search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    துடுப்பில்லாமல் ஓடத்தை செலுத்திய திருஞானசம்பந்தர்
    X

    துடுப்பில்லாமல் ஓடத்தை செலுத்திய திருஞானசம்பந்தர்

    திருக்களம்பூரில், திருஞானசம்பந்தருக்காக தீபாவளி அன்று இரவில் நடக்க வேண்டிய அர்த்தஜாம பூஜையை, மறுநாள் அதிகாலை உஷத் காலத்தில் ஏற்று அருள்புரிந்துள்ளார், சிவபெருமான்.
    சிவபெருமானின் ஆரண்ய தலங்கள் ஐந்து. ‘ஆரண்யம்’ என்றால் ‘காடு’ என்று பொருள். ஈசன் முல்லை வனத்தில் அருளும் திருக்கருகாவூர், பாதிரி வனத்தில் அருளும் திருஅவளிவநல்லூர், வன்னி வனத்தில் அருளும் திருஅரதைப்பெரும்பாழி (அரித்துவார மங்கலம்), பூளை வனத்தில் அருளும் திருஇரும்பூளை (ஆலங்குடி), வில்வ வனத்தில் அருளும் திருக்கொள்ளம்புதூர் (திருக்களம்பூர்) ஆகிய இந்த ஐந்து தலங்களும் ‘பஞ்சாரண்ய தலங்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.

    ஒரே நாளில் இந்த ஐந்து தலங்களையும் தரிசித்தால் திருக்கயிலையை தரிசித்த பெரும்பேறு கிட்டும். இதில் முதலாவதாகத் தரிசிக்க வேண்டிய ஆலயம் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை சமேத மாதவிவனேஸ்வரர் திருக்கோவில். இங்கு உஷத் காலமாகிய காலை 5 மணி முதல் 6 மணிக்குள் வழிபட வேண்டும். இரண்டாவது அவளிவநல்லூர் சவுந்தர்யநாயகி சமேத சாட்சிநாதர் திருக்கோவில். இங்கு காலசந்தியில் காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் வழிபாடு செய்ய வேண்டும். மூன்றாவது அரித்துவாரமங்கலம் அலங்காரவல்லி சமேத பாதாளேஸ்வரர் ஆலயம். இந்த தலத்தில் உச்சிகாலத்தில் பகல் 11 மணி முதல் நண்பகல் 12.30 மணிக்குள் தரிசனம் செய்ய வேண்டும். நான்காவதாக ஆலங்குடி ஏலவார்குழலி சமேத ஆபத்சகாயேஸ்வரர் கோவில். இங்கு சாயரட்சையில் மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் வழிபாட்டை முடிக்க வேண்டும். ஐந்தாவதாக திருக்களம்பூர் கவுந்தர்யநாயகி சமேத வில்வவனநாதர் திருக்கோவில். இங்கு அர்த்த ஜாமத்தில் இரவு 7.30 மணி முதல் இரவு 8.30 மணிக்குள் வழிபட வேண்டும்.

    இந்த ஐந்து ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசித்து வாழ்வில் பெறுதற்கரிய பேறுகளையும், சகல வளங்களையும் பெற்று பெருவாழ்வு வாழலாம் என்பது நம் முன்னோர்களின் திருவாக்கு ஆகும். கூடவே வாழ்வில் எத்தகைய கிரக தோஷங்களுக்கு ஒருவர் ஆட்பட்டிருந்தாலும், ஒரே நாளில் குறிப்பிட்ட நேரத்தில் முறைப்படி இந்த ஐந்து சிவாலயங் களிலும் வழிபட்டால் எத்தகைய கிரக தோஷங்களும் அகன்றுவிடும் என்கிறார்கள்.

    இந்த தலங்களில் ஒன்றான திருக்கொள்ளம்புதூர் என்னும் திருக்களம்பூரில், திருஞானசம்பந்தருக்காக தீபாவளி அன்று இரவில் நடக்க வேண்டிய அர்த்தஜாம பூஜையை, மறுநாள் அதிகாலை உஷத் காலத்தில் ஏற்று அருள்புரிந்துள்ளார், சிவபெருமான்.

    இது என்ன விந்தையான கதை! வாருங்கள் தெரிந்து கொள்வோம்.

    ஒரு தீபாவளி நன்னாளில் ஐப்பசி மாத அமாவாசை அன்று பஞ்சாரண்ய தலங்களில் முதல் நான்கு தலங்களை தரிசித்த திருஞானசம்பந்தர், அன்று அர்த்தஜாம பூஜைக்கு, திருக்களம்பூர் ஈசனைக் காண வந்தார். ஐப்பசி அமாவாசை தீபாவளி இரவில் சம்பந்தர் வருவதை அறிந்த மக்கள் ஊரெங்கும் வீடுகளிலும், வெளியிலும் அகல் விளக்குகளை ஏற்றிவைத்து சம்பந்தரின் வருகைக்காக காத்திருந்தனர். ஆனால் சம்பந்தர் வரும் வழியில் கடும்மழை. இதனால் வழியில் குறுக்கிடும் அகத்திய காவிரி (முள்ளியாறு) என்னும் வெட்டாற் றில், வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

