என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைதி"

    • அமைதி என்பதும் தியானம் என்பதும் தவம் என்பதும் ஒன்றுக்கொன்று உரிமைத் தொடர்புடைய உறவுச் சொற்களாகும்.
    • தியானம் என்பது நம்மையும் நமது போக்குகளையும் நேர்முறையில் நெறிப்படுத்திடும் அரும்பணியைச் செய்கிறது.

    அமைதியும் ஆனந்தமும் ததும்பும் வாழ்க்கையை அன்றாடம் எதிர்நோக்கிக் காத்திருக்கும் அன்பின் வாசகர்களே! வணக்கம்.

    வாழ்க்கையில் அமைதியும் நிம்மதியும் வேண்டுமென்றால் தவ வாழ்க்கை வாழவேண்டும்! என்கிறார்கள். இந்த உலகத்தில் நிலைத்த அறங்களாகவும், நிலைத்து நிற்கவேண்டிய அறங்களாகவும் வள்ளுவர் குறிப்பிடுவது, 'தானம்', 'தவம்' ஆகிய இரண்டை மட்டுமே. இவ்விரண்டையும் மறைந்து போகாமல் காப்பதற்குத், தொடர்ந்த மழைவளத்தை உடை யதாக உலகம் இருக்க வேண்டும் என்கிறார்.

    "தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்

    வானம் வழங்கா தெனின்"

    'தானம்' அடுத்தவர் நலத்தை முன்னிறுத்தி செய்யப்படுகிற அறமாகும்; 'தவம்' தன்னை முன்னிலைப்படுத்தி இயற்றுகிற அறப்பயிற்சி ஆகும். மழைவளம் குன்றாமல், உலகச் செழிப்புக் குறையாமல் இருந்தால் மட்டுமே தானம் செய்வதும், தவம் இயற்றுவதும் ஆகிய அறங்கள் தொய்வில்லாமல் நடைபெறும்.

    ஒருகாலத்தில் உலக வாழ்வின் இன்பங்கள் அனைத்தையும் வெறுத்துக், குடும்பத்தைத் துறந்து, காடுகளுக்கும் வனங்களுக்கும் மலைகளுக்கும் சென்று, கனிகிழங்குகளை உண்டு, பசிதாங்கி, உடலியல் வலிகளைப் பொறுத்து, மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து, கடுமையான முறையில் தியானத்தில் ஆழ்ந்திருப்பதே தவம் என்று எண்ணியிருந்தார்கள். தவம் என்பது துறவு நெறியில் இருக்கும் சாமியார்களுக்கே உரியது என்றும் கருதப்பட்டது. ஆனால் இல்லறத்தில் வாழ்வோர்க்கும் தவம் வாய்க்கும் என்பது வள்ளுவச் சிந்தனை ஆகும்.

    "உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை

    அற்றே தவத்திற்கு உரு"

    இக்குறளில் திருவள்ளுவர், 'தமக்கு வருகிற துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதும், பிற உயிர்களுக்குத் துன்பம் இழைக்காமல் இருப்பதுமே தவம்' என்கிறார். வாழும் இல்லற வாழ்விலும் வலி பொறுத்தலே வாழ்க்கை என்கிறார் திருவள்ளுவர். இவ்வாறு பொறுத்துக் கொள்வது அல்லது தாங்கிக் கொள்வது ஆகியவற்றை 'நோன்பு இருத்தல்' அல்லது 'விரதம் இருத்தல்' என்று நாம் ஆன்மீக அடிப்படையில் கூறுவோம். மத சம்பிரதாயங்களைத் தாண்டியும், நமக்கு ஏற்படும் இடையூறுகளையும், வலிகளையும் மன உறுதியோடு தாங்கிக் கொள்ளும் வல்லமை நமக்கு வாய்த்துவிட்டால் உண்மையில் அதுவே தவம் ஆகும். இவ்வகை தவத்தைத் துறவறவாசிகள் மட்டுமல்லாது, இல்லறவாசிகளும் எளிதில் கடைப்பிடிக்க முயலலாம்.

