search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirukkamboothur"

    • தமிழர்கள் தல விருட்ச வழிபாடு முறையை ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது.
    • மாரியம்மனுக்கு `வேப்பிலைக்காரி' என்ற பெயர் உண்டு.

    ஆலயம் தோறும் ஒரு மரத்தை தல விருட்சமாக வைத்து வணங்கி, அதை புனிதமாக கொண்டாடுவது இந்துக்கள் மட்டுமே.

    உலகிலேயே வேறு எந்த மதத்தினரிடமும் இத்தகைய வழிபாடு இல்லை.

    சங்க காலத்துக்கும் முந்தைய தமிழர்கள் தல விருட்ச வழிபாடு முறையை ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது. இதற்கு அடிப்படை காரணம் மரங்கள், மனிதர்களின் வாழ்வில் அன்று முதல் இன்று வரை பின்னி பிணைந்து இருப்பதுதான்.

    மரங்கள் இல்லாவிட்டால் நாம் இல்லை. மனிதன் உயிர் வாழ பிராண வாயு தேவை. மரங்கள் காற்றில் உள்ள கரியமல வாயுவை (கார்பன் - டை - ஆக்சைடு) எடுத்துக் கொண்டு பிராண வாயுவை (ஆக்ஜிசன்) வெளியிடுகின்றன.

    இந்த ஆக்ஜிசன் தான் மனிதர் உள்ளிட்ட உயிரினங்களை தொடர்ந்து உயிர்த்துடிப்புடன் வாழச் செய்கின்றன. இதை உணர்ந்தே நம் முன்னோர்கள் தலங்கள் தோறும் மரத்தை வைத்து போற்றினார்கள்.

    ஒவ்வொரு தல விருட்சத்துக்கும் பின்னணியில் நிச்சயம் ஏதாவது ஒரு கதை இருக்கும். இதன் மூலம் மரங்களை சிவரூபமாகவும், விஷ்ணு ரூபமாகவும், சக்தி ரூபமாகவும் வழிபடும் வழக்கம் தோன்றியது.

    அரச மரம் சிவ ரூபம் வேப்ப மரத்தை சக்தி வடிவம் என்பார்கள். அதனால் தான் அரசும், வேம்பும் ஒரே இடத்தில் ஒன்றொடொன்று இணைந்து வளர்ந்திருக்கும் இடத்தை சிவசக்தி உறையும் இடமாக கருதி வணங்கி வழிபாடு செய்கிறோம்.

    தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வேப்ப மரத்தை மாரியம்மனாகவே கருதி வழிபடும் வழக்கம் உள்ளது. மாரியம்மனுக்கு `வேப்பிலைக்காரி' என்ற பெயர் ஏற்பட்டதே இதனால் தான்.

    இதே போல ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு ஆற்றல் உண்டு.

    குறிப்பாக மருத்துவ குணங்கள் நிறைந்த வில்வம், வன்னி, மகிழ் - போன்ற மரங்களை - தற்காலத்தில் கோவிலைத் தவிர வேறு இடங்களில் பார்ப்பதே அரிதாக இருக்கின்றது. தமிழிலக்கியங்கள் போற்றும் கொன்றையும், மருதமும் எத்தனை மகத்துவம் நிறைந்தவை!..

    தெய்வாம்சமும் பேரருளும் பெற்ற கொன்றை மரங்களும், மருத மரங்களும் நம் தமிழகத்திற்கே உரித்தான மரங்கள். கோவில்களில் தல விருட்சங்களாக விளங்கி சகல துன்பங்களையும் நீக்கி, எந்த நோயும் வராமல் காப்பவை. பிள்ளையார் பட்டியிலும் திருஇடைமருதூரிலும் தலமரமாக விளங்குவது மருத மரம்.

    கொன்றை, வில்வம், ஆல், வன்னி, மகிழ் - ஆகியன சிவபெருமானின் அம்சங்கள். இம்மரங்களின் கீழிருந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைகூடும். வில்வ இலைகளால் சிவபெருமானைப் பூஜிக்க சகல பாவங்களும் நீங்கும்.

