என் மலர்
நீங்கள் தேடியது "தவம்"
- சப்த ரிஷிகள் தவம் செய்ததால், இந்த மலைக்கு ‘தபசு மலை' என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
- கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மூலிகை கலந்த பிரசாதம் வழங்கப்படுவது, இக்கோவிலின் தனிச் சிறப்பாகும்.
புதுக்கோட்டை மாவட்டம் தபசுமலை எனும் ஊரில் சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது, தபசுமலை பால தண்டாயுதபாணி கோவில்.
சப்த ரிஷிகள் தவம் செய்ததால், இந்த மலைக்கு 'தபசு மலை' என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலில் முருகப்பெருமான், கையில் தண்டத்துடன் நின்ற கோலத்தில் பால தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். இவர் முனிவர்களாலும், சித்தர்களாலும் போற்றி வணங்கப்பட்டவர்.
ஒரு காலத்தில் இங்கு முனிவர்கள் வேல் வைத்து வழிபட்டுள்ளனர். அந்த இடத்திலேயே முருகப்பெருமானுக்கு விக்ரகம் அமைத்து பிரதிஷ்டை செய்து, பின்பு கோவில் எழுப்பி மக்கள் வழிபட தொடங்கினர். மலை அடிவாரத்தில் சப்த ரிஷிகளின் சிலைகளும், பீடமும் அமைந்துள்ளன. இந்த பீடங்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கோவிலை அடைய, 75 படிக்கட்டுகளை ஏறி செல்ல வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மூலிகை கலந்த பிரசாதம் வழங்கப்படுவது, இக்கோவிலின் தனிச் சிறப்பாகும்.
இந்த பிரசாதத்தை சாப்பிட்டால் சர்க்கரை நோய், வயிறு சம்பந்தப்பட்ட நோய் போன்றவை குணமாகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. கிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வீற்றிருக்கும் முருகப் பெருமானை வழிபட்டால் அனைத்து வித தோஷங்களும் நிவர்த்தியாகும் என நம்பப்படுகிறது.
கந்த சஷ்டி திருநாளில் பெண்கள் விரதம் இருந்து தபசுமலையில் வீற்றிருக்கக்கூடிய முருகப்பெருமானை தரிசனம் செய்து, விளக்கேற்றி வழிபட்டால் விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும் என்றும், குழந்தை இல்லாதவர்கள் முருகப்பெருமானின் காலடியில் வைக்கப்பட்ட எலுமிச்சம் பழத்தை சாறு எடுத்து குடித்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.
மனவேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர், இங்குள்ள முருகப்பெருமானிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தால் விரைவில் ஒன்றுசேர்வார்கள் என்பது நம்பிக்கை. புதுக்கோட்டையில் இருந்து 17 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.
- அமைதி என்பதும் தியானம் என்பதும் தவம் என்பதும் ஒன்றுக்கொன்று உரிமைத் தொடர்புடைய உறவுச் சொற்களாகும்.
- தியானம் என்பது நம்மையும் நமது போக்குகளையும் நேர்முறையில் நெறிப்படுத்திடும் அரும்பணியைச் செய்கிறது.
அமைதியும் ஆனந்தமும் ததும்பும் வாழ்க்கையை அன்றாடம் எதிர்நோக்கிக் காத்திருக்கும் அன்பின் வாசகர்களே! வணக்கம்.
வாழ்க்கையில் அமைதியும் நிம்மதியும் வேண்டுமென்றால் தவ வாழ்க்கை வாழவேண்டும்! என்கிறார்கள். இந்த உலகத்தில் நிலைத்த அறங்களாகவும், நிலைத்து நிற்கவேண்டிய அறங்களாகவும் வள்ளுவர் குறிப்பிடுவது, 'தானம்', 'தவம்' ஆகிய இரண்டை மட்டுமே. இவ்விரண்டையும் மறைந்து போகாமல் காப்பதற்குத், தொடர்ந்த மழைவளத்தை உடை யதாக உலகம் இருக்க வேண்டும் என்கிறார்.
"தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்"
'தானம்' அடுத்தவர் நலத்தை முன்னிறுத்தி செய்யப்படுகிற அறமாகும்; 'தவம்' தன்னை முன்னிலைப்படுத்தி இயற்றுகிற அறப்பயிற்சி ஆகும். மழைவளம் குன்றாமல், உலகச் செழிப்புக் குறையாமல் இருந்தால் மட்டுமே தானம் செய்வதும், தவம் இயற்றுவதும் ஆகிய அறங்கள் தொய்வில்லாமல் நடைபெறும்.