    தவத்தினால் கிடைக்கக் கூடிய அடிப்படையான பலன் எதுவென்று திருவள்ளுவரைக் கேட்டால், ' இது அது என்று குறிப்பிட்டுச் சொல்லும்படி எதையும் கூறிவிட முடியாது' என்கிறார்.

    "வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்

    ஈண்டு முயலப் படும்"

    அதாவது, இவர் அவர் என்று வேறுபாடு இல்லாமல், இதுதான் வேண்டும்! அதுதான் வேண்டும்! என்று வித்தியாசம் இல்லாமல், யார் எதுவேண்டுமென்று தவம் இயற்றத் தொடங்கினாலும் அவர்கள் வேண்டியது வேண்டியபடி தவத்தினால் கிடைக்கும் என்பது வள்ளுவர் தரும் உறுதிப்பாடு. தவம் தவமாக இருக்கவேண்டும்; அதுபோதும். பலன்கள் இல்லறத்தார்க்கும் உண்டு; துறவறத்தார்க்கும் உண்டு.

    தவம் இயற்றுவதற்கு அடிப்படைத் தேவை அமைதி. நமது உள்ளமும் அமைதியாக இருக்க வேண்டும்; நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலையும் அமைதியாக இருக்க வேண்டும். நம்முடைய உள்ளமாகிய அகத்திலும் சரி. புறமாகிய வெளி உலகத்திலும் சரி ஒரே இரைச்சல் மயமாகவே உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இடைவேளை இல்லாத பரபரப்பில் நமது உள்ளும் புறமும் சிதைந்து கொண்டிருக்கும்போது அமைதியை முதலில் வரவழைப்பது எப்போது?. முதலில் அமைதி வந்தால்தானே பிறகு தவம் இயற்ற முடியும்!; அத் தவத்தை வென்றெடுத்த பிறகுதானே வேண்டிய வெற்றிச் சாதனைகளை எட்டிப் பிடிக்க முடியும். இந்த உலகில் சாதிக்கிறவர்கள் எண்ணிக்கை குறைவாகவும், சாதிக்க முடியாமல் பின்தங்குகிறவர்கள் எண்ணிக்கை கூடுதலாகவும் இருப்பதற்கான காரணத்தை ஆராய்கிறார் திருவள்ளுவர். ஏன் இல்லாதவர்கள் பலராகவும் இருக்கிறவர்கள் சிலராகவும் இருக்கிறார்கள் என்றால், வலிதாங்கும் நோன்பை மேற்கொண்டு தவமியற்றி வெல்பவர்கள் சிலராகவும், மேற்கொள்ள முடியாமல் தோற்பவர்கள் பலராகவும் இருக்கின்றனராம்.

    "இலர்பலராகிய காரணம் நோற்பார்

    சிலர் பலர் நோலாதவர்"

    தவமியற்றுதல் என்பதே தமக்கு வரும் எல்லாத் தொல்லைகளையும் பொறுமையினால் வெற்றிகாண்பதும், அவற்றிலிருந்து வெளியேறுவதும், தொல்லைகளற்ற மனத்தை அமைதியுடன் ஒருநிலைப்படுத்தலும், பிறகு வேண்டியன கிட்ட வேண்டியாங்கு தியானித்தலும் ஆகும்.