    பந்தநல்லூர், அச்சிறுபாக்கம் முதலிய தலங்களின் தலமரம் - கொன்றை. ஸ்ரீரங்கத்தில் மஹாலட்சுமியின் சந்நிதிக்கு அருகில் வில்வம் உள்ளது.

    திருவையாறு, தஞ்சை ராமேஸ்வரம், திருவெண்காடு, திருவைகாவூர் - இன்னும் பல சிவ தலங்களின் தலமரம் - வில்வம். பெரும்பான்மையான கோவில்களில் வில்வம் முதலிடம் பெற்று விளங்குகிறது.

    திருஆலங்காடு, திருஆலம்பொழில், திருப்பழுவூர் - முதலிய திருத்தலங்களின் தலமரமாக ஆல மரம் உள்ளது. திருப்பூந்துருத்தி, திருவான்மியூர், தஞ்சை ஆகிய தலங்களின் தலமரம் - வன்னி.

    வில்வத்திற்கு அடுத்து அதிக தலங்களில் விளங்கும் பெருமையை உடையது - வன்னியே. குளிர்ந்த நிழலையும் மணம் கமழும் மலர்களையும் உடையது மகிழ் மரம். இது வகுளம் எனவும் புகழப்படுகிறது.

    திருவண்ணாமலை, திருவொற்றியூர், தஞ்சை ஆகிய தலங்களில் மகிழ மரம் தல விருட்சமாக விளங்குகின்றது. சந்தன மரம், அத்தி மரம் - விஷ்ணுவின் அம்சமாகும். சந்தனம் இன்றி சுபகாரியங்களும், பூஜைகளும் ஏது!.. சந்தன மரத்திலிருந்து தெய்வீக அதிர்வுகள் வெளிப்படுகின்றன என்கின்றனர்.

    ஸ்ரீ வாஞ்சியத்தில் தலமரமாக - சந்தனமரம் உள்ளது. காஞ்சி வரதர் அத்தி மரத்தினால் ஆனவர். மயிலாடுதுறையை அடுத்த கோழி குத்தி வானமுட்டிப் பெருமாளும் அத்தி மரத்தில் விளங்குபவரே!.. வீடுகளில் சுபகாரியங்கள் நிகழும் போது - கட்டப்படும் மாவிலைத் தோரணங்களின் அழகே அழகு! மா மரம் - காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் - திருத்தலங்களின் தலமரமாக திகழ்கிறது.

    நெல்லி மரத்தின் கீழிருந்து தானம் செய்தால், தானம் செய்பவருடைய சகல பாவங்களும் நீங்கும் என்பார்கள். நெல்லி - திருநெல்லிகா, திருநெல்வாயில், பழையாறை முதலிய திருத்தலங்களின் தலமரமாகும். மாதுளை மரத்தின் கீழ் விளக்கேற்றி வைத்து - இளந்தம்பதியர் வலம் வந்து வணங்க தம்பதியர் ஒருவருக்கொருவர் அன்பு அகலாது இருப்பர். திருவாவடுதுறை, திருப்பரிதிநியமம் முதலிய சிவத்தலங்களின் தலமரம் -அரசு. அரச மரத்தின் வேர்களில் மஞ்சள் நீர் ஊற்றி நெய்தீபம் ஏற்றி வர புத்ர தோஷம் நீங்கும்.

    இலுப்பை எண்ணெய் கொண்டு ஆலயத்தில் தீபம் ஏற்றுவதன் மூலம் காரிய சித்திகள் பல கைவரப் பெறும் என்பது அசைக்க முடியாத உண்மை. இலுப்பை மரம், தலமரமாக விளங்கும் திருத்தலம் - திருச்செங்கோடு ஆகும்.

    புளிய மரம், கருவேல மரம், எட்டி மரம் - ஆகியன தீய அதிர்வுகளை வெளிபடுத்தக்கூடியன. இவற்றின் நிழல் - உடலில் உஷ்ணத்தை அதிகரிக்கச் செய்யும். இதனாலேயே - இந்த மரங்களை வீட்டுக்கு எதிரில் வளர்ப்பதில்லை. இந்த மரங்களுக்கு மருத்துவ குணங்கள் இருப்பினும் - காய் மற்றும் வேர்களை தவறான காரியங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். பொதுவாக பேய், பிசாசுகளுக்கு இம்மரங்களே அடைக்கலம் கொடுக்கும் என்பார்கள்.

