search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் காதல் திருமணம் செய்த புதுமண தம்பதிக்கு வெட்டு: பெண்ணின் சகோதரர் ஆத்திரம்
    X

    மதுரையில் காதல் திருமணம் செய்த புதுமண தம்பதிக்கு வெட்டு: பெண்ணின் சகோதரர் ஆத்திரம்

    எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த புதுமண தம்பதிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் குறித்து தெப்பக்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை சந்தைப்பேட்டை காதர்கான் பட்லா பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் பொன்ராஜ் (வயது 28). தனியார் கார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக உள்ளார்.

    இவரது உறவுப்பெண் செல்வமீனா (22). இவரும் பொன்ராஜூம் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.

    கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருமண ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இதில் இரு குடும்பத்தினர் இடையே திடீர் பிரச்சினை ஏற்பட்ட தால், திருமண பணிகள் நிறுத்தப்பட்டன.

    இதனால் காதல் ஜோடி அதிர்ச்சி அடைந்தது. ஆனால் அவர்கள் தங்கள் காதலில் உறுதியாக இருந்தனர். கடந்த 11-ந் தேதி செல்வமீனா வீட்டில் இருந்து திடீரென வெளியேறினார்.

    அதன்பிறகு காதலன் பொன்ராஜை சந்தித்தார். அவர்கள் இருவரும் திருச்செந்தூர் சென்று அங்கு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    ஒரு வாரம் அங்கிருந்து விட்டு புதுமணத் தம்பதியர் பொன்ராஜ்-செல்வமீனா நேற்று மதுரை திரும்பினர். இதுபற்றி செல்வமீனாவின் சகோதரர் பிரபாகரனுக்கு தகவல் கிடைத்தது.

    அவர் தனது நண்பர்கள் 4 பேருடன் சந்தைப்பேட்டை பகுதியில் நின்றார். பொன்ராஜ், தனது தாய் மீனாட்சி, காதல் மனைவி செல்வமீனா ஆகியோருடன் அங்கு வந்ததும், பிரபாகரன் வழிமறித்து வாக்குவாதம் செய்தார்.

    திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பொன்ராஜை வெட்டினார். இதனை தடுக்க வந்த செல்வமீனா மற்றும் மீனாட்சிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

    பலத்த காயம் அடைந்த அவர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மணிமாறன், கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர். பிரபாகரன் உள்பட 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×