search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pregnancy Problem"

    • கர்ப்ப காலத்தில் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும்.
    • கடுமையான தசை பிடிப்பு கர்ப்ப கால ஹார்மோன்களால் ஏற்படுகிறது

    கர்ப்ப காலத்தில் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். இந்த மாற்றங்களோடு, உடல் சில பிரத்யேக அறிகுறிகளை வெளிப்படுத்தி, சில அசௌகரியங்களுக்கு உட்படுவதையும் உணரலாம்.

    கர்ப்ப காலத்தில் தோன்றக் கூடிய பொதுவான அசௌகரியங்களுள், வயிறு, அடிவயிறு மற்றும் கால்கள் ஆகியவற்றில் உண்டாகும் தசைப்பிடிப்புகளும் ஒன்றாகும். இந்த தசைப்பிடிப்புகள் வலிமிகுந்தவையாக இல்லாதிருப்பினும், பல நேரங்களில் அசௌகரியமாக உணர்வதற்கு இவையே முக்கிய காரணிகளாகும்.

    கடுமையான தசை பிடிப்பு கர்ப்ப கால ஹார்மோன்களால் ஏற்படுகிறது. வேலை செய்யும் பெண்கள் குறிப்பாக நெடு நேரம் காலை தொங்கவிட்டபடி அமர்ந்து வேலை செய்யும் பெண்கள் சிறிது சுடுநீரில் உப்பிட்டு அதில் பாதங்களை சிறிது நேரம் வைத்துக் கொண்டிருப்பது, பாதங்களை மேல்நோக்கி லேசாக அழுத்துவது போன்றவை அவர்களுக்கு தசை பிடிப்பு வராமல் தடுக்கக்கூடிய சிறு சிறு பயிற்சிகள் ஆகும் .

    'சோம்பல் முறிப்பது' என்ற உடலை 'ஸ்ட்ரெட்ச்' செய்யாமல் இருக்க வேண்டும் . அவ்வாறு செய்தால் தசைபிடிப்பிற்கான வாய்ப்பு அதிகம். அது தவிர வெயில் காலத்தில் ஏராளமான நீர்ச்சத்து உள்ள பழங்கள் , ஜூஸ் போன்றவையும் அல்லது எதுவுமே பிடிக்காவிட்டாலும் வெறும் தண்ணீரையாவது அடிக்கடி குடித்து கொண்டே இருப்பது மிகவும் முக்கியமாகும்.

    அழுத்தம் தரக்கூடிய சூழல்களில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. ஏனெனில், உடலில் ஏற்படக்கூடிய தசைப்பிடிப்பை அதிகமாக்கக்கூடிய முக்கிய காரணங்களுள் மன அழுத்தமும் ஒன்று. மனதை அமைதியாக வைக்கக்கூடிய, இசையை ரசிப்பது போன்ற எளிய வழிமுறைகள் மூலம் எப்போதும் மனமகிழ்வோடு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது வேலைப்பளுவைக் குறைத்து, மனதை அமைதியாக சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஹை ஹீல்ஸ் எனப்படும் குதியுயர்ந்த செருப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். சில குறிப்பிட்ட மருந்துகள் குறிப்பாக மெக்னீசியம் உள்ள மருந்துகள் இந்த தசைப் பிடிப்புகள் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றன. அத்துடன் கால்சியம் மாத்திரைகளையும் சரிவர எடுத்துக் கொள்ளும் பொழுதும் இந்த தசை பிடிப்புக்கான வாய்ப்பு குறையும்.

    தசைப்பிடிப்புகளை எவ்வித சிரமுமின்றி குணமாக்க, தினமும் உணவில் பொட்டாசியம் மற்றும் கால்சியம் அதிகம் கொண்ட உணவுப் பொருள்களைக் கட்டாயமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். வாழைப்பழங்கள், அதிக பொட்டாசியச் சத்து கொண்டவையாகக் கருதப்படுகின்றன. உடலின் கால்சியத் தேவைகளுக்கு, வஞ்சிர மீன் வகைகள், பச்சை இலைகள் நிறைந்த காய்கறிகள், பாதாம் பருப்பு, பால் பொருட்கள் மற்றும் நெத்திலி மீன் வகைகளை உணவில் நிறையச் சேர்த்துக் கொள்ளலாம்.

    தொழில்முறை வல்லுநர் ஒருவரால் தரப்படும் மசாஜ், கர்ப்பப்பைத் தசைகள் மற்றும் தசைநார்கள், கெண்டைக்கால் பின் தசைகள் மற்றும் கால் தசைகளைத் தளர்த்தி, தசைப்பிடிப்புகளை நீக்கக்கூடியதாகும். தினமும் ஒரு வேளை இவ்வாறு மசாஜ் செய்து வந்தால், வலி மற்றும் அசௌகரியத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

    • இந்தியாவில் பெண்களுக்கு சராசரியாக 47 வயதில் கருமுட்டை உற்பத்தியாவது நின்று விடுகிறது.
    • குழந்தையின்மைக்கு பெண்கள் தான் காரணம் என்று முந்தைய காலத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

    பிரசவம்... ஒரு தாயின் மறுபிறப்பாக கருதப்படுகிறது. ஆனாலும் மருத்துவ வளர்ச்சி பெறாத காலத்தில் பிள்ளை பிறப்பு என்பது இறைவன் அளிக்கும் பரிசாக கருதப்பட்டது. இதனால் அப்போது ஒரு வீட்டில் 10 பிள்ளைகள், 12 பிள்ளைகள் என்பது சாதாரணமாக இருந்தது.

    இதன் விளைவாக 2017-ம் ஆண்டு கணக்கீட்டின்படி இந்தியாவின் மக்கள் தொகை 133.92 கோடியாக பெருகியது. அது நாட்டிற்கு பெரும் சவாலாக அமைந்தது. எனவே இந்திய அரசு 1964-ம் ஆண்டு குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை அறிமுகம் செய்தது. அது குறித்த விழிப்புணர்வும் பரவியது. இதன் காரணமாக தற்போது ஒவ்வொரு வீட்டிலும் ஒன்று அல்லது 2 குழந்தைகள் தான் இருக்கிறார்கள்.

    ஆனாலும் மக்கள் தொகையில் முதல் இடத்தில் உள்ள சீனாவை இந்தியா 2027-ம் ஆண்டு முந்தி விடும் என்று ஐ.நா. கணித்து உள்ளது. அதற்கு ஏற்றாற் போல், ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 13-வதாக ஆண் குழந்தை சுகப்பிரசவத்தில் சின்னதம்பிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிறந்தது.

