search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருஞானசம்பந்தர்"

    • “முக்குளம் தன் க்டையானும்” என்றும் “தட மூன்றுடையான்” என்றும் தம் பதிகத்தில் குறிப்பிடுகிறார்.
    • மக்கள் இத்திருக்குளங்களில் மூழ்கிக் குழந்தைப்பேறு பெறுகின்றனர்.

    திருஞானசம்பந்தர்,

    "பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடும் நினை

    வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்

    வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்

    தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாந் தீவினையே"

    என்று முக்குளச் சிறப்பைப் பாடுகிறார்.

    மேலும் "முக்குளம் தன் க்டையானும்" என்றும் "தட மூன்றுடையான்" என்றும் தம் பதிகத்தில் குறிப்பிடுகிறார்.

    மும்மூர்த்தி தீர்த்தம், மூவிலைச் சூலதீர்த்தம், முக்குள தீர்த்தம், அகர முதலான மூவெழுத்துத் தீர்த்தம், தன்ம தீர்த்தம், தானதீர்த்தம் என்னும் பல பெயர்களால் புராணம் இவைகளை அழைக்கிறது.

    மக்கள் இத்திருக்குளங்களில் மூழ்கிக் குழந்தைப்பேறு முதலிய பேறுகளைப் பெறுகின்றனர்.

    இதன் கரைகளில் தென்புலத்தார் வழிபாடும், தான தருமங்களும் செய்து பெரும் புண்ணியம் ஈட்டுகின்றனர்.

    • பால் குளத்தில் நீராடுவோர் மகப்பேறு எய்துவர்.
    • சிதறியிருந்த கருவை எடுத்து குடத்தினுள் இட்டு காத்து ரட்சித்தாள் கர்ப்பரட்சாம்பிகை.

    ஆதிகாலத்தில் திருக்கருகாவூர், முல்லைவனமாக இருந்த காலம். அமைதி தவழும் அந்த பிரதேசத்தில் கௌதமர் போன்ற முனிவர்கள் தவம் செய்து கொண்டிருந்தார்கள்.

    தவம் செய்யும் முனிவர் பெருமக்களுக்கு உதவியாக நித்ரூபர்- வேதிகை என்ற தம்பதியர் இருந்து வந்தனர். குழந்தை பாக்கியம் இல்லாத அந்த தம்பதிகளுக்கு இவ்வாறு தொண்டு செய்தாலாவது இறைவன் தங்களை கண்திறந்து பார்க்க மாட்டானா? என்ற ஆதங்கம் இருந்தது.சிவனடியார்களுக்கு தொண்டு மற்றும் சிவனையும், பார்வதியையும் வழிபடுவது என்றே அந்த தம்பதியினரின் நாட்கள் கழிந்தன.

    ஒருநாள், வேதிகை கர்ப்பவதியானாள். அவளுக்கும், நித்ருபருக்கும் சந்தோஷம் பிடிபடவில்லை, அகமகிழ்ந்தனர். கரு மெல்ல வளர்ந்து வந்தது. அன்றைய தினம் நித்ருபர், பணி காரணமாக வேறு ஊருக்கு சென்றிருந்தார்.

    அன்றைக்கு ஏனோ தெரியவில்லை, வேதிகை மிகவும் சோர்வாக இருந்தாள். பலவீனமாக உணர்ந்தாள். ஐந்து மாத கர்ப்பம் காரணமான அசதி. கிறுகிறுவென மயக்கம் வரும் போலிருந்தது.

    பேசாமல் ஒரு மூலையில் சுருண்டு படுத்துக்கொண்டாள். பிறக்கப் போகும் குழந்தையை நினைத்தபடி கண் அயர்ந்து கொண்டிருந்தாள்.

    அதேநேரம் வாசலில் வந்து நின்றார் ஊர்த்துவபாதர் என்ற கோபக்கார முனிவர். முனிவருக்கு நல்ல பசி, `அம்மா, பிச்சை போடுங்கள்' என்று குரலெழுப்பினார். வேதிகைதான் மயக்கத்தில் இருக்கிறாளே, முனிவரின் பசிக்குரல் அவள் காதுகளில் விழவில்லை.