    ஓர் அடர்ந்த காட்டிற்குள் ஒரு விறகுவெட்டி சென்றான். செல்லும் வழியில் ஒரு மரத்தடியில் ஒரு துறவி கண்களை மூடித் தியானம் பண்ணிக் கொண்டிருந்தார். விறகு வெட்டி அவர்முன் சிறிதுநேரம் நின்று அவரையே பார்த்து கொண்டிருந்தான். தன்னை யாரோ நின்று பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்த துறவி கண்களைத் திறந்து கையில் கோடரியோடு நின்றிருந்த விறகுவெட்டியைப் பார்த்துப் புன்னகைத்தார். அவனிடம் துறவி பேசினார், "விறகு வெட்டியே நீ அன்றாடம் இங்கு வந்து, ஒரு தலைச்சுமை விறகை எடுத்துச் சென்று ஊரில் விற்றால் உனக்கு எவ்வளவு கிடைக்கும்?". "இந்த ஒருநாளைப் பசியில்லாமல் கடத்துவதற்கு இது பயன்படும்! அவ்வளவுதான்!" என்றான் விறகுவெட்டி." சரி!. இன்று முதல் நான் சொல்கிறபடிக் கேட்டால், நாள்தோறும் நீ இங்கு வந்துபோக வேண்டிய அவசியம் இருக்காது; மரங்களை வெட்டி வனங்களை அழிக்க வேண்டிய நிலைமையும் இருக்காது!" என்றார் துறவி. " சரி! நீங்கள் சொல்லுங்கள்! சொல்கிறபடிக் கேட்கிறேன்" என்றான் விறகுவெட்டி. "இந்த வழியே கிழக்குப் பக்கமாகக் கொஞ்ச தூரம் செல்! அங்கே ஒரு செம்புச் சுரங்கம் இருக்கிறது; ஒரு தலைச்சுமை அளவு வெட்டிக்கொண்டு சென்றால், அதனை விற்று ஒருவாரத்திற்குச் சாப்பிடலாம்! செல்!" என்றார் துறவி. அவ்வழியே சென்று செம்பை வெட்டி, ஊருக்குள் சென்றான் விறகுவெட்டி.

     

    முனைவர் சுந்தர ஆவுடையப்பன்

    அடுத்து ஒருவாரம் கழித்து வந்து துறவிமுன் நின்றான் விறகுவெட்டி. "நீ கடந்த முறை சென்ற செம்புச் சுரங்கத்தைத் தாண்டி, இன்னும் கொஞ்ச தூரம் செல்! அங்கே ஒரு வெள்ளிச் சுரங்கம் இருக்கிறது; அதில் ஒரு தலைச்சுமை அளவுக்கு வெட்டி எடுத்து ஊருக்குள் சென்று விற்றால் ஒரு மாதகாலத்திற்குச் சாப்பிடலாம்" என்றார் துறவி. அப்படியே செய்த விறகுவெட்டி, அடுத்து ஒருமாதம் கழித்துக் காட்டிற்குள் வந்து துறவிமுன் நின்றான். இப்போது துறவி அவனிடம், " கடந்த முறை நீ சென்ற வெள்ளிச் சுரங்கத்தைத் தாண்டிக் கொஞ்ச தூரம் சென்றால், அங்கே தங்கச் சுரங்கம் இருக்கும்; வெட்டியெடுத்துச் செல்!; அடுத்து ஆறு மாத காலத்திற்கு இங்கு நீ வரவேண்டிய தேவை இருக்காது!" என்றார்.

    அடுத்து ஆறு மாதங்கள் கழித்து விறகுவெட்டி துறவிமுன் வந்து நின்றபோது, "தங்கச் சுரங்கம் தாண்டியும் செல்! அங்கே வைரச் சுரங்கம் உனக்காக காத்திருக்கிறது; அது உனக்கு ஒரு வருட காலம் இந்தப்பக்கம் உன்னை வரவிடாமல் பார்த்துக்கொள்ளும்" என்றார் துறவி. அடுத்து ஓராண்டு கழித்துத், துறவிமுன் வந்து விறகுவெட்டி நின்றபோது, அவனை ஏற இறங்கப் பார்த்த துறவி, " இப்போது வைரச் சுரங்கம் தாண்டியும் கொஞ்ச தூரம் சென்று தேடிப்பார்!; எனக்குக் கிடைத்த பொக்கிஷம் உனக்கும் கிடைக்கலாம்!; அதைக்கொண்டு நீ உன் வாழ்க்கையை நிரந்தரமாக அனுபவிக்கலாம்!" என்று விறகுவெட்டியை ஆசீர்வாதம் பண்ணி அனுப்பி வைத்தார் துறவி.