    ஆகையால் திருஞானசம்பந்தரால் அந்த ஆற்றைக் கடந்து ஊருக்குள் வரமுடியாத நிலை. பெரும் வெள்ளத்தின் காரணமாக, ஆற்றில் ஓடத்தை செலுத்த முடியாததால் ஓடங்கள் அனைத்தும் கரையில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன. நேரமும் அந்தி சாய்ந்து, இரவு பூத்து நள்ளிரவும் வந்தது. ஈசனை தரிசிக்காமல் செல்லக்கூடாது என்பதில் திருஞானசம்பந்தர் உறுதியாய் இருந்தார். எனவே ஆற்றின் கரையில் நிறுத்தியிருந்த ஓடம் ஒன்றில், அந்த நள்ளிரவிலும் தன் அடியவர்களுடன் ஏறினார் சம்பந்தர். ஓடத்தை ஆற்று நீரில் செலுத்த துடுப்பு இல்லை. ஆனாலும் ஓடம் சென்றது!

    ஆம்..சம்பந்தர் கூறிய பஞ்சாட்சரமும், அவர் பாடிய பதிகமும், வெள்ளத்தின் ஊடே துடுப்பு இன்றி ஓடம் பயணிக்க துணை நின்றன.

    ஓடம் ஆற்றின் மறுகரையை அதிகாலையில் அடைந்தது. ஆற்றின் கரையிலேயே ஈசன் உமையுடன் ரிஷப வாகனத்தில் சம்பந்தருக்கும், அவரது அடியார்களுக்கும் அந்த அதிகாலையில் காட்சி கொடுத்தார். பின்பு சம்பந்தர் மீதி பதிகத்தை பாடியபடியே திருக்கொள்ளம்பூதூர் ஆலயத்தை அடைந்தார். ஆலய அர்ச்சகர்களும் தீபாவளி அமாவாசை நாளில் சம்பந்தரின் வருகையை அறிந்து இரவில் காத்திருக்க, நேரம் செல்ல செல்ல சம்பந்தர் வராததால் கலக்கமுற்றனர். ஆனால் சம்பந்தர் வரும்வரை காத்திருக்குமாறு ஈசன் அர்ச்சகருக்கு அசரீரியில் கூறியதால், தீபாவளி அமாவாசை அர்த்த ஜாம பூஜைக்கான நள்ளிரவு நேரம் கடந்து விட்ட போதிலும், பூஜையை தள்ளி வைத்திருந்தனர் அர்ச்சகர்கள். திருஞானசம்பந்தர் வருவதற்குள் மறுநாள் அதிகாலை ஆகிவிட்டதால், சம்பந்தருக்காக தீபாவளி அமாவாசை அர்த்த ஜாமபூஜையானது, மறுநாள் அதிகாலையில் நடந்தேறியது.

    இன்றும் கூட தீபாவளி அமாவாசை திருநாள் இரவில் நடக்க வேண்டிய அர்த்த ஜாமபூஜை, இந்த ஆலயத்தில் மறுநாள் காலையில் தான் நடத்தப்பட்டு வருகிறது. திருஞானசம்பந்தர், திருக்கொள்ளம் பூதூருக்கு எழுந்தருளிய சம்பவத்தை நினைவு கூரும் விதமாக தீபாவளி அமாவாசையில் இந்த ஆலயத்தில் ‘ஓடத் திருவிழா’ நடத்தப்பட்டு வருகிறது.

    தீபாவளி அமாவாசை அன்று இரவு 10 மணிக்கு சம்பந்தரின் உற்சவர் சிலையை படகில் வைத்து, ஓதுவார்கள். தேவாரப் பதிகம் ஓத, வெட்டாற்றின் இக்கரையில் இருந்து அக்கரையில் உள்ள கோவிலுக்குப் படகில் கொண்டு செல்வார்கள். அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக சம்பந்தரின் படகு கரைக்கு வந்து சேரும். அங்கே ஆற்றின் கரையில் ரிஷப வாகனத்தில் கயிலைவாசன், சம்பந்தரையும், அவரது அடியார்களையும் எதிர்கொண்டு அழைப்பார். பிறகு அனைவரும் கொள்ளம்பூதூர் கோவிலுக்குள் செல்வார்கள். அதற்கு பிறகுதான் முந்தையநாள் நள்ளிரவு நடைபெற வேண்டிய அர்த்த ஜாம பூஜை நடைபெறும். தீபாவளி அமாவாசையின் மறுநாள் மட்டுமே, அர்த்த ஜாம பூஜை காலம் தாழ்ந்து இங்கு நடை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஓடத் திருவிழாவில் கலந்து கொண்டால், வாழ்வில் அனைத்து ஐஸ்வரியங்களும் நமக்கு தவறாமல் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    அமைவிடம்

    கும்பகோணத்தில் இருந்து தெற்கே கொரடாச்சேரி வழியாக 20 கிலோமீட்டர் சென்றால் திருக்கொள்ளம்பூதூர் என்னும் திருக்களம்பூரை அடையலாம்.
    Next Story
    ×