search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே பள்ளியை திறக்க கோரி பஸ்சை சிறை பிடித்த மாணவர்கள்
    X

    திண்டுக்கல் அருகே பள்ளியை திறக்க கோரி பஸ்சை சிறை பிடித்த மாணவர்கள்

    திண்டுக்கல் அருகே பள்ளியை திறக்க கோரி மாணவ-மாணவிகள் அரசு பஸ்சை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    வடமதுரை:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை, கல்வித் துறை உள்ளிட்ட அனைத்து அரசு பணிகளும் முடங்கி உள்ளன.

    குறிப்பாக பள்ளிகள் பெரும்பாலும் மூடப்பட்டதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்களை பணிக்கு திரும்ப அரசு கோரிக்கை விடுத்தபோதும் அவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் அருகே வடமதுரை பாடியூர் புதுப்பட்டியில் அரசு பள்ளி உள்ளது. இங்கு கிரியம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனவே இந்த பள்ளியை திறக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தினர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் மாணவர்களுடன் வடமதுரையில் இருந்து திண்டுக்கல் சென்ற அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து அறிந்ததும் வடமதுரை போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். வடமதுரை பகுதியில் கடந்த சில நாட்களாகவே ஆசிரியர்களை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    கல்பட்டிசத்திரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் குடியரசு தினத்திற்கு வந்த ஆசிரியர்களை உள்ளே செல்லவிடாமல் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×