search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செவாலியே விருது மோடிக்கு கொடுக்கலாம் - முத்தரசன் பேச்சு
    X

    செவாலியே விருது மோடிக்கு கொடுக்கலாம் - முத்தரசன் பேச்சு

    நடிகர் சிவாஜிகணேசனுக்கு செவாலியே விருது கொடுத்ததற்கு பதிலாக நடிப்பின் திலகமாக விளங்கும் மோடிக்கு அந்த விருதை வழங்கி இருக்கலாம் என தேர்தல் பிரசார கூட்டத்தில் முத்தரசன் கூறியுள்ளார். #Mutharasan
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் தி.மு.க. பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட்டு சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு கோர்ட்டு தடை விதித்துள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் கோரிக்கையை நீதிபதிகள் நிலை நிறுத்தி உள்ளனர். இந்த தீர்ப்பை கேட்டு மானம் உள்ள அரசாக இருந்தால் தமிழக அரசு ராஜினாமா செய்ய வேண்டும்.

    நான்தான் வழக்குப் போட்டேன் என்று கூறும் பா.மக. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தது ஏன்? இந்த தீர்ப்புக்கு பிறகு அரசாங்கத்தின் நிலை என்ன என்பதை விளக்க வேண்டும்.

    விருதுநகரில் பேசிய தமிழக அமைச்சர் இப்பிரச்சினையில் மேல்முறையீடு, கீழ்முறையீடு கிடையாது என்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீர்ப்பு குறித்து வாயே திறக்கவில்லை.

    இந்த சாலை அமைப்பதற்கு ரூ.10 ஆயிரம் கோடி திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த திட்டத்திற்கும் 20 சதவீதம் கமி‌ஷன் வாங்கப்படுகிறது. நீதிமன்றம் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று சரியான தீர்ப்பு வழங்கி உள்ளது.

    இந்தியாவில் நேரு முதல் மன்மோகன்சிங் வரை பல பிரதமர்களை நாம் பார்த்துள்ளோம். ஆனால் மோடியை போல யாரும் பொய் சொல்வதில் கில்லாடி இல்லை.



    நடிகர் சிவாஜிகணேசனுக்கு செவாலியே விருது கொடுத்ததற்கு பதிலாக நடிப்பின் திலகமாக விளங்கும் மோடிக்கு அந்த விருதை வழங்கி இருக்கலாம். மத்தியில் மோடியையும், மாநிலத்தில் எடப்பாடியையும் அகற்றும் வரை மக்களுக்கு நல்ல திட்டங்கள் கிடைக்காது.

    இவ்வாறு அவர் பேசினார். #Mutharasan
    Next Story
    ×