search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேகாலயா மாநிலத்தில் அமலில் இருந்த ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் வாபஸ்
    X

    மேகாலயா மாநிலத்தில் அமலில் இருந்த ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் வாபஸ்

    மேகாலயா மாநிலத்தில் அமலில் இருந்த ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் முற்றிலுமாக வாபஸ் பெற்றப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. #AFSPA
    புதுடெல்லி:

    பயங்கரவாதிகள் மற்றும் உள்நாட்டு போராளி குழுக்களின் நடமாட்டம் அதிகம் உள்ள ஜம்மு-காஷ்மீர் மற்றும் அசாம், மேகாலயா, மணிப்பூர், நாகலாந்து, அருணாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமலில் உள்ளது.

    போடோலாந்து, நக்சலைட், மாவோயிஸ்ட், நாகா விடுதலை முன்னணி ஆகிய அமைப்பினரின் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளில் வன்முறையில் ஈடுபடுவோர் மற்றும் பொதுச் சொத்துகளை நாசப்படுத்துவோரை உடனடியாக கைது செய்யவும், தேவை ஏற்படும்போது தற்காப்புக்காக சுட்டுக் கொல்லவும், சந்தேகத்துக்குரிய பகுதிகளில் முன் அனுமதி இன்றி சோதனை நடத்தவும் துணை ராணுவம், போலீசார் உள்ளிட்டவர்களுக்கு இந்த சட்டம் அதிகாரம் அளிக்கிறது.

    ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தி பொதுமக்கள் துன்புறுத்தப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றன.

    வடகிழக்கு மாநிலங்களில் முன்பிருந்ததைப்போல் பயங்கரவாத அச்சுறுத்தல் இப்போது இல்லை. அங்குள்ள போராளிகள் ஒடுக்கப்பட்டு நிலைமை மேம்பாடு அடைந்து வருவதால் இந்த ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் சர்வதேச பொது மன்னிப்பு சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.

    இந்நிலையில், மேகாலயா மாநிலத்தில் அமலில் இருந்த ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் கடந்த 31-3-2018 முதல் முற்றிலுமாக வாபஸ் பெற்றப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சக உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

    இதேபோல், அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்திம் 16 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமலில் இருந்த இந்த சட்டம் தற்போது 8 காவல் நிலைய எல்லைகளுக்குள் மட்டும் அமலில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். #tamilnews #AFSPA
    Next Story
    ×