    இதை அறிந்த மருத்துவ குழுவினர் அந்த தம்பதிக்கு குடும்ப கட்டுப் பாடு அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதன்பிறகு அந்த ஆணுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது ஒருபுறம் இருக்க இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் பெண்கள் கருத்தரிக்கும் விகிதம் 17 சதவீதம் குறைந்து உள்ளது. இதனால் மக்கள் தொகையில் 2-ம் இடத்தில் உள்ள இந்தியா குழந்தையின்மையில் முதலிடத்தில் உள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் இந்தியாவில் குழந்தையின்மை பிரச்சினையால் 27.5 மில்லியன் தம்பதிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக மெட் டெக் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின்படி 2019-ல் கருத்தரித்தல் விகிதம் என்பது 2.2 -ல் இருந்து 2.0 ஆக குறைந்துள்ளது. குறிப்பாக, நகர்ப்புற பகுதிகளில் 6 தம்பதிகளில் ஒரு தம்பதி குழந்தையின்மையால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.

    அது போல் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களில் கருத்தரித்தல் விகிதம் 1.8 ஆக குறைந்து உள்ளது. இதற்கு அந்த மாநிலங்களில் கல்வி அறிவில் முன்னேறி இருப்பது காரணமாக கூறப்படுகிறது.

    ஆனால் உத்தரபிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களில் கருத்தரித்தல் விகிதம் 2.3 ஆக உள்ளது. இதன் மூலம் இந்திய மக்கள் தொகையில் தென்மாநிலங்களின் பங்கு 19.8 சதவீதமாகவும், வட மாநிலங்களின் பங்கு 43.2 சதவீதமாகவும் உள்ளது.

    திருமணமான தம்பதிகளில் 46 சதவீதம் பேருக்கு குழந்தையின் மை பிரச்சினை இருப்பதாகவும், 31 - 40 வயதுக்கு உட்பட்ட 63 சதவீத தம்பதிகளுக்கும், 21 - 30 வயதுக்குட்பட்ட 34 சதவீத தம்பதிகளுக்கும் குழந்தையின்மை பிரச்சினை இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

    நவீன தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட அம்சங்களால் ஒவ்வொருவரும் உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் உணவு முறை, வேலைப்பளு, திருமண வயது அதிகரிப்பு, ஹார்மோன் குறைபாடு உள்ளிட்ட காரணங்களில் மலட்டுத்தன்மை ஏற்பட்டு குழந்தையின்மை அதிகரித்து வருகிறது.

    மற்ற நாடுகளில் திருமண வயது 23 முதல் 25 வரை உள்ளது. அதனுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் பெண்களின் திருமண வயது 18 என மிக குறைவாக உள்ளது . இதனால் பெண்களின் மகப்பேறு காலம் அதிகரிக்கிறது.

    பொதுவாக பெண்கள் 21 வயது முதல் 27 வயதுக்குள் குழந்தை பெற்றுக்கொள்வதில் எவ்வித சிக்கலும் ஏற்படுவது இல்லை. ஏனென்றால் இந்தியாவில் பெண்களுக்கு சராசரியாக 47 வயதில் கருமுட்டை உற்பத்தியாவது நின்று விடுகிறது. எனவே வயது அதிகரிக்கும் போது இயல்பாக கருத்தரிப்பது கூட சவால் நிறைந்ததாக மாறி விடுவதாக மகப்பேறு மருத்துவத்துறையினர் எச்சரிக்கின்றனர்.

    ஆனால் கடந்த 15 வருடங்களாக வேலை உள்ளிட்ட காரணங்களால் திருமண வயது தாண்டிய பிறகே திருமணம் செய்யும் நிலை உருவாகி வருகிறது. வயது அதிகமாகும் போது கருப்பை தனது சீரான செயல்பாட்டை செய்யாமல் இருப்பதாலும், குழந்தைப் பேறை தம்பதிகள் திட்டமிட்டு தள்ளிப்போடுவதும் மலட்டுத்தன்மையை உண்டாக்கி விடுகிறது.

    குழந்தையின்மைக்கு பெண்கள் தான் காரணம் என்று முந்தைய காலத்தில் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் ஆண்களின் மலட்டுத்தன்மையும் குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. விந்தணுக்களின் எண்ணிக்கை குறைபாடு, ஹார்மோன் குறைபாடு, நீண்ட கால புகைப்பழக்கம், மது, உயிரணுக்கள் குறைவு, பரம்பரை ரீதியான குறைபாடு உள்ளிட்டவை குழந்தைப்பேறை உண்டாக்குவதில் மிகப்பெரிய தடையாக இருக்கிறது.

    இதற்கு தீர்வு கண்டு குழந்தை பேறுக்காக கருமுட்டை உருவாக்குதல், கருப்பையின் உள்ளே விந்தணுவை செயற்கையாக உட்செலுத்துதல், விந்தணுவை கருமுட்டையில் நேரடியாக வைத்தல், சோதனைக்குழாய் உள்ளிட்ட முறைகளை பலரும் நாடுகின்றனர். இதனால் செயற்கை கருத்தரித்தல் மையங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதை ஒழுங்குபடுத்த மகப்பேறு சிகிச்சை வழங்கும் சேவைகளை ஒழுங்குபடுத்தும் சட்ட மசோதாவை நாடாளுமன்ற மக்களவை நிறைவேற்றி உள்ளது.

    குழந்தை பிறப்பு என்பது தம்பதிகள் இடையே எழும் இயல்பான உணர்வால், உறவால் நிகழும் ஒன்றாக இருந்தது. ஆனால் இன்று குழந்தை பிறப்பு சவால் நிறைந்ததாக மாறி இருக்கிறது. எனவே மக்கள் தொகை பெருக்கத்தில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா போன்ற ஒரு நாட்டில் குழந்தையின்மை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருவது வினோதமான முரணாகவே பார்க்கப்படுகிறது.

    • உடல்ரீதியாக குழந்தை பெற்றெடுக்க முடியாத பெற்றோருக்காக இந்த முறை கொண்டுவரப்பட்டது.
    • தம்பதிக்கு திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்க வேண்டும்.

    குழந்தையின்மையை போக்குவதற்கான மற்றொரு மருத்துவ தொழில்நுட்பங்கள் தான் வாடகைத்தாய். அதாவது ஒரு பெண் மற்றொரு பெண்ணுக்காக தனது கர்ப்பப்பையை பயன்படுத்தி குழந்தை பெற்றெடுக்கும் முறை ஆகும். உடல்ரீதியாக குழந்தை பெற்றெடுக்க முடியாத பெற்றோருக்காக இந்த முறை கொண்டுவரப்பட்டது.

