search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அற்புதங்களை நிகழ்த்தும் அனுமன் விரதம்
    X

    அற்புதங்களை நிகழ்த்தும் அனுமன் விரதம்

    அனுமனை விரதம் இருந்து வழிபாடு செய்தால், திருமால், சிவன், ருத்ரன், பிரம்மா, இந்திரன், கருடாழ்வார் ஆகியோரை வழிபட்ட பலன் கிடைக்கும்.
    மகாவிஷ்ணு, ராமனாக அவதரித்தபோது, அவருக்கு உதவி செய்தவர்கள் பலர். அப்படி உதவி செய்தவர்களில் முதன்மையானவராக இருந்து, ராமனுடனேயே தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டவர் அனுமன். அவரது பிறப்பும், வாழ்வும், ராமன் மீது கொண்டிருந்த அளவற்ற பக்தியுமே அவரை வழிபாட்டுக்கு உரியவராக மாற்றின.

    ‘ஹனுமான்’ என்ற வடமொழிப் பெயரில், ‘ஹனு’ என்பது ‘தாடை’ என்றும், ‘மன்’ என்பது ‘பெரியது’ என்றும் பொருள்படும். தாடை பெரிதான தோற்றம் கொண்டவர் என்பதால் ‘ஹனுமான்’ என்று அழைக்கப்பட்டார். அந்தப் பெயரில் தமிழ் வடிவமே ‘அனுமன்.’ வானர வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதால் ‘மாருதி’ என்றும், அஞ்சனை-கேசரி மகன் என்பதால் ‘ஆஞ்சநேயர்’ என்றும் பெயர் பெற்றார்.

    ராமாவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவுக்கு, அனைத்து ஜீவராசிகளும் தங்களால் இயன்ற உதவிகளை செய்வதைப் பார்த்த சிவபெருமான், தன் பங்குக்கும் ஏதாவது செய்ய நினைத்தார். அதன்படி தன்னுடைய சக்தியை எடுத்துச் சென்று ஒரு பெண்ணிடம் தருமாறு வாயுதேவனை பணித்தார். அந்த நேரத்தில் தான் அஞ்சனை தனக்கு பார் போற்றும் மைந்தன் வேண்டும் என்று இறைவனை நினைத்து தவம் செய்தாள். அவளிடம் அந்த சக்தியைச் சேர்த்தார் வாயுதேவன். அதன்படி சிவபெருமானின் சக்தியாக அவ தரித்தவரே ஆஞ்சநேயர் என்ற கூற்று ஒன்று உள்ளது.

    மகாபாரதத்தில் வரும் அர்ச்சுனன்- கிருஷ்ணனின் நட்பைப் போன்றது, ராமாயணத்தில் வரும் அனுமன்- ராமரின் நட்பு. ராமரின் மூலமாக வாலிக்கும் சுக்ரீவனுக்கும் இருந்த பகையை முடிவுக்குக் கொண்டு வந்தார். இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை கண்டு வந்து ராமருக்கு ஆறுதல் அளித்தார். அசோக வனத்தில் இருந்த சீதையால் சிரஞ்சீவியாக இருப்பாய் என்று ஆசீர்வதிக்கப்பட்டவர் அனுமன்.

    ராவணனுடனான யுத்தத்தில் இந்திரஜித் செலுத்தி அம்பு பட்டு மூர்ச்சையான லட்சுமணனை காப்பாற்றுவதற்காக சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்துக் கொண்டு வந்தார். 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து ராமர் வர தாமதமானதால், தீக்குளிக்கச் சென்ற பரதனை காற்றை விட வேகமாக சென்று தடுத்து நிறுத்தி காப்பாற்றினார். ராமாயணம் முடிந்து மகாபாரத காலம் வந்தது. அப்போது நடந்த குருசேத்திர யுத்தத்தில் கிருஷ்ணர் ஓட்டிய தேரின் மேல் கொடியாக இருந்து அனைத்து பாரங்களையும் தாங்கிக்கொண்டிருந்தவர் அனுமன்.

    இப்படி பல பெருமைகளை கொண்ட அனுமனை, மகாவிஷ்ணு தனது வாகனமான கருடனுக்கு அடுத்த நிலையில் வைத்திருந்தார். அதனால் இவரை மகாவிஷ்ணுவின் சிறிய திருவடியாக கூறுவர். அதே சமயம் கருடாழ்வாருக்கு கிடைக்காத ஒரு பெருமையும் அனுமனுக்கு கிடைத்தது. அதாவது பெரிய திருவடியான கருடனுக்கு இல்லாத அளவில் தனிக் கோவில்கள் அனுமனுக்கு பல அமைந்திருக்கின்றன.

    அனுமன் வழிபாடும், அவருக்கு தனி கோவில்கள் எழுப்புவதும் கிருஷ்ணதேவராயர் காலத்தில் இருந்து தொடங்கியதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அனுமனுக்கான ஆலயங்களில் வீரக் கோலம், நின்றகோலம், யோகக் கோலம் என மூன்று நிலைகளில் அனுமன் அருள்பாலிப்பார். அனுமன் ‘சிரஞ்சீவி’ என்ற பட்டத்தைக் கொண்ட எழுவரில் ஒருவர்.

    அனுமனை வழிபாடு செய்தால், திருமால், சிவன், ருத்ரன், பிரம்மா, இந்திரன், கருடாழ்வார் ஆகியோரை வழிபட்ட பலன் கிடைக்கும். அவரது வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி இருப்பதால், அவரை வழிபடுவோருக்கு நவக்கிரகங்களால் பாதிப்பு ஏற்படாது. அனுமன் வழிபாட்டினால் அறிவு கூர்மையாகும், உடல் வலிமை பெருகும். மனஉறுதி ஏற்படும். அச்சம் அகலும். நோய் நொடிகள் விலகும். தெளிவு உண்டாகும். வாக்கு வன்மை அதிகரிக்கும்.

    உடல் மனநலம் குன்றியவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தொழில் நஷ்டம் அடைந்தவர்கள், பில்லி சூனியம் ஏவலால் பாதிக்கப்பட்டவர்கள், ஊழ்வினையால் துன்புறுகிறவர்கள் அனுமனுக்கு வெற்றிலை மாலை, வடை மாலை, எலுமிச்சைப்பழ மாலை, துளசி மாலை சாத்தி வழிபட்டால் மேன்மை பெறுவார்கள். வெண்ணெய் சாத்தி வழிபட்டால், நம் துன்பங்கள் அனைத்தும் வெப்பம் பட்ட வெண்ணெய் போல கரைந்து போகும் என்பது நம்பிக்கை.

    Next Story
    ×