search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் அருகே இளம்பெண்ணை கொன்று தூக்கில் தொங்க விட்ட கும்பல்
    X

    பெரம்பலூர் அருகே இளம்பெண்ணை கொன்று தூக்கில் தொங்க விட்ட கும்பல்

    பெரம்பலூர் அருகே இளம்பெண்ணை கொன்று தூக்கில் தொங்க விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அத்தியூர் இந்திராநகரை சேர்ந்தவர் அன்புராஜா . இவரது மனைவி செல்வநாயகி (வயது 22) . இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அன்புராஜா சென்னையில்  தங்கியிருந்து அங்குள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.  செல்வநாயகி, குழந்தைகளுடன் அத்தியூரில் வசித்து வந்தார். 

    நேற்று அவர் பெருமத்தூர் குடிக்காட்டில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு செல்வதாக  உறவினர்களிடம் கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் பெற்றோர் வீட்டிற்கு செல்லவில்லை. இதையடுத்து அவரை உறவினர்கள்  இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்க வில்லை. 

    இந்த நிலையில் இன்று காலை பெருமத்தூர்-குடிக்காடு இடையே புதர் நிறைந்த பகுதியில் உள்ள நாவல் மரத்தில் தூக்குப்போட்ட நிலையில் இளம்பெண் ஒருவர் பிணமாக தொங்கினார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று உடலை பார்வையிட்டனர். அப்போது அங்கு இறந்து கிடந்தது செல்வநாயகி என்பது தெரியவந்தது. அவரது  தலையில் காயங்கள் இருந்தது. மேலும் உடலில் கீறல்கள் இருந்தது. இதனால் அவரை மர்மநபர்கள் அடித்துக் கொன்று , கொலையை மறைக்க தூக்கில் தொங்க விட்டு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 

    கற்பழிப்பு முயற்சியில் இந்த சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  பெரம்பலூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×