search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்வாரிய அதிகாரி வீட்டில் 50 பவுன் நகைகள் கொள்ளை - வாலிபர்களுக்கு வலைவீச்சு
    X

    மின்வாரிய அதிகாரி வீட்டில் 50 பவுன் நகைகள் கொள்ளை - வாலிபர்களுக்கு வலைவீச்சு

    மதுரையில் சி.பி.ஐ. அதிகாரிகள் போன்று நடித்து மின்வாரிய அதிகாரி வீட்டில் சோதனை செய்வதாக கூறி 50 பவுன் நகையை கொள்ளையடித்தனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    புதூர்:

    மதுரை ஒத்தக்கடை, சண்முகா நகரைச் சேர்ந்தவர் பெத்துராஜ் (வயது 41). இவர் மதுரையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

    இன்று அதிகாலை இவர் வீட்டில் இருந்தபோது காரில் 5 பேர் வந்தனர். அனைவரும் டிப்டாப் உடையுடன், அடையாள அட்டை அணிந்திருந்தனர்.

    சி.பி.ஐ. அலுவலகத்தில் இருந்து வந்துள்ளோம். நீங்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புகார் வந்துள்ளது. வீட்டை சோதனையிட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் பெத்துராஜின் செல்போனையும் பிடுங்கிக் கொண்டனர். வீட்டில் இருந்த பெத்துராஜின் தாயார் மற்றும் மகனை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.

    5 பேரும் வீட்டில் இருந்த பீரோவை திறந்து செயின், வளையல், மோதிரம் உள்ளிட்ட 50 பவுன் நகைகளையும், வீட்டு பத்திரத்தையும் எடுத்துக் கொண்டனர்.

    பின்னர் பெத்துராஜிடம் நகைக்கு உரிய கணக்கை ஆத்திகுளத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் தெரிவித்துவிட்டு நகைகளை வாங்கிச் செல்லுமாறு கூறிய 5 பேரும் விறுவிறு என்று வெளியேறி விட்டனர்.

    சந்தேகம் அடைந்த பெத்துராஜ் இதுகுறித்து ஒத்தக்கடை போலீசில் விசாரித்தபோது, டிப்டாப் உடை அணிந்த வாலிபர்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் போல் நடித்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து ஒத்தக்கடை போலீசில் புகார் செய்யப் பட்டது. இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது.

    இந்த நூதன கொள்ளை தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டு தலைமறைவான 5 டிப்டாப் வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×