search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Garbharatsamphikai"

    • தமிழர்கள் தல விருட்ச வழிபாடு முறையை ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது.
    • மாரியம்மனுக்கு `வேப்பிலைக்காரி' என்ற பெயர் உண்டு.

    ஆலயம் தோறும் ஒரு மரத்தை தல விருட்சமாக வைத்து வணங்கி, அதை புனிதமாக கொண்டாடுவது இந்துக்கள் மட்டுமே.

    உலகிலேயே வேறு எந்த மதத்தினரிடமும் இத்தகைய வழிபாடு இல்லை.

    சங்க காலத்துக்கும் முந்தைய தமிழர்கள் தல விருட்ச வழிபாடு முறையை ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது. இதற்கு அடிப்படை காரணம் மரங்கள், மனிதர்களின் வாழ்வில் அன்று முதல் இன்று வரை பின்னி பிணைந்து இருப்பதுதான்.

    மரங்கள் இல்லாவிட்டால் நாம் இல்லை. மனிதன் உயிர் வாழ பிராண வாயு தேவை. மரங்கள் காற்றில் உள்ள கரியமல வாயுவை (கார்பன் - டை - ஆக்சைடு) எடுத்துக் கொண்டு பிராண வாயுவை (ஆக்ஜிசன்) வெளியிடுகின்றன.

    இந்த ஆக்ஜிசன் தான் மனிதர் உள்ளிட்ட உயிரினங்களை தொடர்ந்து உயிர்த்துடிப்புடன் வாழச் செய்கின்றன. இதை உணர்ந்தே நம் முன்னோர்கள் தலங்கள் தோறும் மரத்தை வைத்து போற்றினார்கள்.

    ஒவ்வொரு தல விருட்சத்துக்கும் பின்னணியில் நிச்சயம் ஏதாவது ஒரு கதை இருக்கும். இதன் மூலம் மரங்களை சிவரூபமாகவும், விஷ்ணு ரூபமாகவும், சக்தி ரூபமாகவும் வழிபடும் வழக்கம் தோன்றியது.

    அரச மரம் சிவ ரூபம் வேப்ப மரத்தை சக்தி வடிவம் என்பார்கள். அதனால் தான் அரசும், வேம்பும் ஒரே இடத்தில் ஒன்றொடொன்று இணைந்து வளர்ந்திருக்கும் இடத்தை சிவசக்தி உறையும் இடமாக கருதி வணங்கி வழிபாடு செய்கிறோம்.

    தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வேப்ப மரத்தை மாரியம்மனாகவே கருதி வழிபடும் வழக்கம் உள்ளது. மாரியம்மனுக்கு `வேப்பிலைக்காரி' என்ற பெயர் ஏற்பட்டதே இதனால் தான்.

    இதே போல ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு ஆற்றல் உண்டு.

    குறிப்பாக மருத்துவ குணங்கள் நிறைந்த வில்வம், வன்னி, மகிழ் - போன்ற மரங்களை - தற்காலத்தில் கோவிலைத் தவிர வேறு இடங்களில் பார்ப்பதே அரிதாக இருக்கின்றது. தமிழிலக்கியங்கள் போற்றும் கொன்றையும், மருதமும் எத்தனை மகத்துவம் நிறைந்தவை!..

    தெய்வாம்சமும் பேரருளும் பெற்ற கொன்றை மரங்களும், மருத மரங்களும் நம் தமிழகத்திற்கே உரித்தான மரங்கள். கோவில்களில் தல விருட்சங்களாக விளங்கி சகல துன்பங்களையும் நீக்கி, எந்த நோயும் வராமல் காப்பவை. பிள்ளையார் பட்டியிலும் திருஇடைமருதூரிலும் தலமரமாக விளங்குவது மருத மரம்.

    கொன்றை, வில்வம், ஆல், வன்னி, மகிழ் - ஆகியன சிவபெருமானின் அம்சங்கள். இம்மரங்களின் கீழிருந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைகூடும். வில்வ இலைகளால் சிவபெருமானைப் பூஜிக்க சகல பாவங்களும் நீங்கும்.

    பந்தநல்லூர், அச்சிறுபாக்கம் முதலிய தலங்களின் தலமரம் - கொன்றை. ஸ்ரீரங்கத்தில் மஹாலட்சுமியின் சந்நிதிக்கு அருகில் வில்வம் உள்ளது.

    திருவையாறு, தஞ்சை ராமேஸ்வரம், திருவெண்காடு, திருவைகாவூர் - இன்னும் பல சிவ தலங்களின் தலமரம் - வில்வம். பெரும்பான்மையான கோவில்களில் வில்வம் முதலிடம் பெற்று விளங்குகிறது.

    திருஆலங்காடு, திருஆலம்பொழில், திருப்பழுவூர் - முதலிய திருத்தலங்களின் தலமரமாக ஆல மரம் உள்ளது. திருப்பூந்துருத்தி, திருவான்மியூர், தஞ்சை ஆகிய தலங்களின் தலமரம் - வன்னி.

    வில்வத்திற்கு அடுத்து அதிக தலங்களில் விளங்கும் பெருமையை உடையது - வன்னியே. குளிர்ந்த நிழலையும் மணம் கமழும் மலர்களையும் உடையது மகிழ் மரம். இது வகுளம் எனவும் புகழப்படுகிறது.

    திருவண்ணாமலை, திருவொற்றியூர், தஞ்சை ஆகிய தலங்களில் மகிழ மரம் தல விருட்சமாக விளங்குகின்றது. சந்தன மரம், அத்தி மரம் - விஷ்ணுவின் அம்சமாகும். சந்தனம் இன்றி சுபகாரியங்களும், பூஜைகளும் ஏது!.. சந்தன மரத்திலிருந்து தெய்வீக அதிர்வுகள் வெளிப்படுகின்றன என்கின்றனர்.