    உள்ளே காட்டிற்குள் சென்ற விறகுவெட்டி, வைரச் சுரங்கத்திற்கும் மேலான பொக்கிஷம்! அதுவும் துறவிக்குக் கிடைத்த பொக்கிஷம்! எதுவாக இருக்கும்?. தேடியலைந்து, களைத்து, நடுக்காட்டில், அடர்வனத்தில், ஓர் அமைதியான இடத்தைக் கண்டுபிடித்து அங்கே அமர்ந்தான். அவனையறியாமலேயே கண்களை மூடித் தியானத்தில் ஈடுபடத் தொடங்கினான். ஆம் பொக்கிஷத்தைக் கண்டுபிடித்து விட்டான்; அது தியானம் என்னும் பொக்கிஷம்! செலவழிக்கச் செலவழிக்க ஆயுள் முழுவதும் தீராத பொக்கிஷம்!. அங்கேயே வேண்டியதைப் பெற்றுக் கொள்ளத் தொடங்கி விட்டான்.

    அமைதி என்பதும் தியானம் என்பதும் தவம் என்பதும் ஒன்றுக்கொன்று உரிமைத் தொடர்புடைய உறவுச் சொற்களாகும். குழப்பம், பரபரப்பு, மனக்கூச்சல் போன்றவை இவற்றிற்கு எதிரான மனோ நிலைகள் ஆகும். குழப்பமில்லாத தெளிவு, பரபரப்பில்லாத அமைதி, மனக்கூச்சல்களற்ற தியான நிலை இவை வாய்த்துவிட்டால் வாழ்தலே தவம்போல ஆகிவிடும். ஒரு காலத்தில் அமைதியைத் தேடி அமைதியான சூழல் நிலவும் இடங்களுக்கு மனிதர்கள் சென்றனர். ஆனால் இன்றோ அப்படிப்பட்ட அமைதியான இடங்கள் அமையாவிட்டாலும், மனப்பயிற்சிகள் மற்றும் எளிய உடற்பயிற்சிகள் மூலமாக அமைத்துக்கொள்ளும் தியான வித்தைகளை மனிதர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். அலைபாயும் கடல், ஓசைமயமாக இருப்பதுபோல, அலைபாயும் எண்ணங்கள் கொண்ட மனமும் ஓசைமயமாகவே திகழ்கிறது. மனத்தின் அலைபாய்தல் அடங்காத வரை, ஓசை ஒடுங்காத வரை, தியானம் சாத்தியப்படுவதே இல்லை.

    தியானம் என்பது மனத்தின் எண்ணங்களை ஒருங்கிணைத்துக், கூர்மைப்படுத்தி, விழிப்புணர்வைப் பிரகாசப்படுத்துகிற பயிற்சியாகும். இதன் மூலமாக மனமும் உடலும் ஒத்திசைவில் இயங்கத் தொடங்குகின்றன. மனமும் உடம்பும் குறிப்பிட்ட இலக்கு நோக்கி விழிப்புணர்வோடு இயங்குவதற்குத் தியானம் பெருமளவில் கைகொடுக்கிறது. மனத்தில் வீண் குழப்பங்களால் ஏற்படும் மன அழுத்தங்களைக் குறைத்திடும் அமைதிப் பணியையும் தியானம் செய்கிறது. தொடர்ந்து மேற்கொள்ளப்பெறும் தியானப்பயிற்சி, நமது நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள உதவுகிறது. தேவையற்ற கவலைகளிலும் பிரச்சினைகளிலும் ஆழ்ந்துபோய் அவற்றிலேயே உழன்று கொண்டிருக்கும் மனத்தின் அவல நிலையையும் தியானம் மாற்றுகிறது. ஒட்டுமொத்தத்தில், தியானம் என்பது நம்மையும் நமது போக்குகளையும் நேர்முறையில் நெறிப்படுத்திடும் அரும்பணியைச் செய்கிறது.

    இந்த உலகத்தில் தனிமனிதர் தொடங்கிப், பெரும்பெரும் நாடுகளின் தலைவர்கள் வரை அமைதியையே பெரிதும் விரும்புகின்றனர். நாடுகளுக்கிடையே வளரும் பகை எண்ணங்களும் போட்டி பொறாமைகளும் அவற்றிற்கிடையே சண்டைகளை உருவாக்கி, அமைதியின்மைக்கு வழி வகுத்துவிடுகின்றன. அமைதியின்மையில் தத்தளிக்கிற நாடுகள், என்றும் எத்துறையிலும் வளர்ந்த நாடுகளாகப் பரிமளிக்கப் போவதில்லை. அதைப்போலத்தான் ஒவ்வொரு தனிமனிதனும். அமைதியின்மையில் தடுமாறுகிற எவரும் சாதனை மனிதராகச் சரித்திரம் படைப்பதில்லை. எல்லா நிலைகளிலும் தமக்கு உள்ளும் புறமுமாக அமைதியே நிலவ வேண்டும் என்று, முயல்கிறவர்கள் உண்மையான தவ வாழ்விற்குச் சொந்தக்காரர்கள். அமைதி தவழும் உள்ளமும் இல்லமும் உண்மையான தவக்குடில்கள்.

