search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை பாதுகாப்பு விழாவை முன்னிட்டு இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம்
    X

    சாலை பாதுகாப்பு விழாவை முன்னிட்டு இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம்

    கிருஷ்ணகிரி, ஓசூரில் சாலை பாதுகாப்பு விழாவை முன்னிட்டு ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    கிருஷ்ணகிரி:

    தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 23-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நேற்று கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் காவல் துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை சார்பில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டும் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    இந்த ஊர்வலத்தை கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வல தொடக்க நிகழ்ச்சியில் சிக்னல் விளக்குகளை மதித்து செல்ல வேண்டும். போக்குவரத்து காவலர்கள் தரும் சிக்னலுக்கு கட்டுப்பட வேண்டும். வாகனத்தை கவனமாக ஓட்ட வேண்டும். கனரக வாகனங்கள் சாலையின் இடது புறமாக ஓட்ட வேண்டும். மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்ட கூடாது.

    சாலை விதிகளை கடைபிடிப்பது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கி துண்டு பிரசுரங்களை, பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த ஊர்வலம் நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று, டான்ஸி தொழிற்பேட்டை வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் காவல்துறையினர், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர்கள் குமார், செந்தில்குமார், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

    ஓசூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஓசூரில் மத்திகிரி கூட்ரோட்டில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்திற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் அசோகன் தலைமை தாங்கினார். மோட்டார் வாகன ஆய்வாளர் நாகராசன் மற்றும் பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலத்தை ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜய்கார்த்திக்ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. அப்போது சாலை பாதுகாப்பு குறித்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து அலுவலர்கள், ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஓசூரில், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது. ஓசூர் பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கோட்ட மேலாளர் சுரேஷ் பாபு தலைமை தாங்கினார். ஓசூர் புறநகர் போக்குவரத்து கிளை மேலாளர் வேணுகோபால், நகர போக்குவரத்து கிளை மேலாளர் தமிழரசன் ஆகியோர் ஓட்டுனர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். மேலும், பொதுமக்களுக்கு விபத்தில்லா பயணத்தை விழிப்புடன் வழங்க வேண்டும். எரிபொருள் சிக்கனம், சாலை விதிகளை முழுமையாக கடைபிடித்தல், வாகனத்தை ஓட்டும்போது கைபேசி உபயோகிக்க கூடாது மற்றும் பயணிகளின் படிக்கட்டு பயணத்தை எக்காரணத்தை கொண்டும் அனுமதிக்க கூடாது என்பது உள்ளிட்ட அறிவுரைகளை ஓட்டுனர்களுக்கு அலுவலர்கள் வழங்கினார்கள். இதில், போக்குவரத்து கழக அலுவலர்கள் மற்றும் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் கலந்து கொண்டனர்.  
    Next Story
    ×