search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இறை அன்பும், இனிய நோன்பும்
    X

    இறை அன்பும், இனிய நோன்பும்

    இறைவனின் அன்பை அடைய நான்கு வழிகள் உண்டு. அவை: உணவை குறைப்பது, உறக்கத்தை குறைப்பது, பேச்சை குறைப்பது, மக்களுக்கிடையே கலந்திருப்பதை குறைப்பது.
    புனித ரமலானின் நோன்பு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அன்பை பெற்றுத்தரும் ஒரு சிறந்த வணக்க வழிபாடாக அமைந்துள்ளது. இறைவனின் அன்பை அடைய நான்கு வழிகள் உண்டு. அவை: உணவை குறைப்பது, உறக்கத்தை குறைப்பது, பேச்சை குறைப்பது, மக்களுக்கிடையே கலந்திருப்பதை குறைப்பது.

    இந்த நான்கு அம்சங்கள் ஒரு முஸ்லிமிடம் இடம் பெற்றால் அவர் இறைவனின் அன்பை எளிதாக பெற்றுவிடலாம். இந்த நான்கு அம்சங்களும் புனித ரமலானின் நோன்பில் அமைந்துள்ளது.

    உணவை குறைப்பது

    புனித ரமலானில் நோன்பாளிகள் வெகுவாக உணவை குறைத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு உணவை குறைத்துக் கொள்வதின் மூலம் இறைவனின் நெருக்கத்தை சுலபமாக அடைந்து கொள்கிறார்கள். இதுகுறித்த நபிமொழி வருமாறு:-

    ‘எனக்காக நோன்பாளி தமது உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டுவிடுகிறார். நோன்பு எனக்கு மட்டுமே உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன் என்று இறைவன் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி) புகாரி)

    நோன்பு காலத்தில் உணவை குறைத்துக் கொள்வதின் வழியாக நோன்பின் சன்மானத்தை இறைவனின் திருக்கரத்தால் பெறமுடிகிறது.

    தூக்கத்தை குறைப்பது

    புனித ரமலானில் இரவு வணக்கம் என்பது முக்கியமானது. மற்ற மாதங்களை விட ரமலானில் இரவு வணக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதனால் வெகுநேரம் தூங்கமுடியாது.

    ‘எவர் ரமலான் இரவில் இறை நம்பிக்கையாளராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் இருந்து (தராவீஹ்) தொழு கிறாரோ, அவர் முன் செய்த (சிறு) பாவங்கள் யாவும் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி) புகாரி)

    ‘நபி (ஸல்) அவர்கள் ரமலான் நள்ளிரவில் பள்ளிக்குச் சென்று தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள்.’ (அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) புகாரி)

    ‘கடமையான தொழுகைக்குப் பிறகு சிறப்பான தொழுகை ‘தஹஜ்ஜத்’ தொழுகை ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி), முஸ்லிம்)

    ‘பயபக்தியாளர்கள் பொறுமையாளராகவும், வாய்மையாளராகவும், இறைவனுக்கு முற்றிலும் வழிபடுவோராகவும், தான தர்மங்கள் செய்வோராகவும், ஸஹ்ர் நேரத்தில் (வணங்கி, நாயனிடம்) மன்னிப்புக் கோருபவராகவும் இருப்பர்.’ (திருக்குர்ஆன் 3:17)

    ‘(ரமலானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால், நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள். இரவில் அல்லாஹ்வைத் தொழுது உயிர்ப்பிப்பார்கள். (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பிவிடுவார்கள்.’ (அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி), புகாரி)

    ‘நோன்பும், திருக்குர்ஆனும் நாளை மறுமையில் அடியானுக்கு பரிந்துரை செய்யும். ‘இறைவா! நான் அவனை பகலில் உண்ணுவதை விட்டும், மனோ இச்சைகளை விட்டும் தடுத்தேன். எனவே அவன் விஷயத்தில் எனது சிபாரிசை ஏற்றுக் கொள்வாயாக’ என்று நோன்பு கூறும்.

    ‘இறைவா! நான் அவனை இரவில் தூங்குவதை விட்டும் தடுத்தேன். எனவே அவன் விஷயத்தில் எனது சிபாரிசை ஏற்றுக் கொள்வாயாக’ என்று திருக்குர்ஆன் கூறும். எனவே இரண்டு வகையான பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. அறிவிப்பாளர் : அப்துல்லாஹ்பின்அம்ர் (ரலி), அஹ்மது)

    புனித ரமலானில் நிறைவேற்றப்படும் இந்த செயல்பாடுகள்தான் அவர்களுக்கு இறைவனின் அன்பை பெற்றுத்தர போதுமானதாக அமைந்துவிடுகிறது.