    ஸ்ரீ வாஞ்சியத்தில் தலமரமாக - சந்தனமரம் உள்ளது. காஞ்சி வரதர் அத்தி மரத்தினால் ஆனவர். மயிலாடுதுறையை அடுத்த கோழி குத்தி வானமுட்டிப் பெருமாளும் அத்தி மரத்தில் விளங்குபவரே!.. வீடுகளில் சுபகாரியங்கள் நிகழும் போது - கட்டப்படும் மாவிலைத் தோரணங்களின் அழகே அழகு! மா மரம் - காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் - திருத்தலங்களின் தலமரமாக திகழ்கிறது.

    நெல்லி மரத்தின் கீழிருந்து தானம் செய்தால், தானம் செய்பவருடைய சகல பாவங்களும் நீங்கும் என்பார்கள். நெல்லி - திருநெல்லிகா, திருநெல்வாயில், பழையாறை முதலிய திருத்தலங்களின் தலமரமாகும். மாதுளை மரத்தின் கீழ் விளக்கேற்றி வைத்து - இளந்தம்பதியர் வலம் வந்து வணங்க தம்பதியர் ஒருவருக்கொருவர் அன்பு அகலாது இருப்பர். திருவாவடுதுறை, திருப்பரிதிநியமம் முதலிய சிவத்தலங்களின் தலமரம் -அரசு. அரச மரத்தின் வேர்களில் மஞ்சள் நீர் ஊற்றி நெய்தீபம் ஏற்றி வர புத்ர தோஷம் நீங்கும்.

    இலுப்பை எண்ணெய் கொண்டு ஆலயத்தில் தீபம் ஏற்றுவதன் மூலம் காரிய சித்திகள் பல கைவரப் பெறும் என்பது அசைக்க முடியாத உண்மை. இலுப்பை மரம், தலமரமாக விளங்கும் திருத்தலம் - திருச்செங்கோடு ஆகும்.

    புளிய மரம், கருவேல மரம், எட்டி மரம் - ஆகியன தீய அதிர்வுகளை வெளிபடுத்தக்கூடியன. இவற்றின் நிழல் - உடலில் உஷ்ணத்தை அதிகரிக்கச் செய்யும். இதனாலேயே - இந்த மரங்களை வீட்டுக்கு எதிரில் வளர்ப்பதில்லை. இந்த மரங்களுக்கு மருத்துவ குணங்கள் இருப்பினும் - காய் மற்றும் வேர்களை தவறான காரியங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். பொதுவாக பேய், பிசாசுகளுக்கு இம்மரங்களே அடைக்கலம் கொடுக்கும் என்பார்கள்.

    லிங்கத்தின் மீது நாகம் குடை பிடித்தாற்போல அற்புத வடிவம் கொண்டு திகழ்வது நாகலிங்கப் பூவாகும். இந்த நாகலிங்க மரம் சுற்றுப்புற காற்றில் உள்ள தூசியை வடிகட்டி தூய்மையாக்கும் தன்மை உடையது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை - புலியூர் பரத்வாஜேஸ்வரர் ஆலய தல விருட்சமாக நாகலிங்க மரம் உள்ளது.

    சனகர், சனந்தனர், சனாதனர், சனத் குமாரர் எனும் நால்வருக்கும் சிவபெருமான் யோக நிலையில் குருமூர்த்தியாக வீற்றிருந்து ஞானோபதேசம் செய்வித்தது ஆலமர நிழலில்! அந்த எம்பெருமான் அளந்த ஒரு நாழி நெல்லினைக் கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் வழுவாது இயற்றியவளாய் அம்பிகை தவமிருந்தது - மாமர நிழலில்! திருத்தலம் - மாங்காடு! அம்பிகை கம்பை ஆற்றின் கரையில் மாமர நிழலில் - மணலில் சிவலிங்க ஸ்தாபனம் செய்து வழிபட்ட திருத்தலம் - காஞ்சி!

    அம்பிகை மயில் வடிவாக எம்பெருமானைப் பூஜித்தது புன்னை வனத்தில்!.. அந்த புன்னை வனமே திருமயிலை!.. அம்பிகை - ஐயனை வழிபட்ட தலங்களுள் சிறப்பானது திருவானைக்காவல் ஆகும். இங்கே - தல விருட்சமாக - நாவல் மரம் உள்ளது. விக்னங்களைத் தீர்த்தருளும் விநாயகப்பெருமானுக்கு உகந்தவை அருகம் புல்லும் எருக்கம்பூவும்!.. சுந்தரர் - சங்கிலியாரை திருமணம் செய்து கொண்டு, நான் உன்னைப் பிரியேன் என்று சங்கிலியாரிடம் வாக்களித்தது திருவொற்றியூர் மகிழ மரத்தின் கீழாகும்.

    சீர்காழியில் - பாரிஜாதம், திருநெல்வேலியில் - மூங்கில் தலமரங்களாக உள்ளன. பஞ்ச பாண்டவர்கள் - தமது அஞ்ஞாத வாசத்தின் போது ஆயுதங்களையும் மந்த்ராஸ்திரங்களையும் பொதிந்து வைத்த மரம் -வன்னி மரமாகும். எமதர்மன் பணி செய்து வணங்கும் திருப்பைஞ்ஞீலியில் தலமரமாக -வாழை உள்ளது. இந்த வாழை மரம் திருமண தோஷத்தை விரட்டக் கூடியது.

