை கடத்தி சென்றனர்.

    அதன் பின்னர் நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து 10 கி.மீ. தொலைவில் ரெட்வாணி என்கிற இடத்தில் முகமது சலீம் ஷா பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து, இந்த நாசவேலையில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையில் மாநில போலீசாரும், ராணுவ வீரர்களும் ஈடுபட்டனர்.  இந்த நிலையில் ரெட்வாணி பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சிறப்பு அதிரடிப்படை போலீசாரும், ராணுவ வீரர்களும் அந்த இடத்துக்கு விரைந்து சென்று அந்த வீட்டை சுற்றிவளைத்தனர். அப்போது வீட்டினுள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

    அதனை தொடர்ந்து போலீசாரும், ராணுவ வீரர்களும் தங்களுடைய துப்பாக்கிகளால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.

    இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இறுதியில் வீட்டினுள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் 3 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    அவர்களுடைய உடலை போலீசார் கைப்பற்றினர். ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் அந்த வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டன. சுட்டுக்கொல்லப்பட்ட மூவரில் ஒருவர் பாகிஸ்தான் நாட்டுக்காரர் என்பதும், இவர்கள் 3 பேரும் தான் போலீஸ்காரர் முகமது சலீம் ஷாவை கடத்தி கொலை செய்தனர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மேலும் இவர்கள் 3 பேரும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளான ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா உடன் தொடர்பில் இருந்ததாகவும், காஷ்மீரில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு அப்பாவி மக்களை கொன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கதுவா மாவட்டம் கிரான் நகரில் போபியா என்கிற இடத்தில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று அதிகாலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது பாகிஸ்தான் பகுதியில் இருந்து மர்ம நபர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சித்தார். இதனை பார்த்த எல்லை பாதுகாப்புபடை வீரர்கள், அந்த நபரை தங்களிடம் சரணடைந்து விடும்படி எச்சரித்தனர்.

    ஆனால் அதனை பொருட்படுத்தாத அந்த மர்ம நபர் தொடர்ந்து முன்னேறினார். இதையடுத்து வேறுவழியின்றி எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அவரை சுட்டுவீழ்த்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.   #policeconstableMohdSalim #Murder #tamilnews
    Next Story
    ×