    பசி மிகுதியில் கோபமும் மிகுந்தது முனிவருக்கு. ஏ பெண்ணே, நான் பிச்சைக்காக வந்திருப்பதை கூட கவனிக்காமல், உன் நினைவு வேறு எங்கே இருக்கிறது? நீ எதை நினைத்துக் கொண்டிருக்கிறாயோ அது அழிந்து போகட்டும்' என்று சாபமிட்டுவிட்டார்.

    வேதிகை துடித்தாள். காரணம், அவள் அப்போது நினைத்துக் கொண்டிருந்தது தன் வயிற்றில் உள்ள கருவைத்தான். அதை போய் அழியுமாறு சாபம் கொடுத்துவிட்டாரே?

    அடிவயிற்றிலே `சுருக்'கென்று ஓர் அபாய வலி வலித்தது. வேதிகை அழுதாள், புரண்டாள்... ஆம்... அவள் கர்ப்பம் கலைந்து போய் விட்டது. கரைந்து போய்விட்டது.

    வேதிகை நடுநடுங்கினாள். ``அன்னையே, தாயே, தேவியே, கர்ப்பரட்சாம்பிகையே, என் நிலை இப்படி ஆகிவிட்டதே. உன் அருளால் கிடைத்த கர்ப்பம் இப்போது இல்லை என்று ஆகிவிட்டதே. நீ தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்'' என்று முறையிட்டாள். கதறினாள்.

    உடனே கர்ப்பரட்சாம்பிகை அவள்முன் தோன்றினாள். கீழே சிதறியிருந்த கருவை எடுத்து ஒரு குடத்தினுள் இட்டாள். அது மட்டுமல்ல, அது குழந்தையாக உருவாகும் வரை காத்திருந்து, அதற்கு நைதுருவன் என்ற பெயரையும் சூட்டி வேதிகையிடம் தந்துவிட்டு மறைந்தாள். மெய்சிலிர்த்துப் போனாள் வேதிகை.

    குழந்தை மெல்ல வளர்ந்தது. தெய்வக் குழந்தையாயிற்றே. அதற்கு சாதாரணப் பால் பிடிக்கவில்லை, சம்பந்தர் போல் சுவையான பாலுக்காக கதறியது.

    பார்த்தார் சிவபெருமான். தேவலோகத்தில் இருந்து காம தேனுவை அழைத்து குழந்தையை பாலூட்டி வளர்க்குமாறு ஆணையிட்டார்.

    காமதேனு தன் சுவையான பாலை குழந்தைக்கு தந்தது. அதோடு விட்டதா? தன் கால் குளம்பால் ஒரு குளத்தையே தோண்டியது. அதனுள் தன் பாலை நிரப்பிற்று. குழந்தை பாலில் விளையாடிற்று. (அந்த பால்குளம் இப்போதும் உள்ளது. இதில் நீராடுவோர் மகப்பேறு எய்துவர் என்கிறது புராணம்).

    பணிக்காக வெளியூர் சென்றிருந்த நித்ருபர் ஊர் திரும்பினார். நடந்ததையெல்லாம் அறிந்து மெய்சிலிர்த்தார். கர்ப்பரட்சாம்பிகையைத் துதித்தார். அவருக்கும் காட்சி தந்தாள் அம்பிகை.

    ``நித்ருபனே, உனக்கு என்ன வேண்டும் கேள்...''

    நமஸ்கரித்தார் நைத்ருபர். ``தாயே எங்களுக்கு அருள் பாலித்தது போல் இந்தத் தலத்திற்கு வந்து யார் வேண்டினாலும் நீங்கள் அவர்களின் கருவை காத்து சுகப்பிரசவம் நடக்க அருள் தர வேண்டும். அதுவே எனக்குப் போதும்.'' என்றார்.

    அம்பிகை புன்னகைத்தாள், ``அப்படியே ஆகுக'' என்று ஆசி புரிந்தாள். அன்று முதல், அன்னையை வணங்கிய பெண்கள் எல்லாம் பலன் பெற்று வருகிறார்கள்.

    • திருக்கருகாவூர் பஞ்சாரண்ய தலங்களுள் ஒன்றாகும்.
    • முல்லைக்கொடி படர்ந்திருந்தமைக்கான வடுவை இன்றும் காணலாம்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் ரெயில் நிலையத்தில் இருந்து தெற்கே 6 கி.மீ. தொலைவிலும் அய்யம்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து தென்கிழக்கே 6 கி.மீ தொலைவிலும் திருக்கருனாவூர் தலம் உள்ளது.