ஒருகாலத்தில் உலக வாழ்வின் இன்பங்கள் அனைத்தையும் வெறுத்துக், குடும்பத்தைத் துறந்து, காடுகளுக்கும் வனங்களுக்கும் மலைகளுக்கும் சென்று, கனிகிழங்குகளை உண்டு, பசிதாங்கி, உடலியல் வலிகளைப் பொறுத்து, மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து, கடுமையான முறையில் தியானத்தில் ஆழ்ந்திருப்பதே தவம் என்று எண்ணியிருந்தார்கள். தவம் என்பது துறவு நெறியில் இருக்கும் சாமியார்களுக்கே உரியது என்றும் கருதப்பட்டது. ஆனால் இல்லறத்தில் வாழ்வோர்க்கும் தவம் வாய்க்கும் என்பது வள்ளுவச் சிந்தனை ஆகும்.
"உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு"
இக்குறளில் திருவள்ளுவர், 'தமக்கு வருகிற துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதும், பிற உயிர்களுக்குத் துன்பம் இழைக்காமல் இருப்பதுமே தவம்' என்கிறார். வாழும் இல்லற வாழ்விலும் வலி பொறுத்தலே வாழ்க்கை என்கிறார் திருவள்ளுவர். இவ்வாறு பொறுத்துக் கொள்வது அல்லது தாங்கிக் கொள்வது ஆகியவற்றை 'நோன்பு இருத்தல்' அல்லது 'விரதம் இருத்தல்' என்று நாம் ஆன்மீக அடிப்படையில் கூறுவோம். மத சம்பிரதாயங்களைத் தாண்டியும், நமக்கு ஏற்படும் இடையூறுகளையும், வலிகளையும் மன உறுதியோடு தாங்கிக் கொள்ளும் வல்லமை நமக்கு வாய்த்துவிட்டால் உண்மையில் அதுவே தவம் ஆகும். இவ்வகை தவத்தைத் துறவறவாசிகள் மட்டுமல்லாது, இல்லறவாசிகளும் எளிதில் கடைப்பிடிக்க முயலலாம்.
தவத்தினால் கிடைக்கக் கூடிய அடிப்படையான பலன் எதுவென்று திருவள்ளுவரைக் கேட்டால், ' இது அது என்று குறிப்பிட்டுச் சொல்லும்படி எதையும் கூறிவிட முடியாது' என்கிறார்.
"வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்"
அதாவது, இவர் அவர் என்று வேறுபாடு இல்லாமல், இதுதான் வேண்டும்! அதுதான் வேண்டும்! என்று வித்தியாசம் இல்லாமல், யார் எதுவேண்டுமென்று தவம் இயற்றத் தொடங்கினாலும் அவர்கள் வேண்டியது வேண்டியபடி தவத்தினால் கிடைக்கும் என்பது வள்ளுவர் தரும் உறுதிப்பாடு. தவம் தவமாக இருக்கவேண்டும்; அதுபோதும். பலன்கள் இல்லறத்தார்க்கும் உண்டு; துறவறத்தார்க்கும் உண்டு.
தவம் இயற்றுவதற்கு அடிப்படைத் தேவை அமைதி. நமது உள்ளமும் அமைதியாக இருக்க வேண்டும்; நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலையும் அமைதியாக இருக்க வேண்டும். நம்முடைய உள்ளமாகிய அகத்திலும் சரி. புறமாகிய வெளி உலகத்திலும் சரி ஒரே இரைச்சல் மயமாகவே உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இடைவேளை இல்லாத பரபரப்பில் நமது உள்ளும் புறமும் சிதைந்து கொண்டிருக்கும்போது அமைதியை முதலில் வரவழைப்பது எப்போது?. முதலில் அமைதி வந்தால்தானே பிறகு தவம் இயற்ற முடியும்!; அத் தவத்தை வென்றெடுத்த பிறகுதானே வேண்டிய வெற்றிச் சாதனைகளை எட்டிப் பிடிக்க முடியும். இந்த உலகில் சாதிக்கிறவர்கள் எண்ணிக்கை குறைவாகவும், சாதிக்க முடியாமல் பின்தங்குகிறவர்கள் எண்ணிக்கை கூடுதலாகவும் இருப்பதற்கான காரணத்தை ஆராய்கிறார் திருவள்ளுவர். ஏன் இல்லாதவர்கள் பலராகவும் இருக்கிறவர்கள் சிலராகவும் இருக்கிறார்கள் என்றால், வலிதாங்கும் நோன்பை மேற்கொண்டு தவமியற்றி வெல்பவர்கள் சிலராகவும், மேற்கொள்ள முடியாமல் தோற்பவர்கள் பலராகவும் இருக்கின்றனராம்.
