search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அண்ணாமலையார் கோவில் நடைபெறும் பஞ்ச பருவ பூஜைகள்
    X

    அண்ணாமலையார் கோவில் நடைபெறும் பஞ்ச பருவ பூஜைகள்

    திருவண்ணாமலை ஆலயத்தில் பஞ்ச பருவ பூஜைகள் சிறப்பு பெற்றுள்ளன. இந்த பூஜைகள் வரும் நாட்கள் மற்றும் நேரத்தை தெரிந்து கொண்டு திருவண்ணாமலைக்கு சென்றால் மிகவும் புண்ணியம் கிடைக்கும்.
    தமிழகத்தில் உள்ள பழமையான ஆலயங்களில் இன்றும் கால பூஜைகள் தினமும் தவறாமல் நடத்தப்பட்டு வருகின்றன. சில ஆலயங்களில் 5 கால பூஜைகள் நடப்பதுண்டு. சில ஆலயங்களில் 6 கால பூஜைகள் நடைபெறும். திருவண்ணாமலை ஆலயத்தில் தினமும் 6 கால பூஜைகள் நடத்தப்படுகிறது. தினசரி நடக்கும் பூஜைக்கு நித்திய கிரியை என்று பெயர். அப்படி அல்லாமல் விசேஷமாக நடத்தப்படும் பூஜைகளுக்கு நைமித்திக பூஜைகள் என்று பெயர். இதில் நித்திய பூஜைகளை எந்தெந்த காலங்களில் நடத்த வேண்டும் என்று ஆகமங்களில் நம் முன்னோர்கள் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

    6 கால பூஜை என்பது உஷத் காலம், கால சந்தி, உச்சி காலம், சாயரட்சை, இரண்டாம் காலம், அர்த்தஜாமம் ஆகியவற்றை குறிக்கும். சூரிய உதயத்தை கணக்கிட்டு நாழிகை அடிப்படையில் இந்த பூஜைகளை செய்வார்கள். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள் ஆகும்.

    உஷத் காலம் என்பது சூரிய உதயத்திற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன்பு தொடங்கி சூரிய உதயம் வரை உள்ள காலம் ஆகும். கால சந்தி என்பது சூரிய உதயம் முதல் 10 நாழிகை உள்ள காலமாகும். உச்சிகாலம் என்பது மதியம் 11.30 மணி முதல் 12.30 மணி வரை உள்ள காலம் ஆகும். சாய ரட்சை என்பது சூரியன் மறைவதற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன்பு தொடங்கி சூரியன் மறையும் வரை உள்ள நேரத்தை குறிக்கும். இரண்டாம் காலம் என்பது சூரியன் மறைவிலிருந்து மூன்றே முக்கால் நாழிகை வரை உள்ள காலம் ஆகும். அர்த்த ஜாமம் என்பது கோவில் நடைஅடைக்கும் சமயத்தில் நடத்தப்படும் பூஜை ஆகும்.

    பொதுவாக அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடையை திறந்து இரவு 9 மணிக்கு அடைத்து விட வேண்டும் என்பது ஆகம விதியாகும். திருவண்ணாமலை ஆலயம் மற்ற ஆலயங்களை விட பெரிய ஆலயம் என்பதாலும் நிறைய சன்னதிகளை கொண்டு இருப்பதாலும் மற்ற சிவாலயங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பூஜை வகைகளை கொண்டுள்ளது.

    குறிப்பாக திருவண்ணாமலை ஆலயத்தில் பஞ்ச பருவ பூஜைகள் சிறப்பு பெற்றுள்ளன. மாத பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, பிரதோசம், சோமவாரம், சுக்கிரவாரம், கிருத்திகை, சதுர்த்தி, சஷ்டி ஆகியவை பஞ்ச பருவ பூஜைகளாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பூஜைகள் வரும் நாட்கள் மற்றும் நேரத்தை தெரிந்து கொண்டு திருவண்ணாமலை ஆலயத்துக்கு சென்றால் மிகவும் புண்ணியம் பெறும் வகையில் வழிபாடுகள் செய்து விட்டு வரலாம்.

    தமிழ் மாத பிறப்பு வழிபாடு

    ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பு அன்றும் திருவண்ணாமலையில் கிரிவலம் நடைபெறுவது பழங்காலத்தில் மிகவும் புகழ் பெற்று இருந்தது. தற்போது அது குறைந்து பவுர்ணமிக்கு கிரிவலம் செல்வது அதிகரித்து உள்ளது. தமிழ் மாத பிறப்பு அன்று திருவண்ணாமலையில் பஞ்ச மூர்த்திகளுக்கும் அபிஷேக சிறப்பு ஆராதனைகள் நடத்துவார்கள். அன்று மாலை இரண்டாம் கால பூஜையின்போது பஞ்ச மூர்த்திகளையும் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள மாத பிறப்பு மண்டபத்துக்கு எழுந்தருள செய்வார்கள்.

