search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
    X

    கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

    கர்ப்ப காலத்தில் தாயின் உடலில் தோன்றும் மாற்றங்கள், தாய் எதிர்கொள்ள நேரிடும் அசெளகரியங்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    கர்ப்ப காலத்தில் தாயின் உடலில் தோன்றும் மாற்றங்கள், தாய் எதிர்கொள்ள நேரிடும் அசெளகரியங்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

    முதுகுவலி

    மூன்றாவது ட்ரைமஸ்டரின் போது உங்கள் எடை அதிகரித்து இருப்பதாலும் வயிறு முன்நோக்கி தள்ளி இருப்பதாலும் முதுகுவலி ஏற்படும். மேலும், இடுப்பில் உள்ள தசைநார்கள் பிரசவத்துக்குத் தயாராவதற்காக சற்றே தளர்வாக இருப்பதால் இடுப்புப் பகுதியில் அசெளகர்யமான உணர்வும் ஏற்படும்.

    உங்கள் உடலின் போஸ்சரை சரியாக வைத்திருப்பதன் மூலம் இந்தப் பிரச்சனையை ஓரளவுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். அமரும்போது நேராக அமர்வது, நேரான சாய்மானம் உள்ள நாற்காலியைப் பயன்படுத்துவது, உறங்கும்போது கால்களுக்கு இடையில் மெல்லிய தலையணை வைத்துக்கொள்வது ஹீல்ஸ் இல்லாத காலணிகளைப் பயன்படுத்துவது போன்றவை நல்ல பலன் தரும். அளவுக்கு அதிகமான முதுகுவலி இருந்தால் மருத்துவரை சந்தித்து சிகிச்சைப் பெறத் தயங்க வேண்டாம்.

    ரத்தக் கசிவு

    சிலருக்கு மெல்லிய ரத்தக் கசிவு இருக்கும். துளித் துளியாய் ரத்தக் கசிவு இருந்தாலும் அது ஒரு சீரியஸான பிரச்சனைதான். ப்ளெசண்டா ப்ரீவியா, நஞ்சுக்கொடி விலகுதல், குறைப்பிரசவம் போன்ற சிக்கல்களுக்கான அறிகுறியாகவும் ரத்தக் கசிவு இருக்கலாம். எனவே இந்தப் பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடுவது நல்லது.

    பொய் வலி

    இடுப்பு வலிதான் பிரசவத்திற்கான முதல் சமிக்ஞை. கர்ப்பப்பையில் உள்ள தசைகள் இறுகி வலி எடுக்கும். இதனை ஆங்கிலத்தில் Labor pain என்பார்கள். ஆனால், மூன்றாவது ட்ரைமஸ்டரில் லேபர் பெய்ன் போலவே பொய்வலி ஏற்படும். இதனை உண்மையான இடுப்பு வலிக்கான ஒத்திகை அல்லது தயாரிப்பு நிலை எனலாம். ஆனால், பொய்வலிக்கும் நிஜமான பிரசவகால இடுப்புவலிக்கும் வித்தியாசங்கள் உள்ளன. பொய்வலி சில சமயங்களில் வலியாக இல்லாமல் அசெளகர்யமான உணர்வாக இருக்கும்.

    குறிப்பிட்ட இடைவெளியில் விட்டு விட்டு வராது. நின்றுகொண்டோ, அமர்ந்துகொண்டோ, படுத்துக்கொண்டோ இருக்கும்போது பொய்வலி ஏற்பட்டால் போஸ்சரை மாற்றியதும் வலி விலகும். நெடுநேரமாக வலி தொடராது. இது எல்லாம் பொய் வலியின் அறிகுறிகள். பொதுவாக, பொய் வலிக்காக அச்சப்படத் தேவை இல்லை. ஆனால், எப்போதும் வலி இருந்துகொண்டிருந்தாலோ, வலி அதிகமாக இருந்தாலோ உடனடியாக மருத்துவரை நாட வேண்டும்.

    மார்பகம் பெருத்தல்

    தாய்மைக்குத் தயாராகிக்கொண்டிருப்பதால் கர்ப்பிணிகளின் மார்பகங்களில் மாற்றங்கள் நிகழும். ஹார்மோன்கள் தாய்ப் பால் சுரப்பதற்குத் தயாராகி, மார்பகங்கள் விரிவடையும். சிலருக்கு மார் காம்புகளில் இருந்து மஞ்சள் நிற திரவம் கசியத் தொடங்கும். இதனை சீம்பால் என்பார்கள். குழந்தை பிறந்த முதல் சில நாட்களுக்கு அதற்கான நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதற்கு மிகவும் அத்தியாவசியமானது சீம்பால். எனவே, அச்சம் வேண்டாம். தரமான, அளவு சரியான உள்ளாடைகளைத் தேர்ந்தெடுங்கள். அசெளகரியமான உள்ளாடைகளை தவிர்த்திடுங்கள்.

    திரவக் கசிவு

    இந்தப் பருவத்தில் கர்ப்பிணிகளுக்கு பிறப்புறுப்பில் சிறிய அளவிலான திரவக் கசிவு ஏற்படுவது இயல்புதான். பிரசவ நாள் நெருங்க நெருங்க அடர்த்தியான, தெளிவான, கொஞ்சம் உதிரம் கலந்த திரவக் கசிவு ஏற்படும். இது, செர்விக்ஸ் பகுதி பிரசவத்துக்கு நெகிழ்வாவதன் அறிகுறி.

    இந்த திரவக் கசிவு அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அதேபோல, திடீரென அளவுக்கு அதிமாக திரவம் பெருக்கெடுத்தால் அது பனிக்குடம் உடைந்ததன் அறிகுறியாக இருக்கலாம். எட்டு சதவிகிதம் பெண்களுக்கு இடுப்பு வலி ஏற்படும் முன்பே பனிக்குடம் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். எனவே, தாமதிக்காமல் மருத்துவரை நாட வேண்டும்.
    Next Story
    ×