search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mullaivanathar"

    • பால் குளத்தில் நீராடுவோர் மகப்பேறு எய்துவர்.
    • சிதறியிருந்த கருவை எடுத்து குடத்தினுள் இட்டு காத்து ரட்சித்தாள் கர்ப்பரட்சாம்பிகை.

    ஆதிகாலத்தில் திருக்கருகாவூர், முல்லைவனமாக இருந்த காலம். அமைதி தவழும் அந்த பிரதேசத்தில் கௌதமர் போன்ற முனிவர்கள் தவம் செய்து கொண்டிருந்தார்கள்.

    தவம் செய்யும் முனிவர் பெருமக்களுக்கு உதவியாக நித்ரூபர்- வேதிகை என்ற தம்பதியர் இருந்து வந்தனர். குழந்தை பாக்கியம் இல்லாத அந்த தம்பதிகளுக்கு இவ்வாறு தொண்டு செய்தாலாவது இறைவன் தங்களை கண்திறந்து பார்க்க மாட்டானா? என்ற ஆதங்கம் இருந்தது.சிவனடியார்களுக்கு தொண்டு மற்றும் சிவனையும், பார்வதியையும் வழிபடுவது என்றே அந்த தம்பதியினரின் நாட்கள் கழிந்தன.

    ஒருநாள், வேதிகை கர்ப்பவதியானாள். அவளுக்கும், நித்ருபருக்கும் சந்தோஷம் பிடிபடவில்லை, அகமகிழ்ந்தனர். கரு மெல்ல வளர்ந்து வந்தது. அன்றைய தினம் நித்ருபர், பணி காரணமாக வேறு ஊருக்கு சென்றிருந்தார்.

    அன்றைக்கு ஏனோ தெரியவில்லை, வேதிகை மிகவும் சோர்வாக இருந்தாள். பலவீனமாக உணர்ந்தாள். ஐந்து மாத கர்ப்பம் காரணமான அசதி. கிறுகிறுவென மயக்கம் வரும் போலிருந்தது.

    பேசாமல் ஒரு மூலையில் சுருண்டு படுத்துக்கொண்டாள். பிறக்கப் போகும் குழந்தையை நினைத்தபடி கண் அயர்ந்து கொண்டிருந்தாள்.

    அதேநேரம் வாசலில் வந்து நின்றார் ஊர்த்துவபாதர் என்ற கோபக்கார முனிவர். முனிவருக்கு நல்ல பசி, `அம்மா, பிச்சை போடுங்கள்' என்று குரலெழுப்பினார். வேதிகைதான் மயக்கத்தில் இருக்கிறாளே, முனிவரின் பசிக்குரல் அவள் காதுகளில் விழவில்லை.

    பசி மிகுதியில் கோபமும் மிகுந்தது முனிவருக்கு. ஏ பெண்ணே, நான் பிச்சைக்காக வந்திருப்பதை கூட கவனிக்காமல், உன் நினைவு வேறு எங்கே இருக்கிறது? நீ எதை நினைத்துக் கொண்டிருக்கிறாயோ அது அழிந்து போகட்டும்' என்று சாபமிட்டுவிட்டார்.

    வேதிகை துடித்தாள். காரணம், அவள் அப்போது நினைத்துக் கொண்டிருந்தது தன் வயிற்றில் உள்ள கருவைத்தான். அதை போய் அழியுமாறு சாபம் கொடுத்துவிட்டாரே?

    அடிவயிற்றிலே `சுருக்'கென்று ஓர் அபாய வலி வலித்தது. வேதிகை அழுதாள், புரண்டாள்... ஆம்... அவள் கர்ப்பம் கலைந்து போய் விட்டது. கரைந்து போய்விட்டது.

    வேதிகை நடுநடுங்கினாள். ``அன்னையே, தாயே, தேவியே, கர்ப்பரட்சாம்பிகையே, என் நிலை இப்படி ஆகிவிட்டதே. உன் அருளால் கிடைத்த கர்ப்பம் இப்போது இல்லை என்று ஆகிவிட்டதே. நீ தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்'' என்று முறையிட்டாள். கதறினாள்.

    உடனே கர்ப்பரட்சாம்பிகை அவள்முன் தோன்றினாள். கீழே சிதறியிருந்த கருவை எடுத்து ஒரு குடத்தினுள் இட்டாள். அது மட்டுமல்ல, அது குழந்தையாக உருவாகும் வரை காத்திருந்து, அதற்கு நைதுருவன் என்ற பெயரையும் சூட்டி வேதிகையிடம் தந்துவிட்டு மறைந்தாள். மெய்சிலிர்த்துப் போனாள் வேதிகை.