    பட்டுக்கோட்டையில் இருந்து கிழக்கே முத்துப்பேட்டை சாலையில் தாமரங்கோட்டை கிராமத்திற்கு அடுத்ததாக இருக்கும் பரக்கலக்கோட்டை கிராமத்தில் ஆல மரமே கடவுளாக வழிபடப்படுகிறது. தாமரங்கோட்டையிலிருந்து வடக்கே - இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் அத்திவெட்டி பிச்சினிக்காடு.

    இந்த கிராமத்தில்- ஆவாரங்காட்டுக்குள் ஒற்றைப் பனைமரம் உள்ளது. பனையின் கீழ் சிறு கொட்டகை மட்டுமே.. மற்றபடி மாலை சந்தனம் குங்குமம் எல்லாம் -ஒற்றைப் பனைக்கே!..

    இந்த ஒற்றைப் பனையில் - சத்தியத்தின் வடிவாக - குடிகொண்டு அருள்பவர் - ஸ்ரீவைரவர். நம் பக்கம் நியாயம் இருந்து, வைரவா!.. நீ கேள்!.. என்று முறையிட்டால் போதும் தலவிருட்சம் உதவும் என்கிறார்கள்.

    மதுக்கூரில் புகழ் பெற்ற பெரமையா சுவாமி கொலு இருப்பது மரக் கூட்டங்களில் தான்!. அருகில் உள்ள ஒரு கிராமத்தில் ஸ்ரீ காளி குடி கொண்டிருப்பது - உடை மரம் எனும் ஒருவகை அபூர்வ மரத்திலாகும்.

    திருமழபாடியில் - பனை ஆடுதுறையில் - தென்னை மரங்கள் தல விருட்சகமாக உள்ளன. அபிராம வல்லியும் அமிர்தகடேஸ்வ உறையும் திருக்கடவூரில் தலவிருட்சம் - முல்லைக் கொடியாகும்.

    முருகன் பாதங்கள் பதிய நடந்தருளிய திருத்தலம் திருவிடைக் கழி. இங்கே, தல விருட்சம் - குரா மரம்.

    தல விருட்சம் இருந்த இடங்கள் ஒரு காலத்தில் அந்தந்த மரங்களுக்குரிய வனமாக இருந்ததாக சொல்வார்கள். அந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் பஞ்ச வனதலங்கள் உள்ளன. அவை வருமாறு:-

    திருக்கருகாவூர் - முல்லை வனம்

    திருஅவளிவ நல்லூர் - பாதிரி வனம்

    திருஅரதைப் பெரும்பாழி (ஹரித்வார மங்கலம்) - வன்னி வனம்

    திருஇரும்பூளை (ஆலங்குடி) - பூளை வனம்

    திருக்கொள்ளம்பூதூர் - வில்வ வனம்..

    சைவ வைணவ சமயங்களும், புத்த சமயமும் அரச மரத்தைப் புனிதமாகக் கருதுகின்றன. இது பிப்பலாச விருட்சம், அரணி, அஷ்வதா - என்று பலவாறு அழைக்கப்படுகின்றது. இது ஆலமரம், அத்திமரம் போன்று புனிதத் தன்மை கொண்டது.

    சரஸ்வதி நதியானது நான்முகனின் கமண்டலத்தில் இருந்து தோன்றி பலாசம் எனும் அரச மரத்தினுள் ஊடுருவி வெளிப்பட்டு இமாசல மலையில் வழிந்து ஓடிவருகின்றது - என கந்த புராணம் குறிப்பதாக சான்றோர்கள் கூறுகின்றனர்.

    வாழ்வின் அர்த்தம் தேடி - அரண்மனையின் சுக போகங்களைத் துறந்து ஞானம் தேடிப் புறப்பட்ட சித்தார்த்தர் - ஒருநிலையில் ஞானம் எய்தி, கவுதம புத்தர் ஆனார் என்பது வரலாறு.

    சித்தார்த்தர் அமர்ந்து தியானம் செய்தது - அரச மரத்தின் நிழலில் தான். சைவத்தில் - அரச மரம், ஞான விருட்சம் எனக் குறிக்கப்படுகின்றது.

    நாயன்மார்களுள் ஒருவராகத் திகழும் திருமூலர்- மூலன் எனும் இடையனின் உடம்பிற் புகுந்த சிவயோகியார். இவர் கயிலை மாமலையில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர். இவரே மகத்தான திருமந்திரம் அருளியவர்.

    திருவாவடுதுறைத் திருக்கோயிலை வழிபட்டு அங்குள்ள அரசமரத்தின் நீழலில் பல்லாண்டுகள் இவர் சிவயோகத்தில் அமர்ந்திருந்தவராவார்.

    புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இந்த அரசின் அடியில் அமர்ந்து தியானம் செய்ய முடியும் என்பர். அரச மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் மனம் தெய்வ சிந்தனை ஊற்றெடுக்கும். ஞானம் கிட்டும்.

    ஆழ்வார் திருநகரி எனப்படும் திருக்குருகூரில் அவதரித்து - பதினாறு ஆண்டு காலம் - சடகோபன் என தவமிருந்து - நம்மாழ்வார் என ஞான பேரொளியாக வெளிப்பட்டது புளியமரத்தின் அடியிலாகும்.

    இப்படி தல விருட்சத்தின் மகிமைகளை சொல்லிக்கொண்டே போகலாம். அடுத்த வாரம் ஆலயத்தின் முக்கிய பகுதியான தீர்த்தம் பற்றி பார்க்கலாம்.

