search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் தொடரும்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
    X

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் தொடரும்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

    வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதனை மீறி போராட்டம் தொடரும் என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. #JactoGeo #GovtStaff #HighCourt
    சென்னை:

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் நேற்று முன்தினம் தொடங்கி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடக்கிறது.

    நேற்று தாலுகா அளவில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கைதானார்கள். பின்னர் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். இன்றும் மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் ஒன்று திரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, சாலை மறியலில் ஈடுபட்டு கைதானார்கள்.

    இதற்கிடையே ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் அனைவரும் 25-ம் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.

    எனவே நீதிமன்ற உத்தரவை ஏற்று பணிக்கு திரும்புவதா? அல்லது தொடர்ந்து போராட்டம் நடத்துவதா? என்பது குறித்து முடிவு செய்வதற்காக இன்று மதியம் ஜாக்டோ-ஜியோவின் உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவல்லிக்கேணியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான நிர்வாகிகள், தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தவேண்டும் என ஆலோசனை தெரிவித்தனர்.



    இக்கூட்டம் நிறைவடைந்ததும், செய்தியாளர்களை சந்தித்த ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ், வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என அறிவித்தார். மேலும், தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி எங்களது 9 அம்ச கோரிக்கைளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    நீதிமன்ற உத்தரவை மீறி, நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #JactoGeo #GovtStaff #HighCourt
    Next Story
    ×