    இதில் மரபியல் தாய், கருசுமக்கும் தாய் என்று 2 முறை உள்ளது. வாடகைத்தாயின் கருமுட்டையே கருவுருவாக்கத்தில் உதவி இருந்தால் அவரே குழந்தையின் மரபியல் தாய் ஆவார். ஒரு பெண்ணின் கருமுட்டையானது, ஒரு ஆணிடமிருந்து பெறப்படும் விந்துடன் கருவூட்டப்பட்டு, வாடகை தாயின் கர்ப்பப்பைக்குள் வைக்கும் முறை கருசுமக்கும் தாய் எனப்படுகிறது.

    வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதில் முறைகேடு நடை பெறாமல் இருக்க வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்டம்- 2021 கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைமுறைக்கு வந்தது.

    அதில் தம்பதிக்கு திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்க வேண்டும். குழந்தை பெற இயலாததற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். வாடகைத் தாய், குழந்தை பெற விரும்பும் தம்பதியின் உறவினராக இருக்க வேண்டும். அவர் திருமணமாகி ஏற்கனவே குழந்தை பெற்றவராக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிகள் உள்ளன.

    தன்பாலின ஈர்ப்பாளர்கள், மனைவி அல்லது கணவன் இல்லாமல் தனித்து வாழ்பவர்கள், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவது சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட வசதி படைத்தவர்களுக்கே ஏற்றதாக இருப்பதாக மருத்துவ துறையினர் கூறுகிறார்கள்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • எந்த ஒரு அரசு மருத்துவமனையிலும் கருத்தரித்தல் சிகிச்சை மையம் இல்லை.
    • தனியார் கருத்தரித்தல் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

    தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், 40-க்கும் மேற்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்ளன. ஆனால் எந்த ஒரு அரசு மருத்துவமனையிலும் கருத்தரித்தல் சிகிச்சை மையம் இல்லை. இதனால் குழந்தை இல்லாத தம்பதியினர் தனியார் கருத்தரித்தல் மையங்களை நாடுகின்றனர்.

    எனவே தனியார் கருத்தரித்தல் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அதோடு அங்கு சிகிச்சை பெற அதிக அளவு பணம் செலவிட வேண்டிய நிலை உள்ளது. இதனால் சராசரி குடும்பத்தினர் கடனாளி ஆவதோடு மனச்சுமை மட்டுமின்றி பொருளாதார சுமைக்கும் ஆளாகின்றனர்.

    எனவே தமிழகத்தில் அதிக நோயாளிகள் சிகிச்சைக்காக வரும் சென்னை, மதுரை மற்றும் கோவை உள்ளிட்ட பெரிய அரசு மருத்துவமனைகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் உள்ளன. ஆனால் அந்த அரசு மருத்துவமனைகளில் கூட செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை வசதி இல்லாதது கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது.

    எனவே அரசு மருத்துமனைகளில் ஐ.வி.எப்., விந்தணு ஊசி, கரு வங்கி, கருமுட்டை மற்றும் விந்தணு வங்கி உள்ளிட்ட வசதிகளுடன் கருத்தரித்தல் மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால் மத்திய அரசின் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயற்கை கருத்தரிப்பு மையம் செயல்படுகிறது. அதுபோல் கடந்த ஆண்டு தெலுங்கானா மற்றும் கேரளா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் பிரசவம் ஆகும் பெண்களுக்கு தமிழக அரசின் சார்பில் மகப்பேறு கால உதவித்தொகை வழங்கப்படுகிறது. எனவே அரசு மருத்துவ மனைகளில் தான் அதிகப்படியான பிரசவங்கள் நடைபெற்று வருகின்றன. அரசின் ஊக்கத்தொகையும் கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்படுவதால் பலரும் மேலும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மகப்பேறு தொடர்பான பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது.

    ஆனால் அரசு மருத்துவமனைகளில் செயற்கை முறை கருத்தரித்தல் உள்ளிட்ட சிகிச்சை அளிக்க தேவையான ஆய்வுக்கூட வசதிகள் இன்னும் ஏற்படுத்தப்படாத நிலையே நீடிக்கிறது. அதில் ஆய்வக வசதிகளை செய்தால் குழந்தைக்காக ஏங்கும் ஏழை, எளிய தம்பதிகள் அதிக எண்ணிக்கையில் பயன் அடைவார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

    • சில மூட்டுவலி மருந்துகள் கர்ப்ப காலத்தில் பயன்படுத்துவதற்குப் பாதுகாப்பற்றவை.
    • கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது மிக முக்கியம்.

    கர்ப்பம் தரிப்பது மகிழ்ச்சியான, உற்சாகமான ஒரு விஷயமாக இருக்கலாம். ஆனால், அது ஒரு மன அழுத்தமாகவும் மாறிவிடக்கூடும். குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்ணுக்கு மூட்டுவலி (Rheumatoid Arthritis) இருப்பது கண்டறியப்பட்டால் இப்படி ஏற்படலாம். இது ஒரு நாள்பட்ட ஆட்டோ இம்யூன் நோய். இது மூட்டுகள் மற்றும் உடலின் பிற பகுதிகளில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக வலி, வீக்கம், விறைப்புத்தன்மை போன்றவை ஏற்படலாம்.

    மூட்டுவலி என்பது மூட்டு திசுக்களுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. மூட்டு வலி உள்ள கர்ப்பிணிப் பெண்களின் ரத்தத்தில் இந்த ஆன்டிபாடிகள் அசாதாரண அளவுகளில் காணப்படுகின்றன. இந்தப் பெண்களின் கருவிலும் இந்த ஆன்டிபாடிகள் குறைந்த அளவில் உள்ளன. இந்த நிலை, ருமாடிக் பரேசிஸ் (rheumatic paresis) அல்லது பிறவி மூட்டுவலி சார்ந்த கோளாறு என்றும் அறியப்படுகிறது. இது கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளை பாதிக்கிறது.

    மூட்டுவலி உள்ள தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, நோயெதிர்ப்பு சார்ந்த கோளாறின் காரணமாக நோயெதிர்ப்பு மண்டலம் வளராமல் தடுக்கப்படும். குழந்தைகளுக்கு வெளிப்படும் அறிகுறிகளைப் போன்ற சில அறிகுறிகள் காணப்படுவதால் டைப் 1 நீரிழிவு நோய் (பருவமடையும் காலத்தில் தோன்றும் வகை 1 நீரிழிவு நோய்) அல்லது லுகேமியா போன்ற நோய்கள் ஏற்படலாம்.