    • துலாபாரப பிரார்த்தனை மற்றும் தங்கத்தொட்டில் பிரார்த்தனை இங்கு பிரசித்தம்.
    • பாற்குளம் காமதேனு என்ற தெய்வ பசு தம் காலால் உருவாக்கிய குளம்.

    நம் நாட்டில் மூவரின் பாடல் பெற்று சிறப்புற்று விளங்கும் தேவார திருத்தலங்கள் மொத்தம் 275. அவற்றுள் திருக்கருகாவூர் என்ற இத்திருத்தலம் காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள 18-வது சிவத்தலம்.

    திருக்காருகாவூர் எனும் இத்திருத்தலத்தை, திருக்களாவூர், முல்லை வனம், மாதவி வனம், கர்ப்பபுரி என பல பெயர்களில் நூல்கள் குறிக்கின்றன. முல்லைக்கொடியை தல விருட்சமாகக் கொண்டதால் இத்தலம் முல்லைவனம் என்றும், இறைவன் முல்லை வன நாதர், என்றும் மாதவீவனேசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

    நாற்புறம் இருந்தும் எளிதாக வந்துபோகும் வகையில், சோழ வள நாட்டின் செழிப்பான தஞ்சை மாவட்டத்தில், பாபநாசம் எனும் ஊரின் தெற்கே ஆறு கிலோமீட்டர், கும்பகோணத்திற்கு தென்மேற்கில், வடக்கில் 20 கிலோ மீட்டர் மற்றும் சாலியமங்கலத்திற்கு வடக்கில் 10 கிலோமீட்டரில் இத்திருத்தலம் அமையப் பெற்றுள்ளது. தஞ்சாவூருக்கு வடக்கில் 20 கிலோமீட்டரில், வெட்டாற்றின் தென்கரையில் இக்கோவில் உள்ளது.

    இக்கோவிலில் சிவபெருமான், கற்பக விநாயகர் என அழைக்கப்பெறும் தல விநாயகர் , நந்தி என மூவரும் சுயம்பு மூர்த்திகளாகவும், சுவாமி ஆலயத்தின் பின்புறம் இருக்கும், லிங்கோத்பவரின் குடவரையில் அர்த்தநாரீசுவரர், அமைந்திருப்பது சிறப்பு. முல்லை வனத்தில் சுயம்புவாக, புற்றுருவில் தோன்றியதால் இலிங்கத் திருமேனியில் முல்லைக்கொடி படர்ந்து, வடுவை ஏற்படுத்தியிருப்பதை இன்றும் காணலாம். இறைவன் இன்றும் புற்றுருவிலேயே காட்சியளிப்பதால், வழமையான அபிடேகங்கள் ஏதுமின்றி, புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது.

    இம்மண்ணில் தோன்றும் அனைத்துயிர்களின் ஆதியாய், கருவை காத்தருளும் கர்ப்பரட்சகியாய், கருகாத்த நாயகியாய், கரும்பானையாள் எனும் அன்னையாய் அழகே உருவாய் எழுந்தருளியிருக்கிறார். பிள்ளைப்பேறு வேண்டி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் அருளுபவள் அன்னை.

    அன்னையின் திருவடியில் வைத்து பூசித்து வழங்கப்படும் பசு நெய் உண்டவர்களுக்கு பிள்ளை வரம் கிடைப்பதாக பக்தர்கள் தீவிர நம்பிக்கை கொண்டுள்ளனர். எண்ணெய் வைத்து பூஜை செய்து, அதை கர்ப்பிணிப் பெண்கள் வயிற்றில் பூசிவர சுகப்பிரசவம் ஆகிறது என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள்.

    இங்கு உள்ள மூலவராகிய முல்லைவனநாதர் சந்நதி, கர்ப்பகரட்சகி அம்மன், இடையில் அமைந்துள்ள ஆறுமுகர் சந்நதி ஆகிய மூன்றும் ஒரே வரிசையில் உள்ளபோது தரிசிப்பது பெரும் பேறு என்கின்றனர்.

    அதாவது, சோமாசுகந்தர் அமைப்பில் இருக்கும் மூன்று சந்நதிகளையும் ஒரு சேர வலம் வந்து தரிசிப்பவர்களுக்கு புத்திர பேறும், கருவை நன் முறையில் காத்து அருளும் பேறும் வாய்க்கப் பெறுவது உறுதி. அதற்கான அமைப்பில் சுற்றுப் பிரகாரம் இருப்பதும் சிறப்பு. கோவிலுக்கு முன்னால் அமைந்துள்ள பாற்குளம் காமதேனு என்ற தெய்வ பசு தம் காலால் உருவாக்கிய குளம் என்றும் சிவராத்திரி காலங்களில் பெருமான் இங்கு தீர்த்தம் அருளுவதாகவும் நம்பிக்கை உள்ளது.

    கோவில் அமைப்பு:

    மிகப் பழமையான இக்கோவில் நான்கு வீதிகளுக்கு இடையில் அழகான வடிவமைப்பில் அமைந்துள்ளது. 460 அடி நீளமும், 284 அடி அகலமும் உடையது.

    கோவிலின் தென்புறம் நுழைவு வாயிலும், கிழக்கு புறம் கோபுரமும் அமைந்துள்ளது. ஆலயத்தினுள் நுழைந்தவுடன் வடக்குபுறம் வசந்த மண்டபம் உள்ளது. அடுத்து முதலில் உள்ள பெரிய பிரகாரத்தில் முல்லைவனநாதரும், இடதுப்பக்கம் கர்ப்பகரட்சாம்பிகை கோவிலும் தனித்தனி பிரகாரத்தில் உள்ளது.