    தொடர்புக்கு: 9443190098

    • ரஷ்யா -உக்ரைன் போரால் உலக மக்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
    • கடந்த 2015ம் ஆண்டு ஐ.நா. சபையில் பேசிய பிரதமர் மோடி யோகாவை கற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி மலை உலக சமாதான ஆலயத்தில் 33- வது பிரபஞ்ச மகாதவ வேள்வி நிறைவு விழா இன்று நடை பெற்றது. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்து மதம் இரண்டு முக்கிய போதனைகளை அளித்து உள்ளது. ஒன்று அனைவரையும் ஏற்றுக் கொள்ளுதல் ,மற்றொன்று எல்லா மக்களையும் ஏற்றுக்கொள்ளுதல். உலகத்தில் ஓரிடத்தில் நடைபெறும் தவறால் மற்றொரு இடத்தில் உயிரினம் அழிந்து கொண்டிருக்கிறது. இதனால் இயற்கையோடு இணைந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும். ரஷ்யா -உக்ரைன் போரால் உலக மக்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர். உரத்தின் விலை 95 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் கூடுதல் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

    அதேபோன்று சமையல் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதை இறக்குமதி செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்தியா அமைதியை விரும்புகிறது. நமது நாட்டைச் சுற்றிலும் சீனா துறைமுகங்கள் அமைத்து தளவாடங்களை இறக்கிக் கொண்டுள்ளது. பல்வேறு நாடுகளுக்கு இடையே நடைபெறும் சண்டைகளுக்கு மத்தியில் அமைதியை நிலை நாட்டுவதற்காக கடந்த 2015ம் ஆண்டு ஐ.நா. சபையில் பேசிய பிரதமர் மோடி யோகாவை கற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

    அன்றில் இருந்து 7 வருடங்களாக ஜூன் 21ந் தேதி உலக யோகா தினம் 192 நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பெருமைப்பட வேண்டிய விஷயம். நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது உலக மாற்றம் ஏற்படவென்றால் முதலில் ஒரு மனிதன் மாற வேண்டும். மனிதன் மாறும் போது வீடு மாறும் ,கிராமம் மாறும், சமுதாயம் மாறும், நாடும் மாறும். நாடு மாறும் போது உலகமே மாறுபடுமென்று தெரிவித்தார். உலகில் அமைதி இல்லை என்றால் தனி மனிதனுக்கு அமைதி கிடைக்காது. எனவே அனைவரும் அமைதியை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    • பரமத்திவேலூர் வட்டம், ஜேடர்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது.
    • பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்காத வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து நட வடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம், ஜேடர்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது.

    இதனைத் தொடரந்து இப்பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வருவாய் துறையை சேர்ந்த வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களும் தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது,

    பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்காத வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து நட வடிக்கைகளும் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக, ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் தகாத சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சுமூக நிலைக்கு கொண்டு வர இரு பிரிவினருக்கான அமைதி பேச்சுவார்த்தை மாவட்ட கலெக்டர் உமா தலை மையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது.

    பின்னர் ஜேடர் பாளையம் அருகே எம்.குன்னத்தூர் பகுதியில் பாதிப்புக்கு உள்ளான விளைநிலங்களை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

    அசம்பாவித சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பொதுமக்கள் தங்கள் கிராமங்களுக்கு உட்பட்ட பகுதியில் சந்தே கப்படும்படியான நபர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நிகழ்வுகள் அறியப்பட்டால் உடனடியாக 94981 81340 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரி விக்குமாறு அறிவுறுத்தப் பட்டு உள்ளது.