    பேச்சை குறைப்பது

    ‘எவர் பொய்யான காரியங்கள் செய்வதையும், பொய்யான பேச்சுகளையும் விடவில்லையோ, அவர் தமது உணவையும், நீரையும் விட்டுவிடுவ(நோன்பு வைப்ப)தில் அல்லாஹ்விற்கு எந்தத் தேவையும் இல்லை என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி), புகாரி)

    ‘நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) ஒரு கேடயம் ஆகும். எனவே நோன்பாளி தவறான பேச்சுகளைப் பேசவேண்டாம். முட்டாள்தனமான செயல்களில் ஈடுபடவேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால், அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி’ என்று இருமுறை கூறட்டும்! என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி), புகாரி)

    நோன்பு என்பது உண்ணாமல், பருகாமல் இருப்பது மட்டுமே அல்ல. கெட்ட வார்த்தைகளை பேசாமலும், பொய் பேசாமலும், புறம் பேசாமலும், அவதூறு பேசாமலும், கோள் பேசாமலும், ஆபாசமாக பேசாமலும், தீச்சொல் பேசாமலும் இருக்க வேண்டும். இவ்வாறு இருப்பதுதான் மெய்யான நோன்பாகும்.

    நோன்பின் ஒழுக்கங்கள் எட்டு. அதில் நாவைப் பேணுதலும் அடங்கும். இறைவனின் அன்பை பெற தேவையற்ற பேச்சு களை விட்டு தவிர்ந்திருக்க வேண்டும்.

    மக்களுடன் குறைவாக கலந்திருப்பது

    புனித ரமலானில் நோன்பாளிகள் தமது நட்பு வட்டாரத்தை சுருக்கிக் கொண்டு, இறை நெருக்கத்தை அடையும் வகையில் மக்களுடன் கலந்திருப்பதை தவிர்த்து கொள்கிறார்கள்.

    ரமலானின் மூன்றாவது பத்தில் நோன்பாளிகள் உலகத் தொடர்பை துண்டித்து, குடும்ப உறவை தற்காலிகமாக நிறுத்திவைத்து, இல்லறத்தொடர்பை முற்றிலும் விட்டுவிட்டு, பள்ளிவாசலில் தஞ்சமடைந்து மனதை ஒருமுகப்படுத்தி இறைவனை தியானிக்க ‘இதிகாப்’ இருப்பார்கள்.

    இதுகுறித்து குர்ஆன் கூறுவதைக் காண்போம். ‘நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இதிகாப்) இருக்கும்போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்’ (2:187)

    ‘நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமலானின் கடைசிப் பத்து நாட்கள் இதிகாப் இருந்தார்கள். அவர்களுக்குப் பின் அவர்களின் மனைவியரும் இதிகாப் இருந்தனர்.’ (அறிவிப் பாளர் : ஆயிஷா (ரலி), புகாரி)

    கெட்ட சகவாசத்தை விட ஒதுங்கி தனியாக இருப்பதே மேல். அதிலும் ரமலானில் இருப்பது அதைவிடவும் மேலானது.

    மேற்கூறப்பட்ட நான்கு அம்சங்களையும் கடைப்பிடித்தால் இறைவனின் அன்பை அடையலாம். மேலும், இறைவனையே பரிசாக பெற்றுவிடலாம். இத்தகைய அம்சங்களை கடைப்பிடிக்கக்கூடிய பாக்கியம் புனித ரமலானில் மட்டுமே அரிதாகக் கிடைக்கும்.

    ‘சுவையான உணவை தேடுபவன் இறைவணக்கத்தில் இன்பம் பெறமாட்டான். அதிகமாக தூங்குபவன் வாழ்க்கையில் அபிவிருத்தியை அடையமாட்டான். மனிதர்களிடம் புகழை தேடுபவன் இறைவனின் பொருத்தத்தை பெறமாட்டான். புறமும், வீண் பேச்சும் பேசுபவன் தீனுல் இஸ்லாத்தில் மரணிக்கமாட்டான்’ என இப்ராகீம் பின் அத்ஹம் (ரஹ்) கூறுகிறார்கள்.

    இந்த புனித ரமலானில் இறைவனுக்கு பிடிக்காத அனைத்துவிதமான செயல்களையும் அறவே விட்டுவிட்டு, அறவழியில் சென்று இறையருளைத்தேடுவோம்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.
    Next Story
    ×