"இலர்பலராகிய காரணம் நோற்பார்
சிலர் பலர் நோலாதவர்"
தவமியற்றுதல் என்பதே தமக்கு வரும் எல்லாத் தொல்லைகளையும் பொறுமையினால் வெற்றிகாண்பதும், அவற்றிலிருந்து வெளியேறுவதும், தொல்லைகளற்ற மனத்தை அமைதியுடன் ஒருநிலைப்படுத்தலும், பிறகு வேண்டியன கிட்ட வேண்டியாங்கு தியானித்தலும் ஆகும்.
ஓர் அடர்ந்த காட்டிற்குள் ஒரு விறகுவெட்டி சென்றான். செல்லும் வழியில் ஒரு மரத்தடியில் ஒரு துறவி கண்களை மூடித் தியானம் பண்ணிக் கொண்டிருந்தார். விறகு வெட்டி அவர்முன் சிறிதுநேரம் நின்று அவரையே பார்த்து கொண்டிருந்தான். தன்னை யாரோ நின்று பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்த துறவி கண்களைத் திறந்து கையில் கோடரியோடு நின்றிருந்த விறகுவெட்டியைப் பார்த்துப் புன்னகைத்தார். அவனிடம் துறவி பேசினார், "விறகு வெட்டியே நீ அன்றாடம் இங்கு வந்து, ஒரு தலைச்சுமை விறகை எடுத்துச் சென்று ஊரில் விற்றால் உனக்கு எவ்வளவு கிடைக்கும்?". "இந்த ஒருநாளைப் பசியில்லாமல் கடத்துவதற்கு இது பயன்படும்! அவ்வளவுதான்!" என்றான் விறகுவெட்டி." சரி!. இன்று முதல் நான் சொல்கிறபடிக் கேட்டால், நாள்தோறும் நீ இங்கு வந்துபோக வேண்டிய அவசியம் இருக்காது; மரங்களை வெட்டி வனங்களை அழிக்க வேண்டிய நிலைமையும் இருக்காது!" என்றார் துறவி. " சரி! நீங்கள் சொல்லுங்கள்! சொல்கிறபடிக் கேட்கிறேன்" என்றான் விறகுவெட்டி. "இந்த வழியே கிழக்குப் பக்கமாகக் கொஞ்ச தூரம் செல்! அங்கே ஒரு செம்புச் சுரங்கம் இருக்கிறது; ஒரு தலைச்சுமை அளவு வெட்டிக்கொண்டு சென்றால், அதனை விற்று ஒருவாரத்திற்குச் சாப்பிடலாம்! செல்!" என்றார் துறவி. அவ்வழியே சென்று செம்பை வெட்டி, ஊருக்குள் சென்றான் விறகுவெட்டி.

முனைவர் சுந்தர ஆவுடையப்பன்
அடுத்து ஒருவாரம் கழித்து வந்து துறவிமுன் நின்றான் விறகுவெட்டி. "நீ கடந்த முறை சென்ற செம்புச் சுரங்கத்தைத் தாண்டி, இன்னும் கொஞ்ச தூரம் செல்! அங்கே ஒரு வெள்ளிச் சுரங்கம் இருக்கிறது; அதில் ஒரு தலைச்சுமை அளவுக்கு வெட்டி எடுத்து ஊருக்குள் சென்று விற்றால் ஒரு மாதகாலத்திற்குச் சாப்பிடலாம்" என்றார் துறவி. அப்படியே செய்த விறகுவெட்டி, அடுத்து ஒருமாதம் கழித்துக் காட்டிற்குள் வந்து துறவிமுன் நின்றான். இப்போது துறவி அவனிடம், " கடந்த முறை நீ சென்ற வெள்ளிச் சுரங்கத்தைத் தாண்டிக் கொஞ்ச தூரம் சென்றால், அங்கே தங்கச் சுரங்கம் இருக்கும்; வெட்டியெடுத்துச் செல்!; அடுத்து ஆறு மாத காலத்திற்கு இங்கு நீ வரவேண்டிய தேவை இருக்காது!" என்றார்.