    ஈசனின் ஆலயத்தின் முன்னால் கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியவையும், தென்கிழக்கில் மடப்பள்ளி, அறுபத்து மூன்று நாயன்மார்களும், வட கிழக்கில் நடராசர் சபா முன் மண்டபமும், யாக சாலையும் இருக்கின்றன.

    மேற்குபுறம் சுவாமிக்கு வடகிழக்கில் நடராசர் சந்நதியும், நவக்கிரகங்களும், தென்பக்கம் சோமாசுகந்தர் சந்நதியும், அருகில் தென்கிழக்கில் தல விநாயகர் கற்பகப் பிள்ளையார் சந்நதியும் உள்ளன. உட்பிரகாரத்தில் நடராசருக்கு எதிரில் சேக்கிழார், சந்தனாச்சாரியார், நால்வர் சந்நதிகளும், தென்புறம் தட்சிணாமூர்த்தி, நிருதிவிநாயகர் சந்நதிகளும், மேல்புறம் அர்த்தநாரீசுவரர், மகாலட்சுமி சந்நதிகளும், வடபுறம் ஆறுமுகர், பிரம்மன், துர்க்கை, சண்டேசுவரர் மற்றும் தல விருட்சமாகிய முல்லைக்கொடியும் அமைந்துள்ளன. துலாபாரப பிரார்த்தனை மற்றும் தங்கத்தொட்டில் பிரார்த்தனை ஆகியவை இங்கு பிரசித்தம்.

    கல்வெட்டுகள்

    திருக்கோவில் கல்வெட்டில், திருக்கருகாவூர் , மகாதேவர் திருக்கருகாவூர் ஆழ்வார், திருமுல்லைவனமுடைய மகாதேவர் என்று குறிக்கப் பெற்றுள்ளது. திருக்கருகாவூர் கல்வெட்டுகள் குறித்து குடவாயில் பாலசுப்பிரமணியன் தனது தொகுபில் கூறி இருப்பதாவது:-

    திருக்கருகாவூர் கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் இதுவரை 31 கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன. அவை முதல் பராந்தக சோழன் காலத்திலிருந்து பிற்காலச் சோழர் ஆட்சிக்காலம் முடியும் வரை உள்ள கால எல்லையில் வெட்டுவிக்கப் பெற்றவையாகும்.

    இத்திருக்கோயில் முதல் பராந்தக சோழனின் காலத்தில் (கி.பி. 907-953) கற்றளியாக புதுப்பிக்கப் பெற்றதோடு அப்பெருவேந்தனின் 17 கல்வெட்டுகளும் அங்கு சாசனமாக இடம் பெற்றுள்ளன. இவற்றை அடுத்து உத்தம சோழனின் கல்வெட்டு ஒன்றும், ராச ராச சோழனின் கல்வெட்டுகள் இரண்டும், விக்கிரம சோழனின் கல்வெட்டு ஒன்றும் ராஜகேசரி என்ற பட்டப் பெயர் பொறிக்கப்பட்ட சோழன் கல்வெட்டுகள் நான்கும், பரகேசரி என்ற பட்டத்துடன் உள்ள கல்வெட்டுகள் மூன்றும் உள்ளன.

    ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் கருகாவூர் என்று பெயர் பெற்றது என்பது போன்று புராணக் கதைகள் அதிகம் இருந்தாலும், தட்சனின் சாபத்தால் இன்னலுற்ற சந்திரன் ஒரு பங்குனி மாத பவுர்ணமியில் இத்தலத்தில் சிவபூசை செய்து நற்கதி அடைந்தான் அதன் விளைவாக, ஒவ்வொரு பங்குனி பவுர்ணமி நாளிலும் நிலவொளி இறைவன் திருமேனியில் பிரகாசிப்பதைக் காணலாம் என்பது ஆதாரமாக விளங்குகிறது.

    திருமணம் கூடிவர, குழந்தை உண்டாக பிரார்த்தனை சுலோகம்:

    தேவேந்திராணி நமஸ்துப்யம்

    தேவேந்திர பிரியபாமினி

    விவாக பாக்யம் ஆரோக்யம்

    புத்ரலாபம்ச தேஹிமே

    பதிம் தேஹி சுதம் தேஹி

    சௌபாக்யம் தேஹிமே சுபே

    சௌமாங்கல்யம் சுபம் ஞானம்

    தேஹிமே கர்ப்பரஷகே

    காத்யாயிணி மஹாமாயே

    மஹாயோகின்யதீஸ்வரி

    நந்த கோப சுதம் தேவி

    பதிம் மே குருதே நம

    இன்னொரு ஸ்லோகம்

    ஹே சங்கர ஸ்மரஹர பிரமதாதி நாதரி

    மன்னாத சாம்ப சசிசூட

    ஹரதிரிசூலின் சம்போஸ¨கபிரசவ க்ருத்பவமே

    தயாளோ ஹேமாதவி வனேச பாளையமாம் நமஸ்தே.

    ஓம் கருகாக்கும் நாயகியே போற்றி

    ஓம் கர்ப்ப ரக்-ஷாம்பிகையே போற்றி

    ஓம் கருகாவூர்தேவியே போற்றி

    ஓம் கஷ்டங்கள் தீர்ப்பாய் போற்றி

    கர்ப்பத்தில் உள்ள குழந்தையையும் தாயையும் காப்பவளான தேவியே, உன்னை துதிக்கும் எல்லா பக்தர்களையும் நீயே காக்கவேண்டும். உலகத்தை காப்பவளும், மங்களத்தை கொடுக்க கூடியவளும், அனைவருக்கும் தாயானவளுமான உன்னை பூஜிக்கிறேன்.