    கர்ப்பத்தின் அறிகுறிகள் வெளியே தெரிவதற்கு குறைந்தபட்சம் சில வாரங்களுக்கு முன்பே தாய்க்கு மூட்டுவலிக்கான அறிகுறிகள் ஏற்பட்டிருந்தால், அது கருவிலிருக்கும் குழந்தையைப் பாதிப்பதற்கு அதிக வாய்ப்பு உண்டு. அதாவது, கர்ப்பம் தரிக்கும் முன் ஒரு பெண்ணிடம் மூட்டுவலி கண்டறியப்பட்டாலும், மகப்பேறு விடுப்பு எடுக்கத் தொடங்கும்போதுதான், அவர் தீவிரமாக பாதிக்கப்படத் தொடங்குவார். அந்த நேரத்தில், அவர் குழந்தையை முழுநேரமாக கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கும். அதனால், வீட்டிற்கு வெளியே எந்த வேலையையும் அவரால் செய்ய முடியாது.

    இந்த நிலை நிச்சயமாக கர்ப்பத்தை மிகவும் சவாலானதாக மாற்றும் என்றாலும், முறையான மேலாண்மையும் கவனிப்பும் இருந்தால், மூட்டுவலி உள்ள பெண்கள் ஆரோக்கியமான கர்ப்பத்தையும் ஆரோக்கியமான குழந்தையையும் பெற முடியும் என்பதை அறிவது அவசியம்.

    கர்ப்ப காலத்தில் மூட்டுவலியின் தாக்கத்தை குறைக்க, எலும்பு மூட்டு மருத்துவ நிபுணர் மற்றும் மகப்பேறு மருத்துவருடன் தொடர் ஆலோசனை பெறுவது அவசியம். மூட்டுவலிக்கான அறிகுறிகளை நிர்வகிக்கவும், வளரும் கரு மீது மூட்டுவலிக்கான மருந்துகள் ஏற்படுத்த சாத்தியமுள்ள பக்கவிளைவுகளை கண்காணிக்கவும் எலும்பு மூட்டு மருத்துவ நிபுணர் உதவுவார். இதற்கிடையில், மகப்பேறு மருத்துவர் கர்ப்பத்தை கண்காணித்து, தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிசெய்வார்.

    சில மூட்டுவலி மருந்துகள் கர்ப்ப காலத்தில் பயன்படுத்துவதற்குப் பாதுகாப்பற்றவை. அது வளரும் கருவுக்கு தீங்கு விளைவிக்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம். எனவே, கர்ப்ப காலத்தில் பெண்ணுக்கு பாதுகாப்பான, பயனுள்ள சிகிச்சைத் திட்டத்தைக் கண்டறிய, எலும்பு மூட்டு மருத்துவ நிபுணரிடம் தொடர் ஆலோசனை பெற வேண்டியிருக்கும்.

    கூடுதலாக, கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பது கருவின் மீது தாக்கத்தை குறைக்க உதவும். உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை, மன அழுத்த மேலாண்மை நுட்பங்கள் ஆகியவற்றை பின்பற்றுவது பயன் தரும்.

    *வழக்கமான உடற்பயிற்சி: மூட்டு வலிக்கான அறிகுறிகளைக் குறைக்கவும், உடல் இயக்கம் மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும், கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் இது உதவும். மனநலனுக்கும் உடற்பயிற்சி நன்மை சேர்க்கும். மன அழுத்தத்தை குறைக்கும். இது மூட்டுவலி அறிகுறிகளை நிர்வகிக்க உதவும். யோகா, நீச்சல் அல்லது நடைப்பயிற்சி போன்ற மென்மையான நடவடிக்கைகள் கர்ப்ப காலத்தில் செய்ய உகந்தவை.

    *சமச்சீர் உணவு: கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது மிக முக்கியம். ஏராளமான பழங்கள், காய்கறிகள் மற்றும் கொழுப்பு குறைந்த புரதங்களை உள்ளடக்கிய சீரான உணவை உண்பது தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும். பதப்படுத்தப்பட்ட உணவு, அதிக கொழுப்புள்ள இறைச்சி போன்ற மூட்டுவலி அறிகுறிகளைத் தூண்டக்கூடிய உணவு வகைகளைத் தவிர்ப்பதும் முக்கியம்.

    *மன அழுத்த மேலாண்மை: தியானம், ஆழ்ந்த சுவாசம் மற்றும் மைண்ட்புல்னெஸ் போன்ற மன அழுத்த மேலாண்மை நுட்பங்களும் மூட்டுவலி அறிகுறிகளை நிர்வகிக்க உதவும். மன அழுத்தம் மூட்டுவலியைத் தூண்டும். எனவே கர்ப்ப காலத்தில் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான வழிகளை கண்டுபிடிப்பது முக்கியம்.

    • குழந்தையின்மைக்கு பெண்களை மட்டுமே காரணம் சொல்ல முடியாது.
    • ஆண்களிடம் காணப்படும் குறைபாடுகள் குழந்தையின்மைக்கு 35 சதவீதம் காரணமாக இருக்கின்றன.

    குழந்தையின்மைக்கு உடல் நலம், உளநலம், சுற்றுச்சூழல் என பல்வேறு காரணிகள் இருந்தாலும் முக்கியமான காரணம் காலம் தாழ்த்தி திருமணம் செய்து கொள்வதுதான். திருமணம் செய்வதற்கு ஏற்ற வயது 22-ல் இருந்து 25 வயது வரையிலான காலகட்டமாகும். அதுதான் தாம்பத்திய வாழ்க்கைக்கு சிறந்தது. 30 வயதுக்குள் குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்த வயதில் தான் பெண்ணின் கரு முட்டைகளும், ஆணின் உயிரணுக்களும் குழந்தை பேற்றுக்கான தரத்துடனும் வீரியத்துடனும் இருக்கும்.

    அந்த பருவத்தில் திருமணம் செய்தால் தான் இயற்கையான கருத்தரிப்பு சாத்தியப்படும். முப்பது வயதுக்கு பின்னர் கருமுட்டை மற்றும் உயிரணுக்களின் வீரியம் குறைந்து கொண்டே வரும். எனவே எக்காரணத்தைக் கொண்டும் திருமணத்தை தள்ளிபோடுதல் கூடாது. குழந்தையின்மைக்கு இது மட்டுமே முழு காரணம் அல்ல. மரபணு ரீதியான குறைபாடுகள், சுற்றுச்சூழல் சீர்கேடு, உடல் மற்றும் உளவியல் ரீதியான பிரச்சினைகள் என பல காரணங்கள் உள்ளன. இது போன்ற காரணங்களால் இன்றைக்கு இயற்கையான முறையில் கருத்தரிக்கும் வாய்ப்பு 2 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது 100 தம்பதிகளில் 2 தம்பதிகளுக்கு மட்டுமே இயல்பான குழந்தை பேறு சாத்தியமுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.