அடுத்து ஆறு மாதங்கள் கழித்து விறகுவெட்டி துறவிமுன் வந்து நின்றபோது, "தங்கச் சுரங்கம் தாண்டியும் செல்! அங்கே வைரச் சுரங்கம் உனக்காக காத்திருக்கிறது; அது உனக்கு ஒரு வருட காலம் இந்தப்பக்கம் உன்னை வரவிடாமல் பார்த்துக்கொள்ளும்" என்றார் துறவி. அடுத்து ஓராண்டு கழித்துத், துறவிமுன் வந்து விறகுவெட்டி நின்றபோது, அவனை ஏற இறங்கப் பார்த்த துறவி, " இப்போது வைரச் சுரங்கம் தாண்டியும் கொஞ்ச தூரம் சென்று தேடிப்பார்!; எனக்குக் கிடைத்த பொக்கிஷம் உனக்கும் கிடைக்கலாம்!; அதைக்கொண்டு நீ உன் வாழ்க்கையை நிரந்தரமாக அனுபவிக்கலாம்!" என்று விறகுவெட்டியை ஆசீர்வாதம் பண்ணி அனுப்பி வைத்தார் துறவி.
உள்ளே காட்டிற்குள் சென்ற விறகுவெட்டி, வைரச் சுரங்கத்திற்கும் மேலான பொக்கிஷம்! அதுவும் துறவிக்குக் கிடைத்த பொக்கிஷம்! எதுவாக இருக்கும்?. தேடியலைந்து, களைத்து, நடுக்காட்டில், அடர்வனத்தில், ஓர் அமைதியான இடத்தைக் கண்டுபிடித்து அங்கே அமர்ந்தான். அவனையறியாமலேயே கண்களை மூடித் தியானத்தில் ஈடுபடத் தொடங்கினான். ஆம் பொக்கிஷத்தைக் கண்டுபிடித்து விட்டான்; அது தியானம் என்னும் பொக்கிஷம்! செலவழிக்கச் செலவழிக்க ஆயுள் முழுவதும் தீராத பொக்கிஷம்!. அங்கேயே வேண்டியதைப் பெற்றுக் கொள்ளத் தொடங்கி விட்டான்.
அமைதி என்பதும் தியானம் என்பதும் தவம் என்பதும் ஒன்றுக்கொன்று உரிமைத் தொடர்புடைய உறவுச் சொற்களாகும். குழப்பம், பரபரப்பு, மனக்கூச்சல் போன்றவை இவற்றிற்கு எதிரான மனோ நிலைகள் ஆகும். குழப்பமில்லாத தெளிவு, பரபரப்பில்லாத அமைதி, மனக்கூச்சல்களற்ற தியான நிலை இவை வாய்த்துவிட்டால் வாழ்தலே தவம்போல ஆகிவிடும். ஒரு காலத்தில் அமைதியைத் தேடி அமைதியான சூழல் நிலவும் இடங்களுக்கு மனிதர்கள் சென்றனர். ஆனால் இன்றோ அப்படிப்பட்ட அமைதியான இடங்கள் அமையாவிட்டாலும், மனப்பயிற்சிகள் மற்றும் எளிய உடற்பயிற்சிகள் மூலமாக அமைத்துக்கொள்ளும் தியான வித்தைகளை மனிதர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். அலைபாயும் கடல், ஓசைமயமாக இருப்பதுபோல, அலைபாயும் எண்ணங்கள் கொண்ட மனமும் ஓசைமயமாகவே திகழ்கிறது. மனத்தின் அலைபாய்தல் அடங்காத வரை, ஓசை ஒடுங்காத வரை, தியானம் சாத்தியப்படுவதே இல்லை.
