search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் - நேரில் சந்தித்து கல்வி, மருத்துவ செலவை ஏற்ற சூர்யா
    X

    தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் - நேரில் சந்தித்து கல்வி, மருத்துவ செலவை ஏற்ற சூர்யா

    தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவனை தனது வீட்டுக்கு நேரில் அழைத்து பரிசு கொடுத்த சூர்யா அந்த சிறுவனின் கல்வி மற்றும் மருத்துவ செலவை ஏற்றார். #Suriya #DineshKumar
    தேனி அருகில் உள்ள காட்டுநாயக்கன்பட்டியை சேர்ந்த சிறுவன் தினேஷ் குமார்.

    16 வயதான இவர் 10-வது வயதில் நடக்கும்போது திடீர் என கீழே விழ தொடங்கி இருக்கிறார். எழுந்து நிற்க முடியாமல் சிரமப்பட்டார்.

    தினேசுக்கு தசைச் சிதைவு நோய் இருப்பதும், இந்த நோய்க்கு சரியான மருத்துவ சிகிச்சை முறைகள் இல்லாததும் தெரிய வந்தது. தசைகள் எல்லாம் சிதைந்து போன நிலையில் சக்கர நாற்காலியிலேயே இன்று வரை வாழ்நாளைக் கழித்து வருகிறார்.

    தனக்குத் தெரிந்த ஓவியத் திறமை மூலம் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் பல வகை ஓவியங்களை வரையத் துவங்கி, தற்போது அனைத்து விதமான காட்சிகளைக் கண்களில் பார்த்தும், அதற்கு உருவம் கொடுத்தும் வருகிறார்.

    தன்னுடைய கனவு நாயகன் சூர்யாவைச் சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவரது ஆசை தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது.

    அதைப் பார்த்த சூர்யா ரசிகர் மன்றத்தினர் இந்த தகவலை சூர்யாவிடம் எடுத்துச் சென்றனர். சூர்யாவும், அவரது தம்பியும், நடிகருமான கார்த்தியும் சிறுவன் தினேசைப் பார்க்க விரும்பினார்கள்.



    சூர்யா சிறுவனை குடும்பத்துடன் தனது சென்னை வீட்டிற்கு வரவழைத்தார். நேற்று காலை சென்னை தி.நகரில் உள்ள சூர்யா இல்லத்திற்கு வந்த தினேசுக்கு நடிகர் சிவக்குமார், தான் வரைந்த ஓவியம் ஒன்றைப் பரிசாக வழங்கினார்.

    தினேசுக்கு ஏற்பட்ட நோய் குறித்துக் கேட்டறிந்த சூர்யா, அவருக்கு ஏராளமான பரிசுப் பொருள்களை கொடுத்து அனுப்பினார். அவரது கல்வி மற்றும் மருத்துவ செலவுகள் அனைத்தையும் ஏற்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.



    இந்த தகவல் பகிரப்பட்டு வருகிறது. அதில் தினேஷின் தந்தை, ‘’எப்பப் பார்த்தாலும் அண்ணனைப் (சூர்யா) பார்க்கணும், அண்ணனைப் பார்க்கணும்னு சொல்லிட்டே இருப்பான்’’ என்று கூறுகிறார்.

    தினேசிடம் பேசிய சூர்யா, ‘’பார்த்தியா, உள்ளே அடிமனசுல என்ன நடக்கணும்னு நீ நினைச்சது இன்னிக்கு நடந்துருக்கு. என்னைப் பார்க்கணும்னு ஆசைப்பட்ட, பார்த்துட்ட. அடுத்து ஒரு பெரிய வி‌ஷயம் நடக்கணும்னு நினைச்சுட்டே இரு; கண்டிப்பா நடக்கும்‘’ என்று உத்வேகமூட்டுகிறார். #Suriya #DineshKumar

    Next Story
    ×