    அந்த மாத பிறப்பு மண்டபம் மிக மிக பழமையானது. அந்த மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகளையும் அலங்காரத்துடன் பார்ப்பது கண்களுக்கு விருந்து படைப்பதாக இருக்கும்.



    பவுர்ணமி

    பஞ்ச பருவ பூஜைகளில் பவுர்ணமி தினத்தில் நடக்கும் பூஜை மிகவும் விசேஷமானது. அன்றைய தினம் கிரிவலத்திற்காக லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலையில் திரள்வது உண்டு. ஆனால் பெரும்பாலானவர்கள் ஆலயத்தில் நடக்கும் சிறப்பு பூஜையில் பங்கேற்பதில்லை. அன்றைய தினம் மாலை உற்சவ மூர்த்தியான சந்திரசேகருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வார்கள். பிறகு அவர் அலங்காரம் செய்யப்பட்டு புறப்பாடு ஆகி மூன்றாம் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு அவருக்கு தீபாராதனை உள்ளிட்ட உபசாரங்கள் நடத்தப் படும். இதை நேரில் கண்டுகளிப்பது மிகுந்த பலன் தருவதாக கருதப்படுகிறது.

    அமாவாசை

    பவுர்ணமி போன்றே அமாவாசை தினத்தன்றும் இரண்டாம் கால பூஜையின்போது உற்சவர் சந்திரசேகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்வார்கள். நான்காவது பிரகாரத்தில் தென்மேற்கு திசையில் அமைந்துள்ள அமாவாசை மண்டபத்தில் சந்திரசேகரை எழுந்தருள செய்வார்கள். அங்கு அவருக்கு தூப தீப ஆராதனைகள் மிகவும் விமர்சையாக நடைபெறும். அந்த ஆராதனை முடிந்த பிறகு அவர் ஆலயத்துக்குள் செல்வார்.
    அமாவாசை தோறும் நடைபெறும் இந்த சிறப்பு பூஜையை காண ஏராளமானோர் அமாவாசை மண்டபத்தில் திரள்வது உண்டு. இந்த பூஜையை நேரில் கண்டால் பித்ருக்களை வழிபட்டதற்கு சமமாக கருதப்படுகிறது. எனவே மறைந்த முன்னோர்களின் ஆசியை பெற விரும்புபவர்கள் இந்த அமாவாசை பஞ்ச பருவ பூஜையை தவற விடுவதில்லை. இறையருள் மட்டுமின்றி பித்ருக்களின் ஆசியையும் பெற்று தரும் அமாவாசை பருவ பூஜையை மற்ற தலங்களில் காண இயலாது.

    கிருத்திகை

    ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திர தினத்தன்று முருகப் பெருமானுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படும். அன்று மாலை இரண்டாம் கால பூஜையின் போது வள்ளி&தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படும். பிறகு முருகப்பெருமான் அலங்காரத்துடன் நான்காம் பிரகாரத்தின் வடமேற்கு திசையில் உள்ள கிருத்திகை மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு அவருக்கு சிறப்பு தீபாராதனை காட்டுவார்கள். இந்த பூஜையில் பங்கேற்றால் வாழ்வில் ஆனந்தம் உண்டாகும் என்பது ஐதீகம் ஆகும்.

    பிரதோஷம்

    ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதோஷம் வருகிறது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரதோஷ பூஜையில் பக்தர்கள் ஆர்வம் காட்டாமல் இருந்தார்கள். திருவண்ணாமலை தலத்திலும் அதேநிலை தான் இருந்தது. பிரதோஷ பூஜை தினத்தன்று அந்த காலத்தில் 50 பேர் வந்தாலே அதிகம். ஆனால் இப்போது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரளுகிறார்கள் என்று திருவண்ணாமலையில் வாழும் பழம்பெரும் சிவாச்சாரியாரான தியாகராஜ சிவாச்சாரியார் நினைவு கூர்ந்தார்.

    சமீப காலமாக திருவண்ணாமலையில் பிரதோஷ தினத்தன்று வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. பெரும்பாலான பக்தர்கள் அன்றையதினம் விரதம் இருந்து தீபம் ஏற்றி வழிபாடு செய்வதை பழக்கத்தில் வைத்துள்ளனர். அன்றையதினம் மாலை நந்திக்கு அபிஷேக ஆராதனை முடிந்த பிறகு பிரதோஷ நாயகர் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்படுவார்.

    நந்தி வாகனத்தில் பிரதோஷ நாயகர் வரும் காட்சி அருள்மழை பொழிவது போன்று இருக்கும். மூன்றாம் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் பிரதோஷ நாயகர் எழுந்தருளுவார். அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்போது பக்தர்கள் அரோகரா என்று முழக்கிமிடுவார்கள். அந்த சமயத்தில் சிவபுராணம் மற்றும் நந்தி புராணம் படித்தால் அளவற்ற பலன்கள் தேடி வரும் என்பது ஐதீகம் ஆகும்.