    குழந்தை மெல்ல வளர்ந்தது. தெய்வக் குழந்தையாயிற்றே. அதற்கு சாதாரணப் பால் பிடிக்கவில்லை, சம்பந்தர் போல் சுவையான பாலுக்காக கதறியது.

    பார்த்தார் சிவபெருமான். தேவலோகத்தில் இருந்து காம தேனுவை அழைத்து குழந்தையை பாலூட்டி வளர்க்குமாறு ஆணையிட்டார்.

    காமதேனு தன் சுவையான பாலை குழந்தைக்கு தந்தது. அதோடு விட்டதா? தன் கால் குளம்பால் ஒரு குளத்தையே தோண்டியது. அதனுள் தன் பாலை நிரப்பிற்று. குழந்தை பாலில் விளையாடிற்று. (அந்த பால்குளம் இப்போதும் உள்ளது. இதில் நீராடுவோர் மகப்பேறு எய்துவர் என்கிறது புராணம்).

    பணிக்காக வெளியூர் சென்றிருந்த நித்ருபர் ஊர் திரும்பினார். நடந்ததையெல்லாம் அறிந்து மெய்சிலிர்த்தார். கர்ப்பரட்சாம்பிகையைத் துதித்தார். அவருக்கும் காட்சி தந்தாள் அம்பிகை.

    ``நித்ருபனே, உனக்கு என்ன வேண்டும் கேள்...''

    நமஸ்கரித்தார் நைத்ருபர். ``தாயே எங்களுக்கு அருள் பாலித்தது போல் இந்தத் தலத்திற்கு வந்து யார் வேண்டினாலும் நீங்கள் அவர்களின் கருவை காத்து சுகப்பிரசவம் நடக்க அருள் தர வேண்டும். அதுவே எனக்குப் போதும்.'' என்றார்.

    அம்பிகை புன்னகைத்தாள், ``அப்படியே ஆகுக'' என்று ஆசி புரிந்தாள். அன்று முதல், அன்னையை வணங்கிய பெண்கள் எல்லாம் பலன் பெற்று வருகிறார்கள்.

    • திருக்கருகாவூர் பஞ்சாரண்ய தலங்களுள் ஒன்றாகும்.
    • முல்லைக்கொடி படர்ந்திருந்தமைக்கான வடுவை இன்றும் காணலாம்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் ரெயில் நிலையத்தில் இருந்து தெற்கே 6 கி.மீ. தொலைவிலும் அய்யம்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து தென்கிழக்கே 6 கி.மீ தொலைவிலும் திருக்கருனாவூர் தலம் உள்ளது.

    சுவாமி : கர்ப்பபுரீசுவரர், முல்லைவனநாதர், மாதவி வனேசுவரர்

    அம்பிகை : கருக்காத்த நாயகி, கர்ப்பரட்சாம்பிகை

    தலமரம் : முல்லை

    தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், க்ஷீரகுண்டம், சத்திய கூபம், விருத்த காவிரி, திருப்பாற்குளம்.

    பதிகம் : திருநாவுக்கரசர் - 1, திருஞானசம்பந்தர் -1

    பஞ்சாரண்ய தலங்களுள் ஒன்றாகும். பஞ்ச ஆரண்யதல வழிபாட்டை செய்பவர்கள் முதன் முதலில் இத்தலத்தில் இருந்து தான் வழிபாட்டை தொடங்கவேண்டும்.

    இத்தலம் நன்மகப்பேறு வாய்த்தற்குரிய பிரார்த்தனைத் தலமாக சிறப்பிக்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள சிவலிங்கத் திருமேனியில் முல்லைக்கொடி படர்ந்திருந்தமைக்கான வடுவை இன்றும் காணலாம்.

    திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் பாடல் பெற்ற காவிரி தென்கரை தலம். இத்தலத்திற்கு முல்லைவனம், மாதவி வனம், கர்ப்பபுரி என்பன போன்ற பெயர்களும் உண்டு.

    சிவபெருமான் உமாதேவியுடனும், முருகனுடனும் இருக்கும் திருக்கோலத்தை சோமஸ்கந்தர் அருட்கோலம் என்பவர்கள். அவ்வாறு சோமஸ்கந்த வடிவில் அமைந்துள்ள கோவில்களில் திருக்கருகாவூர் முல்லைவன நாதர் கோவிலும் ஒன்றாகும்.

