search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கயத்தாறு அருகே டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.98 ஆயிரம் கொள்ளை
    X

    கயத்தாறு அருகே டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.98 ஆயிரம் கொள்ளை

    கயத்தாறு அருகே டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.98 ஆயிரத்தை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே அய்யனாரூத்து ஊருக்கு மேற்கு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மேற்பார்வையாளராக கயத்தாறு அருகே ஆத்திகுளத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து (வயது 40), விற்பனையாளராக குமாரகிரியைச் சேர்ந்த சுப்புராஜ் (35) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவில் வேலை முடிந்ததும், வழக்கம்போல் டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு, தங்களது வீடுகளுக்கு புறப்பட்டனர். அப்போது டாஸ்மாக் கடையில் வசூலான ரூ.98 ஆயிரத்து 470-யை மறுநாள் காலையில் வங்கியில் செலுத்துவதற்காக, இசக்கிமுத்து எடுத்து சென்றார்.

    இசக்கிமுத்து மொபட்டிலும், சுப்புராஜ் மோட்டார் சைக்கிளிலும் அடுத்தடுத்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் 2 பேரும் அய்யனாரூத்து காற்றாலை பண்ணை அருகில் சென்றபோது, அங்கு காட்டு பகுதியில் மறைத்து இருந்த 3 மர்மநபர்கள் திடீரென்று அரிவாளைக் காண்பித்து 2 பேரையும் வழிமறித்தனர். பின்னர் மர்மநபர்கள் 3 பேரும் அரிவாளை திருப்பி வைத்து இசக்கிமுத்து, சுப்புராஜ் ஆகிய 2 பேரையும் சரமாரியாக தாக்கினர்.

    இசக்கிமுத்துவிடம் இருந்த ரூ.98 ஆயிரத்து 470-யை மர்மநபர்கள் கொள்ளை அடித்து விட்டு, மொபட், மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவற்றையும் மர்மநபர்கள் பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    இதனால் இசக்கிமுத்து, சுப்புராஜ் ஆகிய 2 பேரும் இரவில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, கயத்தாறு போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்கள் 3 பேரை வலைவீசி தேடி வருகிறார். காயம் அடைந்த இசக்கிமுத்து, சுப்புராஜ் ஆகிய 2 பேரும் கயத்தாறு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    Next Story
    ×