search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரம் நகராட்சி குடிநீர் தொட்டிக்குள் ஆண் பிணம்
    X

    ராமநாதபுரம் நகராட்சி குடிநீர் தொட்டிக்குள் ஆண் பிணம்

    ராமநாதபுரம் அருகே குடிநீர் தொட்டிக்குள் ஆண் பிணம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் லோத் தம்ஸ் ரோட்டில் நகராட்சிக்கு சொந்தமான நீரேற்று நிலையம் உள்ளது. இங்கிருந்து தான் நகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

    சுமார் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டது இந்த தண்ணீர் தொட்டி. இங்கு இன்று காலை வந்தவர்கள் துர்நாற்றம் வீசுவதை அறிந்தனர்.

    இதுபற்றி ராமநாதபுரம் பஜார் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போலீசார் விரைந்து வந்து தண்ணீர் தொட்டியை பார்த்தனர்.

    அப்போது தண்ணீருக்குள் ஆண்பிணம் மிதப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தொட்டியில் இருந்து தண்ணீரை வெளியேற்றினர்.

    அதன்பின்னர் உடல் மீட்கப்பட்டது. சுமார் 50 வயது மதிக்கத்தக்க அவர் யார்? தண்ணீர் தொட்டிக்குள் எப்படி பிணமாக மிதந்தார்? என்பது மர்மமாக உள்ளது.

    நீரேற்று நிலைய குடிநீர் தொட்டியின் கீழ்பகுதியில் ஒரு ஜோடி செருப்பும், 2 பிளேடுகளும் கிடந்துள்ளன. அதனையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

    Next Story
    ×