    லிங்கத்தின் மீது நாகம் குடை பிடித்தாற்போல அற்புத வடிவம் கொண்டு திகழ்வது நாகலிங்கப் பூவாகும். இந்த நாகலிங்க மரம் சுற்றுப்புற காற்றில் உள்ள தூசியை வடிகட்டி தூய்மையாக்கும் தன்மை உடையது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை - புலியூர் பரத்வாஜேஸ்வரர் ஆலய தல விருட்சமாக நாகலிங்க மரம் உள்ளது.

    சனகர், சனந்தனர், சனாதனர், சனத் குமாரர் எனும் நால்வருக்கும் சிவபெருமான் யோக நிலையில் குருமூர்த்தியாக வீற்றிருந்து ஞானோபதேசம் செய்வித்தது ஆலமர நிழலில்! அந்த எம்பெருமான் அளந்த ஒரு நாழி நெல்லினைக் கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் வழுவாது இயற்றியவளாய் அம்பிகை தவமிருந்தது - மாமர நிழலில்! திருத்தலம் - மாங்காடு! அம்பிகை கம்பை ஆற்றின் கரையில் மாமர நிழலில் - மணலில் சிவலிங்க ஸ்தாபனம் செய்து வழிபட்ட திருத்தலம் - காஞ்சி!

    அம்பிகை மயில் வடிவாக எம்பெருமானைப் பூஜித்தது புன்னை வனத்தில்!.. அந்த புன்னை வனமே திருமயிலை!.. அம்பிகை - ஐயனை வழிபட்ட தலங்களுள் சிறப்பானது திருவானைக்காவல் ஆகும். இங்கே - தல விருட்சமாக - நாவல் மரம் உள்ளது. விக்னங்களைத் தீர்த்தருளும் விநாயகப்பெருமானுக்கு உகந்தவை அருகம் புல்லும் எருக்கம்பூவும்!.. சுந்தரர் - சங்கிலியாரை திருமணம் செய்து கொண்டு, நான் உன்னைப் பிரியேன் என்று சங்கிலியாரிடம் வாக்களித்தது திருவொற்றியூர் மகிழ மரத்தின் கீழாகும்.

    சீர்காழியில் - பாரிஜாதம், திருநெல்வேலியில் - மூங்கில் தலமரங்களாக உள்ளன. பஞ்ச பாண்டவர்கள் - தமது அஞ்ஞாத வாசத்தின் போது ஆயுதங்களையும் மந்த்ராஸ்திரங்களையும் பொதிந்து வைத்த மரம் -வன்னி மரமாகும். எமதர்மன் பணி செய்து வணங்கும் திருப்பைஞ்ஞீலியில் தலமரமாக -வாழை உள்ளது. இந்த வாழை மரம் திருமண தோஷத்தை விரட்டக் கூடியது.

    பட்டுக்கோட்டையில் இருந்து கிழக்கே முத்துப்பேட்டை சாலையில் தாமரங்கோட்டை கிராமத்திற்கு அடுத்ததாக இருக்கும் பரக்கலக்கோட்டை கிராமத்தில் ஆல மரமே கடவுளாக வழிபடப்படுகிறது. தாமரங்கோட்டையிலிருந்து வடக்கே - இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் அத்திவெட்டி பிச்சினிக்காடு.

    இந்த கிராமத்தில்- ஆவாரங்காட்டுக்குள் ஒற்றைப் பனைமரம் உள்ளது. பனையின் கீழ் சிறு கொட்டகை மட்டுமே.. மற்றபடி மாலை சந்தனம் குங்குமம் எல்லாம் -ஒற்றைப் பனைக்கே!..

    இந்த ஒற்றைப் பனையில் - சத்தியத்தின் வடிவாக - குடிகொண்டு அருள்பவர் - ஸ்ரீவைரவர். நம் பக்கம் நியாயம் இருந்து, வைரவா!.. நீ கேள்!.. என்று முறையிட்டால் போதும் தலவிருட்சம் உதவும் என்கிறார்கள்.

