search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய பட்ஜெட்டுக்கு ஆதரவு-எதிர்ப்பு: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து
    X

    மத்திய பட்ஜெட்டுக்கு ஆதரவு-எதிர்ப்பு: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

    மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர். #Budget2019
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பா.ம.க. நிழல் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 மூலதன மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. அதற்கு மதிப்பளிக்கும் வகையில், 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

    வருமான வரி செலுத்தாமல் இருப்பதற்கான வருவாய் உச்சவரம்பு ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில் வருமானவரி விகிதங்களில் மாற்றம் செய்யப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

    வேலைவாய்ப்புகளைப் பெருக்க போதிய அளவில் திட்டங்கள் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. மொத்தத்தில் தேர்தலை நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜெட் வரவேற்கத்தக்க பல அம்சங்களையும், ஏமாற்றமளிக்கும் சில அம்சங்களையும் கொண்டுள்ளது.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிகளைக் குறைக்கவும் எந்த முயற்சியும் இல்லை. நாட்டின் உயிர் நாடியான வேளாண்மை நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. கடன் சுமையால் விவசாயிகளின் தற்கொலைகள் நீடித்து வரும் நிலையில், வேளாண் கடன் தள்ளுபடி பற்றிய அறிவிப்போ, விவசாய விளைப்பொருட்களுக்குக் கட்டுப்படியாகக் கூடிய நிலையான விலை நிர்ணயக்கொள்கை பற்றிய விவரமோ மத்திய பட்ஜெட்டில் இல்லை.

    மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு, சென்னை-தூத்துக்குடி சரக்கு ரெயில் பாதை, கூடுதல் பயணிகள் ரெயில் விடுதல் போன்று எதிர்பார்க்கப்பட்டத் திட்டங்களுக்கு அறிவிப்பு கூட இல்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வருமானவரி விலக்கு உள்ளிட்ட ஒரு சிலவற்றை தவிர வாக்குகளை வாங்குவதற்காக வார்த்தை ஜாலங்கள் நிறைந்த, காகித பூமாலையாக பட்ஜெட் அமைந்து இருக்கிறது. தமிழகத்திற்கு தனித்துவமான திட்டம் எதுவும் இல்லை. தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்போக்குடன் மத்திய அரசு நடத்தி வருகிறது. இதனை மாற்றி தமிழகத்தின் குரலை டெல்லியில் வலுவாக ஒலிப்பதற்கு ஏற்ற சூழலை தமிழக மக்கள் வருகிற தேர்தலில் உருவாக்குவார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் 1.30 லட்சம் கோடி ரூபாய் அளவு கருப்பு பணம் வெளிவந்துள்ளது என்பது, ஏற்கனவே வெளிவந்த கருப்பு பணம் குறித்த ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு முரணாக உள்ளது. இடைக்கால பட்ஜெட் சில அம்சங்களைத் தவிர பெரிய அளவில் பேசும்படியாக இல்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய முன்வராத அரசு உரம், விதைகள் உள்ளிட்டவைகளுக்கு மானியம் வழங்குவதை மட்டும் கோடிட்டு காட்டுவது விவசாயிகளுக்கு முழு பயன் தராது. மேலும் தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள விவசாயிகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு இப்பட்ஜெட்டில் சலுகைகள், நிவாரண உதவித்தொகை அமையவில்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ததில் பாராளுமன்ற மரபுகளை பா.ஜ.க. மத்திய அரசு தகர்த்துள்ளது. ஆட்சிக் காலம் நிறைவடையும் நேரத்தில் பாராளுமன்றத்தை தேர்தல் பிரசார மேடையாக பட்ஜெட் தாக்கல் நிகழ்வில் பா.ஜ.க. மாற்றியுள்ளது.

    இடைக்கால பட்ஜெட் வஞ்சக எண்ணங்களை மூடி மறைத்து, அலங்கரிக்கப்பட்டிருக்கும் வாய்பந்தல். வாழ்க்கைக்கு உதவாது என்பதை பொதுமக்கள் எளிதில் உணர்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Budget2019

    Next Story
    ×