search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதியில் 25-ந்தேதி முதல் தெப்பத்திருவிழா
    X

    திருப்பதியில் 25-ந்தேதி முதல் தெப்பத்திருவிழா

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா வருகிற 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 1-ந்தேதி வரை நடக்கிறது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தையொட்டி தெப்பத் திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா வருகிற 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 1-ந்தேதி வரை நடக்கிறது.

    இதனையொட்டி 5 நாட்களும் மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை கோவில் அருகே உள்ள புஷ்கரணியில் சுவாமி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்படி முதல்நாளான 25-ந் தேதி உற்சவரான சீதாராமலட்சுமணர் விலை உயர்ந்த தங்க, வைடூரிய நகை அலங்காரத்துடன் பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு 4 மாட வீதிகளில் பவனி வருகிறார். அதனை தொடர்ந்து தெப்பத்தில் எழுந்தருளி 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    2-ம் நாளான 26-ந் தேதி உற்சவரான ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி 4 மாடவீதிகள் வழியாக வந்து தெப்பத்தில் எழுந்தருளி 3 முறை வலம் வருகிறார். 3-வது நாள் முதல் உற்சவரான மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் மாடவீதிகளில் வலம் வந்து தெப்பத்தில் எழுந்தருளி வலம் வருகிறார். அதன்படி 3-வது நாளான 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) 3 சுற்றுகளும், 28-ந் தேதி (புதன்கிழமை) 5 சுற்றுகளும், நிறைவு நாள் மாசி மக தினமான 1-ந் தேதி 7 சுற்றுகளும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. அதன்படி புஷ்கரணியை சுற்றி உள்ள சுவர்களில் காவி, வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கும் பணி நடக்கிறது. மேலும் மின்விளக்கு அலங்காரமும் நடக்கிறது. தற்போது ஒத்திகை நிகழ்ச்சி நடந்து வருகிறது.

    தெப்பத்தில் சுவாமி பவனி வருவதை கண்டு தரிசிக்க பக்தர்கள் அமரும் காலரிகளை சுத்தம் செய்யும் பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×