    சுவாமி : கர்ப்பபுரீசுவரர், முல்லைவனநாதர், மாதவி வனேசுவரர்

    அம்பிகை : கருக்காத்த நாயகி, கர்ப்பரட்சாம்பிகை

    தலமரம் : முல்லை

    தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், க்ஷீரகுண்டம், சத்திய கூபம், விருத்த காவிரி, திருப்பாற்குளம்.

    பதிகம் : திருநாவுக்கரசர் - 1, திருஞானசம்பந்தர் -1

    பஞ்சாரண்ய தலங்களுள் ஒன்றாகும். பஞ்ச ஆரண்யதல வழிபாட்டை செய்பவர்கள் முதன் முதலில் இத்தலத்தில் இருந்து தான் வழிபாட்டை தொடங்கவேண்டும்.

    இத்தலம் நன்மகப்பேறு வாய்த்தற்குரிய பிரார்த்தனைத் தலமாக சிறப்பிக்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள சிவலிங்கத் திருமேனியில் முல்லைக்கொடி படர்ந்திருந்தமைக்கான வடுவை இன்றும் காணலாம்.

    திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் பாடல் பெற்ற காவிரி தென்கரை தலம். இத்தலத்திற்கு முல்லைவனம், மாதவி வனம், கர்ப்பபுரி என்பன போன்ற பெயர்களும் உண்டு.

    சிவபெருமான் உமாதேவியுடனும், முருகனுடனும் இருக்கும் திருக்கோலத்தை சோமஸ்கந்தர் அருட்கோலம் என்பவர்கள். அவ்வாறு சோமஸ்கந்த வடிவில் அமைந்துள்ள கோவில்களில் திருக்கருகாவூர் முல்லைவன நாதர் கோவிலும் ஒன்றாகும்.

    இத்தலத்தில் இறைவனுக்கும், இறைவிக்கும் இடையில் வள்ளி, தெய்வானையுடன் உள்ள முருகன் சந்நிதி உள்ளது. இக்கோவிலுக்கு கிழக்காக ஒரு கோபுரமும், தெற்காக மற்றொரு நுழைவு வாயிலும் இருக்கிறது.

    கிழக்கு நோக்கி காட்சி தரும் இத்தலத்து இறைவன் முல்லைவனநாதர் சுயம்புவாக தோன்றியவர். முல்லைவனத்தில் முல்லைக் கொடிகளால் சூழப்பட்டு இருந்ததால் இன்றும் சிவலிங்கத் திருமேனியில் முல்லைக்கொடியின் வடு இருப்பதை காணலாம். புற்று ரூபத்தில் லிங்கம் இருப்பதால் இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. புனுகு மட்டுமே சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது.

    இங்கு கௌதமேசர் என்னும் தனிக் கோயில் உள்ளது. இங்குள்ள நந்தி விடங்க மூர்த்தமாக உள்ளது. பிரகாரத்தில் விநாயகர், இரட்டை நந்தி, இரண்டு பலி பீடங்கள், அறுபத்து மூவர், சந்தானாசாரியார்கள், முருகர், கஜலட்சுமி, நிருத்துவ முனிவர் பூசித்த லிங்கம், நவக்கிரகம், நடராஜர் சபை முதலிய சந்நிதிகள் உள்ளன.

    திருக்கருகாவூர் கர்ப்பத்தை ரட்சிக்கும் அம்பிகை கருத்தரிக்கும் பெண்களுக்கு தங்களுக்குப் பிரசவம் நல்லபடியாக ஆகவேண்டும், இடையில் எந்த பிரச்னையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற கவலை எப்போதும் இருக்கும்.

    அந்த பயத்தைப் போக்கி, கர்ப்பத்தை ரட்சித்து, சுகப்பிரசவம் ஆக்கிக் கருணைமழை பொழிகிறாள் கர்ப்பரட்சாம்பிகை.

    ஆலயம் அமைந்திருக்கும் இந்தப் பகுதி ஒரு காலத்தில் முல்லைக்கொடிகள் நிரம்பிய வனப்பகுதியாக இருந்தது. இங்கே சுயம்புவாகத் தோன்றிய ஈசன், முல்லைவனநாதர் என்று அழைக்கப்படுகிறார். வடமொழியில் `மாதவி' என்றால் முல்லை என்று அர்த்தம். எனவே, மாதவிவனேஸ்வரர் என்ற பெயரும் இவருக்கு உண்டு.