    இத்தலத்தில் இறைவனுக்கும், இறைவிக்கும் இடையில் வள்ளி, தெய்வானையுடன் உள்ள முருகன் சந்நிதி உள்ளது. இக்கோவிலுக்கு கிழக்காக ஒரு கோபுரமும், தெற்காக மற்றொரு நுழைவு வாயிலும் இருக்கிறது.

    கிழக்கு நோக்கி காட்சி தரும் இத்தலத்து இறைவன் முல்லைவனநாதர் சுயம்புவாக தோன்றியவர். முல்லைவனத்தில் முல்லைக் கொடிகளால் சூழப்பட்டு இருந்ததால் இன்றும் சிவலிங்கத் திருமேனியில் முல்லைக்கொடியின் வடு இருப்பதை காணலாம். புற்று ரூபத்தில் லிங்கம் இருப்பதால் இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. புனுகு மட்டுமே சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது.

    இங்கு கௌதமேசர் என்னும் தனிக் கோயில் உள்ளது. இங்குள்ள நந்தி விடங்க மூர்த்தமாக உள்ளது. பிரகாரத்தில் விநாயகர், இரட்டை நந்தி, இரண்டு பலி பீடங்கள், அறுபத்து மூவர், சந்தானாசாரியார்கள், முருகர், கஜலட்சுமி, நிருத்துவ முனிவர் பூசித்த லிங்கம், நவக்கிரகம், நடராஜர் சபை முதலிய சந்நிதிகள் உள்ளன.

    திருக்கருகாவூர் கர்ப்பத்தை ரட்சிக்கும் அம்பிகை கருத்தரிக்கும் பெண்களுக்கு தங்களுக்குப் பிரசவம் நல்லபடியாக ஆகவேண்டும், இடையில் எந்த பிரச்னையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற கவலை எப்போதும் இருக்கும்.

    அந்த பயத்தைப் போக்கி, கர்ப்பத்தை ரட்சித்து, சுகப்பிரசவம் ஆக்கிக் கருணைமழை பொழிகிறாள் கர்ப்பரட்சாம்பிகை.

    ஆலயம் அமைந்திருக்கும் இந்தப் பகுதி ஒரு காலத்தில் முல்லைக்கொடிகள் நிரம்பிய வனப்பகுதியாக இருந்தது. இங்கே சுயம்புவாகத் தோன்றிய ஈசன், முல்லைவனநாதர் என்று அழைக்கப்படுகிறார். வடமொழியில் `மாதவி' என்றால் முல்லை என்று அர்த்தம். எனவே, மாதவிவனேஸ்வரர் என்ற பெயரும் இவருக்கு உண்டு.

    முல்லைக் கொடிகளுக்கு மத்தியில் புற்று மண்ணில் தானாகத் தோன்றியவர் என்பதால் முல்லைவனநாதருக்கு அபிஷேகம் கிடையாது. புனுகு மட்டுமே சாத்துவார்கள்.

    இவருக்குப் புனுகு சாத்தினால் தீராத தோல் நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

    அவருக்கு எதிரே கர்ப்பக விநாயகர் (கற்பக?) சுயம்பு நந்தி, சோமாஸ்கந்தர் ஆகியோர் காட்சி தருகிறார்கள்.

    தட்சணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், மகாலட்சுமி, முருகன், பிரம்மன், மகிஷாசுரமர்த்தினி, சண்டீசர் ஆகியோரும் இந்த சிவாலயத்தில் தரிசனம் தருகிறார்கள்.

    சுவாமி கோயிலுக்கு வடக்குப் பக்கத்தில் நந்தவனம் இருக்கிறது. அதற்கு அடுத்ததாக அன்னை கர்ப்பரட்சாம்பிகையின் இக்கோயில் அமைந்திருக்கிறது.

    பத்மபீடத்தில், அமைதியே உருவாக அன்னை எழுந் தருளி இருக்கிறாள். லேசான புன்னகை வேறு. அன்னையின் நான்கு கரங்களுள் ஒன்று அவளது வயிற்றின் கீழே தொடுவது போல் உள்ளது. கர்ப்பத்தை ரட்சிக்கும் கோலம் போலும்! பார்த்தாலே பரவசம் ஏற்படுகிறது.

    மறு கரம், அபயம் அளிக்கிறது. மேல் நோக்கி உயர்த்திய மூன்றாவது கரம் அக்கமாலையையும், அடுத்த கரம் தாமரையையும் தரித்துள்ளன.