    ஆடி வெள்ளிக்கிழமையில் சந்தனகாப்பு அலங்காரத்துடன் அழகான பட்டாடையுடன் அலங்கரிக்கப்பட்ட தேவியே உன்னை வணங்குகிறேன். எங்களை காக்கவேண்டும்.

    வேதிகை என்ற பெண்ணின் கர்ப்பத்தை காத்தவளே, குழந்தைகளால் எப்போதும் நமஸ்கரிக்கப்பட்டவளே, எங்கள் கர்ப்பத்தைக் காக்கவேண்டுமென்று உன்னை நமஸ்கரிக்கிறேன்.

    உலகத்திற்கு தாயுமானவளும், தேவர்களால் போற்றப்படுபவளும், வாத்யகோஷத்தில் ஆனந்தமடைபவளை நான் பூஜிக்கிறேன்.

    • பால் குளத்தில் நீராடுவோர் மகப்பேறு எய்துவர்.
    • சிதறியிருந்த கருவை எடுத்து குடத்தினுள் இட்டு காத்து ரட்சித்தாள் கர்ப்பரட்சாம்பிகை.

    ஆதிகாலத்தில் திருக்கருகாவூர், முல்லைவனமாக இருந்த காலம். அமைதி தவழும் அந்த பிரதேசத்தில் கௌதமர் போன்ற முனிவர்கள் தவம் செய்து கொண்டிருந்தார்கள்.

    தவம் செய்யும் முனிவர் பெருமக்களுக்கு உதவியாக நித்ரூபர்- வேதிகை என்ற தம்பதியர் இருந்து வந்தனர். குழந்தை பாக்கியம் இல்லாத அந்த தம்பதிகளுக்கு இவ்வாறு தொண்டு செய்தாலாவது இறைவன் தங்களை கண்திறந்து பார்க்க மாட்டானா? என்ற ஆதங்கம் இருந்தது.சிவனடியார்களுக்கு தொண்டு மற்றும் சிவனையும், பார்வதியையும் வழிபடுவது என்றே அந்த தம்பதியினரின் நாட்கள் கழிந்தன.

    ஒருநாள், வேதிகை கர்ப்பவதியானாள். அவளுக்கும், நித்ருபருக்கும் சந்தோஷம் பிடிபடவில்லை, அகமகிழ்ந்தனர். கரு மெல்ல வளர்ந்து வந்தது. அன்றைய தினம் நித்ருபர், பணி காரணமாக வேறு ஊருக்கு சென்றிருந்தார்.

    அன்றைக்கு ஏனோ தெரியவில்லை, வேதிகை மிகவும் சோர்வாக இருந்தாள். பலவீனமாக உணர்ந்தாள். ஐந்து மாத கர்ப்பம் காரணமான அசதி. கிறுகிறுவென மயக்கம் வரும் போலிருந்தது.

    பேசாமல் ஒரு மூலையில் சுருண்டு படுத்துக்கொண்டாள். பிறக்கப் போகும் குழந்தையை நினைத்தபடி கண் அயர்ந்து கொண்டிருந்தாள்.

    அதேநேரம் வாசலில் வந்து நின்றார் ஊர்த்துவபாதர் என்ற கோபக்கார முனிவர். முனிவருக்கு நல்ல பசி, `அம்மா, பிச்சை போடுங்கள்' என்று குரலெழுப்பினார். வேதிகைதான் மயக்கத்தில் இருக்கிறாளே, முனிவரின் பசிக்குரல் அவள் காதுகளில் விழவில்லை.

    பசி மிகுதியில் கோபமும் மிகுந்தது முனிவருக்கு. ஏ பெண்ணே, நான் பிச்சைக்காக வந்திருப்பதை கூட கவனிக்காமல், உன் நினைவு வேறு எங்கே இருக்கிறது? நீ எதை நினைத்துக் கொண்டிருக்கிறாயோ அது அழிந்து போகட்டும்' என்று சாபமிட்டுவிட்டார்.

    வேதிகை துடித்தாள். காரணம், அவள் அப்போது நினைத்துக் கொண்டிருந்தது தன் வயிற்றில் உள்ள கருவைத்தான். அதை போய் அழியுமாறு சாபம் கொடுத்துவிட்டாரே?

    அடிவயிற்றிலே `சுருக்'கென்று ஓர் அபாய வலி வலித்தது. வேதிகை அழுதாள், புரண்டாள்... ஆம்... அவள் கர்ப்பம் கலைந்து போய் விட்டது. கரைந்து போய்விட்டது.

    வேதிகை நடுநடுங்கினாள். ``அன்னையே, தாயே, தேவியே, கர்ப்பரட்சாம்பிகையே, என் நிலை இப்படி ஆகிவிட்டதே. உன் அருளால் கிடைத்த கர்ப்பம் இப்போது இல்லை என்று ஆகிவிட்டதே. நீ தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்'' என்று முறையிட்டாள். கதறினாள்.

    உடனே கர்ப்பரட்சாம்பிகை அவள்முன் தோன்றினாள். கீழே சிதறியிருந்த கருவை எடுத்து ஒரு குடத்தினுள் இட்டாள். அது மட்டுமல்ல, அது குழந்தையாக உருவாகும் வரை காத்திருந்து, அதற்கு நைதுருவன் என்ற பெயரையும் சூட்டி வேதிகையிடம் தந்துவிட்டு மறைந்தாள். மெய்சிலிர்த்துப் போனாள் வேதிகை.

    குழந்தை மெல்ல வளர்ந்தது. தெய்வக் குழந்தையாயிற்றே. அதற்கு சாதாரணப் பால் பிடிக்கவில்லை, சம்பந்தர் போல் சுவையான பாலுக்காக கதறியது.

