search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிக்கல் சிங்கார வேலவர் கோவிலுக்கு திருஞானசம்பந்தர் பாடிய பதிகங்கள்
    X

    சிக்கல் சிங்கார வேலவர் கோவிலுக்கு திருஞானசம்பந்தர் பாடிய பதிகங்கள்

    • திருஞானசம்பந்தர் சிக்கல் சிங்கார வேலவர் கோவிலுக்கு சென்று பதிகம் பாடினார்.
    • இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த பதிகம் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

    திருஞானசம்பந்தர் சிக்கல் சிங்கார வேலவர் கோவிலுக்கு சென்று பதிகம் பாடினார். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த பதிகம் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

    வானுலா வும்மதி வந்துலா வும்மதில் மாளிகை

    தேனுலா வும்மலர்ச் சோலைமல் குந்திகழ் சிக்கலுள்

    வேனல்வே ளைவிழித் திட்டவெண் ணெய்ப்பெரு மானடி

    ஞானமா கந்நினை வார்வினை யாயின நையுமே.

    வானத்தே உலாவும் மதிவந்து பொருந்தும் மதில்கள் சூழ்ந்த

    மாளிகைகளும், தேன்பொருந்திய மலர்களை உடைய சோலைகளும்

    நிறைந்து விளங்கும்.

    திருச்சிக்கல் என்னும் தலத்தில், வேனிற் காலத்துக் குரியவனாகிய மன்மதனை நெற்றி விழியால் எரித்தழித்த வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை அவனருளால் விளைந்த பக்தி ஞானத்தாலே நினைப்பவர் வினைகள் நைந்துஅறும்.

    மடங்கொள்வா ளைகுதி கொள்ளும் மணமலர்ப் பொய்கைசூழ்

    திடங்கொள் மாமறை யோரவர் மல்கிய சிக்கலுள்

    விடங்கொள் கண்டத்து வெண்ணெய்ப்பெரு மானடி மேவியே

    அடைந்து வாழுமடி யாரவர் அல்லல் அறுப்பரே.

    இளமை பொருந்திய வாளைமீன்கள் துள்ளிக் குதித்துக் களிக்கும் மணம்

    பொருந்திய மலர்கள் நிறைந்த பொய்கைகள் சூழ்ந்ததும்

    மனஉறுதியுடைய சிறந்த மறையவர்கள் நிறைந்துள்ளதுமான

    சிக்கலில் எழுந்தருளிய, விடம் தங்கிய கண்டத்தினை உடைய

    வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை மனத்தால் விரும்பியவராய்

    அடைந்து வாழும் அடியவர்கள் அல்லல்கள் நீங்குவர்.

    நீலநெய் தல்நில விம்மல ருஞ்சுனை நீடிய

    சேலுமா லுங்கழ னிவ்வள மல்கிய சிக்கலுள்

    வேலவொண் கண்ணியி னாளையொர் பாகன்வெண் ணெய்ப்பிரான்

    பாலவண் ணன்கழ லேத்தநம் பாவம்ப றையுமே.

    நீலநிறம் பொருந்திய நெய்தல் மலர்கள் விளங்கி மலரும் சுனைகள் பலவற்றைக் கொண்டதும், சேல்மீன்கள் துள்ளும் வயல் வளம் நிறைந்ததுமான சிக்கல் என்னும் திருப்பதியில் வேல் போன்ற ஒளிநிறைந்த கண்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட வெண்ணெய்ப் பிரானாகிய பால்வண்ண நாதனின் திருவடிகளை ஏத்தின் நம் பாவங்கள் நீங்கும்.

    கந்தமுந் தக்கைதை பூத்துக் கமழ்ந்து சேரும்பொழிற்

    செந்துவண் டின்னிசை பாடல்மல் குந்திகழ் சிக்கலுள்

    வெந்தவெண் ணீற்றண்ணல் வெண்ணெய்ப்பி ரான்விரை யார்கழல்

    சிந்தைசெய் வார்வினை யாயின தேய்வது திண்ணமே.

    மணம் முற்பட்டுச் சென்று பரவுமாறு தாழைகள் பூத்துக் கமழும்

    பொழில்களில் வண்டுகள் செந்து என்னும் ஒருவகைப் பண்ணோடு பாடும்.

    பாடல்களைக் கொண்டு விளங்கும் சிக்கல் என்னும் தலத்தில், கற்பம்

    செய்தமைத்த திருவெண்ணீற்றை அணிந்த தலைமையாளனாகிய

    வெண்ணெய்ப்பிரானின் மணம் பொருந்திய திருவடிகளை நினைபவர்

    வினைப்கள் தேய்வது திண்ணம்.

    மங்குல்தங் கும்மறை யோர்கள்மா டத்தய லேமிகு

    தெங்குதுங் கப்பொழிற் செல்வமல் குந்திகழ் சிக்கலுள்

    வெங்கண்வெள் ளேறுடை வெண்ணெய்ப்பி ரானடி மேவவே

    தங்குமேன் மைசர தந்திரு நாளுந்த கையுமே.

    மேகங்கள் தங்கும் மறையவரின் மாடவீடுகளையும் அவற்றின் அருகே

    உயர்ந்து வளர்ந்துள்ள தென்னைகளை உடைய சோலைகளையும்

    கொண்டு செல்வம் நிறைந்துவிளங்கும் சிக்கல் என்னும் தலத்தில்

    சினம்மிக்க கண்களை உடைய வெள்ளேற்று ஊர்தியை உடைய

    வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை அடையின், மேலான

    கதி கிடைத்தல் உறுதி. செல்வம் நாள்தோறும் பெருகும்.

    வண்டிரைத் தும்மது விம்மிய மாமலர்ப் பொய்கைசூழ்

    தெண்டிரைக் கொள்புனல் வந்தொழு கும்வயற் சிக்கலுள்

    விண்டிரைத் தம்மல ராற்றிகழ் வெண்ணெய்ப் பெருமானடி

    கண்டிரைத் தும்மன மேமதி யாய்கதி யாகவே.

    மணம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த காழிப் பதியுள் தோன்றிய

    ஞானசம்பந்தன் செவ்விய தண்மையான அழகிய பொழில்கள் சூழ்ந்த

    சிக்கலில் விளங்கும் வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளைப் போற்றி

    இசையோடு பாடிய இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர்

    சிவலோகத்தில் கற்பமுறையில் உண்டான திருவெண்ணீற்றை அணிந்துள்ள சிவபெருமான் திருவடிகளை மேவுவர்.

    Next Story
    ×