தியானம் என்பது மனத்தின் எண்ணங்களை ஒருங்கிணைத்துக், கூர்மைப்படுத்தி, விழிப்புணர்வைப் பிரகாசப்படுத்துகிற பயிற்சியாகும். இதன் மூலமாக மனமும் உடலும் ஒத்திசைவில் இயங்கத் தொடங்குகின்றன. மனமும் உடம்பும் குறிப்பிட்ட இலக்கு நோக்கி விழிப்புணர்வோடு இயங்குவதற்குத் தியானம் பெருமளவில் கைகொடுக்கிறது. மனத்தில் வீண் குழப்பங்களால் ஏற்படும் மன அழுத்தங்களைக் குறைத்திடும் அமைதிப் பணியையும் தியானம் செய்கிறது. தொடர்ந்து மேற்கொள்ளப்பெறும் தியானப்பயிற்சி, நமது நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள உதவுகிறது. தேவையற்ற கவலைகளிலும் பிரச்சினைகளிலும் ஆழ்ந்துபோய் அவற்றிலேயே உழன்று கொண்டிருக்கும் மனத்தின் அவல நிலையையும் தியானம் மாற்றுகிறது. ஒட்டுமொத்தத்தில், தியானம் என்பது நம்மையும் நமது போக்குகளையும் நேர்முறையில் நெறிப்படுத்திடும் அரும்பணியைச் செய்கிறது.
இந்த உலகத்தில் தனிமனிதர் தொடங்கிப், பெரும்பெரும் நாடுகளின் தலைவர்கள் வரை அமைதியையே பெரிதும் விரும்புகின்றனர். நாடுகளுக்கிடையே வளரும் பகை எண்ணங்களும் போட்டி பொறாமைகளும் அவற்றிற்கிடையே சண்டைகளை உருவாக்கி, அமைதியின்மைக்கு வழி வகுத்துவிடுகின்றன. அமைதியின்மையில் தத்தளிக்கிற நாடுகள், என்றும் எத்துறையிலும் வளர்ந்த நாடுகளாகப் பரிமளிக்கப் போவதில்லை. அதைப்போலத்தான் ஒவ்வொரு தனிமனிதனும். அமைதியின்மையில் தடுமாறுகிற எவரும் சாதனை மனிதராகச் சரித்திரம் படைப்பதில்லை. எல்லா நிலைகளிலும் தமக்கு உள்ளும் புறமுமாக அமைதியே நிலவ வேண்டும் என்று, முயல்கிறவர்கள் உண்மையான தவ வாழ்விற்குச் சொந்தக்காரர்கள். அமைதி தவழும் உள்ளமும் இல்லமும் உண்மையான தவக்குடில்கள்.
தொடர்புக்கு: 9443190098
- காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள திட்டில் இவ்வாலயம் இருப்பதால் திட்டை என்றும், தென்குடித்திட்டை என்றும் வழங்கப்படுகிறது.
- மூலவர் சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் இடையில் அம்பாள் சந்நிதிக்கு மேற்க்குப் பக்கத்தில் குருபகவானின் தனி சந்நிதி தனி விமானத்துடன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
சனிபகவான் திட்டை தலத்திற்கு எழுந்தருளி வேதாகம முறைப்படி வேதமுதல்வனைப் பூஜித்து ஆயிரம் ஆண்டுகாலம் கடும் தவம் புரிந்தார் என்பது சிறப்பு. இத்தலத்தில் உள்ள ஈசனைத் தவமிருந்து பாவ விமோசனம் பெற்றார் சந்திரன். பசு, குதிரை, மான் தாகம் தீருவான் வேண்டி பசு தீர்த்தத்தைச் சிருஷ்டித்துக் கொடுத்தார் ஈசன். விஷ்ணு அரசமரமாகவும, லக்ஷ்மி வில்வமரமாகவும் இருந்து இறைவனுக்கும், இறைவிக்கும் திருத்தொண்டு செய்தனர். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம்.. கௌதமர், ஆதிசேடன், காமதேனு பூசித்த திருவூர்.
சுமாலி என்பவர் தேர் அழுந்திய இடமாதலின் 'ரதபுரி' என்றும் காமதேனு வழிபட்டதால் 'தேனுபுரி' என்றும் ரேணுகை வழிபட்டதால் 'ரேணுகாபுரி' என்றும் இத்தலம் வழங்கப்படுகிறது.
காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள திட்டில் இவ்வாலயம் இருப்பதால் திட்டை என்றும், தென்குடித்திட்டை என்றும் வழங்கப்படுகிறது. புராண காலத்தில் பிரளயம் ஏற்பட்ட போது, பூலேகமே நீரில் அமிழ்ந்திருந்தபோது திட்டை என்ற இவ்விடம் மட்டும் நீரில் மூழ்காமல் இருந்தது. இவ்விடத்தில் சிவபெருமான் சுயம்புவாக ஒரு லிங்க உருவில் எழுந்தருளினார். இக்கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூலவர் வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவது லிங்கமாக சுயம்பு லிங்கமாக அருள் புரிகிறார். இவ்வாறு ஐந்து லிங்கங்கள் இருப்பதால் இத்தலத்தை 'பஞ்சலிங்கஷேத்திரம்' என்று கூறுவர். இந்த ஒரு தலத்தை வழிபட்டால் சிதம்பரம், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருஆனைக்கா மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பஞ்சபூத திருத்தலங்களுக்கு சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மூலவர் கருவறையின் மேல் விதானத்தில் ஒரு 'சந்திரகாந்தக்கல்' பொருத்தப்பட்டிருக்கிறது. காற்றில் உள்ள ஈரப்பசையை உறிஞ்சி சுமார் ஒரு நாழிகைக்கு ஒருமுறை மூலவர் சிவலிங்கத்திருமேனியில் ஒரு சொட்டு நீர் விழும்படி இக்கல் பொருத்தப்பட்டுள்ளது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். ஆலயத்தின் முன்புறம் பசு தீர்த்தம் அமைந்துள்ளது. ராஜகோபுரம் வழியாக சிலபடிகள் ஏறிச் சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. மூலவர் சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் இடையில் அம்பாள் சந்நிதிக்கு மேற்க்குப் பக்கத்தில் குருபகவானின் தனி சந்நிதி தனி விமானத்துடன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
இத்திருக்கோவிலில் குருபகவான் தனி சந்நிதியில் காட்சி தருகிறார். இவர் சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரஸ முனிவரின் புதல்வர் ஆவார். ஒரு காலத்தில் தென்குடித்திட்டை என்ற பெயரால் விளங்கிய இவ்வூர் தற்போது திட்டை என்று அழைக்கப்படுகிறது. இத்திருத்தலத்தில் கொடிமரம், கோபுரகலசம், சுவாமிபுஷ்கரணி, கருங்கற்களால் அமைந்தகோவில் இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். பிரகாரத்தில் விநாயகர், முருகன், அண்ணாமலையார், சண்டிகேசுவரர், பைரவர், குருபகவான் முதலிய சந்நிதிகள் உள்ளன.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : திட்டை
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை
- ஏராளமான முனிவர்கள் திருமழிசை வந்து தவம் இருந்தனர்.
- பெருமாளை வழிபட்டால் முக்தி கிடைக்கும்.
ஒரு தடவை அத்ரி, பிருகு, வசிஷ்டர், பார்க்கவ ஆகிய ரிஷிகள் பிரம்மாவை சந்தித்து, ''நாங்கள் தவம் செய்ய உயர்வான ஒரு இடத்தை காட்டுங்கள்'' என்றனர்.
உடனே பிரம்மா, தராசின் ஒரு தட்டில் திருமழிசை தலத்தையும் மற்றொரு தட்டில் உலகின் மற்ற எல்லா புனித தலங்களையும் வைத்தார். திருமழிசை இருந்த தட்டு தாழ்ந்து இருந்தது.
இதையடுத்து உலகில் உள்ள எல்லாப் புண்ணியத் தலங்களையும் விட மகிமையும், பெருமையும் கொண்டது திருமழிசையே என்பதை ரிஷிகள் உணர்ந்தனர். இதனால் ஏராளமான முனிவர்கள் திருமழிசை வந்து தவம் இருந்தனர்.
எனவே இத்தல பெருமாளை வழிபட்டால் முக்தி கிடைக்கும். மறுபிறவி இருக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
- ஒவ்வொரு மலரின் மகத்துவ குணம் என்ன என்பதை புதுவை அன்னை வெளியிட்டுள்ளார்.
- ஆரஞ்சு ரோஜா-ஆர்வமுள்ள பக்தி
மலர்களின் மகத்துவம்
ஒருவரது மனதை நிலைப்படுத்தும் சக்தி மலருக்கு உண்டு. 'கொடிரோஸ்' மலரை அன்னை, 'சுமுகமான மலர்' என்றழைத்தார். இம்மலர் வீட்டில் இருந்தால் சண்டை சச்சரவுகள் நீங்கிவிடும். சுமுகமாக வாழ்க்கை கிடைக்கும் என்கிறார்.