    பார்த்தார் சிவபெருமான். தேவலோகத்தில் இருந்து காம தேனுவை அழைத்து குழந்தையை பாலூட்டி வளர்க்குமாறு ஆணையிட்டார்.

    காமதேனு தன் சுவையான பாலை குழந்தைக்கு தந்தது. அதோடு விட்டதா? தன் கால் குளம்பால் ஒரு குளத்தையே தோண்டியது. அதனுள் தன் பாலை நிரப்பிற்று. குழந்தை பாலில் விளையாடிற்று. (அந்த பால்குளம் இப்போதும் உள்ளது. இதில் நீராடுவோர் மகப்பேறு எய்துவர் என்கிறது புராணம்).

    பணிக்காக வெளியூர் சென்றிருந்த நித்ருபர் ஊர் திரும்பினார். நடந்ததையெல்லாம் அறிந்து மெய்சிலிர்த்தார். கர்ப்பரட்சாம்பிகையைத் துதித்தார். அவருக்கும் காட்சி தந்தாள் அம்பிகை.

    ``நித்ருபனே, உனக்கு என்ன வேண்டும் கேள்...''

    நமஸ்கரித்தார் நைத்ருபர். ``தாயே எங்களுக்கு அருள் பாலித்தது போல் இந்தத் தலத்திற்கு வந்து யார் வேண்டினாலும் நீங்கள் அவர்களின் கருவை காத்து சுகப்பிரசவம் நடக்க அருள் தர வேண்டும். அதுவே எனக்குப் போதும்.'' என்றார்.

    அம்பிகை புன்னகைத்தாள், ``அப்படியே ஆகுக'' என்று ஆசி புரிந்தாள். அன்று முதல், அன்னையை வணங்கிய பெண்கள் எல்லாம் பலன் பெற்று வருகிறார்கள்.

    • திருக்கருகாவூர் பஞ்சாரண்ய தலங்களுள் ஒன்றாகும்.
    • முல்லைக்கொடி படர்ந்திருந்தமைக்கான வடுவை இன்றும் காணலாம்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் ரெயில் நிலையத்தில் இருந்து தெற்கே 6 கி.மீ. தொலைவிலும் அய்யம்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து தென்கிழக்கே 6 கி.மீ தொலைவிலும் திருக்கருனாவூர் தலம் உள்ளது.

    சுவாமி : கர்ப்பபுரீசுவரர், முல்லைவனநாதர், மாதவி வனேசுவரர்

    அம்பிகை : கருக்காத்த நாயகி, கர்ப்பரட்சாம்பிகை

    தலமரம் : முல்லை

    தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், க்ஷீரகுண்டம், சத்திய கூபம், விருத்த காவிரி, திருப்பாற்குளம்.

    பதிகம் : திருநாவுக்கரசர் - 1, திருஞானசம்பந்தர் -1

    பஞ்சாரண்ய தலங்களுள் ஒன்றாகும். பஞ்ச ஆரண்யதல வழிபாட்டை செய்பவர்கள் முதன் முதலில் இத்தலத்தில் இருந்து தான் வழிபாட்டை தொடங்கவேண்டும்.

    இத்தலம் நன்மகப்பேறு வாய்த்தற்குரிய பிரார்த்தனைத் தலமாக சிறப்பிக்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள சிவலிங்கத் திருமேனியில் முல்லைக்கொடி படர்ந்திருந்தமைக்கான வடுவை இன்றும் காணலாம்.

    திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் பாடல் பெற்ற காவிரி தென்கரை தலம். இத்தலத்திற்கு முல்லைவனம், மாதவி வனம், கர்ப்பபுரி என்பன போன்ற பெயர்களும் உண்டு.

    சிவபெருமான் உமாதேவியுடனும், முருகனுடனும் இருக்கும் திருக்கோலத்தை சோமஸ்கந்தர் அருட்கோலம் என்பவர்கள். அவ்வாறு சோமஸ்கந்த வடிவில் அமைந்துள்ள கோவில்களில் திருக்கருகாவூர் முல்லைவன நாதர் கோவிலும் ஒன்றாகும்.

    இத்தலத்தில் இறைவனுக்கும், இறைவிக்கும் இடையில் வள்ளி, தெய்வானையுடன் உள்ள முருகன் சந்நிதி உள்ளது. இக்கோவிலுக்கு கிழக்காக ஒரு கோபுரமும், தெற்காக மற்றொரு நுழைவு வாயிலும் இருக்கிறது.

    கிழக்கு நோக்கி காட்சி தரும் இத்தலத்து இறைவன் முல்லைவனநாதர் சுயம்புவாக தோன்றியவர். முல்லைவனத்தில் முல்லைக் கொடிகளால் சூழப்பட்டு இருந்ததால் இன்றும் சிவலிங்கத் திருமேனியில் முல்லைக்கொடியின் வடு இருப்பதை காணலாம். புற்று ரூபத்தில் லிங்கம் இருப்பதால் இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. புனுகு மட்டுமே சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது.

    இங்கு கௌதமேசர் என்னும் தனிக் கோயில் உள்ளது. இங்குள்ள நந்தி விடங்க மூர்த்தமாக உள்ளது. பிரகாரத்தில் விநாயகர், இரட்டை நந்தி, இரண்டு பலி பீடங்கள், அறுபத்து மூவர், சந்தானாசாரியார்கள், முருகர், கஜலட்சுமி, நிருத்துவ முனிவர் பூசித்த லிங்கம், நவக்கிரகம், நடராஜர் சபை முதலிய சந்நிதிகள் உள்ளன.

