search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தாணுமாலயசாமி கோவில் சித்திரை தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.
    X
    தாணுமாலயசாமி கோவில் சித்திரை தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் சித்திரை தேரோட்டம்

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை தெப்பத்திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைதிருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, அலங்கார தீபாராதனை, சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    9-ம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. அதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கங்காளநாதர் பிட்சாடனராக உலாவரும் நிகழ்ச்சியும், காலை 8.30 மணிக்கு தட்டு வாகனங்களில் சுவாமி அம்பாள், விநாயகர், அறம் வளர்த்த நாயகி அம்பாள் ரத வீதிகள் வழியாக உலா வந்து கோவிலைச் சென்றடையும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    பின்னர் சுவாமி வாகனங்கள் வெளியே வந்த போது போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து காலை 9.30 மணிக்கு சுவாமியும், அம்பாளும் அம்மன் தேரிலும், விநாயகர் விநாயகர் தேரிலும், இந்திரன் தேராகிய சப்பரத் தேரில் அறம் வளர்த்த நாயகி அம்மனும் எழுந்தருளினர். பின்னர் தேரின் சக்கரங்களுக்கு தேங்காய் உடைக்கப்பட்டு தேரோட்டத்தை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தேர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து திருக்கோவில் பணியாளர்களும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேரோடும் ரதவீதியில் பக்தர்களுக்கு பானகாரம், மோர் ஆகியவை பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    ரதவீதிகளை சுற்றி வந்த தேர் நண்பகல் 1.20 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது. தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலையில் சமய சொற்பொழிவும், நள்ளிரவு சப்தாவர்ண நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    10-ம் திருவிழாவான இன்று (வியாழக்கிழமை) கோவில் அருகாமையில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது. சுவாமி அம்பாள் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருவிழா ஏற்பாடுகளை இணை ஆணையர் அன்புமணி தலைமையில் திருக்கோவில் பணியாளர்களும், பக்த சங்கத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர். 
    Next Story
    ×