    எனவே திருமணமாகி ஒரு வருடம் ஆன பின்பும் குழந்தை பேறு கிடைக்கவில்லை என்றால் கணவன்-மனைவி இருவரும் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது. பெண்களின் கர்ப்பப் பை, கருமுட்டைப் பை, இவற்றை இணைக்கும் கருக்குழாய் ஆகியன குழந்தைபேற்றுக்கான முக்கிய உறுப்புகளாகும்.கருமுட்டைப் பையில் உற்பத்தியாகும் முட்டையானது கருக்குழாயை வந்தடையும். அங்குதான் ஆணின் உயிரணு வந்து கருமுட்டையினுள் நுழைந்து கருவுறச் செய்யும். 4-5 நாட்களுக்கு பின்னரே கருவுற்ற முட்டை கர்ப்பப் பைக்குள் சென்று குழந்தையாக வளரத் தொடங்கும். இந்த கருமுட்டைப் பை, கருக்குழாய் ஆகியவற்றில் ஏற்படும் குறைபாடுகள் குழந்தையின்மைக்கு 35 சதவீதம் காரணமாக அமைகின்றன. கர்ப்பப்பை பிரச்சினைகள் 20 சதவீதம் காரணமாக அமைகின்றன.

    அதே போல் ஆண்களிடம் காணப்படும் குறைபாடுகள் குழந்தையின்மைக்கு 35 சதவீதம் காரணமாக இருக்கின்றன. அதாவது ஆண்களின் உயிரணுக்கள் வீரியமாக இருந்தால்தான் அது கருமுட்டையை துளைத்துச் சென்று கருவுற செய்ய முடியும். வீரியம் குறைந்த உயிரணுக்களால் சாத்தியமில்லை. சிலருக்கு உயிரணுக்கள் குறைவாக இருக்கும். ஒரு சிலருக்கு உயிரணுக்கள் உற்பத்தி இருக்கும், ஆனால் வெளிவராது.இப்போதெல்லாம் இளைஞர்கள் செல்போனை பேண்ட் பாக்கெட்டில் வைக்கிறார்கள். அதிலிருந்து வெளிவரும் கதிர் வீச்சு ஆண்களின் உயிரணுக்களை பாதிப்பதாக தெரியவந்துள்ளது.

    இது போன்ற பிரச்சினைகள் இருப்பதால் குழந்தையின்மைக்கு பெண்களை மட்டுமே காரணம் சொல்ல முடியாது. மேலும் உடல்சார்ந்த பிரச்சினையில் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இன்றைய காலக்கட்டத்தில் பலருக்கும் மாதவிடாய் சீராய் வருவதில்லை. வந்தாலும் வலி மிகுந்ததாகவே உள்ளது. அது சரியாக இருந்தால் தான் குழந்தைபேறே வாய்க்கும். மாதவிடாய் காலத்தில் வெளியேற வேண்டிய ரத்தம் சிலருக்கு உள்ளே சென்று கர்ப்பபைக்கு பின்பகுதியில் திட்டு திட்டாக படிந்து உறைந்து விடும். சில சமயம் இதுபோன்று முட்டைப்பையிலும் படிந்து விடும். இப்படிபட்டவர்கள் மாதவிடாயின் போது கடும் வேதனைபடுவார்கள். ஈஸ்ட்ரோஜன் அதிகளவில் சுரந்தாலும் கர்ப்பபையில் கட்டி உருவாக வாய்ப்பு உள்ளது. எனவே ஹார்மோன்கள் சுரப்பை சமநிலைபடுத்தும் வகையில் வாழ்க்கை முறையை அமைத்து கொள்ள வேண்டும்.

    அதாவது அதிகம் உணர்ச்சி வசப்படாமலும் பதட்டம் அடையாமலும் அமைத்துக் கொள்ள வேண்டும். மாதவிடாய் சமயத்தில் வைக்கும் நாப்கினை 3 மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். அதுதான் கிருமித் தொற்று பரவாமல் தடுக்கும். தினமும் தலைக்கு குளிக்க வேண்டும். சிலருக்கு தலைக்கு ஊற்றுவது ஆகாது என்றால் வாரத்தில் 3 நாட்களாவது தலைக்கு குளிக்க வேண்டும். ஆரோக்கியமான கருத்தரித்தலுக்கு பெண்கள் தங்கள் வயது மற்றும் உயரத்துக்கு ஏற்ற வகையில் உடல் எடையை வைத்திருப்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். எண்ணெயில் பொரித்த நொறுக்குத்தீனிகள், கொழுப்புசத்து மிகுந்த உணவுகள் அதிகம் உண்பதை தவிர்க்க வேண்டும். உடலுழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உடல் எடை அதிகமான பெண்கள் கர்ப்பம் தரிக்கும்போது சிலருக்கு நீரழிவு நோய் ஏற்படலாம். அது வயிற்றில் வளரும் குழந்தையையும் தொற்றலாம்.

    அதனால் சுகபிரசவத்தில் சிக்கல் ஏற்படலாம். சிலருக்கு குழந்தை பேற்றுக்கு பின்னர் நீரழிவு வரலாம். எனவே உடல் எடையை நார்மலாக வைத்திருப்பதே நல்லது. மேலும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு கரு முட்டை பையில் நீர்கட்டிகள் உருவாக 90 சதவீத வாய்ப்புகள் உள்ளன. ஒல்லியானவர்களுக்கு 10 சதவீத வாய்ப்புதான் உள்ளது. இந்த நீர்க்கட்டிகள் உருவாகுவதற்கும் நீரிழிவு நோய்க்கும் தொடர்பு உண்டு. எனவே பெண்கள் அதற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இவற்றோடு மனநலமும் முக்கியம். மகிழ்ச்சியான விசயங்களில் மனதை திருப்ப வேண்டும். டென்ஷன் படுவதை தவிர்க்க வேண்டும். இரவு தூக்கத்தை தவிர்க்க கூடாது.

    தூக்கம் கெட்டால் உடலின் இயக்கம் பாதிக்கும். உடல் சூடாகும். அதுவே பல்வேறு நோய்களை வரவழைக்கும். எனவே பகலில் உழைப்பும் இரவில் ஓய்வும் தேவை. இயற்கையான வாழ்வியலை கடைப்பிடிக்க வேண்டும். ரசாயன நச்சு இல்லாமல் விளைவிக்கப்பட்ட தானியங்கள், காய்கறிகள், பழங்களை தேர்ந்தெடுத்து உட்கொள்வது நல்லது. சுகாதாரமான காற்றை சுவாசிப்பது கூடுதல் ஆரோக்கியம். அன்றாடம் உடலுழைப்பு அல்லது உடற்பயிற்சி அவசியம். இப்படியான சூழலில் காலா காலத்தில் திருமணம் செய்து இல்லற வாழ்வை இனிமையாக தொடங்கினால் எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டு.

