search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electricity Officer"

    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்று வீசி வருகிறது.
    • இந்த காலத்தில் மின்விபத்துகளை தவிர்க்க பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மண்டல மின்பகிர்மான தலைமை பொறியாளர் குப்புராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

    நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்று வீசி வருகிறது. இந்த காலத்தில் மின்விபத்துகளை தவிர்க்க பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

    காற்றுக்காலங்களில் மின்கம்பங்கள், மின்கம்பிகள், மின்மாற்றிகள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம். வாகனங்களை மின்கம்பிகளுக்கு அடியில் நிறுத்த வேண்டாம். மின்கம்பிகள், சர்வீஸ் வயர்கள் அறுந்து விழுந்தால் அதன் அருகே செல்ல வேண்டாம்.

    உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பலத்த காற்று காரணமாக மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகளில் விழுந்தால் பொதுமக்கள் தாமாக சென்று அதனை அப்புறப்படுத்தக் கூடாது. பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை உள்ளது. இதனால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் மின்சார வாரிய அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

    மின்கம்பத்திற்கு போடப்பட்டு உள்ள ஸ்டே ஒயர்களில் கால்நடைகளை கட்டவோ, கால்நடைகளுக்கான கிடை அமைக்கவோ கூடாது. மின்கம்பங்களை பந்தல் தூண்களாக பயன்படுத்தக்கூடாது. கொடிகள் கட்டி துணிகள் காயப்போடக்கூடாது. இது விபத்தை ஏற்படுத்தும். மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளில் ஏற்படும் பழுதுகளை பொதுமக்கள் தாமாக சரிசெய்ய முயற்சிக்க கூடாது. மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்ய வேண்டும்.

    மின்நுகர்வோர் இருப்பிடத்தில் ஏற்படும் மின்விபத்துகளை தவிர்க்க அனைத்து மின் இணைப்புகளிலும் மின்கசிவு தடுப்பு கருவியை (ஆர்.சி.சி.பி.) பொருத்த வேண்டும். விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைப்பது சட்டப்படி குற்றமாகும். மீறினால் காவல்துறை மூலம் குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொதுமக்கள் மின்தடை தொடர்பான புகார்களுக்கும் மின்கட்டமைப்புகளில் உள்ள பழுதுகள், இயற்கை இடர்பாடுகளின்போது அவசர உதவிக்கும், மின்வினியோகம் சம்பந்தமான அனைத்து விதமான சேவைகளுக்கும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையத்தினை 94987 94987 என்ற எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். இந்த விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றி மின்விபத்துகளை தவிர்க்க முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மதுரையில் சி.பி.ஐ. அதிகாரிகள் போன்று நடித்து மின்வாரிய அதிகாரி வீட்டில் சோதனை செய்வதாக கூறி 50 பவுன் நகையை கொள்ளையடித்தனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    புதூர்:

    மதுரை ஒத்தக்கடை, சண்முகா நகரைச் சேர்ந்தவர் பெத்துராஜ் (வயது 41). இவர் மதுரையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

    இன்று அதிகாலை இவர் வீட்டில் இருந்தபோது காரில் 5 பேர் வந்தனர். அனைவரும் டிப்டாப் உடையுடன், அடையாள அட்டை அணிந்திருந்தனர்.

    சி.பி.ஐ. அலுவலகத்தில் இருந்து வந்துள்ளோம். நீங்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புகார் வந்துள்ளது. வீட்டை சோதனையிட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் பெத்துராஜின் செல்போனையும் பிடுங்கிக் கொண்டனர். வீட்டில் இருந்த பெத்துராஜின் தாயார் மற்றும் மகனை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.

    5 பேரும் வீட்டில் இருந்த பீரோவை திறந்து செயின், வளையல், மோதிரம் உள்ளிட்ட 50 பவுன் நகைகளையும், வீட்டு பத்திரத்தையும் எடுத்துக் கொண்டனர்.

    பின்னர் பெத்துராஜிடம் நகைக்கு உரிய கணக்கை ஆத்திகுளத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் தெரிவித்துவிட்டு நகைகளை வாங்கிச் செல்லுமாறு கூறிய 5 பேரும் விறுவிறு என்று வெளியேறி விட்டனர்.

    சந்தேகம் அடைந்த பெத்துராஜ் இதுகுறித்து ஒத்தக்கடை போலீசில் விசாரித்தபோது, டிப்டாப் உடை அணிந்த வாலிபர்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் போல் நடித்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து ஒத்தக்கடை போலீசில் புகார் செய்யப் பட்டது. இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது.

    இந்த நூதன கொள்ளை தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டு தலைமறைவான 5 டிப்டாப் வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    ×