    முல்லைக் கொடிகளுக்கு மத்தியில் புற்று மண்ணில் தானாகத் தோன்றியவர் என்பதால் முல்லைவனநாதருக்கு அபிஷேகம் கிடையாது. புனுகு மட்டுமே சாத்துவார்கள்.

    இவருக்குப் புனுகு சாத்தினால் தீராத தோல் நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

    அவருக்கு எதிரே கர்ப்பக விநாயகர் (கற்பக?) சுயம்பு நந்தி, சோமாஸ்கந்தர் ஆகியோர் காட்சி தருகிறார்கள்.

    தட்சணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், மகாலட்சுமி, முருகன், பிரம்மன், மகிஷாசுரமர்த்தினி, சண்டீசர் ஆகியோரும் இந்த சிவாலயத்தில் தரிசனம் தருகிறார்கள்.

    சுவாமி கோயிலுக்கு வடக்குப் பக்கத்தில் நந்தவனம் இருக்கிறது. அதற்கு அடுத்ததாக அன்னை கர்ப்பரட்சாம்பிகையின் இக்கோயில் அமைந்திருக்கிறது.

    பத்மபீடத்தில், அமைதியே உருவாக அன்னை எழுந் தருளி இருக்கிறாள். லேசான புன்னகை வேறு. அன்னையின் நான்கு கரங்களுள் ஒன்று அவளது வயிற்றின் கீழே தொடுவது போல் உள்ளது. கர்ப்பத்தை ரட்சிக்கும் கோலம் போலும்! பார்த்தாலே பரவசம் ஏற்படுகிறது.

    மறு கரம், அபயம் அளிக்கிறது. மேல் நோக்கி உயர்த்திய மூன்றாவது கரம் அக்கமாலையையும், அடுத்த கரம் தாமரையையும் தரித்துள்ளன.

    கர்ப்பரட்சாம்பிகையை ஒரு தடவை பார்த்தாலே குழந்தை பாக்கியம் ஏற்படும் என்ற உணர்வு, நம்பிக்கை, பார்க்கும் பக்தர்களுக்கெல்லாம் ஏற்படுகிறது.

    இவள் கர்ப்பத்தை ரட்சிப்பவள் சரி, திருமணமே ஆகாதவர்களுக்கு? அதற்கும் இவளிடம் மருந்து இருக்கிறது. திருமணம் கூடிவராத பெண்கள், அன்னையின் சன்னதியில் நெய்யினால் படி மெழுகிக் கோலமிட்டால், திருமணம் கூடிவருவதாகச் சொல்கிறார்கள்.

    மகப்பேறு இல்லாதவர்கள், 48 நாட்கள் பிரசாத நெய்யை உண்டால் மகப்பேறு உண்டாகும் என்றும் சுகப்பிரசவம் ஆக அம்பாள் பிரசாதமான விளக்கெண்ணெயை நம்பிக்கையுடன் தடவி வந்தாலே போதும் என்று பலன் அடைந்தவர்கள் சொல்கிறார்கள்.

    திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப் பெற்ற புண்ணியத்தலம் இது. பிரம்மன், கவுதமர் ஆகியோர் இங்கே தங்கி இறைவனை பூஜித்திருக்கிறார்கள். அம்மன் கோயில் அருகில் இருக்கும் கவுதம லிங்கத்தை நிறுவியவர் கவுதம முனிவரே என்கிறது புராணம்.

    இந்தத் திருக்கருகாவூர் ஆலயத்தில் நவகிரகங்கள் எல்லாம் வித்தியாசமாக அமைந்திருக்கின்றன. சூரியனைச் சுற்றி மற்ற எல்லா கிரகங்களும் சூரியனையே பார்த்தவாறு அமைந்திருக்கின்றன. நவகிரகங்கள் அபய வரத முத்திரையுடன் காட்சி தருவதும் சிறப்பானது.

