search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆடியில் ஊஞ்சலாடும் காளிகாம்பாள்
    X

    ஆடியில் ஊஞ்சலாடும் காளிகாம்பாள்

    காளிகாம்பாள் தலத்தில் விரும்பி வந்து அமர்ந்து, தன்னை தினம், தினம் நாடி வரும் பக்தர்களை அருள் செய்து மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் வாழ வைக்கிறாள்.
    சென்னையில் அம்பிகை வீற்றிருந்து அருள்பாலிக்கும் பல்வேறு தலங்கள் உள்ளன. அவற்றுள் பாரிமுனை தம்புச்செட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் தலம் தனித்துவம் கொண்டது. சென்னை மாநகருக்கு பெயர் தந்த இந்த அம்மன், இத்தலத்தில் விரும்பி வந்து அமர்ந்து, தன்னை தினம், தினம் நாடி வரும் பக்தர்களை அருள் செய்து மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் வாழ வைக்கிறாள்.

    கருணை தெய்வமான இவள் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்... ஏராளம்... அவற்றை எவராலும் பட்டியலிட முடியாது.பொதுவாக தமருகம், சூலம், கட்கம், கபாலம், கேடகம் முதலியன கொண்டு கோப ரூபத்துடன் இருப்பவளே ‘காளி’ என்று சொல்வார்கள். ஆனால், அன்னை ஸ்ரீகாளிகாம்பாளின் ரூபத்தினை சற்றே உன்னிப்பாகப் பார்த்தால், அன்னை எழில் கொஞ்சும் திருமேனியுடன் இருப்பதை காணலாம்.

    ஆணவத்தை அடக்கும் அங்குசம். ஜென்ம பாப வலைதனில் இருந்து மீட்கும் பாசம், சுகபோகத்தினை நல்கும் நீலோத்பவ மலர் மற்றும் தன் திருவடிகளை தஞ்சமென அடைய உயிர்கட்குக் காட்டும் வரத முத்திரை, சோமன், சூரியன், அக்னி என்ற மூன்று கண்கள், நவரத்ன மணிமகுடம், வலது காலைத் தொங்க விட்டுக் கொண்டு அமர்ந்த கோலம் என்று அன்னை நம் மனதை மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்க வைக்கிறாள்.

    அன்னையின் இத்திருமேனி, அன்னை ஸ்ரீலலிதா பரமே ஸ்வரியின் ரூபம் கொண்டது. ஆனந்த வாழ்வளிக்கும் அன்னை, வேண்டுபவர்க்கு வேண்டுவன அளித்து ஆனந்தம் நல்குகிறாள். காளிகாம்பாள் வரப்ரதாயினி. வேத நாதமாய், சுக வாரிதியாய், ஞானச்சுடராய் விளங்கி பெருங்கருணையோடு ஜீவன்களைக் காத்து அருளும் அன்னையினைக் காண கண்கள் கோடி வேண்டும்.

    என்னே அவளின் அழகு! என்னே அவளின் கருணை! என்னே அவளின் அன்பு! என்னே அவளின் பரிவு! என்னே அவளின் அரிய சாந்தம்! என்னே அவளின் பிரகாசம்! ஆகா! சொல்ல வார்த்தைகள் இல்லை. ஆம், காளிகாம்பாளை நேரில் தரிசித்து உள்ளம் உருகி நின்று அவளது கருணையை அனுபவித்தவர்களுக்கே அது விளங்கும். புரியும்!! ஆம்! உண்மையில் இவள் காளி இல்லை! கருணை உள்ளம் கொண்ட தாய்.

    உண்மையில் கொடுமைகளை அழித்து நல்லவர்களை காக்கும் பொருட்டு அன்னை எடுத்து அவதாரமே காளிகாம்பாள் திருஅவதாரம். காலனையே விரட்டுவதனால் அவள் ‘காளி’ என பெயர் பெற்றாள். அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞ்ஞான ஒளியை ஏற்றும் பரிபூரண ஞானமாகிய ஆனந்த ரூபிணியே ஸ்ரீகாளிகாம்பாள்.