    சோமாவாரம்

    திருவண்ணாமலை ஆலய பஞ்ச பருவ பூஜைகளில் சோமாவார பூஜை வித்தியாசமானது. இதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. பொதுவாக அனைவருக்குமே ஏதாவது ஆசைகள் இருந்து கொண்டே இருக்கும். ஆசையை கைவிட்டால் தான் முக்தி பாதைக்கு செல்ல முடியும். அதற்கு விரதங்கள் உதவியாக உள்ளன. விரதங்களில் சோமாவாரம் விரதம் அதிக பலன்களை தரக்கூடியது. திருமணம், குழந்தை பாக்கியம், நோய் தீர, எதிரிகளை வெல்ல, நினைத்தது நடக்க சோமாவார விரதமும், பூஜையும் கைகொடுக்கும்.

    திருவண்ணாமலையில் சோமாவார பூஜையை கடந்த சுமார் 43 ஆண்டுகளாக ஒரு அமைப்பு நடத்தி வருகிறது. இந்த அமைப்பினர் திங்கட்கிழமை தோறும் திருவண்ணாமலையில் சோமாவார பூஜையை பொறுப்பேற்று நடத்துகிறார்கள். அன்று மாலை இரண்டாம் கால பூஜையின் போது உற்சவ மூர்த்தியான சந்திரசேகரருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்கிறார்கள். இந்த அபிஷேக ஆராதனை மிகவும் சிறப்பாக நடத்தப்படும். அதை கண்டு வழிபடுவதே தனி ஆனந்தத்தை தரும்.

    அதன்பிறகு உற்சவ மூர்த்தியை அலங்காரம் செய்து மூன்றாம் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருள செய்வார்கள். அங்கு அவருக்கு தீபாராதனைகள் நடத்தப்படும்.

    சுக்ரவாரம்

    சோமாவார பூஜை திங்கட்கிழமை நடத்தப்படுவது போல சுக்ரவார பூஜை வெள்ளிக்கிழமை தோறும் நடத்தப்படுகிறது. அன்றையதினம் மாலை இரண்டாம் கால பூஜையின் போது ஸ்ரீ பராசக்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும். பிறகு அம்மனுக்கு அலங்காரம் செய்து எழுந்தருள செய்வார்கள். அதைத்தொடர்ந்து உண்ணாமலை அம்மன் சன்னதி எதிரே உள்ள கொடி மரம் அருகே ஊஞ்சல் உற்சவம் நடத்தப்படும். அன்னையை ஊஞ்சலில் அமர்த்தி தாலாட்டுவார்கள்.

    ஸ்ரீ பராசக்தி அம்மனின் ஆனந்த ஊஞ்சல் உற்சவத்துக்கு ஏற்ப நாதஸ்வர கலைஞர்கள் இசை அமைப்பார்கள். கண்களுக்கும், காதுகளுக்கும் இந்த ஊஞ்சல் உற்சவம் விருந்து படைப்பதாக இருக்கும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் இரவு 7 மணிக்கு இந்த ஊஞ்சல் உற்சவம் நடத்தப்படுகிறது. திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் திட்டமிட்டு தங்கள் பயணத்தை அமைத்துக் கொண்டால் இந்த ஊஞ்சல் உற்சவத்தை பார்த்துவிட்டு வரலாம்.

    சஷ்டி, சதுர்த்தி நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இந்த பஞ்ச பருவ பூஜைகளின் போது உற்சவ மூர்த்திகள் எந்தெந்த வாகனங்களில் எடுத்து செல்லப்படும் என்பதை முன்னோர்கள் முறைப்படி அமைத்துள்ளனர். இந்த உற்சவங்களின் போது சுவாமிக்கு எத்தகைய அலங்காரம் செய்யப்பட வேண்டும் என்பதும் திருவண்ணாமலை தலத்தில் தனித்துவமாக உள்ளது. அந்தமாதிரி அலங்கார ஆராதனைகளை வேறு எந்த தலத்திலும் பார்க்க இயலாது.

    சில பூஜை முறைகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அரசர்களால் உருவாக்கப்பட்டதாகும். அந்த பூஜைகள் அனைத்தும் இப்போதும் மரபு மாறாமல் நடந்து வருகிறது. அவற்றை பார்த்தாலே பரவசம் மட்டுமல்ல, பலன்களும் தேடிவரும். எனவே அடுத்த முறை திருவண்ணாமலை தலத்துக்கு செல்லும் முன்பு பஞ்ச பருவ பூஜைகள் ஏதேனும் உள்ளதா? என்பதை அறிந்து சென்றால் அதிக பலனை பெற முடியும்.
    Next Story
    ×