    கர்ப்பரட்சாம்பிகையை ஒரு தடவை பார்த்தாலே குழந்தை பாக்கியம் ஏற்படும் என்ற உணர்வு, நம்பிக்கை, பார்க்கும் பக்தர்களுக்கெல்லாம் ஏற்படுகிறது.

    இவள் கர்ப்பத்தை ரட்சிப்பவள் சரி, திருமணமே ஆகாதவர்களுக்கு? அதற்கும் இவளிடம் மருந்து இருக்கிறது. திருமணம் கூடிவராத பெண்கள், அன்னையின் சன்னதியில் நெய்யினால் படி மெழுகிக் கோலமிட்டால், திருமணம் கூடிவருவதாகச் சொல்கிறார்கள்.

    மகப்பேறு இல்லாதவர்கள், 48 நாட்கள் பிரசாத நெய்யை உண்டால் மகப்பேறு உண்டாகும் என்றும் சுகப்பிரசவம் ஆக அம்பாள் பிரசாதமான விளக்கெண்ணெயை நம்பிக்கையுடன் தடவி வந்தாலே போதும் என்று பலன் அடைந்தவர்கள் சொல்கிறார்கள்.

    திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப் பெற்ற புண்ணியத்தலம் இது. பிரம்மன், கவுதமர் ஆகியோர் இங்கே தங்கி இறைவனை பூஜித்திருக்கிறார்கள். அம்மன் கோயில் அருகில் இருக்கும் கவுதம லிங்கத்தை நிறுவியவர் கவுதம முனிவரே என்கிறது புராணம்.

    இந்தத் திருக்கருகாவூர் ஆலயத்தில் நவகிரகங்கள் எல்லாம் வித்தியாசமாக அமைந்திருக்கின்றன. சூரியனைச் சுற்றி மற்ற எல்லா கிரகங்களும் சூரியனையே பார்த்தவாறு அமைந்திருக்கின்றன. நவகிரகங்கள் அபய வரத முத்திரையுடன் காட்சி தருவதும் சிறப்பானது.

    பிரதோஷம், வைகாசி விசாகம், ஆடிப்பூரம், நவராத்திரி போன்ற தினங்களில் இங்கே சிறப்பு வழிபாடு உண்டு. ராஜகோபுரத்தின் எதிரில் உள்ள ஷீரகுண்டம் என்னும் பால் குளத்தில் சிவராத்திரி அன்று ஈசன், தீர்த்தமாடுகிறார். இந்தக் குளம், காமதேனுவின் கால் குளம்பால் ஏற்படுத்தப்பட்டதாகும்.

    • ஓம் கருகாவூர் தேவியே போற்றி ஓம் கஷ்டங்கள் தீர்ப்பாய் போற்றி
    • ஓம் சக்தியின் வடிவமே போற்றி ஓம் பக்தியுடன் தொழுவோரின் பரதேவி போற்றி