    திருக்கருகாவூர் கர்ப்பத்தை ரட்சிக்கும் அம்பிகை கருத்தரிக்கும் பெண்களுக்கு தங்களுக்குப் பிரசவம் நல்லபடியாக ஆகவேண்டும், இடையில் எந்த பிரச்னையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற கவலை எப்போதும் இருக்கும்.

    அந்த பயத்தைப் போக்கி, கர்ப்பத்தை ரட்சித்து, சுகப்பிரசவம் ஆக்கிக் கருணைமழை பொழிகிறாள் கர்ப்பரட்சாம்பிகை.

    ஆலயம் அமைந்திருக்கும் இந்தப் பகுதி ஒரு காலத்தில் முல்லைக்கொடிகள் நிரம்பிய வனப்பகுதியாக இருந்தது. இங்கே சுயம்புவாகத் தோன்றிய ஈசன், முல்லைவனநாதர் என்று அழைக்கப்படுகிறார். வடமொழியில் `மாதவி' என்றால் முல்லை என்று அர்த்தம். எனவே, மாதவிவனேஸ்வரர் என்ற பெயரும் இவருக்கு உண்டு.

    முல்லைக் கொடிகளுக்கு மத்தியில் புற்று மண்ணில் தானாகத் தோன்றியவர் என்பதால் முல்லைவனநாதருக்கு அபிஷேகம் கிடையாது. புனுகு மட்டுமே சாத்துவார்கள்.

    இவருக்குப் புனுகு சாத்தினால் தீராத தோல் நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

    அவருக்கு எதிரே கர்ப்பக விநாயகர் (கற்பக?) சுயம்பு நந்தி, சோமாஸ்கந்தர் ஆகியோர் காட்சி தருகிறார்கள்.

    தட்சணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், மகாலட்சுமி, முருகன், பிரம்மன், மகிஷாசுரமர்த்தினி, சண்டீசர் ஆகியோரும் இந்த சிவாலயத்தில் தரிசனம் தருகிறார்கள்.

    சுவாமி கோயிலுக்கு வடக்குப் பக்கத்தில் நந்தவனம் இருக்கிறது. அதற்கு அடுத்ததாக அன்னை கர்ப்பரட்சாம்பிகையின் இக்கோயில் அமைந்திருக்கிறது.

    பத்மபீடத்தில், அமைதியே உருவாக அன்னை எழுந் தருளி இருக்கிறாள். லேசான புன்னகை வேறு. அன்னையின் நான்கு கரங்களுள் ஒன்று அவளது வயிற்றின் கீழே தொடுவது போல் உள்ளது. கர்ப்பத்தை ரட்சிக்கும் கோலம் போலும்! பார்த்தாலே பரவசம் ஏற்படுகிறது.

    மறு கரம், அபயம் அளிக்கிறது. மேல் நோக்கி உயர்த்திய மூன்றாவது கரம் அக்கமாலையையும், அடுத்த கரம் தாமரையையும் தரித்துள்ளன.

    கர்ப்பரட்சாம்பிகையை ஒரு தடவை பார்த்தாலே குழந்தை பாக்கியம் ஏற்படும் என்ற உணர்வு, நம்பிக்கை, பார்க்கும் பக்தர்களுக்கெல்லாம் ஏற்படுகிறது.

    இவள் கர்ப்பத்தை ரட்சிப்பவள் சரி, திருமணமே ஆகாதவர்களுக்கு? அதற்கும் இவளிடம் மருந்து இருக்கிறது. திருமணம் கூடிவராத பெண்கள், அன்னையின் சன்னதியில் நெய்யினால் படி மெழுகிக் கோலமிட்டால், திருமணம் கூடிவருவதாகச் சொல்கிறார்கள்.

    மகப்பேறு இல்லாதவர்கள், 48 நாட்கள் பிரசாத நெய்யை உண்டால் மகப்பேறு உண்டாகும் என்றும் சுகப்பிரசவம் ஆக அம்பாள் பிரசாதமான விளக்கெண்ணெயை நம்பிக்கையுடன் தடவி வந்தாலே போதும் என்று பலன் அடைந்தவர்கள் சொல்கிறார்கள்.

    திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப் பெற்ற புண்ணியத்தலம் இது. பிரம்மன், கவுதமர் ஆகியோர் இங்கே தங்கி இறைவனை பூஜித்திருக்கிறார்கள். அம்மன் கோயில் அருகில் இருக்கும் கவுதம லிங்கத்தை நிறுவியவர் கவுதம முனிவரே என்கிறது புராணம்.

    இந்தத் திருக்கருகாவூர் ஆலயத்தில் நவகிரகங்கள் எல்லாம் வித்தியாசமாக அமைந்திருக்கின்றன. சூரியனைச் சுற்றி மற்ற எல்லா கிரகங்களும் சூரியனையே பார்த்தவாறு அமைந்திருக்கின்றன. நவகிரகங்கள் அபய வரத முத்திரையுடன் காட்சி தருவதும் சிறப்பானது.

    பிரதோஷம், வைகாசி விசாகம், ஆடிப்பூரம், நவராத்திரி போன்ற தினங்களில் இங்கே சிறப்பு வழிபாடு உண்டு. ராஜகோபுரத்தின் எதிரில் உள்ள ஷீரகுண்டம் என்னும் பால் குளத்தில் சிவராத்திரி அன்று ஈசன், தீர்த்தமாடுகிறார். இந்தக் குளம், காமதேனுவின் கால் குளம்பால் ஏற்படுத்தப்பட்டதாகும்.

    ×