    பிரதோஷம், வைகாசி விசாகம், ஆடிப்பூரம், நவராத்திரி போன்ற தினங்களில் இங்கே சிறப்பு வழிபாடு உண்டு. ராஜகோபுரத்தின் எதிரில் உள்ள ஷீரகுண்டம் என்னும் பால் குளத்தில் சிவராத்திரி அன்று ஈசன், தீர்த்தமாடுகிறார். இந்தக் குளம், காமதேனுவின் கால் குளம்பால் ஏற்படுத்தப்பட்டதாகும்.

    • திருஞானசம்பந்தர் சிக்கல் சிங்கார வேலவர் கோவிலுக்கு சென்று பதிகம் பாடினார்.
    • இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த பதிகம் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

    திருஞானசம்பந்தர் சிக்கல் சிங்கார வேலவர் கோவிலுக்கு சென்று பதிகம் பாடினார். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த பதிகம் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

    வானுலா வும்மதி வந்துலா வும்மதில் மாளிகை

    தேனுலா வும்மலர்ச் சோலைமல் குந்திகழ் சிக்கலுள்

    வேனல்வே ளைவிழித் திட்டவெண் ணெய்ப்பெரு மானடி

    ஞானமா கந்நினை வார்வினை யாயின நையுமே.

    வானத்தே உலாவும் மதிவந்து பொருந்தும் மதில்கள் சூழ்ந்த

    மாளிகைகளும், தேன்பொருந்திய மலர்களை உடைய சோலைகளும்

    நிறைந்து விளங்கும்.

    திருச்சிக்கல் என்னும் தலத்தில், வேனிற் காலத்துக் குரியவனாகிய மன்மதனை நெற்றி விழியால் எரித்தழித்த வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை அவனருளால் விளைந்த பக்தி ஞானத்தாலே நினைப்பவர் வினைகள் நைந்துஅறும்.

    மடங்கொள்வா ளைகுதி கொள்ளும் மணமலர்ப் பொய்கைசூழ்

    திடங்கொள் மாமறை யோரவர் மல்கிய சிக்கலுள்

    விடங்கொள் கண்டத்து வெண்ணெய்ப்பெரு மானடி மேவியே

    அடைந்து வாழுமடி யாரவர் அல்லல் அறுப்பரே.

    இளமை பொருந்திய வாளைமீன்கள் துள்ளிக் குதித்துக் களிக்கும் மணம்

    பொருந்திய மலர்கள் நிறைந்த பொய்கைகள் சூழ்ந்ததும்

    மனஉறுதியுடைய சிறந்த மறையவர்கள் நிறைந்துள்ளதுமான

    சிக்கலில் எழுந்தருளிய, விடம் தங்கிய கண்டத்தினை உடைய

    வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை மனத்தால் விரும்பியவராய்

    அடைந்து வாழும் அடியவர்கள் அல்லல்கள் நீங்குவர்.

    நீலநெய் தல்நில விம்மல ருஞ்சுனை நீடிய

    சேலுமா லுங்கழ னிவ்வள மல்கிய சிக்கலுள்

    வேலவொண் கண்ணியி னாளையொர் பாகன்வெண் ணெய்ப்பிரான்

    பாலவண் ணன்கழ லேத்தநம் பாவம்ப றையுமே.

    நீலநிறம் பொருந்திய நெய்தல் மலர்கள் விளங்கி மலரும் சுனைகள் பலவற்றைக் கொண்டதும், சேல்மீன்கள் துள்ளும் வயல் வளம் நிறைந்ததுமான சிக்கல் என்னும் திருப்பதியில் வேல் போன்ற ஒளிநிறைந்த கண்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட வெண்ணெய்ப் பிரானாகிய பால்வண்ண நாதனின் திருவடிகளை ஏத்தின் நம் பாவங்கள் நீங்கும்.

    கந்தமுந் தக்கைதை பூத்துக் கமழ்ந்து சேரும்பொழிற்

    செந்துவண் டின்னிசை பாடல்மல் குந்திகழ் சிக்கலுள்

    வெந்தவெண் ணீற்றண்ணல் வெண்ணெய்ப்பி ரான்விரை யார்கழல்

    சிந்தைசெய் வார்வினை யாயின தேய்வது திண்ணமே.

    மணம் முற்பட்டுச் சென்று பரவுமாறு தாழைகள் பூத்துக் கமழும்

    பொழில்களில் வண்டுகள் செந்து என்னும் ஒருவகைப் பண்ணோடு பாடும்.