    ஓம் கருகாக்கும் நாயகியே போற்றி

    ஓம் கர்ப்பரட்சம்பிகையே போற்றி

    ஓம் கருகாவூர் தேவியே போற்றி

    ஓம் கஷ்டங்கள் தீர்ப்பாய் போற்றி

    ஓம் ஈஸ்வரனின் இதயக்கனியே போற்றி

    ஓம் கருகாவூர் எந்தையின் கண்மணியே போற்றி

    ஓம் முல்லைவனநாதரின் சுந்தரியே போற்றி

    ஓம் மூவுலகும் காக்கும் அன்னையே போற்றி

    ஓம் மைந்தன் வேண்ட வரம் தருவாய் போற்றி

    ஓம் மாதர் மனம் மகிழச் செய்வாய் போற்றி

    ஓம் எங்கும் தீராத குறை தீர்ப்பவளே போற்றி

    ஓம் எங்களை என்றும் காப்பவளே போற்றி

    ஓம் பிள்ளைக் கலி தீர்க்கும்பேரொளியே போற்றி

    ஓம் பிறவிப் பயன் தந்து அருள்வாய் போற்றி

    ஓம் பிண்டமாய் இருக்கும் கருவளர்ப்பாய் போற்றி

    ஓம் பிரம்மனின் படைப்புக்கு உயிர் தருவாய் போற்றி

    ஓம் முல்லைவனத்தில் அரசாள்வாய் போற்றி

    ஓம் நித்திருவர் தொழுத நித்திலமே போற்றி

    ஓம் நற்றவத்திற்கு அருளும் நாயகியே போற்றி

    ஓம் நாடிவரும் பக்தர் துயர்களைவாய் போற்றி

    ஓம் சர்வ வல்லமை பெற்ற ஈஸ்வரியே போற்றி

    ஓம் சர்வேஸ்வரனின் சரிபாதியே போற்றி

    ஓம் சங்கடங்கள் தீர்க்கும் சங்கரியே போற்றி

    ஓம் சார்ந்து நிற்போரை ரட்சப்பாய் போற்றி

    ஓம் பெண்கள் கருவறையை காப்பவளே போற்றி

    ஓம் பிரியமுடன் எங்களை வாழ்த்துவாய் போற்றி

    ஓம் பாதியில் கலையாத கரு தந்தாய் போற்றி

    ஓம் பாரினில் மகிழ்வான் வாழ்வளிப்பாய் போற்றி

    ஓம் நெய்யாலே படிமெழுக நீ மகிழ்வாய் போற்றி

    ஓம் மெய்யான பக்திக்கு உருகிடுவாய் போற்றி

    ஓம் தூய்மையுடன் வணங்குவோர் துயர்துடைப்பாய் போற்றி

    ஓம் வாய்மையுடன் வரம் தந்து வளம் தருவாய் போற்றி

    ஓம் வேதிகைக்கு அருள் சுரந்த அன்னையே போற்றி

    ஓம் வேண்டுபவர் அருகினில் வந்திடுவாய் போற்றி

    ஓம் வனிதையரின் வாழ்விற்கு வரமாவாய் போற்றி

    ஓம் வாழ்நாளில் வழிகாட்டும் வடிவழகே போற்றி

    ஓம் கலைந்த கர்ப்பம் உருவாக்கி உயிர் கொடுத்தாய் போற்றி

    ஓம் காமதேனு அழைத்து தாய்ப்பால் தந்தாய் போற்றி

    ஓம் தம்பதியாய் வருவோர்க்கு தஞ்சமளிப்பாய் போற்றி

    ஓம் தாயே உன் அருள் என்றும் தர வேண்டும் போற்றி

    ஓம் வலக்கரத்தால் அபயமளிக்கும் வனிதாமணியே போற்றி

    ஓம் இடக்கரத்தால் கர்ப்பத்தைக் காத்து நிற்பாய் போற்றி

    ஓம் பத்ம பீடத்தில் அமர்ந்திருக்கும் பார்வதியே போற்றி

    ஓம் பிரசவத்தில் துணையிருக்கும் பெரிய நாயகியே போற்றி

    ஓம் கருகாமல் கருகாக்கும் கண்மணியே போற்றி

    ஓம் கர்ப்பப்புரியில் வசிக்கும் கற்பகமே போற்றி

    ஓம் அகில உலகம் காக்கும் லோகநாயகியே போற்றி

    ஓம் அன்னை என்ற அருள் தந்து துயர்தீர்ப்பாய் போற்றி

    ஓம் மாதவிவநேச்வரரின் மாதரசியே போற்றி

    ஓம் முல்லைக் கொடி இடையே வந்த மெல்லியனே போற்றி

    ஓம் ஈஸ்வரனின் இதயத்தில் வீற்றிருப்பாய் போற்றி

    ஓம் ஈரேழு லோகத்தையும் என்றும் காப்பாய் போற்றி

    ஓம் கடம்பவன சுந்தரியே கற்புக்கரசியே போற்றி

    ஓம் காலம் பூராவும் கர்ப்பை காப்பவளே போற்றி

    ஓம் கல்லாக நின்று கருணைபொழிவாய் போற்றி