    மேலும், இதுபோன்று 2 சமுதாய பிரிவினருக்கு இடையேயான பிரச்ச னையில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்ப டுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்நிகழ்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) ரமேஷ், உதவி இயக்குநர் (ஊராட்சி) அசோக்குமார், ஆகியோர் உட்பட காவல் துறையினர் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் மழை நீர் தேங்கியுள்ளது.
    • 80 பேர் சென்னை ஆவடியில் இருந்து கடலூருக்கு வருகை தந்தனர்.

    கடலூர்:

    வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ள நிலையிலும், வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள காரணத்தினாலும் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் மழை நீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று (2-ந் தேதி) முதல் 4-ந் தேதி வரை கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் வரும் நிலையில் மிகுந்த அமைதியுடன் காணப்பட்டு வருகின்றது.

    இதையொட்டி முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை சேர்ந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் 80 பேர் சென்னை ஆவடியில் இருந்து கடலூருக்கு வருகை தந்தனர். இதில் 25 பேரை கொண்ட ஒரு குழுவினர் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். தற்போது இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் 55 பேரை கொண்ட 2 குழுவினர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலு வலகத்தில் தங்கியுள்ளனர். தற்போது புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை யொட்டி மீட்பு படையை சேர்ந்த அனைவரும், அனைத்து பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் பட்சத்தில், கலெக்டர் எந்த இடத்திற்கு செல்ல அறிவுறுத்துகிறாரோ அந்த இடங்களுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர். 

    • தேவாலயங்கள் மனிதர்களுக்கும் ஆறுதலை தரக்கூடிய இடமாக இருக்கிறது.
    • இயேசு ஆலயத்தை தன் தந்தையின் இல்லமாக பார்த்தார்.

    தேவாலயம் அல்லது வழிபாட்டுக்கூடம் என்பது எல்லா மனிதர்களுக்கும் ஆறுதலை தரக்கூடிய இடமாக இருக்கிறது. மனதில் உள்ள கவலைகளை, கண்ணீரை கொட்டித் தீர்க்கிற இடமாகவும், விடை தெரியா கேள்விகளுக்கு விடை தருகிற இடமாகவும், வழி தெரியா வாழ்க்கைக்கு வழிகாட்டுகிற இடமாகவும் இருக்கிறது.

    ஆலயத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்புகிற போது ஒரு இனம் புரியாத அமைதி மனதில் தங்கி விடுகிறது. வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நடந்திட ஆற்றல் கிடைக்கிறது. அத்தகைய சிறப்புமிகு ஆலயத்தை யூதர்கள் எப்படி பார்த்தார்கள்? இயேசு எப்படி பார்த்தார்? நாம் எப்படி பார்க்க வேண்டும்? என்கிற மூன்று நிலைகளில் யோவான் நற்செய்தி 2-வது அதிகாரம் 13 முதல் 22 வரை உள்ள இறைவார்த்தை பகுதியை தியானித்து பார்ப்போம்...! அந்த பகுதி பின்வருமாறு:

    யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார். கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும், அங்கே உட்கார்ந்து இருந்து நாணயம் மாற்றுவோரையும் கண்டார். அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி அவர்கள் எல்லோரையும் கோவிலில் இருந்து துரத்தினார். ஆடு, மாடுகளையும் விரட்டினார். நாணயம் மாற்றுவோரின் சில்லரைக் காசுகளையும் அவை இருந்த மேசைகளையும் கவிழ்த்து போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், இவற்றை இங்கிருந்து எடுத்துச்செல்லுங்கள். என் தந்தையின் இல்லத்தை சந்தை ஆக்காதீர்கள்' என்று கூறினார்.

    யூதர்கள் அவரைப் பார்த்து, இவற்றை எல்லாம் செய்வதற்கு உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு இயேசு மறுமொழியாக, `இக்கோவிலை இடித்து விடுங்கள் நான் மூன்று நாளில் கட்டிவிடுவேன்' என்றார்.