    அன்னை போகங்களை அருளும் காலத்தில் ஸ்ரீராஜராஜேஸ்வரியாகவும், புவனேஸ்வரியாகவும் காட்சி தந்து இகபர சவுபாக்கியங்களை நல்குகின்றாள். அதர்மங்களை அழித்து தர்மங்களை நிலைநாட்ட வேண்டும் பொழுது அவளே தர்ம சம்வர்த்தினியாக, ஸ்ரீதுர்க்கையாக மாறுகின்றாள். சும்பன், நிசும்பன், மகிஷன் போன்றவர்களை அழித்து தர்மங்களை நிலைநிறுத்தி நல்லவர்களைக் காக்கின்றாள். உலக வாழ்க்கையை வெறுத்து விரக்தியுடன் வந்து தரிசனம் செய்யும் பக்தனுக்கு முக்தி அளிக்கும் சக்தி கொண்டவள் அம்பிகை-காளிகாம்பாள் ஆவாள்.

    அன்னை காளிகாம்பாளினாலேயே நம் மாநகருக்கு சென்னை என்ற பெயர் ஏற்பட்டது. ஆதி நாளில் அன்னை காளிகாம்பாளைச் சென்னம்மன் என்ற பெயரால் போற்றி அழைத்து வந்தனர். அன்னைக்குச் சென்னம்மன் என்ற பெயர் ஏற்பட்டது போன்றே கமடேசுவரருக்கும் சென்னப்பன் என்ற பெயர் வழங்கியுள்ளது. சென்னம்மன் என்ற அன்னையின் பெயரே மாநகருக்கும் சென்னை என்று அமைந்துள்ளது.

    அன்னை காளிகாம்பாளுக்கு அட்சாசொரூபிணி என்ற பெயரும், கோட்டையம்மன் என்ற பெயரும் உண்டு. ஒரு காலத்தில் அன்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் கோவில் கொண்டு விளங்கிய காரணத்தால் கோட்டையம்மன் என்ற பெயர் பூண்டாள் என்று கூறுவர். கோட்டைக் கடைக்காரர்களின் உபயம் இன்றும் அன்னை கோவிலில் ஆண்டுக்கொரு முறை நடைபெற்று வருகின்றது.

    ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரம் இன்றும் அன்பர்கள் தரிசிக்கக்கூடிய நிலையில் காளிகாம்பாள் கோவிலில் உள்ளது ஒரு தனிச்சிறப்பு.
    இத்தலத்தில் அன்னை காளிகாம்பாள் மேற்கு நோக்கித் திருக்கோவில் கொண்டு விளங்குகின்றாள். பொதுவாக மேற்கு முகமாக எழுந்தருளிக் காட்சி தரும் அன்னையருக்கு அருளும், சிறப்பும் மிக அதிகம். அன்னை காளிகாம்பாளின் அருட் சிறப்பு சொல்லில் அடங்காதது.

    இத்திருக்கோவிலில் காமடேசுவரர், அருணாசலேசுவரர், நடராசர் ஆகியோர் திருச்சந்நிதிகளும் உள்ளன. இத்தகைய சிறப்புகள் நிறைந்த காளிகாம்பாள் ஆலயத்தில் ஆடி மாதம் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. நாளை தொடங்கி 9 வாரம் வெள்ளிக்கிழமை தோறும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது.
    அதுபோல வருகிற 22-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் 10 வாரங்களுக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகை அபிகேஷம் நடைபெறும். அந்த அபிஷேகங்களை காண நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    எனவே ஆடி மாதம் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களால் எந்த கிழமை காளிகாம்பாள் ஆலயத்துக்கு செல்ல முடிகிறதோ அன்று சென்று வழிபடுங்கள். அம்மன் ஆலயத்துக்குள் செல்லும் போது சும்மா கையை வீசிக் கொண்டு செல்லக்கூடாது. உங்களால் முடிந்த அளவுக்கு மலர்கள் வாங்கிக்கொடுங்கள்.