    பாடல்களைக் கொண்டு விளங்கும் சிக்கல் என்னும் தலத்தில், கற்பம்

    செய்தமைத்த திருவெண்ணீற்றை அணிந்த தலைமையாளனாகிய

    வெண்ணெய்ப்பிரானின் மணம் பொருந்திய திருவடிகளை நினைபவர்

    வினைப்கள் தேய்வது திண்ணம்.

    மங்குல்தங் கும்மறை யோர்கள்மா டத்தய லேமிகு

    தெங்குதுங் கப்பொழிற் செல்வமல் குந்திகழ் சிக்கலுள்

    வெங்கண்வெள் ளேறுடை வெண்ணெய்ப்பி ரானடி மேவவே

    தங்குமேன் மைசர தந்திரு நாளுந்த கையுமே.

    மேகங்கள் தங்கும் மறையவரின் மாடவீடுகளையும் அவற்றின் அருகே

    உயர்ந்து வளர்ந்துள்ள தென்னைகளை உடைய சோலைகளையும்

    கொண்டு செல்வம் நிறைந்துவிளங்கும் சிக்கல் என்னும் தலத்தில்

    சினம்மிக்க கண்களை உடைய வெள்ளேற்று ஊர்தியை உடைய

    வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை அடையின், மேலான

    கதி கிடைத்தல் உறுதி. செல்வம் நாள்தோறும் பெருகும்.

    வண்டிரைத் தும்மது விம்மிய மாமலர்ப் பொய்கைசூழ்

    தெண்டிரைக் கொள்புனல் வந்தொழு கும்வயற் சிக்கலுள்

    விண்டிரைத் தம்மல ராற்றிகழ் வெண்ணெய்ப் பெருமானடி

    கண்டிரைத் தும்மன மேமதி யாய்கதி யாகவே.

    மணம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த காழிப் பதியுள் தோன்றிய

    ஞானசம்பந்தன் செவ்விய தண்மையான அழகிய பொழில்கள் சூழ்ந்த

    சிக்கலில் விளங்கும் வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளைப் போற்றி

    இசையோடு பாடிய இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர்

    சிவலோகத்தில் கற்பமுறையில் உண்டான திருவெண்ணீற்றை அணிந்துள்ள சிவபெருமான் திருவடிகளை மேவுவர்.

    • திருஞானசம்பந்தர் போட்ட ஏடு ஆற்று நீரை எதிர்த்து சென்றது.
    • சமணர்களின் ஏடு தண்ணீரோடு அடித்துச் செல்லப்பட்டது.

    மதுரையை கூன்பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி புரிந்தபோது சமண மதம் தான் பெரியது என கூறப்பட்டது. இதனை பொய்யாக்க திருஞானசம்பந்தரை சைவ மதத்தினர் மதுரைக்கு அழைத்து வந்தனர்.அவர் வந்து அமர்ந்த இடம் தான் தற்போதைய மதுரை ஆதீனம் மடம். திருஞானசம்பந்தரின் லீலைகளை கேள்விப்பட்ட சமணர்கள் அவர் இருந்த வீட்டிற்கு தீ வைத்தனர். ஆனால் அவர் அதில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவர் பையவே சென்று பாண்டியனை பற்றட்டும் என கூறினார்.

    இதன் காரணமாக கூன்பாண்டியனுக்கு தொழுநோய் மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டது. இதனை குணப்படுத்த பல்வேறு மருத்துவம் பார்த்தும் பலன் கிடைக்கவில்லை. இறுதியில் திருஞானசம்பந்தரை வரவழைத்து கேட்டனர். அவர் திருநீரை எடுத்துக் கொடுத்தார். அதனை சாப்பிட்டதும் கூன் பாண்டியனின் நோய் குணமானது. ஆனால் இதனை சமணர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

    அதன் பிறகும் வாதங்கள் எழுந்தன. தொடர்ந்து சமணர்களின் புத்தகங்களை தீயில் கொண்டு வந்து போட்டனர். அவை எரிந்து சேதமானது. ஆனால் திருஞானசம்பந்தர் தான் எழுதிய "திருநள்ளாற்று பதிகத்தை" தீயில் போட்டார். அது எரியாமல் நின்றது. இதனால் பச்சை பதிகம் என பெயர் பெற்றது.