    அப்போது யூதர்கள், `இந்த கோவிலை கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே நீர் இதை மூன்றே நாளில் எழுப்பிவிடுவீரோ' என்று கேட்டார்கள். ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலை பற்றியே பேசினார் என்பது அவர்களுக்கு புரியவில்லை. (யோவான் 2:13-22)

    மேலே பார்த்த நற்செய்தி பகுதியில், இயேசு கோபப்படுவதை பார்க்கிறோம். அமைதியையும், கனிவையும், தனது வாழ்நாள் முழுவதும் வெளிப்படுத்திய இயேசு கோபப்படுகிறாறே அது நியாயமா என்ற கேள்வி நம்மில் பலருக்கு தோன்றலாம். ஆனால் இயேசு எதற்காக கோபப்பட்டார் என்பதை சிந்தித்து பார்க்கும் போது நமக்கு புரியும்.

    இயேசு ஆலயத்தை தன் தந்தையின் இல்லமாக பார்த்தார். எனவே தான் அதனை வியாபாரக்கூடமாக பார்த்த யூதர்கள் மீது கோபம் கொண்டார். அதனால் தான் அவரது கோபம் சாதாரணமாய் இல்லை. கடுமையாக இருந்தது. சாட்டையால் அவர்களை அடித்து விரட்டினார். அவர்களின் பொருட்களை கவிழ்த்துப் போடுகிறார்.

    இதன் மூலம் இயேசு தன் தந்தையின் இல்லமாகிய தேவாலயத்திற்கு எத்தகைய முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது தெரிகிறது. இதுமட்டுமன்று நம் கண் எதிரே நடக்கும் அநீதியை கண்டு அமைதியாக இருக்காமல் குரல் கொடுக்க வேண்டும் என்கிற செய்தியையும் இயேசு நமக்கு தருகிறார். இயேசுவின் சாட்டையடி யூதர்களுக்கு மட்டுமல்ல மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி, ஆலயங்களை வியாபாரக்கூடமாய் மாற்றும் ஒவ்வொருவருக்குமே பொருந்தும்.

    இரண்டாவதாக இந்த பகுதியில் நாம் கவனிக்க வேண்டியது யோவான்: 2:22. இதில் இயேசு, 'இந்தக் கோவிலை இடித்து விடுங்கள், நான் மூன்று நாளில் கட்டிவிடுவேன்' என்று கூறுகிறார். இதில் அவர் கோவிலாகிய கட்டிடத்தை குறிப்பிடவில்லை. மாறாக தம் உடலாகிய கோவில் பற்றியே குறிப்பிடுகிறார். இதன் வழியாக அவர் இறந்து மூன்றாம் நாள் உயிர்தெழுவதையே, `மூன்று நாளில் கட்டி விடுவேன்' என்று குறிப்பிடுகிறார்.

    ஆக, தனது உடலை இயேசு கோவிலாகவே பார்த்தார். தன்னில் இருக்கும் இறைவனை நற்செயல்களால் வெளிப்படுத்தி நடமாடும் ஆலயமாகவே வாழ்ந்தார். அவ்வாறு வாழ நமக்கும் அழைப்பு விடுக்கிறார். இதனையே திருத்தூதர் பவுல் கொரிந்திய மக்களுக்கு எழுதிய கடிதத்தில், நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும், கடவுளின் ஆவியார் உங்களுள் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்கு தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது. நீங்களே அக்கோவில், என்று கூறுகிறார் (1 கொரிந்தியர் 3:16).

    இதன் மூலம் நமது உடல் இறைவனின் ஆலயம் என்பது தெளிவாக தெரிகிறது. அந்த உடலை நாம் எப்படி பார்க்க வேண்டும் என்பதும் புரிகிறது. ஆகவே நாம் நமது உடலில் இறைவன் தங்கியிருக்கிறார் என்பதை நம்புகிறோமா? அப்படி நம்பினால், நம்மில் இருக்கும் இறைவனை நமது நல்ல செயல்களால் நமக்கு அடுத்து இருப்பவருக்கு வெளிப்படுத்தி இருக்கிறோமா? சிந்திப்போம்.

    அன்பு, அமைதி, இரக்கம், மன்னிப்பு, சமத்துவம் ஆகிய இறைத்தன்மைகளை அனைவருக்கும் வெளிப்படுத்துவோம். நடமாடும் ஆலயங்களாக வாழ்வோம்.