    தீபம் ஏற்ற எண்ணெய் வாங்கி செல்லுங்கள். பூஜைக்கு தேவையானதை வாங்கிக் கொடுங்கள். இவையெல்லாம் உங்கள் தோஷங்களை நீக்கி புண்ணியத்தைப் பெற்றுத்தரும். நீங்கள் காளிகாம்பாளுக்கு என்னென்ன வாங்கிக் கொடுக்கலாம் என்ற விவரம் கீழே ஞாயிற்றுக்கிழமை அபிஷேக பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷ அபிஷேகம் :

    காளிகாம்பாள் கோவிலில் ஆடிப்பெரு விழாவின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 22.7.18அன்று தொடங்கி 23.9.18 வரை மொத்தம் 10 வாரங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.
    ஞாயிற்றுக்கிழமைகளில் காளிகாம்பாளுக்கு நடத்தப்படும் அபிஷேகங்களை பக்தர்கள் நேரில் கண்டுகளித்து பலன் பெறலாம்.

    ஒவ்வொரு வார ஞாயிற்றுக்கிழமையும் ஒவ்வொரு விதமான பொருட்கள் 108 குடங்களில் எடுத்து வரப்பட்டு அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படும்.
    எந்தெந்த வாரங்களில் என்னென்ன பொருட்களில் அபிஷேகம் நடைபெற உள்ளது என்ற விவரம் வருமாறு:-

    22-7-18 (முதல் வாரம் 108 குடங்களில் பால் அபிஷேகம் நடைபெறும்).
    29-7-18 (2-வது வாரம் 108 குடங்களில் இளநீர் கொண்டு வந்து அபிஷேகம் நடைபெறும்)
    5-8-18 (3-வது வாரம் 108 குடங்களில் தயிர் எடுத்து வந்து அபிஷேகம் நடைபெறும்)

    12-8-18 (4-ம் வாரம் அன்று 108 குடங்களில் மஞ்சள் கொண்டு வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும்)
    19-8-18 (5-ம் வாரம் அன்று 108 குடங்களில் சந்தனம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும்.
    26-8-18 (6-ம் வாரம் அன்று 108 குடங்களில் விபூதி எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும்)

    2-9-18 (7--ம் வாரம் - அன்று 108 குடங்களில் பன்னீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்யப்படும்)
    9-9-18 (8-ம் வாரம் - அன்று 108 குடங்களில் பஞ்சாமிர்தம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும்)
    16-9-18 (9-ம் வாரம் - அன்று 108 குடங்களில் புஷ்பங்கள் எடுத்து வந்து அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படும்)
    23-9-18 (10-ம் வாரம் - அன்று 108 குடங்கள் நிறைய புஷ்பங்கள் எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு புஷ்பாஞ்சலி செய்யப்படும்)

    ஞாயிறு தோறும் இந்த சிறப்பு அபிஷேகத்தை பகல் 11 மணிக்கு செய்வார்கள். காளிகாம்பாளுக்கு நடக்கும் இந்த அபிஷேக, ஆராதனையை ஒரு தடவை நேரில் தரிசனம் செய்தாலே போதும், ஆடி மாத அம்மன் தரிசனத்துக்கான முழு திருப்தியும் உங்களுக்குக் கிடைக்கும்.

    இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் கே.மூர்த்திஆச்சாரி, அறங்காவலர்கள் டி.ஜெகதீசன் ஆச்சாரி, கே.யுவராஜ் ஆச்சாரி, இரா.ராஜேந்திரகுமார் ஆச்சாரி, பி.பஞ்சாட்சரம் ஆச்சாரி ஆகியோர் செய்துள்ளனர்.

    அபிஷேக ஆராதனைகள் தொடர்பான மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் 044- 25229624 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.
    Next Story
    ×