ஒவ்வொரு மலரின் மகத்துவ குணம் என்ன என்பதை புதுவை அன்னை வெளியிட்டுள்ளார்
அசோக மலர் - கவலையின்மை
அரளி (வெள்ளை) - தெய்வ சிந்தனை
அல்லி (சிவப்பு) - திருமகளின் அருள்
அலரி (வெண்மை) - இறைநினைவு
ஆவாரம்பூ - கூர்த்தமதி
இரங்கூன் மல்லி - விசுவாசம்
ஊமத்தை - தவம்
எள்ளுப்பூ - சமரசம்
எருக்கம்பூ- தைரியம்
எலுமிச்சைப்பூ- கற்புத்திறன்
கத்திரிப்பூ- பயமின்மை
கருவேலம்பூ- ஞானம்
காகிதப்பூ- பாதுகாப்பு
சண்பகம்- உள்ளம் பக்குவப்படுதல்
சம்பங்கி- படைப்புத்திறன்
சாமந்தி- வீரியசக்தி
சாமந்தி - முழு அமைதி
செம்பருத்தி- விரைந்து செயல்பாடு
சிவப்பு செம்பருத்தி- நிறைந்த சக்தி
செங்காந்தள்- சச்சரவின்மை
சூரியகாந்தி- கலை நுண்ணறிவு
கொத்தமல்லிப்பூ- மென்மை
கொடிரோஸ்- சுமுகம்
கொய்யாப்பூ- நிதானம்
டிசம்பர்பூ- விழிப்புணர்வு
(வெண்) தாமரை- இறையருள்
தாழம்பூ- ஆன்மீகமனம்
தும்பைப்பூ- உண்மைவழிபாடு
தூங்குமூஞ்சிப்பூ- விவேகம்
நந்தியாவட்டை- தூயமனம்
நாகலிங்கப்பூ (சிவப்பு)- செல்வவளம்
நித்யகல்யாணி (சிவப்பு)- சுயநலமின்மை
நித்யகல்யாணி (வெண்மை)- நல்ல முன்னேற்றம்
பருத்தி ரோஜா- தெய்வீக அருள்
பன்னீர்ப்பூ- சாந்தமான உணர்வு
பவளமல்லி- தெய்வீக ஆர்வம்
பாதாம்பூ- ஆன்மீக உணர்வு
பாரிஜாதம்- தூய ஆர்வம்
பாகல்பூ- இனிமை
பாக்குமரப்பூ- தெம்பு
பீர்க்கம்பூ- அன்புமனம்
புன்னைப்பூ- உடலில் அமைதி
புகையிலைப்பூ- பகுத்தறிவு
பூசணிப்பூ- தாராளம்
பூவரசம்பூ- ஆரோக்கியம்
பெருக்கொன்றை- சேவைமனப்பான்மை
பெட்டுனியா- உற்சாகம்
மகிழம்பூ- பொறுமை
மனோரஞ்சிதம்- தெளிவான சிந்தனை
மல்லிகை- தூய்மை
மரமல்லிகை- உருவமாற்றம்
(பவழ) மல்லிகை- இறைவேட்கை
மாதுளம்பூ- தெய்வபக்தி
விருட்சிப்பூ- மன அமைதி
வேப்பம்பூ- ஆன்மீக இன்பம்
வாடாமல்லி- மரணமிலா வாழ்வு
வேலம்பூ- தெய்வீக ஞானம்
ஆரஞ்சு ரோஜா- ஆர்வமுள்ள பக்தி
சிவப்பு ரோஜா- ஆழ்ந்த உணர்வு
வெள்ளை ரோஜா- பூர்ண தெய்வபக்தி
இளஞ்சிவப்பு ரோஜா- சரணாகதி
- தாமதமாக வந்த ஆஞ்சநேயர் சாளக்ராமத்தை எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.
- அதை ஆஞ்சநேயர் பூஜைக்காக எடுத்துக் கொண்டு வான்வழியே பறந்து வந்தார்.
பங்குனி உத்திரம் தினத்தன்று காதில் பூ வைத்து காட்சி தருகிறார் நாமக்கல் ஆஞ்சநேயர்.
இத்தலத்தில் பங்குனி உத்திர விழா விசேஷமாக நடக்கிறது.
அன்று ஒரு நாள் மட்டும் நரசிம்மர், தாயாருடன் சேர்ந்து காட்சி தருகிறார்.
ஒரு சமயம் நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் ஆஞ்சநேயர் நீராடிய போது ஒரு சாளக்ராமம் கிடைத்தது.
