search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராலிமலை தொகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று பொதுமக்களிடம் மனுக்களை வாங்கிய அமைச்சர்
    X

    விராலிமலை தொகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று பொதுமக்களிடம் மனுக்களை வாங்கிய அமைச்சர்

    விராலிமலை தொகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கிய அமைச்சருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    அன்னவாசல்:

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல் அருகே உள்ள சீகம்பட்டி, குடுமியான்மலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அவற்றை மனுக்களாக பெற்று கொண்டனர். பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட மருங்கிப்பட்டி, அரிய முத்துப்பட்டி அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தொண்டர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் திடீரென ஏறி சென்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    அப்போது அங்கு கூடிநின்ற பெண்கள் அமைச்சருக்கு ஆரத்தி எடுத்தும், நெற்றியில் குங்கும் வைத்தும் அமைச்சர் விஜயபாஸ்கரை வரவேற்றனர். திடீரென அமைச்சர் விஜயபாஸ்கர் மோட்டார் சைக்கிளில் வந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டது அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அப்போது அந்தப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தெரு விளக்கு வசதி, சாலைவசதி பசுமைவீடு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கொடுத்தனர். இதையடுத்து அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றார்.

    இதைத்தொடர்ந்து குடுமியான்மலையில் மக்களை சந்திக்க சென்ற பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறுகையில், “மக்களின் குறைகளை நேரடியாக கேட்கும் வகையில் தான் இது போன்ற மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். தற்போது ஆட்சியிலும் சரி, கட்சியிலும் சரி எந்த குழப்பமும் இல்லை. யாராலும் எந்தவித குழப்பத்தையும் ஏற்படுத்த முடியாது. மக்களும், தொண்டர்களும் தெளிவாக உள்ளனர். மக்கள் ஆட்சிக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்திருப்பது போதாது. மத்திய அரசு நினைத்தால் பெட்ரோல், டீசல் விலையை 10 ரூபாய் வரை குறைக்க முடியும். விலை குறைப்பை மத்திய அரசு தான் செய்ய வேண்டும். துணை முதல் அமைச்சர் பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன் பிரச்சினை தொடர்பாக பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கவர்னர் சந்திப்பு என்பது வழக்கமான ஒன்று தான். இந்த சந்திப்பில் 7 பேர் விடுதலை குறித்தும் முதல்-அமைச்சர் பேசி இருக்கலாம்” என்றார்.
    Next Story
    ×