    தொடர்ந்து புனல்வாதம் நடத்த சமணர்கள் அழைப்பு விடுத்தனர். அதன்படி வைகையாற்றில் இருதரப்பு ஏடுகளையும் தண்ணீரில் போட வேண்டும். எந்த ஏடு எதிர்த்து வருகிறது? என்பதை வைத்து முடிவு செய்ய திட்டமிடப்பட்டது.

    அப்போது பாண்டியன் அரசவையில் மந்திரியாக இருந்த குலச்சாடனார் 2 முறை தோற்றுவிட்ட சமணர்கள் இந்த முறை தோற்றால் கழுவேறி உயிர் நீக்க வேண்டும் என கூறினார். இதனை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். அதன் பிறகு ஏடுகள் வைகையாற்றில் போடப்பட்டன.திருஞானசம்பந்தர் போட்ட ஏடு ஆற்று நீரை எதிர்த்து சென்றது. ஆனால் சமணர்களின் ஏடு தண்ணீரோடு அடித்துச் செல்லப்பட்டது.

    இதனால் இந்து மதம் சிறந்தது என முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு சமணர்கள் சிலர் தாங்களாகவே கழுவேறி உயிர் நீத்துக் கொண்டனர். இன்னும் சிலர் தப்பி ஓடி விட்டனர். எனவே மதுரையில் இந்து மதத்தை தழைத்தோங்கச் செய்த திருஞானசம்பந்தரை நினைவு கூறும் வகையில் தான் அவருக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் குருபூஜை நடத்தப்பட்டு வருகிறது.

    • திருஞானசம்பந்தருக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது.
    • திருஞானசம்பந்தர், சிவபெருமான்-பார்வதிக்கு தீபாரதனை நடைபெற்றது.

    சைவ சமய குரவர்களில் நால்வரில் ஒருவரும் திருநீற்றின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவருமான திருஞான சம்பந்தர் வைகாசி மாதம் மூல நட்சத்திர நாளான்று அவதரித்தார். அவருக்கு சிவபெருமானும், உமாதேவியும் ஞானப்பால் ஊட்டியதால் அவர் தேவாரம் பாடினார். அந்த தினத்தை திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு சித்தனாதன் விபூதி நிறுவனத்தின் சார்பில் பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ஞானப்பால் ஊட்டும் விழா நடந்தது.

    விழாவில் காலை 9 மணிக்கு முத்துக்குமாரசுவாமி மண்டபத்தில் திருஞானசம்பந்தருக்கு 16 வகை அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் மற்றும் தீபாரதனையும் நடைபெற்றது. பின்னர் ஓதுவார்கள் தேவாரப் பாடல்களை பாடினர். தொடர்ந்து சப்பரத்தில் திருஞானசம்பந்தர் எழுந்தருளினார். சிவபெருமான், உமா தேவியுடன் நந்தி வாகனத்தில் எழுந்தருளி பெரியநாயகி அம்மன் கோவில் உட்பிரகாரத்தில் உலா வந்தனர். கோவிலில் விநாயகர் சன்னதி முன்பு திருஞானசம்பந்தருக்கு கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் பொற்கிண்ணத்தில் ஞானப்பாலை ஊட்டினார்.

    பின்னர் திருஞானசம்பந்தர், சிவபெருமான்-பார்வதிக்கு தீபாரதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு ஞானப்பால் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி உபயதாரர்களான சித்தனாதன் சன்ஸ் உரிமையாளர்கள் சிவனேசன், தனசேகர், பழனிவேலு, ராகவன், அசோக், செந்தில், கார்த்திகேயன், குமரகுரு மற்றும் குடும்பத்தினர், கொங்கு வேளாளர் சங்க பிரமுகர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். பூஜை முறைகளை கோவில் குருக்கள் செல்வ சுப்பிரமணி மற்றும் குருக்கள் செய்தனர்.

    • காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள திட்டில் இவ்வாலயம் இருப்பதால் திட்டை என்றும், தென்குடித்திட்டை என்றும் வழங்கப்படுகிறது.
    • மூலவர் சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் இடையில் அம்பாள் சந்நிதிக்கு மேற்க்குப் பக்கத்தில் குருபகவானின் தனி சந்நிதி தனி விமானத்துடன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

    சனிபகவான் திட்டை தலத்திற்கு எழுந்தருளி வேதாகம முறைப்படி வேதமுதல்வனைப் பூஜித்து ஆயிரம் ஆண்டுகாலம் கடும் தவம் புரிந்தார் என்பது சிறப்பு. இத்தலத்தில் உள்ள ஈசனைத் தவமிருந்து பாவ விமோசனம் பெற்றார் சந்திரன். பசு, குதிரை, மான் தாகம் தீருவான் வேண்டி பசு தீர்த்தத்தைச் சிருஷ்டித்துக் கொடுத்தார் ஈசன். விஷ்ணு அரசமரமாகவும, லக்ஷ்மி வில்வமரமாகவும் இருந்து இறைவனுக்கும், இறைவிக்கும் திருத்தொண்டு செய்தனர். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம்.. கௌதமர், ஆதிசேடன், காமதேனு பூசித்த திருவூர்.

    சுமாலி என்பவர் தேர் அழுந்திய இடமாதலின் 'ரதபுரி' என்றும் காமதேனு வழிபட்டதால் 'தேனுபுரி' என்றும் ரேணுகை வழிபட்டதால் 'ரேணுகாபுரி' என்றும் இத்தலம் வழங்கப்படுகிறது.

    காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள திட்டில் இவ்வாலயம் இருப்பதால் திட்டை என்றும், தென்குடித்திட்டை என்றும் வழங்கப்படுகிறது. புராண காலத்தில் பிரளயம் ஏற்பட்ட போது, பூலேகமே நீரில் அமிழ்ந்திருந்தபோது திட்டை என்ற இவ்விடம் மட்டும் நீரில் மூழ்காமல் இருந்தது. இவ்விடத்தில் சிவபெருமான் சுயம்புவாக ஒரு லிங்க உருவில் எழுந்தருளினார். இக்கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூலவர் வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவது லிங்கமாக சுயம்பு லிங்கமாக அருள் புரிகிறார். இவ்வாறு ஐந்து லிங்கங்கள் இருப்பதால் இத்தலத்தை 'பஞ்சலிங்கஷேத்திரம்' என்று கூறுவர். இந்த ஒரு தலத்தை வழிபட்டால் சிதம்பரம், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருஆனைக்கா மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பஞ்சபூத திருத்தலங்களுக்கு சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மூலவர் கருவறையின் மேல் விதானத்தில் ஒரு 'சந்திரகாந்தக்கல்' பொருத்தப்பட்டிருக்கிறது. காற்றில் உள்ள ஈரப்பசையை உறிஞ்சி சுமார் ஒரு நாழிகைக்கு ஒருமுறை மூலவர் சிவலிங்கத்திருமேனியில் ஒரு சொட்டு நீர் விழும்படி இக்கல் பொருத்தப்பட்டுள்ளது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். ஆலயத்தின் முன்புறம் பசு தீர்த்தம் அமைந்துள்ளது. ராஜகோபுரம் வழியாக சிலபடிகள் ஏறிச் சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. மூலவர் சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் இடையில் அம்பாள் சந்நிதிக்கு மேற்க்குப் பக்கத்தில் குருபகவானின் தனி சந்நிதி தனி விமானத்துடன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

    இத்திருக்கோவிலில் குருபகவான் தனி சந்நிதியில் காட்சி தருகிறார். இவர் சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரஸ முனிவரின் புதல்வர் ஆவார். ஒரு காலத்தில் தென்குடித்திட்டை என்ற பெயரால் விளங்கிய இவ்வூர் தற்போது திட்டை என்று அழைக்கப்படுகிறது. இத்திருத்தலத்தில் கொடிமரம், கோபுரகலசம், சுவாமிபுஷ்கரணி, கருங்கற்களால் அமைந்தகோவில் இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். பிரகாரத்தில் விநாயகர், முருகன், அண்ணாமலையார், சண்டிகேசுவரர், பைரவர், குருபகவான் முதலிய சந்நிதிகள் உள்ளன.

    அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

    ரயில் நிலையம் : திட்டை

    பஸ் வசதி : உண்டு

    தங்கும் வசதி : இல்லை

    உணவு வசதி : இல்லை

    ×