    • தம்பதிகள் இந்த விஷயத்தில் தயக்கம் காட்டக்கூடாது.
    • இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி மருத்துவத்துறையில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன.

    உங்களுக்கு இருக்கும் குழந்தையின்மை பிரச்சினையை நீங்கள் புரிந்து கொண்டவுடன் டாக்டரை சரியான நேரத்தில் அணுகி உங்கள் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு பெற முயல்வது முக்கியம். தம்பதிகள் இந்த விஷயத்தில் தயக்கம் காட்டக்கூடாது. நீங்கள் எப்போது டாக்டரை அணுகவேண்டும் என்பதற்கு இங்கே சில குறிப்புகளை தந்து உள்ளேன்.

    ஆண்/பெண் வயது 35 முதல் 40 இருந்தாலோ, மாதவிடாய் சீராக வரவில்லை என்றாலோ அல்லது மாதவிடாயே ஏற்படவில்லை என்றாலோ, மாதவிடாய் அதிக வலியோடு ஏற்பட்டாலோ கருவுறுவதில் பிரச்சினைகள் இருப்பதை நீங்கள் உணர்ந்தாலோ, உங்கள் குடும்பத்தினரில் யாருக்காவது மரபு வழி கருவுறாமைக்கான பிரச்சினை இருந்தாலோ டாக்டரை அணுகி மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

    இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி மருத்துவத்துறையில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன. இதனால் தீர்க்க முடியாமல் சவாலாக இருந்த பல நோய்களையும் இன்று எளிதாக குணப்படுத்த முடிகிறது. அந்த வகையில் கருவுறாமைக்கான காரணங்களை சரியாக கண்டறிந்து, அதற்கான சிகிச்சை முறையையும் தேர்ந்தெடுத்து உங்கள் பிரச்சினையை சரி செய்து கொள்ள முடியும். அந்த வகையில் பல சிகிச்சை முறைகள் இன்று வழக்கத்தில் உள்ளன.

    இன்விட்ரோ பெர்டிலைஷேசன் (ஐ.வி.எப்.)

    இந்த ஐ.வி.எப். சிகிச்சை முறையில் கருமுட்டைகள் சேகரிக்கப்பட்டு உடலுக்கு வெளியே ஆய்வகத்தில் கருவகத்தட்டில் வைக்கப்பட்டு விந்தணுவுடன் சேர்க்கப்பட்டு கருவுற செய்யப்படுகிறது. இப்போது அதிக மக்கள் இந்த சிகிச்சை முறையில் பயன்பெற்று வருகிறார்கள் என்பது உண்மை.

    இவ்வாறு அன்னை மருத்துவமனை டாக்டர்கள் ஜோ.புல்கானின், பி.ஜி.சுதா ஆகியோர் கூறினார்கள்.

    • கர்ப்ப காலத்தில் தான் பெண்களை பல்வேறு பிரச்சனைகள் பாதிக்கின்றன.
    • உடலில் அரிப்பு உண்டாவது என்பது மிகவும் வேதனைக்கு உரிய விஷயம்..

    கர்ப்ப காலத்தில் தான் பெண்களை பல்வேறு பிரச்சனைகள் பாதிக்கின்றன. கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் ஒரு பிரச்சனை தான் கர்ப்ப காலத்தில் அரிப்பு உண்டாவது, உடலில் அரிப்பு உண்டாவது என்பது மிகவும் வேதனைக்கு உரிய விஷயம்..

    பொதுவாகப் பெண்களுக்குக் கர்ப்பகாலத்தில் ஐந்து மாதங்களுக்கு மேல் வயிற்றுப் பகுதியின் சருமப் பகுதி விரிவடையும்போது தழும்புகள் ஏற்படும். அப்போது, ஒரு மாதிரியான நமைச்சல் உருவாகி, அரிப்பு ஏற்படும். இதுதான் காரணமே தவிர, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு முடி அதிகமாக இருப்பதால் அரிப்பு ஏற்படும் என்பதற்கு எந்த அறிவியல் நிரூபணமும் இல்லை.

    அனைத்து கர்ப்பிணி பெண்களும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் இந்த அரிப்பு உண்டாவது.. அரிப்பு உண்டாகும் போது நமக்கு சொறிய வேண்டும் என்று கைகள் துடித்தாலும் கூட, அரிப்பு உண்டாகும் போது சொறியக்கூடாது. இவ்வாறு சொறிந்தால் அரிப்பு அதிகரிக்க தான் செய்யும்.. எனவே மறந்தும் இந்த தவறை செய்து விடாதீர்கள்.

    அரிப்பு உண்டாகும் பகுதிகளை எப்போதும் உலர்வாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்த சதை மடிப்புகள் வயிற்றுப் பகுதிகள் போன்ற இடங்களில் வியர்வை அல்லது குளித்து முடித்த பின் ஈரமாக இருப்பது போன்றவை இருக்க கூடாது. இவை அரிப்பை உண்டாக்கும் என்பதால் உலர்வாக வைத்துக் கொள்ளுங்கள். இதனால் அந்த இடங்களில் கொப்புளங்கள் வருவதை தடுக்கலாம்.

    சில பெண்கள் ஆறாவது மாதத்திலும், சிலர் எட்டாவது மாதத்திலும் இந்த அரிப்புத்தன்மையை உணர ஆரம்பிப்பார்கள். இதுபோன்ற சமயங்களில் குளிப்பதற்கு முன்பு ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றை வயிற்றுப்பகுதியில் தேய்த்து சிறிது நேரம் ஊறிக் குளித்துவிடலாம்.

    இதனால் அரிப்பு, தழும்பைத் தவிர்க்கலாம். அரிப்பெடுக்கும் நேரங்களில் மேலே சொன்ன எண்ணெயை வயிற்றுப் பகுதியில் தடவியும் வரலாம். சிலருக்குப் பித்தப்பையில் அடைப்பு ஏற்படுவதன் காரணமாகவும் வயிற்றுப் பகுதியில் அரிப்பு ஏற்படலாம். எனவே, அரிப்பு எடுக்கும்போது மருத்துவரிடம் காட்டி அதற்கான தீர்வைத் தேடுங்கள்.

    • உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் குழந்தைப்பேறு தாமதமாகும்.
    • சித்த மருத்துவத்தில் சிறந்த மருந்துகள் உள்ளன.

    உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் குழந்தைப்பேறு தாமதமாகும். தற்போது இளைஞர்கள் மத்தியில் இந்தப்பிரச்சினை அதிகமாக காணப்படுகிறது. இதற்கு சித்த மருத்துவத்தில் சிறந்த மருந்துகள் உள்ளன. அவை:

    1) அமுக்கரா சூரணம் 1 கிராம், பூரண சந்திரோதய செந்தூரம் 100 மி.கி., நாக பற்பம் 100 மி.கி., பவள பற்பம் 100 மி.கி. என்ற அளவில் எடுத்து தினமும் காலை-இரவு, பாலில் கலந்து உணவுக்குப் பின்பு சாப்பிடலாம்.

    2) பூனைக்காலி விதைப் பொடி 1 கிராம் எடுத்து பாலில் கலந்து காலை, இரவு குடிக்கலாம்.

    3) நெருஞ்சில் விதைப் பொடி, நீர்முள்ளி விதைப்பொடி சம அளவில் பொடித்து பாலில் கலந்து சாப்பிடலாம்.

    விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அசைவ உணவுகள்: நாட்டுக்கோழி முட்டை, இறைச்சி, ஒமேகா-3 கொழுப்பு நிறைந்த கடல் சிப்பிகள், சூரை மீன், மத்திச்சாளை மீன்கள்,

    பருப்பு வகைகள்: பாதாம், பிஸ்தா, அக்ரூட் பருப்புகள், பூசணி விதைகள்,

    பழங்கள்: செவ்வாழைப்பழம், நேந்திர வாழைப்பழம், பேரீச்சம் பழம், திராட்சை பழம், பெர்ரி வகைகள், அவகோடா, பலாப்பழம், மாம்பழம், துரியன் பழம், அத்திப்பழம், நாட்டு மாதுளம்பழம்,

    கீரைகள்: பசலைக்கீரை, தூதுவளை, நறுந்தாளி, முருங்கை, அறுகீரை, தக்காளி, புடலங்காய், அவரை பிஞ்சு, முருங்கை பிஞ்சு, முருங்கை காய், பீன்ஸ், பட்டர் பீன்ஸ், கேரட், சர்க்கரை வள்ளி கிழங்கு, உருளைக்கிழங்கு, பனங்கிழங்கு மற்றும் சின்ன வெங்காயம், பூண்டு இவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். மது, புகைப்பழக்கம் கூடாது.

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா)

    • தினமும் குளிப்பது மிக மிக முக்கியம்.
    • ஹார்மோன் மாறுதல்களாலும் தோலில் பாதிப்புகள் ஏற்படலாம்.

    உணவு கருவுற்ற பெண் மூன்று 'G' நிறைய சாப்பிட வேண்டும்.

    Green leaves - கீரை வகைகள்

    Green vegetables - பச்சைக் காய்கறிகள்

    Grains - முழு தானியங்கள்

    முழு தானியங்கள் என்றால் அதிகம் பாலிஷ் போடாத கோதுமை மற்றும் அரிசி சாதம், கஞ்சி போன்றவை நல்லது. புழுங்கலரிசி உபயோகிப்பது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. மல்லிகைப் பூ போன்ற பச்சரிசி சாதம், சத்தில்லாத சக்கைதான். அதிக refine செய்யப்பட்ட ஆட்டா, மைதா போன்றவற்றில் இயற்கையான நார்ச்சத்து இருக்காது.அதிக காரம், மசாலா பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. கருவுற்ற தாய் நிறையப் பழங்கள் சாப்பிட வேண்டும். இது மலச்சிக்கலைத் தவிர்க்கும். அன்னாசி, பப்பாளி போன்றவை உடலுக்கு நல்லது.

    கருவுற்ற தாயின் தோல் வறண்டு அல்லது அதிக எண்ணெய்ப் பசையாக மாறலாம். இதற்குத் தேவையான மாய்ஸ்சரைஸர்கள் அல்லது லோஷன் பயன்படுத்தலாம். சாதாரண தேங்காய் எண்ணெய் மிகவும் நல்லது. நிறைய கெமிக்கல் அடங்கிய மேல் பூச்சுகளைத் தவிர்ப்பது நல்லது. அவற்றால் ஒவ்வாமை ஏற்பட்டு, அதற்கு சிகிச்சை எடுக்கவேண்டி வந்தால் வீணான மன உளைச்சல்தானே! சிலருக்கு தோலில் ஏற்படும் மாற்றங்கள் பிரசவம் ஆன பிறகு தானாக சரியாகிவிடும். ஹார்மோன் மாறுதல்களாலும் தோலில் பாதிப்புகள் ஏற்படலாம்.

    தினமும் குளிப்பது மிக மிக முக்கியம். தண்ணீர் கிடைத்தால் தினம் இரண்டு முறை! தன் சுத்தம் பேணுதல், தோல் நோய்கள் வராமல் பாதுகாக்கும்.

    புத்துணர்ச்சியையும் தரும்.

    அந்தக் காலத்தில் விசாலமான வீடு, முற்றம், கொல்லை என்று நல்ல காற்றோட்ட வசதி இருந்தது. வெந்நீர் போட வீட்டுக்கு வெளியில் அடுப்பு இருக்கும். அதிலிருந்து வரும் புகை வீட்டுக்குள் அதிகம் வராது. யாருக்கும் பாதிப்பு இருக்காது. இந்தச் சின்ன வீட்டில் புகைமூட்டம் இருந்தால் எல்லோருக்கும் சுவாசக் கோளாறு வரும். அதிலும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அதிக பாதிப்பு இருக்கும்.

    • கர்ப்ப காலத்தில், பருக்கள் பெரும்பாலும் வாயைச் சுற்றிலும் கன்னத்திலும் வரும்.
    • கர்ப்ப காலத்தில் பல பெண்கள் உடல் முழுவதும் அரிப்பு பிரச்சனையை சந்திக்கின்றார்கள்.