    • சிறையில் உள்ள அவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது
    • அந்நாட்டின் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க மக்களைத் தூண்டியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

    ஈரானில் கடந்த 1979 ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின் அந்நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் அமல்படுத்தத்தப்பட்டு பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இதை எதிர்த்து அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது எதிர்ப்புக்குரல் எழுந்து வந்தது. அப்படி அரசின் அடிப்படைவாதத்தை எதிரித்து குரல் கொடுத்துவந்தவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் பெண்கள் ஹிஜாப் அணிய நிர்பந்திக்கப்படுவதற்கு எதிராகவும் அந்நாட்டின் மரண தண்டனைக்கு எதிராகவும் போராடிவந்த பெண் பத்திரிகையாளரும் சமூக செயல்பாட்டாளருமான நர்கிஸ் முகமதி கடந்த 2021 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உள்ள அவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது உலக அளவில் பேசுபொருளானது. பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து போராடி வருவதால் சிறையில் உள்ள அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. எனவே ஈரான் அரசு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

     

    இந்நிலையில்தான் நர்கிஸ் முகமதி அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்த குற்றத்திற்காக 1 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டின் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க மக்களைத் தூண்டியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 3 வருடங்களில் 6 முறை அவர் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு இதுவரை மொத்தமாக 16 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடந்த விசாரணையில் அவருக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்ட நிலையில் தற்போது மேலும் 1 வருடம் சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது.

    சமீப காலங்களாக பெண்களின் ஆடை விஷயத்தில் மிகவும் கடுமை காட்டி வரும் ஈரான் அரசு பொது இடங்களில் சிசிடிவி கண்கணிப்பு மூலமும் எந்நேரமும் தீவரமாக கண்காணித்து வருகிறது . இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் சிறையில் இருந்து நர்கிஸ் வெளியிட்ட வீடியோவில் பெண்களுக்கு எதிரான தீவிரமான போரை இரான் அரசு முன்னெடுத்து நடத்தி வருகிறது என்று தெரிவித்திருந்தார். 

     

    முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஹிஜாப் அணியாத காரணத்தால் இளம்பெண் போலீசாரால் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் ஹிஜாபுக்கு எதிரான கிளர்ச்சி மிகப்பெரிய அளவில் வெடித்தது. இருப்பினும் போராட்டக்காரர்கள் மீது கடுமையான அடக்குறையை பிரயோகப்படுத்தி ஈரான் அடிப்படைவாத அரசு கிளார்ச்சியைக் கட்டுக்குள் கொண்டுவந்தது குறிப்பிடத்தத்க்கது. 

     

    • குடியரசு கட்சிக்கான வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார்.
    • டிரம்ப் மீது நடந்த படுகொலை முயற்சிக்கான தாக்குதலுக்கு ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சிக்கான வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இந்தத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு வெளிநாட்டு தலைவர்களிடம் டொனால்டு டிரம்ப் ஆதரவு கேட்டு பேசி வருகிறார்.

    இந்நிலையில், அதிபர் வேட்பாளரான டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசி வழியே பேசினார்.

    இதுதொடர்பாக டிரம்ப் வெளியிட்ட சமூக ஊடக செய்தியில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், நானும் தொலைபேசி வழியே பேசிக் கொண்டோம். எங்களுடைய உரையாடல் நன்றாக இருந்தது.

    அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சிக்கான வேட்பாளராக நியமிக்கப்பட்டதற்காக எனக்கு அவர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

    என்னை தொடர்பு கொண்டதற்காக அதிபர் ஜெலன்ஸ்கியை பாராட்டுகிறேன். அடுத்த அமெரிக்க அதிபராக உலகத்திற்கு நான் அமைதியை கொண்டு வருவேன்.

    பல உயிர்களை பலி வாங்கி, எண்ணற்ற குடும்பத்தினரை துன்பத்தில் ஆழ்த்திய போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என

    பதிவிட்டுள்ளார்.

    இந்த உரையாடலின்போது டிரம்ப் மீது நடந்த படுகொலை முயற்சிக்கான தாக்குதலுக்கு ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×