search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி வழியாக ராஜஸ்தான் மாநிலத்திற்கு குளு, குளு வசதியுடன் புதிய ரெயில்
    X

    திருச்சி வழியாக ராஜஸ்தான் மாநிலத்திற்கு குளு, குளு வசதியுடன் புதிய ரெயில்

    திருச்சி வழியாக ராஜஸ்தான் மாநிலத்திற்கு குளு, குளு வசதியுடன் புதிய ரெயில் வருகிற 2-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.
    திருச்சி:

    ராமேசுவரத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்கு குளு, குளு வசதி கொண்ட ஹம்சபார் எக்ஸ்பிரஸ் புதிய வாராந்திர ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த ரெயில் 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளை கொண்டது. முன்பதிவு டிக்கெட் வினியோகம் மட்டுமே உண்டு. முன்பதிவில்லா டிக்கெட் வினியோகம் கிடையாது. அஜ்மீர் ரெயில் நிலையத்தில் நேற்று தொடக்க விழாவில் அங்கிருந்து ரெயில் வழியனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த ரெயில் திருச்சி வழியாக நாளை (சனிக்கிழமை) இரவு 9 மணிக்கு ராமேசுவரம் சென்றடைகிறது. வருகிற 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் ராமேசுவரத்தில் வழக்கமான சேவை இயக்கப்படுகிறது. ராமேசுவரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை தோறும் (வ.எண் 19604) இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை இரவு 11.25 மணிக்கு அஜ்மீர் சென்றடையும்.

    இதேபோல அஜ்மீரில் இருந்து ராமேசுவரத்திற்கு வழக்கமான சேவை வருகிற 6-ந்தேதி முதல் தொடங்குகிறது. அஜ்மீரில் இருந்து சனிக்கிழமை தோறும் (வ.எண் 19603) இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரத்திற்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.15 மணிக்கு வந்தடையும். இந்த ரெயில் மானாமதுரை, திருச்சி, அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை எழும்பூர், குண்டூர், நெல்லூர், விஜயவாடா, வாராங்கல் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு வரும் போது திருச்சிக்கு புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு வந்து அதிகாலை 3.10 மணிக்கு புறப்படும். சென்னைக்கு காலை 8.50 மணிக்கு சென்றடைந்து காலை 9.05 மணிக்கு புறப்படும். அஜ்மீரில் இருந்து ரெயில் வரும் போது திருச்சிக்கு திங்கட்கிழமை இரவு 8.20 மணிக்கு வந்து இரவு 8.30 மணிக்கு ராமேசுவரத்திற்கு புறப்பட்டு செல்லும்.

    இந்த புதிய ரெயிலானது திருச்சியில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகருக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலை போன்றதாகும். அஜ்மீரில் புகழ் பெற்ற தர்காவும், கோட்டையும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ராமேசுவரம்-அஜ்மீர் புதிய ரெயில் சேவையால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
    Next Story
    ×