அதை ஆஞ்சநேயர் பூஜைக்காக எடுத்துக் கொண்டு வான்வழியே பறந்து வந்தார்.
நாமக்கல் தலத்தில் நீராடுவதற்காக அவர் இறங்கினார்.
சாளக்ராமத்தை கீழே வைக்க முடியது என்பதால் என்ன செய்வது என யோசித்த வேளையில் தீர்த்தக்கரையில் மகாலட்சுமி தாயார், தவம் இருப்பதைக் கண்டார்.
அவளை வணங்கிய ஆஞ்சநேயர், அவளது தவத்திற்கான காரணத்தைக் கேட்டார்.
திருமாலை, நரசிம்ம வடிவில் தான் பார்த்ததில்லை என்றும் அந்த வடிவத்தைக் காணதான் தவம் இருப்பதாகவும் கூறினாள்.
ஆஞ்சநேயர் அவளது கையில் சாளக்ராமத்தைக் கொடுத்து, நீராடி விட்டு, வந்து வாங்கிக் கொள்வதாக சொன்னார்.
குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து வாங்கிக் கொள்ளா விட்டால், சாளக்ராமத்தை தரையில் வைத்து விடுவேன் என லட்சுமி நிபந்தனை விதித்தாள்.
ஆஞ்சநேயருக்கு சில காரணங்களால் தாமதமாகி விட்டது.
தாயார், சாளக்ராமத்தை கீழே வைத்து விட்டார்.
தாமதமாக வந்த ஆஞ்சநேயர் சாளக்ராமத்தை எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.
அது பெரியமலையாக உருவெடுத்தது.
அம்மலையில் நரசிம்மர் தோன்றி தாயாருக்கு அருள் செய்தார்.
இவர் லட்சுமி நரசிம்மர் எனப்பட்டார். ஆஞ்சநேயரும் இங்கேயே தங்கி விட்டார்.
நரசிம்மரின் மடியில் லட்சுமி இருந்ததால், லட்சுமி நரசிம்மர் என்றழைக்கப்படுகிறார்.
ஆனால் லட்சுமி இவரது மடியில் இல்லாமல் மார்பில் இருக்கிறாள்.
இவளை வணங்கிட கணிதத்தில் புலமை பெறலாம் என்பது நம்பிக்கை.
சாளக்ராமத்தைக் கொண்டு வந்த ஆஞ்சநேயருக்கு நரசிம்மர் கோவில் எதிரே தனிக்கோவில் இருக்கிறது.
18 அடி உயரமுள்ள இவர் கையில் ஜெபமாலையும், இடுப்பில் கத்தியும் வைத்திருக்கிறார்.
பங்குனியில் இங்கு 15 நாள் விழா நடக்கிறது.
பங்குனி உத்திரத்தன்று காலையில் மூலஸ்தானத்திலுள்ள நரசிம்மர் தாயார் சன்னதிக்கு எழுந்தருளி சேர்த்தியாக காட்சி தருகிறார்.
அப்போது விசேஷ அபிஷேகம் நடக்கிறது. அதன் பின் இருவரும் முன்மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளுகின்றனர்.
அன்று ஒரு நாள் மட்டுமே இங்கு சுவாமி தாயார் இவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும்.
- திருவண்ணாமலையில் கவுரி வனம் என்றொரு வனம் உள்ளது.
- அந்த இடத்துக்கு செல்பவர்கள் நினைவிழந்து விடுவார்கள்.
திருவண்ணாமலையில் கவுரி வனம் என்றொரு வனம் உள்ளது.
அந்த இடம் பார்வதி தேவி தவம் இருந்த இடமாகும்.
அந்த இடத்துக்கு செல்பவர்கள் நினைவிழந்து விடுவார்கள்.
வந்த வழி தெரியாமல் மலையில் தவிக்க நேரிடும் என்று தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
ரமணரின் பக்தர்களில் ஒருவரான ஹம்பரீஸ் என்பவருக்கு அந்த அனுபவம் ஏற்பட்டது.
கடைசியில் அவர் ஒரு விறகு வெட்டி மூலம் மலையில் இருந்து கீழே இறங்கினார்.
தமிழ்நாட்டில் சித்தர்கள் வாழும் எந்த மலையிலும் இப்படி அதிசய வனம் இல்லை.
திருவண்ணாமலையில் மட்டுமே அந்த அதிசய வனம் உள்ளது.






