search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எச்.ராஜா மீது காங்கிரஸ் பெண் வக்கீல் புகார் மனு
    X

    எச்.ராஜா மீது காங்கிரஸ் பெண் வக்கீல் புகார் மனு

    போலீசாருடன் வாக்குவாதம் செய்த எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் பெண் வக்கீல் சுதா, டி.ஜி.பி.க்கு புகார் மனு அனுப்பியுள்ளார். #hraja #congress

    சென்னை:

    போலீசாருடன் வாக்குவாதம் செய்த எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் பெண் வக்கீல் சுதா, டி.ஜி.பி.க்கு புகார் மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

    நான் சென்னை ஐகோர்ட் டில் 19 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். சென்னை ஐகோர்ட்டு வழக்கறிஞர்கள் சங்கத் துணைத் தலைவராகவும் அகில இந்திய மகளிர் காங்கிரசின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறேன். நேற்று நான் ‘வாட்ஸ்அப்’ல் வைரலாக பரவிய, எச்.ராஜா போலீசாருடன் தகாத வார்த்தைகளால் பேசும் காட்சிகளைப் பார்த்தேன்.

    திருமயம் போலீசார் சென்னை ஐகோர்ட்டு அறி வுறுத்தலின் பேரில்தான் எச்.ராஜாவை தடுத்து நிறுத்தினார்கள். உடனே எச்.ராஜா தனது நிதானத்தை இழந்து விட்டார். அப்போது அவர் போலீஸ் அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசிய தோடு, சென்னை ஐகோர்ட்டு பற்றியும் தகாத மற்றும் அசிங்கமான வார்த்தைகளால் பேசியுள்ளார்.

    அவரது ஆவேச பேச்சு வீடியோ காட்சிகளை இத்துடன் இணைத்துள்ளேன்.

    எச்.ராஜா நடுரோட்டில் மேடை அமைக்க முற்பட்ட சமயத்திலும், ஊர்வலத்தைத் தொடர்ந்து நடத்த முயன்ற போதும், அவரிடம் போலீசார் சென்று ஐகோர்ட்டு விதித்துள்ள கட்டுப்பாடுகள் பற்றி எடுத்துக் கூறினார்கள். உடனே எச்.ராஜா போலீசாரை எச்சரிக்கும் வகையில் சத்தமிட்டு பேசினார். மீண்டும் அவரிடம் போலீசார் ஐகோர்ட்டு உத்தரவை தெரிவித்தனர்.

    உடனே எச்.ராஜா ஐகோர்ட்டை மிக, மிக தரக்குறைவாக ஒரு வார்த்தையைப் பயன்படுத்தி பேசினார். போலீஸ்காரர்கள் இந்துக்களை சித்ரவதை செய்வதாக கூறினார். அதற்கு அங்கிருந்த போலீஸ் அதிகாரி, நாங்கள் அப்படி எதுவும் செய்யவில்லை என்றார்.

    உடனே எச்.ராஜா, “டி.ஜி.பி. வீட்டில் சோதனை நடந்ததற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும்” என்றார். பிறகு “இந்துக்கள் ஒன்றும் ஆதரவற்றவர்கள் அல்ல” என்று சத்தமிட்டார். ஒரு கட்டத்தில் அவர் ஒரு போலீஸ் அதிகாரியை பார்த்து, “நீங்கள் இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறீர்கள். சர்ச் பாதர் சொல்வதை கேட்டு அதன்படி செயல்படுகிறீர்கள்” என்றார்.

    புழல் சிறையில் இருந்து டி.வி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்ற அவர், தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த காவல்துறையிலும் ஊழல் மயமாகி விட்டதாக குற்றம் சாட்டினார்.

    அப்போது போலீசார் அவரிடம், நீங்களே இப்படி பேசலாமா? என்றனர். உடனே எச்.ராஜா மீண்டும் ஆவேசமானார். ஏன் மேடை அமைக்க அனுமதி கொடுக்கவில்லை என்று குரலை உயர்த்தினார்.

    உடனே ஒரு போலீஸ் அதிகாரி அவரிடம், ஐகோர்ட்டு உத்தரவை சுட்டிக் காட்டினார். அதற்கு எச்.ராஜா மீண்டும் சென்னை ஐகோர்ட்டை ஒரு தகாத வார்த்தை கூறி குறிப்பிட்டார்.


    எச்.ராஜாவின் பேச்சு போலீசாரை அச்சுறுத்தும் வகையில் மட்டுமின்றி, ஐகோர்ட்டை அவமதித்தது போன்றதோடு மட்டுமின்றி அந்த பகுதியில் கலவரத்தை தூண்டிவிடும் வகையில் இருந்தது. மேலும் அந்த பகுதியில் மத அடிப்படையில் இரு பிரிவினரிடம் பகையை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவதாக காணப்பட்டது.

    தேச ஒற்றுமைக்கு எதிராக அவரது பேச்சு அமைந்து இருந்தது. அதோடு காவல் துறையினரை அவர் பணியாற்ற விடாமல் தடுத்துள்ளார். ஒட்டு மொத்த போலீசாரையும் விமர்சித்த அவர் ஐகோர்ட்டையும் தரம் தாழ்ந்து பேசியுள்ளார்.

    எனவே எனது இந்த புகாரை பதிவு செய்து எச். ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த மனுவில் வக்கீல் சுதா கூறியுள்ளார். இதன் நகலை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கும் அனுப்பி உள்ளார். #hraja #congress

    Next Story
    ×