    மதுக்கூரில் புகழ் பெற்ற பெரமையா சுவாமி கொலு இருப்பது மரக் கூட்டங்களில் தான்!. அருகில் உள்ள ஒரு கிராமத்தில் ஸ்ரீ காளி குடி கொண்டிருப்பது - உடை மரம் எனும் ஒருவகை அபூர்வ மரத்திலாகும்.

    திருமழபாடியில் - பனை ஆடுதுறையில் - தென்னை மரங்கள் தல விருட்சகமாக உள்ளன. அபிராம வல்லியும் அமிர்தகடேஸ்வ உறையும் திருக்கடவூரில் தலவிருட்சம் - முல்லைக் கொடியாகும்.

    முருகன் பாதங்கள் பதிய நடந்தருளிய திருத்தலம் திருவிடைக் கழி. இங்கே, தல விருட்சம் - குரா மரம்.

    தல விருட்சம் இருந்த இடங்கள் ஒரு காலத்தில் அந்தந்த மரங்களுக்குரிய வனமாக இருந்ததாக சொல்வார்கள். அந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் பஞ்ச வனதலங்கள் உள்ளன. அவை வருமாறு:-

    திருக்கருகாவூர் - முல்லை வனம்

    திருஅவளிவ நல்லூர் - பாதிரி வனம்

    திருஅரதைப் பெரும்பாழி (ஹரித்வார மங்கலம்) - வன்னி வனம்

    திருஇரும்பூளை (ஆலங்குடி) - பூளை வனம்

    திருக்கொள்ளம்பூதூர் - வில்வ வனம்..

    சைவ வைணவ சமயங்களும், புத்த சமயமும் அரச மரத்தைப் புனிதமாகக் கருதுகின்றன. இது பிப்பலாச விருட்சம், அரணி, அஷ்வதா - என்று பலவாறு அழைக்கப்படுகின்றது. இது ஆலமரம், அத்திமரம் போன்று புனிதத் தன்மை கொண்டது.

    சரஸ்வதி நதியானது நான்முகனின் கமண்டலத்தில் இருந்து தோன்றி பலாசம் எனும் அரச மரத்தினுள் ஊடுருவி வெளிப்பட்டு இமாசல மலையில் வழிந்து ஓடிவருகின்றது - என கந்த புராணம் குறிப்பதாக சான்றோர்கள் கூறுகின்றனர்.

    வாழ்வின் அர்த்தம் தேடி - அரண்மனையின் சுக போகங்களைத் துறந்து ஞானம் தேடிப் புறப்பட்ட சித்தார்த்தர் - ஒருநிலையில் ஞானம் எய்தி, கவுதம புத்தர் ஆனார் என்பது வரலாறு.

    சித்தார்த்தர் அமர்ந்து தியானம் செய்தது - அரச மரத்தின் நிழலில் தான். சைவத்தில் - அரச மரம், ஞான விருட்சம் எனக் குறிக்கப்படுகின்றது.

    நாயன்மார்களுள் ஒருவராகத் திகழும் திருமூலர்- மூலன் எனும் இடையனின் உடம்பிற் புகுந்த சிவயோகியார். இவர் கயிலை மாமலையில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர். இவரே மகத்தான திருமந்திரம் அருளியவர்.

    திருவாவடுதுறைத் திருக்கோயிலை வழிபட்டு அங்குள்ள அரசமரத்தின் நீழலில் பல்லாண்டுகள் இவர் சிவயோகத்தில் அமர்ந்திருந்தவராவார்.

    புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இந்த அரசின் அடியில் அமர்ந்து தியானம் செய்ய முடியும் என்பர். அரச மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் மனம் தெய்வ சிந்தனை ஊற்றெடுக்கும். ஞானம் கிட்டும்.

    ஆழ்வார் திருநகரி எனப்படும் திருக்குருகூரில் அவதரித்து - பதினாறு ஆண்டு காலம் - சடகோபன் என தவமிருந்து - நம்மாழ்வார் என ஞான பேரொளியாக வெளிப்பட்டது புளியமரத்தின் அடியிலாகும்.

    இப்படி தல விருட்சத்தின் மகிமைகளை சொல்லிக்கொண்டே போகலாம். அடுத்த வாரம் ஆலயத்தின் முக்கிய பகுதியான தீர்த்தம் பற்றி பார்க்கலாம்.

    ×