    பெரும்பாலான பெண்கள் கர்ப்ப காலத்தில் மிகவும் உணர்திறன் வாய்ந்த சருமத்தைக் கொண்டுள்ளனர், இதன் காரணமாக அவர்கள் நீட்டித்த தழும்புகள், அரிப்பு, பருக்கள், நிறமி மற்றும் பிரசவத்திற்குப் பிறகு தோல் தளர்த்தல் போன்ற பல தோல் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

    பருக்கள்: பருக்கள் பிரச்சனை கர்ப்பிணிக்கு மிகவும் எரிச்சலூட்டும் பிரச்சினை. பல பெண்களுக்கும் தடிப்புகள் ஏற்படுகின்றன. புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அதிகப்படியான சுரப்பு சருமத்தின் உற்பத்தியை அதிகரிக்கிறது, இது சருமத்தின் துளைகளை நிறுத்துகிறது. கர்ப்ப காலத்தில், பருக்கள் பெரும்பாலும் வாயைச் சுற்றிலும் கன்னத்திலும் வரும். பல பெண்களுக்கு அவை முகம் முழுவதும் பரவுகிறார்கள். இவற்றுக்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இவை பிரசவத்திற்குப் பிறகும் நீடிக்கும். சில நேரங்களில் இந்த தழும்புகளும் எஞ்சியிருக்கும். எனவே, மருத்துவரிடம் ஆலோசிக்காமல் வீட்டில் எந்த சிகிச்சையும் செய்ய வேண்டாம். இவற்றின் சிகிச்சைக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளையும் பயன்படுத்தக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

    மெலஸ்மா: இது கர்ப்ப காலத்தில் ஏற்படும் மிகவும் கடுமையான தோல் பிரச்சினை, இது கர்ப்ப முகமூடி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில், முகத்தில் நிறமி ஏற்படுகிறது. சூரியனின் புற ஊதா கதிர்கள் வெளிப்பாடு, பரம்பரை மற்றும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களின் அளவு அதிகரிப்பதும் இதற்கு முக்கிய காரணங்கள்.

    அரிப்பு: வாய்வு காரணமாக கர்ப்ப காலத்தில் தசைகளில் நீட்சி ஏற்படுகிறது, இதன் காரணமாக பல பெண்களுக்கு அரிப்பு பிரச்சினைகள் ஏற்படுகிறது. பல பெண்கள் கர்ப்ப காலத்தில் உடல் முழுவதும் அரிப்பு பிரச்சனையை சந்திக்கின்றார்கள். எனவே, இதைத் தவிர்க்க, கலமைன் லோஷன் அல்லது நல்ல தரமான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். அரிப்பு அதிகமாக இருந்தால் ஒரு மருத்துவரை அனுகவும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் கல்லீரல் தொந்தரவுகளாலும் இது ஏற்படலாம் என கூறப்படுகிறது.

    நீட்டித்த தழும்புகள்: குழந்தையின் வளர்ச்சியுடன் வயிற்றுத் தோல் நீட்டப்படுகிறது, இதன் காரணமாக சருமத்தின் மேற்பரப்பில் காணப்படும் மீள் இழைகள் உடைக்கப்படுகின்றன. இதன் விளைவாக நீட்டித்த தழும்புகள் உண்டாகிறது. கர்ப்ப காலத்தில் அதிக எடை அதிகரிக்கும் பெண்கள் இந்த பிரச்சினைக்கு ஆளாகிறார்கள். இந்த சமையத்தில் 11-12 கிலோ எடை அதிகரிப்பு சாதாரணமானது, ஆனால் சில பெண்களுக்கு 20 கிலோ வரை அதிகரிக்கும். இது சருமத்தில் கூர்மையான நீட்டிப்பை ஏற்படுத்துகிறது, இது நீட்டித்த தழும்புகள் பெறும் அபாயத்தை அதிகரிக்கிறது. வைட்டமின் ஈ கொண்ட மாய்ஸ்சரைசர் அல்லது கிரீம் பயன்படுத்துவதன் மூலம் அவற்றைக் குறைக்கலாம், ஏனெனில் இது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும்.

    குறிப்பு : மருத்துவம் தொடர்பான எந்தொரு முயற்சியை மேற்கொள்ளும் போதும் உங்கள் மருத்துவரை அனுக மறக்காதீர்...

    இரத்தக்கசிவானது கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் ஒருசில காரணங்களால் ஏற்படக்கூடும். அதேப்போல் கர்ப்பத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும், இரத்தக்கசிவு ஏற்படும்.
    கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிக அளவில் கஷ்டத்தையும் அனுபவிப்பார்கள். அதில் ஒன்று தான் இரத்தக்கசிவு ஏற்படுவது. பொதுவாக கர்ப்பிணிகளுக்கு இரத்தக்கசிவு ஏற்படக்கூடாது. இருப்பினும் சிலருக்கு சில காரணங்களால் கர்ப்ப காலத்தில் இரத்தக்கசிவு ஏற்படும். அதற்காக பயப்பட வேண்டாம். ஏனெனில் இரத்தக்கசிவானது கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் ஒருசில காரணங்களால் ஏற்படக்கூடும். அதேப்போல் கர்ப்பத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும், இரத்தக்கசிவு ஏற்படும். இங்கு கர்ப்பிணிகளுக்கு எப்போதெல்லாம் இரத்தக்கசிவு ஏற்படும் என்பதை பார்க்கலாம்.

    கர்ப்பிணிகளின் கருப்பை வாயானது மிகவும் சென்சிடிவ்வாக இருந்தால், அப்போது லேசாக இரத்தக்கசிவு ஏற்படும். அதுவும் கர்ப்பமாக இருக்கும் போது உறவில் ஈடுபட்டால் இத்தகைய இரத்தக்கசிவு ஏற்படும்.

    கருமுட்டையானது வளர்ந்து, கருப்பையில் பதியும் போது, கருப்பையில் நிறைந்துள்ள இரத்தமானது கசிய ஆரம்பிக்கும். இதன் காரணமாகத் தான் சிலருக்கு கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் லேசாக இரத்தக்கசிவு ஏற்படுகிறது.

    நஞ்சுக்கொடியானது கருப்பை சுவரில் இருந்து முழுமையாகவோ அல்லது பாதியாகவோ தகர்ந்து காணப்பட்டால், அப்போதும் இரத்தக்கசிவு ஏற்படும். பொதுவாக இந்த நஞ்சுக்கொடி தகர்வானது பிரசவத்திற்கு சிறிது நாட்களுக்கு முன் அல்லது பிரசவம் நடைபெறும் போது ஏற்படும்.

    கருமுட்டையானது கருப்பையில் வளராமல், வேறு இடங்களில் அதாவது கருமுட்டை குழாயில் வளர ஆரம்பித்தால், அப்போதும் இரத்தக்கசிவு ஏற்படும். அதுமட்டுமின்றி இந்த காரணத்தினால் இரத்தக்கசிவு வந்தால், அத்துடன் கடுமையான வலி மற்றும் பிடிப்புக்கள் அடிவயிற்றில் ஏற்படக்கூடும்.

    நஞ்சுக்கொடியானது கருப்பை வாயை முழுமையாவோ அல்லது பாதியாகவோ உள்ளடக்கியிருந்தால், அளவுக்கு அதிகமாக இரத்தக்கசிவு ஏற்படும். இந்த நிலையில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், பெண்கள் தரையில் நேராக படுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இந்த மாதிரியான சூழ்நிலையில் தாய் மற்றும் குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க சிசேரியன் செய்யக்கூடும்.
    ×