    ஓம் கதிரொளியே கனகமே கண்மணியே போற்றி

    ஓம் மலடி என்ற பெயர் நீக்கும் மங்களமே போற்றி

    ஓம் மங்கையர்க்கு அருகிலிருக்கும் மந்திரமே போற்றி

    ஓம் மருத்துவர்க்கும் சக்தி தரும் மாதவியே போற்றி

    ஓம் மறுமையிலும் உடனிருந்து மகிழ்விப்பாய் போற்றி

    ஓம் அசையும் கருவை அலுங்காமல் காப்பாய் போற்றி

    ஓம் அகிலத்தின் இயக்கத்தில் ஆனந்திப்பாய் போற்றி

    ஓம் அம்மா என்றுன்னை ஆராதிப்பேன் போற்றி

    ஓம் அம்மாவாய் என்னை ஆக்கினாய் போற்றி

    ஓம் மகேஸ்வரி உலகையே ஆள்கிறாய் போற்றி

    ஓம் மங்கலங்கள் பல தரும் மாதாவே போற்றி

    ஓம் ஸ்ரீ சக்ர வாசினி ஸ்திரீ தனமே போற்றி

    ஓம் சத்ரு பயம் நீங்க சரணடைந்தேன் போற்றி

    ஓம் பிள்ளையில்லா தவிப்புக்கு பிரசாதமளிப்பாய் போற்றி

    ஓம் பிரபஞ்சத்தில் பெண்களை காப்பவளே போற்றி

    ஓம் பகவானின் ப்ரீதியே பரதேவதையே போற்றி

    ஓம் லிரத்யனாமாய் என்னுடன் இருப்பவளே போற்றி

    ஓம் உற்சாகமாய் தோன்றும் கர்ப்பம் காப்பாய் போற்றி

    ஓம் ஓழுங்காய் என் பிள்ளை பிறக்கச் செய்வாய் போற்றி

    ஓம் உன்னையன்றி யாருமில்லை சரணடைந்தேன் போற்றி

    ஓம் ஊரார் மெச்ச நான் வாழ வாழ்த்துவாய் போற்றி

    ஓம் காந்த கண்ணழகி முத்துப்போல் பல்லழகியே போற்றி

    ஓம் மின்னும் மூக்கழகி புன் முறுவல் சிரிப்பழகி போற்றி

    ஓம் சொர்ணமும், வைரமும் மின்ன ஜொலிக்கும் அழகியே போற்றி

    ஓம் ஒய்யார வடிவழகி அருள் மணக்கும் பேரழகியே போற்றி

    ஓம் துக்கங்கள் தீர்க்கும் துணையே போற்றி

    ஓம் துன்பமில்லாத வாழ்வருளும் தேவியே போற்றி

    ஓம் சங்கடம் தீர்க்கும் சங்கரியே போற்றி

    ஓம் சலனமில்லா வாழ்வருளும் சாம்பவியே போற்றி

    ஓம் மழலைச் செல்வம் தர மனமிரங்குவாய் போற்றி

    ஓம் மாதர்க்கு நீ என்றும் அரணாவாய் போற்றி

    ஓம் கதியென்று நம்பினவருக்கு கருணை செய்வாய் போற்றி

    ஓம் கண்டவுடன் கஷ்டம் தீர்க்கும் கவுரியே போற்றி

    ஓம் நெஞ்சில் கவலைகள் நீக்குவாய் போற்றி

    ஓம் செஞ்சுடர் குங்குமம் தரித்தாய் போற்றி

    ஓம் அஞ்சுமென் மனத்துக்கு ஆறுதலே போற்றி

    ஓம் தஞ்சம் நீயே தாமரையே போற்றி

    ஓம் சக்தியின் வடிவமே போற்றி

    ஓம் பக்தியுடன் தொழுவோரின் பரதேவி போற்றி

    ஓம் நித்தமுன் அருள்வேண்டி நமஸ்கரித்தேன் போற்றி

    ஓம் நீயிருக்க பூவுலகில் பயமில்லை போற்றி

    ஓம் மனமெல்லாம் நீ நிறைந்தாய் மகேஸ்வரி போற்றி

    ஓம் மங்கள வாழ்வுதந்து மகிழ்விப்பாய் போற்றி

    ஓம் மங்கையரின் கர்ப்பத்தை காக்கின்றாய் போற்றி

    ஓம் கருகாவூர் அரசியே கருணாரசமே போற்றி -100

    ஓம் தலைமுறை தழைக்கச் செய்யும் தாயே போற்றி

    ஓம் குலம் வாழ மகவருளும் மாதே போற்றி

    ஓம் சகலரும் உன் சக்தி சார்ந்தோம் போற்றி

    ஓம் சோர்வு நீங்க உன் பாதம் சரணடைந்தோம் போற்றி

    ஓம் ஜயம் வேண்டும் ஜயம் வேண்டும் போற்றி

    ஓம் ஜகத்தினில் எங்கள் சக்தி ஓங்க வேண்டும் போற்றி

    ஓம் ஜீவனை ஜனிக்க வைக்கும் ஜகன்மாதா போற்றி

    ஓம் ஜயமங்களம் ஜயமங்களம் ஜனனியே போற்றி, போற்றி!

    ×