search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனியில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் குதிரைகள்
    X

    பழனியில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் குதிரைகள்

    பழனியில் பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் குதிரைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.

    பழனி:

    தமிழகத்தில் மாட்டு வண்டி, குதிரை வண்டி பாரம்பரியமாக போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. நாளடைவில் ரிக்ஷா மற்றும் ஆட்டோக்கள் அதிகரிக்கவே இதன் பயன்பாடு குறைந்தது. தற்போது தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிலேயே இது போன்ற கால்நடைகள் போக்கு வரத்துக்கு பயன்படுத்தப்படுவது இல்லை.

    ஆனால் பழனியில் தொன்று தொட்டு குதிரை வண்டி சவாரி போக்குவரத்துக்கு இன்றளவும் பயன்படுத்தப் பட்டு வருகிறது. விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை சந்தைக்கு கொண்டு வருவதற்கும், குடும்பத்துடன் வெளியூர் செல்வதற்கும் குதிரை வண்டிகளை பயன்படுத்துகின்றனர்.

    வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் மற்றும் பக்தர்களும் குதிரை வண்டிகளில் சவாரி செய்து மகிழ்கின்றனர்.

    ஆனால் குதிரை வண்டிகளை வைத்துள்ளவர்களுக்கு போதிய வருமானம் கிடைக்காததால் அதனை பராமரிக்க முடியாத நிலையில் உள்ளனர். குறைந்தது நாள் ஒன்றுக்கு ரூ.500 வருமானம் வந்தால்தான் குதிரைக்கு தீவனம் வாங்கி கொடுத்து வண்டியையும் பராமரித்து தனது செலவையும் பார்த்துக் கொள்ள முடியும்.

    ஆனால் கனரக வாகனங்கள் , ஆட்டோக்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதால் குதிரை வண்டிகளின் நாட்டம் குறைந்து வருகிறது. இதனால் பராமரிக்க முடியாமல் குதிரைகளை சாலையில் மேய விட்டு விடுகின்றனர்.

    அவை வாகனங்களில் செல்பவர்களுக்கும், போக்கு வரத்துக்கும் இடையூறாக உள்ளது. இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் வெறி நாய்கள் துரத்தி குதிரைகளை கடிப்பதால் அவைகளுக்கு நோய் ஏற்படுகிறது. அதற்கு சிகிச்சை அளிக்க கூட குதிரை வளர்ப்போரால் முடிவதில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் குதிரைகளை பராமரிக்க கால்நடைத்துறை மூலம் உதவ வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×