search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடர் மழையால் மீண்டும் நிரம்பிய சிறுவாணி அணை
    X

    தொடர் மழையால் மீண்டும் நிரம்பிய சிறுவாணி அணை

    கோவை மாநகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையோர பகுதியில் கனமழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்து அணை மீண்டும் நிரம்பியது.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைகள், குளங்கள் நிரம்பி வருகிறது.

    கோவை மாநகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் மொத்த கொள்ளளவு 50 அடி ஆகும். இந்த அணை 4 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 10-ந்தேதி நிரம்பியது. இதனால் நாள் ஒன்றுக்கு 11 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது. எனவே நீர்மட்டம் மளமளவென குறைந்தது.

    ஒரு வாரத்துக்கு முன்பு நீர்மட்டம் 42 அடியாக குறைந்தது. இந்தநிலையில் கடந்த 5 நாட்களாக அணையோர பகுதிகளில் கனமழை பெய்தது. எனவே நீர்வரத்து அதிகரித்து அணை மீண்டும் நிரம்பியது.

    கனமழையால் சிறுவாணி அணைக்கு செல்லும் ரோட்டில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அணைக்கு செல்ல முடியவில்லை.

    கேரள அதிகாரிகள் அளித்த தகவலின்படியே அணை மீண்டும் நிரம்பிய விவரம் கோவை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

    மழை காரணமாக கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது. இதனால் நீர்வீழ்ச்சிக்கு செல்ல இன்று 11-வது நாளாக தடை விதிக்கப்பட்டது.

    மேலும் தொடர் மழையால், மறுஅறிவிப்பு வரும் வரை கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சிக்கு செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக சின்கோனா பகுதியில் 260 மில்லி மீட்டர் (26 சென்டி மீட்டர்) மழை பதிவானது. வால்பாறை பரம்பிகுளம் ஆழியாறு திட்ட பகுதியில் 186, வால்பாறை தாலுகா பகுதியில் 186 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.

    மாவட்டத்தின் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டர் அளவில் வருமாறு:-

    பீளமேடு - 11.60, மேட்டுப்பாளையம் - 6, பொள்ளாச்சி - 65, பெரியநாயக்கன்பாளையம் - 10, சூலூர் - 7.20, வேளாண் பல்கலைக்கழக பகுதி - 20, கோவை தெற்கு - 14
    Next Story
    ×