search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசுக்கு எதிராக துண்டுபிரசுரம்: விவசாயிகளிடம் பா.ஜ.க.வினர் வாக்குவாதம்
    X

    மத்திய அரசுக்கு எதிராக துண்டுபிரசுரம்: விவசாயிகளிடம் பா.ஜ.க.வினர் வாக்குவாதம்

    குளித்தலையில் மத்திய அரசுக்கு எதிராக துண்டுபிரசுரம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளிடம் பா.ஜ.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    குளித்தலை:

    நஞ்சில்லா உணவு மூலம் மனித குலத்தை மீட்க வேண்டும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதில் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் சங்க நிர்வாகிகளான விவசாயிகள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கி வருகின்றனர். இந்த பயணத்தில் கரூர் மாவட்டம் குளித்தலை பகுதிக்கு நேற்று விவசாயிகள் வந்தடைந்தனர். அப்போது அய்யாகண்ணு தலைமையில் கரூர் மாவட்ட தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வினியோகம் செய்தனர்.

    இந்த நிலையில் குளித்தலை பஸ் நிலையத்தில் இருந்து பெரியபாலம் நோக்கி விவசாயிகள் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பா.ஜ.க. குளித்தலை நகர தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் நிர்வாகிகள் சிலர் அய்யாக்கண்ணுவை வழி மறித்து, மத்திய அரசுக்கு எதிராக பொய் பிரசாரம் செய்யும் வகையில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்யக்கூடாது உடனடியாக இதை நிறுத்த வேண்டும் என்று கூறினர். இதனால் விவசாயிகளுக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இதேபோல குளித்தலை அருகே பனிக்கம்பட்டிக்கு அய்யாக்கண்ணு சென்றபோது, அப்பகுதி விவசாயிகள் அங்குள்ள ஒரு வங்கியில் நகைகளின் பேரில் பெற்ற விவசாய கடனை வட்டி கட்டி மாற்றி வைக்க இயலாது என வங்கி மேலாளர் கூறிவருவதாக அவரிடம் தெரிவித்தனர். இது குறித்து வங்கி அதிகாரிகளை அய்யாக்கண்ணு சந்தித்து கேட்டபோது, வங்கி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்து தேவையான நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் கூறினர். அதன்பின்னர் குளித்தலை ஒன்றிய பகுதிகளில் விவசாயிகள் துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர். துண்டுபிரசுரங்கள் வழங்க பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. #tamilnews
    Next Story
    ×